மோகன் லாசரஸ் வழக்கு :
"மதம் ஒன்றும் வணிகம் அல்ல" – மாண்புமிகு உயர் நீதிமன்றம்
எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்க மாண்புமிகு நீதிபதி முடிவெடுத்தார்.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் உள்ள ஆவடியில், ஒரு அரங்கில் நடைபெற்ற மத போதக நிகழ்வில் இந்து கடவுள்கள் மற்றும் கோவில்கள் குறித்து அவர் கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோவின் சில பகுதிகள் 2018ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மதபோதகர் மோகன் சி. லாசரஸ்க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிக்கைகளையும், 8 முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
"மதம் போட்டி போட்டுக்கொண்டு நடத்தப்படும் வியாபாரம் அல்ல. எனவே மற்ற மத நம்பிக்கைகளுக்கு எதிராக வெறுப்பினை கொட்டுவதும், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதும் இது ஒரு மனிதனுக்கு உயர்ந்த உண்மைகளை நோக்கி பரிணமிக்க உதவும் அதன் நோக்கத்தை மீறுகிறது, " என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.
"மத நம்பிக்கைகளைப் பாதுகாத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் என்ற பெயரில் தவறான எண்ணங்கள் கொண்டவர்களின் கையில் ஒரு சமூகமாக நாம் வீழ்ச்சி அடைந்து வருகிறோம். இந்த தீவிரமான நிலை எப்போதுமே வரலாறு முழுவதும் வெறுப்பு, வன்முறை, இரத்தக்களரி மற்றும் கசப்பைத் தூண்டும் என்பதை பார்த்து வருகிறோம் " என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
"மதச்சார்பின்மையின் இலட்சியம் ஏதும் இல்லாமல் இல்லாமல் நமது அரசியலமைப்பில் கட்டமைக்கப்படவில்லை. மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை என்பது பொதுவாக அரசையும் மதத்தையும் பிரிப்பதற்காக வலியுறுத்தப்படுவதாக கருதப்படுகிறது, இந்திய மதச்சார்பின்மை அனைத்து மதங்களையும் சமமாக ஏற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது. மதச்சார்பின்மை என்ற கருத்து ஐரோப்பாவில் தோன்றினாலும் இந்தியாவில் அதற்குக் கூறப்படும் பொருள் குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் கொண்டுள்ளது, ”என்றும் அவர் கூறினார்
இந்தியாவின் மதசார்பின்மை இயற்கையிலேயே தனித்துவமானது. இது ஒரு மதத்திற்கு விரோதமானது அல்ல. ஆனால் அனைத்து குடிமக்களுக்கும் மத சுதந்திரத்தை வழங்குகிறது. சகிப்புத்தன்மையை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அது குடிமக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு வழி வகுக்கும். மேலும் அமைதி, ஒழுங்கு மற்றும் சகோதரத்துவத்தை பேணுவதற்காக ஏற்படுத்திய முயற்சிகளில் பெரும் அபாயகரத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். போதகரின் தவறான அறிக்கைகளை நியாயப்படுத்தாத அவரின் வழக்கறிஞர் ஐசாக் மோகன்லாலை நீதிபதி வாழ்த்தினார்.
மனுதாரரின் வருத்தத்தை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்க நீதிபதி வெங்கடேஷ் முடிவெடுத்தார்.
மனுதாரர், இந்த அறிக்கைகளின் பின்விளைவுகளை அறிந்து கொள்ளாமல் இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் இதன் மூலம் பாடங்களை கற்றிருப்பார் என்று நம்புகின்றோம். இது போன்று கருத்துகளை வெளியிடும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக