இந்திய தண்டனை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய தண்டனை சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 16 செப்டம்பர், 2021

நீதிமன்றத்தில் 311 சி.ஆர்.பி மனு தாக்கல் செய்யப்பட்டு செலவு தொகை செலுத்தாத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் செலுத்த தயாராக உள்ளார். மனுதார் அடுத்து என்ன செய்வது?

 

நீதிமன்றத்தில் 311 சி.ஆர்.பி மனு தாக்கல் செய்யப்பட்டு செலவு தொகை செலுத்தாத காரணத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் செலுத்த தயாராக உள்ளார். மனுதார் அடுத்து என்ன செய்வது?

குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த செலவுத் தொகையை ஏன் கட்டமுடியாமல் போயிற்று என்பதை தகுந்த ஆதாரத்துடன் மனு செய்ய வேண்டும். நீதிமன்றம் அந்த பதிலில் திருப்தியடைந்தால் மனுவை ஏற்றுக்கொண்டு கூடுதல் கால அவகாசம் கொடுக்கும். இல்லையென்றாலும், காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மேல்முறையீடு செய்யலாம். இரு தரப்பினருக்கும் தங்கள் தரப்பு கட்சியை நிரூபிக்க தகுந்த காலவகாசம் வழங்கப்படவேண்டும் என்ற நியதிப்படி, தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் செலவு தொகையை கட்டாதது, வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அல்ல என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பதில் தான் வழக்கறிஞரின் திறன் உள்ளது.

நான் பார்த்த வழக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. அது ஒரு கற்பழிப்பு வழக்கு. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி அந்த பெண்ணை சீரழித்து விட்டார் என்று குற்ற வழக்கு அவர் மீது பதிவு செய்பட்டு வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. அப்போது தான், குற்றவாளி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்கிறார்கள்.. பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று.

இத்தனைக்கும், அந்த பெண் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு சில வருடங்கள் கடந்து விட்டது. அவரும் சிறு தயக்கமும் இன்றி குற்றவாளியை அடையாளம் காட்டி தெளிவாக அவர் தனக்கு செய்த தீங்கை எடுத்துச் சொல்லியிருகிறார்.

குற்றவாளி தரப்பும், குறுக்கு விசாரணை என்ற பெயரில் இரண்டு மூன்று நாட்கள் குறுக்கு கேள்விகளால் துளைத்து எடுத்திருக்கிறார்கள்.. அந்த பெண்ணும் அசராமல் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்.

வழக்கு குற்றவாளிக்கு எதிராக ஸ்ட்ராங்காக உள்ளது. நீதிபதியோ படு ஸ்ட்ரிக்டாக இருக்கிறார். இப்படியே போனால் தண்டனை நிச்சயம் என்ற நிலையில் தான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

சில முக்கியமான கேள்விகளை அந்த பெண்ணிடம் கேட்காமல் விட்டுவிட்டதாகவும் இப்போதைய புது வழக்கறிஞர்{?} தான் அதை கண்டுபிடித்து உள்ளார் என்றும், அந்த கேள்விக்கான பதில்களை பெறுவது மிகவும் முக்கியம் என்பதால் அந்த பெண்ணை திரும்பவும் விசாரணைக்கு அழைக்கவேண்டும் என்றும் கேட்டு இருந்தார்கள்.

நீதிபதியும் இந்த மனுவில் உள்ள சங்கதிகள் உண்மையா என்று விசாரித்தார். அப்போது தான் ஒரு உண்மை தெரிய வந்தது. வருடங்கள் ஆனபடியால், அந்த பெண்ணின் வீட்டாருடன் பேரம் நடந்திருக்கிறது, இனிமேல் இந்த நபருக்கு தண்டனை வாங்கி தருவதால் அவர்களுக்கு என்ன நன்மை கிடைத்துவிட போகிறது என்ற ரீதியில் பேசி, பெண்ணின் திருமண செலவுக்கு என்று சில ஆயிரங்களை கொடுப்பதாகவு,ம அதன்படியே நீதிமன்றத்திற்கு அந்த பெண் வந்து சாட்சியத்தை மாற்றி சொல்லவேண்டும் என்று பேசி, பேரமும் படிந்துவிட்டதாக தெரிந்து கொண்டார்.

அந்த பெண்ணின் குடும்பமும் ஏழ்மையானது என்பதால் வேறு வழியில்லாமல் இணங்கி இருகிரார்கள் என்று புரிந்து கொண்டார். இப்போது மனுவின் நோக்கம் புரிந்து விட்டது. இதை காரணம் காட்டி மனுவை தள்ளுபடி செய்யமுடியாது. செவி வழி செய்தி என்பதால்....அத்தோடு எந்த காரனமும் சொல்லி மனுவை தள்ளுபடி செய்தால், அவர்கள் மேல்முறையீடு செய்ய போய்விடுவார்கள். அதனால் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுவிடும் என்று தெரிந்துக்கொண்டவர், அந்த மனுவை அனுமதித்து, அந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்தார். அவர் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, அந்த பெண்ணும், அன்று சம்பவத்தில் ஈடுபட்டது இந்த நபர் இல்லை என்று சாட்சியம் அளித்தது.

வழக்கு விசாரணையும் முடிந்து, தீர்ப்புக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றவாளி தரப்பில் கண்டிப்பாக விடுதலை ஆகிவிடுவோம் என்று ஏக எதிர்ப்பார்ப்பில் இருக்க, நீதிபதி, அவருக்கு குற்றவாளி என்று தீர்பளித்தார். அந்த பெண்ணின் சாட்சியம் ஏற்கெனவே சொன்ன சாட்சியத்திலிருந்து மாற்றி பல வருடங்கள் கழித்து வந்து சொல்லியுள்ளதால், அது நம்புவதற்கு இல்லை என்று காரணம் சொல்லி அதை நிராகரித்து முன் சொன்ன சாட்சியத்தை ஏற்று தீர்ப்பு அளித்திருந்தார்!!.

அந்த மனு போல இல்லாமல், உங்கள் வழக்கில், உண்மையிலேயே செலவு தொகை கட்ட கால தாமதம் ஆனா நியாயமான காரணம் சொல்லி அதனால் தான் கால தாமதம் ஆகியது என்று நிரூபித்தால் உங்கள் மனு ஏற்றுக்கொள்ளப்படலாம்..

நிரூபிப்பத் என்பது சமயத்தில் சங்கடமான ஒன்று ...அது ஒவ்வொரு தரப்புக்கும் ஏற்றவாறு மாறக்கூடியது.!!

ஆனால் உண்மை மட்டுமே மாறாதது!! வாய்மையே வெல்லும்!!

வெள்ளி, 16 ஜூலை, 2021

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேசத் துரோகி சட்டம் நமது நாட்டுக்கு இப்பொழுது தேவைதானா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

 சமீப காலமாக தான், தேசப்பற்று, தேசத்துரோகி எண்டேய வார்த்தைகள் அதிகம் கேட்கிறது…

காரணம்…அரசை எதிர்த்து , அதன் கொள்கை குறித்து விமர்சனம் செய்பவர்கள், தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கேள்வி வரையறைI ஏதும் இல்லாமல் சிறையில் அடைக்கப்படுகின்றனர்..அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிண்றன. நாளுக்கு நாள் இந்த நடவடிக்கை அதிகமாகிறதே ஒழிய குறையவில்லை.

.2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தம் 93 தேசத் துரோக வழக்குகள் பதிவாகியுள்ளன, 76 வழக்குகளில் 96 கைதுகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அதற்கு முந்தைய ஆண்டு 70 வழக்குகள், 56 கைதுகள் மற்றும் 27 குற்றப்பத்திரிகைகள்.முந்தைய ஆண்டை விட தேசத்துரோக வழக்குகளின் எண்ணிக்கையில் 25% மற்றும் 41% கைதுகள் அதிகரித்துள்ளன.

நன்றி. (HT காப்பகம்)

உச்சநீதிமன்றத்தில் இந்த நடவடிகைகளை எதிர்த்து போடப்படும் வழக்குகளும் அதிகமாகிக்கொண்டு வருகிறது..

மாண்புமிகுஉச்சநீதிமன்றமே , 75 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட இந்த சட்டப்பிரிவு இன்னும் தேவைதானா? என்று கேட்கிறது. நிறைய சட்டங்கள் காலத்திற்கு தகுந்தாற்போல இல்லை என்ற இந்திய அரசு இதை மட்டும் ஏன் கண்டு கொள்ளவில்லை என்று ஆச்சரியம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A குறித்து விசாரணை நடத்த ஒத்துக்கொண்டுள்ளது..

அப்படியென்ன .அந்த சட்டப்பிரிவு சொல்கிறது என்பவர்களுக்கு …

ஐ.பி.சி.யின் பிரிவு 124 ஏ இன் கீழ், 'சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது , எந்தவொரு நபரும் சொற்களாலோ, அல்லது வேறு எதனாலோ, அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்கும்போதும், வெறுப்பு அல்லது அவமதிப்புக்குள் கொண்டுவர முயற்சிக்கும்போதும் தேசத்துரோக குற்றம் செய்யப்படுகிறது".

ஆங்கிலேயர் காலத்தில் தேசத்துரோகி எனப்பட்டவர்கள் இன்று தியாகிகள் எண்று போற்றப்படுகிறார்கள்.

காரணம்..அப்போது இருந்தது அந்நிய அரசு..அதை எதிர்த்து விடுதலை குரல் எழுப்பியவர்களை நசுக்க கொண்டுவரப்பட்ட சட்டம் தான் அது.

ஆனால் இன்று ஆள்வது நம்முடைய அரசாங்கம்.. மக்களின சார்பில் அரசு நடத்த, தத்தம் பிரதிநிகளை மக்கள் தேர்ந்தெடுத்து, நாடாளுமன்றத்துக்கு அனுப்புகின்றனர்..எந்த கட்சிக்கு அதிக மக்கள் பிரதிநிகள் உள்ளனரோ அவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்கிண்றனர்..

ஆனால்..அந்தோ பரிதாபம்..

அனுப்பியவரை மறந்து, அரியாசனம் என்றும் தம்முடன் நிலைத்து இருக்க, எதிர்பபு காட்டும் நபர்களை தேசத் துரோகிகளாக அடையாளப்படுத்த முனைகிண்றனர்.. 

உண்மையில், தேசமே தாங்கள் தான் என்ற நச்சு எண்ணத்தில் எழுந்தது அது..

இதில் கொடுமை என்னவென்றால் அதிக பட்ச தண்டனை ஆயுள் தண்டனை.!! .ஆனால் விசாரணை முடியுறதுக்குள்ள ஆயுளே போயிடும்!!

உதாரணம் தான் சிப்பர் பாட்டில்...

https://twitter.com/JharkhandJanad1/status/1317013441786245120?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1317013441786245120%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-880957862570737204.ampproject.net%2F2107030008001%2Fframe.html

போலீசார் யாரையும் வாரண்ட் இல்லாமல், இந்த குற்றம் செய்தார்கள் என கைது செய்யலாம்.

போதை பொருள் வைத்த கேஸை விட கொடிது!!

முக்கியமா, அவர் கெட்ட உள்நோக்கத்துடன் தான் செய்தார் என்பது தானே ஒரு செயலை குற்றத்தன்மையில் கொண்டு வரும்..அது கூட தேவையில்லை..ஜாமீனில் வெளிவரமுடியாத மற்றும் கூட்ட முடியாத குற்றமாகும்

எமெர்ஜென்சி கால நினைவு வருகிறதா?

ஆங்கிலேயர் கொண்டு வந்த சட்டம் தான்..ஆனாலும், சுதந்திரத்திற்குப் பிறகு இந்த சட்டம் அடுத்து வந்த எந்த அரசாலும் நீக்கப்படவேயில்லை.. மாறாக, திருத்தப்பட்டுள்ளது, …அதுவும் எப்படி? அதை இன்னும் கடுமையானதாக மாற்றுவதற்காக மட்டுமே.!

இந்த சட்டப் பிரிவை நீக்குறவு செய்ய வேண்டிய தேவை குறித்து இப்போது உள்ள மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் பெஞ்ச் உட்பட இதுவரை, மூன்று பெஞ்சுகள், அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன, .அதுவும் மிக சமீபத்திலேயே..

ஆனாலும் காது லேது!!

இப்படிப்பட்ட அரிய (?!) சட்டத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்த்தோமென்றாலேயே உங்களுக்கு புரிஞ்சிடும்…இது ஏன் ஆட்சியாளர்களுக்கு அவசிய தேவையா இருக்குன்னு..!!

ஆதியில் இந்திய தண்டணை சட்டத்தை , பிரிட்டிஷார் 1860ல் கொண்டுவந்தப்ப, இந்த தேச துரோக சட்டப்பிரிவே அதில் இல்லை!!

அப்புறம் எப்படி வந்தது?

1870ல் தான், "அய்யோ விட்டுப் போய்டுச்சுப்பா"ன்னு சொல்லிக்கிட்டே கொண்டு வந்து சேர்த்தாங்க!!

அப்புறம் இதுக்கு மூணு விளக்கங்கள் உண்டு.அதாகப்பட்டது..

"அதிருப்தி" என்பது விசுவாசமின்மை மற்றும் பகை உணர்வுகள் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது, ​​வெறுப்பு, அவமதிப்பு அல்லது அதிருப்தியைத் தூண்ட முயற்சிக்காத கருத்துக்கள் ஒரு குற்றமாக இருக்காது என்று விதிகள் உள்ளன...

நம்ம வலைதள வீரர்கள் கவனத்திற்கு!!

இந்த சட்டப் பிரிவை கொண்டு தான், காந்திஜி, நேருஜி, பால கங்காதர திலக், பகத் சிங் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதிலே முதல் பலியாடு ஆனவர் திலக்ஜி தான்..அதுவும்  "கேசரி"யால!

கேசரி பிரியர்கள் பயந்துட வேண்டாம்…

இந்த கேசரி இல்லை....

திலகர் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார் ..அதன் பேர் தான் "கேசரி" அந்த சமயத்தில் நாடெங்கும் பிளேக் நோய் தலை விரித்தாடிய காலம்..

ஆமாம்..ரிப்பன் காணாம போச்சாம்😀

இந்தக்  கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கையை அரசு சரியா செய்யலைன்னு நாட்டு மக்களை அரசுக்கு எதிரான தூண்டுறார்னு அவர் மேல இதே பிரிவில் கேசு.

அது பிளேக்…இது கொரானா!!

இதே பம்பாய் ஹை கோர்ட்டு தான் விசாரிச்சுது..9 ஜட்ஜ்கள். அதில் ஆறு பேர் வெள்ளைக்காரர்கள்..மூன்று இந்தியர்கள்..6:3 கணக்கில் திலகர் குற்றவாளினு தீர்ப்பாகி, 18 மாசம் சிறைத்தண்டனை!!

காட்சி மாறுது..1937..இப்போவும்  இதே சட்டப்பிரிவு.ஆனா வேற கலர் பிரஷ்!

ஏன்னா புதுசா ஃபெடரல் கோர்ட்டு வந்துருக்கு..அதுக்கு மேல லண்டனலே இருக்கிற பிரிவி கவுன்சில்..

1942ல் விசாரணைக்கு வந்த ஹரேண்டு தத் மஜும்தார் Vs கிங் பேரரசர் வழக்கில்,

"பொது ஒழுங்கீனம் அல்லது அதற்கான நியாயமான எதிர்பார்ப்பு அல்லது சாத்தியம் இது தான் குற்றத்தின் சாராம்சம்." என்றது ஃபெடரல் கோர்ட்டு .

.ஆனால் அதை பிரிவி கவுன்சில், 1947ல்,  தன் முன்னர் வந்த பேரரசர் Vs சதாஷிவ் நாராயண் பலேராவ், வழக்கில், ஏற்க மறுத்துவிட்டது .

"அவளோ தூரம் ஏம்பா போறீங்க…இதோ பாருங்க"ன்னு திலக்கின் வழக்கில் சொன்னதை ஏற்றுக்கொண்டு, , வன்முறையைத் தூண்டுவது, தேசத்துரோக குற்றத்திற்கு ஒரு முன்நிபந்தனை அல்ல என்றும், பிரிவு 124 ஏ இன் கீழ் குற்றத்தை நிலைநாட்ட அரசாங்கத்திற்கு எதிராக உள்ள பகை உணர்வுகளை உற்சாகப்படுத்துவது மட்டுமே போதுமானது என்றும் தீர்ப்பளித்தது..

அதுக்கப்புறம் சுதந்திரம் கிடைச்சுதா..

பேச்சுக்கு, கருத்து சொல்வதற்கு சுதந்திரம் வேணும்னு அதுக்கு எதிரானதாக, அரசியலமைப்பு சட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ள “தேசத்துரோகம்” என்ற வார்த்தையை அகற்றுவதற்கான ஒரு திருத்தத்தை, கே.எம்.முன்ஷி நகர்த்தினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பு சட்ட வரைவிலிருந்து 1948 ஆம் ஆண்டில் "தேசத்துரோகம்" என்ற வார்த்தை கைவிடப்பட்டது. நவம்பர் 26, 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தில் தேசத்துரோகம்" என்ற சொல் மறைந்துவிட்டது,

இது பிரிவு 19 (1) (அ) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முழுமையான சுதந்திரத்தை அளித்தது. என்றாலும், இந்திய தண்டனை சட்ட பிரிவு 124 ஏ ஐபிசியில் தொடர்ந்து தங்கியிருந்தது..இருக்கிறது…

கொண்டையை மறைக்கலியே!!

அப்புறம் நமக்கு தான் வரலாறு தெரியுமே..

1951 ஆம் ஆண்டில், ஜவஹர்லால் நேரு அரசியலமைப்பு சட்டத்தின் கொண்டு வந்த முதல் திருத்தம் என்னன்னு..,

"ரொம்ப ஓவரா பேசுராய்ங்க.."னு, 19 (1) (அ) இன் கீழ் உள்ள சுதந்திரமான பேச்சை. மட்டுப்படுத்தி, 19 (2) வது சட்டத்தை கொண்டுவந்தார்.

அவர் அப்படி சட்டத்திருத்தம் கொண்டுவந்ததுக்கு காரணம் இருக்கு…

இந்த சட்டப்பிரிவு 124 A, எதிர்த்து, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அப்போதைய பஞ்சாப் உயர்நீதிமன்றத்தால் 1951 ஆம் ஆண்டில் தாரா சிங் கோபி சந்த் Vs மாநிலம் என்ற வழக்கு போடப்பட்டது.

பிரிவு 124 ஏ என்பது சந்தேகத்திற்கு இடமின்றி பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு ஒரு தடை என்று உயர் நீதிமன்றம் கருதியது, இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 19 வது பிரிவின் கீழ் வரும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை உரிமைக்கு முரணானது என்ற அடிப்படையில் இந்த 124 A செல்லாது என்று தீர்ப்பு அளித்தது.

.இந்த தீர்ப்புதான் ஜவஹர்லால் நேரு அரசாங்கத்தை பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நியாயமான முறையில் கட்டுப்படுத்தக்கூடிய புதிய காரணங்களை அறிமுகப்படுத்தத் தூண்டியது.

சரி.அந்த சட்டப்பிரிவு 124 A செல்லாதுன்னு சொன்னது?

1954 ஆம் ஆண்டில், பாட்னா உயர்நீதிமன்றம், டெபி சோரன் மற்றும் பலர் Vs மாநில அரசு, என்ற வழக்கில், பிரிவு 124 ஏ செல்லுமனு உறுதி செய்தது, இந்த பிரிவு எந்த வகையிலும், சட்டத்தின் 19 வது பிரிவை மீறவில்லை என்று கூறியது,.அப்புறம் ஒரு நான்கு ஆண்டுகள் கழித்து,, அலகாபாத் உயர் நீதிமன்றம், ராம் நந்தன் Vs மாநிலம் என்ற வழக்கில் அந்த பிரிவு செல்லாது என்றது. மக்கள் ஒப்புதல் அல்லது மறுப்பு மட்டுமில்லாமல், ஒரு வலுவான எதிர்ப்பை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றது.

இப்படியே உயர்நீதிமன்றங்களின் பல்வேறு மாற்று கருத்துக்களிலிருந்து , ஒரு புரியாத புதிரா இருந்ததுக்கு, இறுதியாக உச்சநீதிமன்றத்தால் 1962 ஆம் ஆண்டில் கேதார் நாத் வழக்கில் தான் விடை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தான், இன்னி வரைக்கும், தேசத்துரோகச் சட்டத்தின் விளக்கம் குறித்த உச்சநீதிமன்றத்தின் மிகவும் அதிகாரப்பூர்வ தீர்ப்பாகக் கருதப்படுகிறது. ஐபிசியின் கீழ் வரும் தேசத்துரோகச் சட்டத்தின் செல்லுபடியை இந்த அரசியலமைப்பு பெஞ்ச் உறுதிசெய்தது,

"தேசத்துரோக குற்றத்தின் நோக்கம் சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தைத் தகர்த்துவிடுவதைத் தடுப்பதாகும், ஏனெனில் “மாநிலத்தின் ஸ்திரத்தன்மை என்பது, சட்டத்தால் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் தொடர்ச்சியான இருப்பு ஒரு முக்கிய நிபந்தனையாகும் ”.என்றது.

அதே நேரத்தில், ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பிரிவு 124 ஏ இன் நோக்கத்தை வரையறுக்கவும் செய்தது.

"பிரிவு 124 ஏ என்பது, சட்டம் மற்றும் ஒழுங்கைத் தொந்தரவு செய்யும் நோக்கத்தையோ போக்கையோ வெளிப்படுத்தும் அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய சொற்களை மட்டுமே தண்டிக்கிறது.

வன்முறையைத் தூண்டுவதற்கான ஒரு தீங்கு விளைவிக்கும் போக்கு தான், தேசத்துரோக விதிமுறையைத் தூண்டுவதற்கான முன் நிபந்தனை என்றும், சுதந்திரமான பேச்சைத் தடுக்க தண்டனை விதிமுறை பயன்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியது.

பிரிவு 124 ஏ தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் இந்த வரையறை தான் முன்னுதாரணமாக எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பிறகு வந்த இந்திரா காந்தி அம்மையார் எமெர்ஜேணசி கொண்டு வந்தவங்களாச்சே…

அவர் அர்சாங்கம்தான் பிரிவு 124 ஏவை இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக வாரண்ட் இல்லாமல் கைது செய்யக்கூடிய குற்றமாக மாற்றியது. 1974 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்து, காலனித்துவ சகாப்தமான 1898 குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்த 1973 ஆம் ஆண்டின் புதிய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில், தேசத்துரோகம் ஒரு அறிவாற்றல் குற்றமாக மாற்றப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், ஒரு சினிமா தியேட்டருக்கு வெளியே, நின்றுக்கொண்டு, சீக்கிய பெரும்பான்மை அரசுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய இருவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டுகளை அரசு போட்டது.1995 ல் விசாரணைக்கு வந்த இந்த ல்வந்த் சிங் மற்றும் அன்ர் வழக்கில், மான்புமிகு உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது. "கோஷங்கள் எழுபவது, எந்தவொரு இடையூறுக்கும் வழிவகுக்காததால், தேசத் துரோக நடவடிக்கை இல்லை என்றும், அது பார்வையாளர்களின் மனதில் எந்தவிதமான வன்முறையையும் தூண்ட வாய்ப்பில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது..

2011 ல் இந்திர தாஸ் Vs அஸ்ஸாம் மாநிலம் மற்றும் அஸ்ஸாம் அரூப் புயான் Vs அரசு என்ற இரண்டு தீர்ப்புகள் மூலம், உச்சநீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் கூறியது, "உடனடி சட்டவிரோத நடவடிக்கைக்கு தூண்டுதல்" என்ற பேச்சு மட்டுமே, ஒருவரை குற்றவாளியாக்க முடியும். என்றது. அதே போல, தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர் ஒருவரை வன்முறைச் செயல்களில் ஈடுபடுத்தியதாக நிரூபிக்கப்படாவிட்டால் அல்லது உடனடி வன்முறைக்கு மக்களைத் தூண்டவில்லை எனில் அவரை குற்றவாளியாக்க முடியாது என்றும் கூறியது.

ஆனாலும் ஒன்றிய அரசு, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர் என்ற அம்சத்தின் அடிப்படையில் இந்த தீர்ப்புகளை மறுஆய்வு செய்ய கோரியுள்ளது.

இந்திய சட்ட ஆணையம், ஆகஸ்ட் 2018 இல் வெளியிட்ட தேசத் துரோகம் பற்றிய ஆலோசனைக் கட்டுரையில், தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தேசத்துரோகக் குற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வது அவசியம் என்றாலும், சுதந்திரமான பேச்சைக் கட்டுப்படுத்த இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றது.

ஆனாலும், தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகளின்படி, தேசத்துரோக வழக்குகள் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் 2019 ல் உயர்வு காணப்பட்டது, ஆனால் இவற்றில் 3% மட்டுமே தண்டனை கிடைத்தது.

அதாவது, 2019 ல் தேசத்துரோகத்திற்காக கைது செய்யப்பட்ட 96 பேரில், இருவர் மட்டுமே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளனர், 29 பேர் விடுவிக்கப்பட்டனர் என்று உள்துறை அமைச்சகம் பிப்ரவரி மாதம் எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவைக்கு அறிவித்துள்ளது.

இவையெல்லாம் எதைக் காட்டுகிறது..?

உண்மை தான்...

தம் அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல அமைதியாக இருக்கும் அதிகார வர்க்கத்தையும், தேவையில்லாமல் பேசிப்பேசியே பொழுதை போக்கும் நம் மக்களையும் பார்க்கும் போது….

வாழ்க ஜனநாயகம்!!💐

புதன், 23 ஜூன், 2021

குற்றம் செய்தவர்கள் என தண்டனை வழங்கப்பட்டவர்கள் அனைவரும் நூறு வீதம் குற்றம் புரிந்து தண்டனை பெறுபவர்களா

 இது சுகிசிவம் ஐயா அவர்களின் சொற்பொழிவில் கேட்டது..

வில்லியம்ஸ் ராய்ட் என்ற ஜெர்மானியர் தன்னை நாடி வயிற்று வலி, தலைவலி என்று வந்தவர்களுக்கு அவர் கையாண்ட வைத்தியம். என்னவென்றால், யாராவது இருவர் யாராவது இருவர் காதலிக்கிறேன் என்று வந்தால் ஒரு பெட்டியைத் திறந்து அவர்களை அதற்குள் உட்கார வைத்து மூடி விடுவார்.ஒரே நிபந்தனை... அவர்கள் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்ளக்கூடாது என்று .. அரை மணி நேரம் கழித்து அவர்களை அனுப்பிவிட்டு அப்போது, வயிற்று வலி, தலை வலி , உடல் வலி என்று வருபவர்களை அதே பெட்டியில் உட்கார வைத்து மூடி, அரை மணி நேரம் கழித்து அவர்களை வெளியே விடும் பொழுது அவர்களுக்கு இருந்த அல்லது அவர்கள் இருந்ததாக நம்பிய வலி போய் விடுமாம்..

இதில் ஒரு மந்திரமும் இல்லை.    உளவியல் ரீதியாக, அறிவியல் பூர்வமாக என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்றால், இந்த நேசம் கொண்ட இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருக்கும் பொழுது,  இவர்களின் உடலில் இருந்து வெளியே வரும் மின் ஆற்றலானது, எப்படி ஒரு பவர் சக்தி குறைந்த பேட்டரிக்கு, சக்தியைக்  கொடுக்குமோ, அது போல அந்த காதலர்களின் உடலிலிருந்து வெளிப்படும் மின் ஆற்றல்,...அந்த காந்த அலை, அடுத்து வந்த வயிற்று வலிக்காரரைப  பற்றி அவருக்கு தீர்வாகிறது என்று கண்டுபிடித்தார்கள்.

காதலின் சக்தி அவ்வளவு பெரிது இல்லையா?!!

இது தொடர்ச்சியாக நடக்க நடக்க,  அவர் பற்றிய பெயர் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பிக்கிறது. இதில் ஒருவர் அந்த மத குரு சபைக்கு ஒரு புகார் அளிக்கிறார் . அதாவது, இந்த வில்லியம் என்பவர் மருத்துவப் படிப்பு படிக்காமலேயே அது குறித்த தொழில் நடத்துகிறார் என்று ...இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது

இவர் சொல்கிறார் 

"நான் எந்தத் தவறும் செய்யவில்லையே?  நேசமாக இருக்கிற இரண்டு பேரை ஒரு பெட்டியில் உட்கார வைக்கிறேன் ஒழுக்கக் கேடான காரியம் எதையும் நான் அனுமதிப்பதில்லை அவர்கள் வெளியே வந்த பிறகு, அந்த உடல் நலக் குறைவு ஏற்பட்ட வர்களை நான் அதில் அரை மணி நேரம் இருக்க வைக்கிறேன் அவர்களுக்கு தீர்வாகிறது இதற்கு நான் ஒரு பைசா வாங்குவது கிடையாது. இதோ பாருங்கள் அந்த பட்டியலை.. இதில் நான் எந்த தவறும் செய்யவில்லையே"

 

என்று புலம்புகிறார் . இவர் சொன்ன வாக்குமூலத்தை வைத்து இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் (?) கூறப்படுகின்றன ஒன்று மருத்துவப் பயிற்சி எதுவும் இல்லாமல் மருத்துவச் சிகிச்சை மேற்கொண்டது. இரண்டாவது ஒழுக்கக்கேடான செயல்கள் செய்வதற்கு அவர் அனுமதித்தார் என்பது

 

சிகிச்சைக்கு வந்தவர்களை பட்டியலிட்டுக் காட்டுகிறார் 
"பாருங்கள் நான் எத்தனை நோயாளிகளுக்கு இதேபோல சிகிச்சை கொடுத்து இருக்கிறேன் அவர்கள் எல்லாருக்கும் தீர்வு கண்டிருக்கிறது. இதிலிருந்து ஒரு பைசாவும் வாங்கவில்லை.யாரையும் தவறாக நடக்க அனுமதிக்க வில்லை' என்று.

இவர் சொன்ன எந்த விளக்கத்தையும் அந்த சபை ஏற்றுக் கொள்ளவில்லை இவருக்கு 7 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது தவறு செய்யாமலேயே தண்டனை பெற்றார்

இங்கே கேரளா விஞ்ஞானி நம்பி நாராயணன்.. .அவரைப் பற்றி நமக்கு தெரிந்திருக்கும். விருதும் பரிசுகளும் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்கப்பட்டாலும், அவர் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்தார் தானே.

https://sankatamthavirkumsattam.blogspot.com/2021/06/blog-post_3.html

சில சமயம் சந்தர்ப்பமும் சாட்சிகளும் எதிராக போனால், குற்றம் செய்யாதவரும் தண்டனை அடையும் சூழ்நிலை உண்டாகும்.

இதை சொல்லும்போதே கோவலன் நினைவுக்கு வருகிறான் !!

"நேரான மரங்கள் தான் முதலில் வெட்டப்படும்" என்று தெரியும் தானே..

நாமே பார்த்திருப்போம்…எங்குமே ஒரு இடத்தில் தவறு செய்பவர்கள் எப்பொழுதுமே ஒன்றாக சேர்ந்து இருப்பர். செய்யாது இருப்பவன் மட்டுமே அந்த இடத்தில் அந்நியனாக பார்க்கப்படுவான். அதனால் அவனுக்கு எதிராக தான் புகார்கள் அதிகமாக செல்லும்.   அதிகமான குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப் படுவான்.  சாட்சிகள் அவனுக்கு எதிராக வணையப்படும் அவனை அந்த இடத்தில் இருந்து நீக்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும்.

குற்ற வழக்கு என்றால் கேட்கவே வேண்டாம்.. போலிஸாரின் கொடூரததுக்கு அஞ்சியே, நிறையப் பேர் குற்றம் செய்யாமலேயே ஒப்புக் கொள்கின்றனர் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.அதைக் கொண்டு தீர்ப்பு வழங்கும் போது, மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லாமல் தொடர்ந்து சிறையில் இருப்பதும் நிதர்சனம்.

ஒரு தீர்ப்பு பகரப்பட்டு 30 வருடம் கழித்து, 'நான் தவறாக தான் தீர்ப்பு சொன்னேன்.எச்.ஆர்.கண்ணா சொன்னது தான் சரி ' என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் பகவதி சொல்லவில்லையா?  சிறைக்கு போவது மட்டும் தான் தண்டனையா..? தப்பே செய்யவில்லையானாலும், வர வேண்டிய பிரமோஷன்.மறுக்கப்பட்டு, தனக்கு பின்னால் உள்ள இளையவர்கள் எல்லாம் தன்னை தாண்டி பதவி உயர்வு பெறுவது?

தவறு செய்தும்.அனுகூலம் அடைந்தவரை விடுங்கள்..தவறே இன்றி தண்டிக்கப்பட்ட நீதியரசர் கண்ணா.


என்றுமே, தைரியமான நீதிபதிகள் தியாகம் செய்ய வேண்டியிருக்கும்.ஆனால் அவர்கள் மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களை வெல்வார்கள் அவர்களின் தைரியமான முடிவுகளுக்காக என்றுமே  நினைவு கூரப்படுகிறார்கள்.


ஏன் தவறு செய்தவர்கள் தப்பிக்கும் போது, தவறு செய்யாதவன் மாட்டிக் கொள்கிறான்?

நிறைய கேள்விகளுக்கு விடை கிடையாது..

அதை தான் "விதி" "ஊழ்' என்கிறோம்.. 

ஒன்றை நினைத்துச் செய்தால், அதுவன்றி வேறொன்று விளைவதும், அவ்வொன்றே விளையாது போவதும், முற்றிலும் நினையாததொன்று வந்து நேர்ப்படுவதும் இவை எல்லாம் அவ்வப்போது நாம் உணர்வது தான்..

காரணம் புலப்படாது / நிகழ்ந்த நிகழ்ச்சிகளால்   இன்பமும் துன்பமும் விளைகின்றன.ஒருவர் எந்த தவறும் செய்யாமல், அறநெறிப்படி நடந்து வந்தும், தண்டனை அனுபவிக்கிறார் என்றால் அதற்கு காரணம் ஊழ் என்று திருவள்ளுவரூம் சொல்கிறார்.

அதனாலேயே, அறத்துப்பாலில், இல்லறம், துறவறத்துக்கு அடுத்து, 'ஊழ்' என்னும் அதிகாரத்தை தனியாக வைத்தார்..

அந்த விதியைக்  கணிக்க முடியுமா?

அதற்குத் தான் அவனுடைய பிறக்கும் நேரம் கொண்டு ஜாதகம் கணித்தனர். பிரபஞ்சமே அவனுள் அடக்கம், அந்த பிரபஞ்சததில் அவ்ன் அடக்கம் என்பதால் ஜோதிடத்தைக்  கொண்டு, வர இருக்கும் ஆபத்துகளை கூட துல்லியமாக சொல்லினர்..

இந்த விதியைப் பற்றி அவ்வை பேசாமல் இருப்பாளா? பாடுகிறாள் பாருங்கள்…

ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்அம் புவியதன் மேல்"

விளக்கம்:
வாழ வேண்டும் என்று விதி உடையவரை, என்ன முயற்சி செய்தாலும் எவரும் கொல்ல முடியாது. அது போல் இறக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் தடுத்தாலும் வாழ வைக்க முடியாது, எத்தனை முயற்சி செய்தாலும் முன்னேற்றம் அடையாமல் பிச்சை எடுக்க வேண்டும் என்ற விதி உடையவரை யார் காப்பாற்ற முடியும். இது தான் இந்த பூமியில் கண் கண்ட உண்மை. ஒருவரை காப்பாற்றவோ அழிக்கவோ விதியைத் தவிர வேறு ஒருவராலும் முடியாது, அவர் அவரின் வினைக்கேற்ப உள்ள பலன்களை அனுபவித்துத் தான் ஆக வேண்டும்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்."

(குறள். 380)

என்ன பொருள் என்று சொல்லவும் வேண்டுமா?

"அதை தடுக்க முயன்றாலும், முந்தி வந்து நிற்கும்"

ஊழுக்குப் 'உலகத்தியற்கை' என்றும் பெயர் உண்டு; அன்றெழுதினவன் அழித்தெழுதான்"என்னும் பழமொழி உண்டு தானே..

இதற்கு என்ன தான் செய்யலாம்?

விதியை எப்படி வெல்வது? முதலில் அதை வெல்லத் தான் முடியுமா?

அதற்கும் ஓரு உபாயம் சொல்கிறார் அவ்வை..

"பெற்றார் பிறந்தார் பெருநாட்டார் பேருலகில்
உற்றார் உகந்தார் எனவேண்டார் – மற்றோர்
இரணம் கொடுத்தால் இடுவர்(;) இடாரே
சரணம் கொடுத்தாலும் தாம்"

விளக்கம்:
அடுத்தவருக்கு கொடுத்து அதனால் வரும் இன்பத்தை அறியாத உலோபிகள் தன்னிடம் உள்ள செல்வத்தை தனைப் பெற்றோர், உடன் பிறந்தோர், தன் இனத்தைச் சார்ந்தவர், உற்றார், உறவினர், தன்னை சரணம் அடைந்து சலாம் போட்டு சேவகம் செய்பவர் என்று தனக்கு உதவி செய்யும் ஒருவருக்கும் ஈய மாட்டார், ஆனால் அவரிடம் உள்ள செல்வத்தை பறிக்க வரும் கொள்ளையர்கள் அவரை உதைத்து கேட்டால் தன்னிடம் உள்ள செல்வத்தை கொடுப்பர். அது போல் ஒரு மனிதன் தன் இம்மை மறுமைக்கு நன்மை புரியும் நல்ல காரியம், தர்மம் செய்தல், இறை சிந்தனை, கோவிலுக்குச் செல்தல், அன்ன தானம், அடுத்தவனுக்கு உபகாரம் செய்தல், ஆகிய தன்னால் இயன்ற ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார், ஆனால் அவரை விதி என்னும் கொள்ளைக்காரன் வந்து துன்பம் செய்யும் போது தன் துன்பம் விலக பரிகாரம், அடுத்தவருக்கு உதவி, கோவிலுக்குச் செல்தல் என்ற நல்ல காரியங்களில் ஈடுபடுவர். இதை உணர்ந்து விதி நம்மை துன்பம் செய்யும் முன்னர் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.

அப்படியெனில் தானம், தர்மம் செய்வதும் அறநெறிப்படி நடப்பது மட்டுமே, விதியின் பிடியிலிருந்து மீளும் வழி என்கிறார்..


நம்ம தலைவர் கூட பாடலை?

"என்றும் தர்மம் தலை காக்கும்.தக்க சமயத்தில் உயிர் காக்கும்"


இதோ 'மிர்தாத்தின் புத்தகத்திநன்'  வழியாக மிகெயில் நைமி( இவரை தான் நமக்கு தெரியமே..கலீல் ஜிப்ரானின் ஆருயிர் தோழர்...பந்தயத்தில் முந்தி சென்றவர்!!}  என்கிற வழிகாட்டி காத்திருக்கிறார் நம்மை ஊழின் பிடியில் இருந்து மீட்க.. .அவர் கையை கெட்டியாக பிடித்து கொள்வோம்..பின் தொடருவோமா?!

"பாத்திரத்திற்குள் இருப்பதை மூடி அறியாதா என்ன? மூடிகள் திறக்கப்பட்டால், உள்ளிருக்கும் பாம்பு, புழுக்களுக்குத் துன்பம்தான். உங்கள் இதயத்தின் அடியாழத்தில் உள்ள காற்றோடு கலக்காத மூச்சு, உங்களிடம் இல்லை என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

தனது காமம், அச்சம், சிரிப்பு, கண்ணீர் போன்றவற்றையெல்லாம் வெளிப்படுத்தாத பார்வை ஒன்று கூட இல்லை, மற்ற கதவுகளைத் தட்டிப் பார்க்காமல், எந்தக் கனவும் உங்கள் கதவு தட்டி நுழைந்து விடுவதில்லை.

ஆகவே, எப்படிப் பார்ப்பது என்பதில் கவனமாக இருங்கள்.

எந்தக் கனவுகளை உங்களில் அனுமதிக்கிறீர்கள், எதை அனுப்பி விடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். நீங்கள், கவலை, துன்பங்களிலிருந்து விடுபட்டால் இந்த மிர்தாத், உங்களை மகிழ்ச்சியுடன் கடைத்தேற்றுவான்."

வள்ளுவரும் இதை ஒத்து ஊதுகிறாரே..

சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர் செயலுக்கு இடையூறாக வரும் ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்யும். என்கிறார் அல்லவா?

இதில் நிறைய பேர், " தெய்வத்தால ஆகாதெனினும்" என்பதை அப்படியே பொருள் எடுத்துக்  கொண்டு, கடவுளால் முடியாதது கூட முயற்சியால் முடியும்" என்று வள்ளுவர் சொன்னார் என்கின்றனர்.அது சரியல்ல..

"விதி" என்பதற்கு "தெய்வம்" என்ற பெயரும் உண்டு..

அதைத் தான் குறிப்பிட்டு, விதியால் முடியாதது கூட முயற்சியால் முடியும் என்கிறார்.

ஆனாலும், " சிவாய நம" என்று சிந்தித்து இருப்போருக்கு அபாயம் ஒரு நாளுமில்லை" என்று உணர்ந்தவருக்கு, யார் தான் துணை வேண்டும்?

திங்கள், 7 ஜூன், 2021

பழி வாங்குவதைப் பற்றிய சில உண்மையான அல்லது கற்பனையான கதைகள் எவை?

 உத்தர் பிரதேசம் கோண்டா மாவட்டம் 1982 மார்ச் 12 இரவு.

25 வயதே நிரம்பிய டிஎஸ்பி kp சிங் குடும்பத்தை மட்டுமல்ல நாட்டையே உலுக்கி போடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு வீட்டிற்குள் மறைந்திருப்பதாக கிடைத்த துப்பின் அடிப்படையில் அந்த 2 கொள்ளைக்காரர்களை பிடிக்க போலீஸ் படையுடன் சென்ற டிஎஸ்பி kp சிங் நடந்த என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் போலீசார் உட்பட 12 பேர் இறந்தனர் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

அந்த வீட்டின் கதவை தட்டிய டிஎஸ்பி, யாரும்திறக்காமல் போக, திரும்பி இரண்டு எட்டு வைத்திருக்க மாட்டார்..அவருடன் வந்த போலீஸாரே அவரை சுட்டுத் தள்ளினர். சில கிராமத்தினரையும் சுட்டுவிட்டு, ஒரு பொய்யான எநகவுன்டர் கதையை பரப்பி விட்டுள்ளனர் என்று தெரிந்தது.

என்ன ..சினிமா போல இருக்குதா…

இது உண்மை சம்பவம்.[1] .

அந்த காவல் நிலைய ஆய்வாளர் சரோஜ்க்கு எதிரான விசாரணையை நடத்திய டிஎஸ்பி மீது ஏற்கெனவே காழ்ப்புணர்ச்சி இருந்தவருக்கு, அதற்கு பக்கபலமாக அந்த மாவட்ட sp யும் (அவருடைய சொந்தப் பகை) துணை நிண்றது, போலீஸ் மேல்மட்ட நிலையில் நடந்த சதி, நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தெரிய வந்தது. இந்த பொய்யான என்கவுண்டரில் குறிவைக்கப்பட்ட சிங்கின் மனைவி விபா மட்டுமே தப்பினார்.அவர் சாட்சியம் தான் இந்த வழக்கின் பின்புலமாக இருந்த சதித்திட்டத்தை வெளிக்கொணர உதவியது.

19 போலீசாருக்கு எதிராக சிபிஐ போட்ட இந்த வழக்கில், 10 பேர் விசாரணையின் போதே இறக்க, சிலர் ஓய்வு பெற்று விட, ஒருவர் மட்டுமே தீர்ப்பு சொல்லும்போது பணியில் இருந்தார். சதியில் ஈடுபட்ட மேல்மட்ட காவல் அதிகாரிகள் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

டிஸ்பி சிங் கொல்லப்பட்டபிறகு, அவரின் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள்,கொண்ட குடும்பத்தினருக்கு அடுத்து என்ன நடந்திருக்கும்?

மூத்த மகள் கின்ஜால் சிங், உத்தரபிரதேசத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு தினசரி வருகை தருவதோடு, கடினமாகப் படித்தார். டெல்லியின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் சேர்ந்தார், இதற்கிடையில் அவரது தாய்க்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. தனது நோயுடன் ஒரு தீவிரமான போருக்குப் பிறகு, தனது மகள்கள் இருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக மாறி, தங்கள் தந்தையின் மரணத்திற்கு நீதி பெறுவர் என்ற மன அமைதியுடன் தான் அவர் கண்ணை மூடினார்.

எத்தனை பெரிய சோகம்…ஆனாலும் …கிஞ்சலும் அவரது சகோதரி பிரஞ்சலும் அவர்கள் அம்மா ஆசைப்பட்டது போல, தங்கள் தந்தையின் கொலைக்குப் பின்னால் இருந்தவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தும்,தங்கள் வாழ்நாள் இலக்கை நோக்கி, தங்கள் சக்தியை முழுதும் அர்ப்பணித்தனர்.

அவர்கள் தாயார் இறந்த பிறகு, கின்ஜால் இறுதித் தேர்வுகளை எழுத தனது கல்லூரிக்கு திரும்பினார். பட்டம் பெற்ற உடனேயே, அவர் தனது தங்கை பிரஞ்சல் சிங்கையும் டெல்லிக்கு அழைத்து வந்தார். ஒன்றாக, யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராவதில் அவர்கள் தங்கள் கவனத்தை முழுவதுமாக செலுத்தினர்.

2007 ஆம் ஆண்டில் இருவரும் . கிஞ்சல் சிங் ஐ.ஏ.எஸ் ஆகவும், அவரது சகோதரி பிரஞ்சல் சிங் ஐ.ஆர்.எஸ் ஆகவும் .யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றனர்

2013 ஆம் ஆண்டில், 31 வருட போராட்டத்திற்குப் பிறகு, லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 3 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை விதித்தது, மற்ற ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

"என் அப்பாவை கொன்னவனை பழி வாங்காம விடமாட்டேன்"னு ஹீரோ சொல்லிட்டு அவரே அருவாளை தூக்கிட்டு போய் வில்லனை போட்டா தான் பழிவாங்கல்"ன்னு சினிமா நம்மை மூளைச் சலவை செய்து விட்டது..😂

இந்தப் பழி வாங்குதல் சிறப்பாக இருக்குல்ல?!


படிமப்புரவு கூகிள்

அடிக்குறிப்புகள்[1] UP fake encounter: 3 cops get death for UP fake encounter in 1982 | India News - Times of India


நேற்று பத்திரிக்கையாளர் பிரியாரமணி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அதன் தாக்கம் பணியிடங்களில் இருக்குமா? தமிழ் ஊடகங்கள் இதை எப்படி கையாளுகின்றன?

 

சனி, 29 மே, 2021

நேற்று பத்திரிக்கையாளர் பிரியாரமணி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு என்ன சொல்ல வருகிறது? அதன் தாக்கம் பணியிடங்களில் இருக்குமா? தமிழ் ஊடகங்கள் இதை எப்படி கையாளுகின்றன?

 #MeToo இயக்கத்தை அடுத்து முன்னாள் மத்திய மந்திரி அக்பருக்கு எதிராக பிரியா ரமணி பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அக்பர் ஒரு பத்திரிகையாளராக இருந்தபோது பல தசாப்தங்களுக்கு முன்னர் பாலியல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டி அவரை அவதூறு செய்ததாக ரமணி மீது 2018 அக்டோபர் 15 அன்று அக்பர் புகார் அளித்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டின் காரணமாக வர் அக்டோபர் 17, 2018 அன்று மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனக்கு எதிரான #MeToo பிரச்சாரத்தின்போது முன்வந்த பெண்கள் முன்வைத்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் மறுத்தார்.

தற்போது வெளிவந்த, எம்.ஜே. அக்பர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் இருந்து நீதிமன்றம் பத்திரிகையாளர் பிரியா ரமணியை விடுவித்தது ஒரு முக்கியமான தீர்ப்பு.

மீ டூ இயக்கம்"வலு பெற்ற போது,துணிந்து சமூக வெளியில், தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பெண்கள் பேச முன் வந்த போது, பலவிதமான கேள்விகணைகள், எதிர்பார்த்தது போலவே, அவர்கள் மீது பாய்ந்தன.

அவர்கள் ஒழுக்கம் விமர்சனம் செய்யப்பட்டது.

இத்தனை காலதாமதமாக வெளிக் கொணர்ந்தற்கு அவர்கள் மீதே தப்பிதமாக காரணம் கற்பிக்கப்பட்டது.

அவற்றை நிரூபிக்க அவர்களால் முடியாது என்றும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களை, வயதில் மூத்தவர்களை கேவலப்படுத்தும் செயல் என்று வக்காலத்து வாங்கப்பட்டது.

குற்றம் சாட்டும் பெண்ணின் கண்ணியம் பாழ்போவது. பற்றிக் கூடக் கவலைப்படாமல், குற்றம் சாட்டப்பட்டதாலேயே சம்பந்தப்பட்டவரின் மரியாதை குறைந்து விட்டதாக, அவருக்காக மற்றவர்கள் வாளை சுழற்றினர்!!

இவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும் விதமாக வந்துள்ளது இந்த தீர்ப்பு.!!

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமான தருணம் இது என்று பரவலாக இந்த தீர்ப்பு பாராட்டப்படுகிறது.

இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பால் அக்பர் தனக்கு எதிராக குற்றச்சாட்டியவர்களில் ஒருவரை ஊமையாக்குவதற்கான (மற்றும் மற்ற அனைவரையும் மிரட்டுவதற்கான) இந்த குறிப்பிட்ட முயற்சியின் தோல்வி, தவறான செயல்கள்.செய்ய நினைக்கும், அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்ட, மற்ற ஆண்களை ஒன்றுக்கு இரண்டு முறையாக சிந்திக்க வைக்கும். .

"சமூக அந்தஸ்துள்ள ஒரு மனிதர்,நற்பெயர் பெற்றவர் கூட பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுஇருக்க முடியும்" என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

பிரபல எழுத்தாளர் அணுராதா ரமணனுக்கு நடந்தது மறக்க் முடியாதே…

அதே போல ‘எந்தவொரு தளத்திற்கு முன்னும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குறைகளைத் தெரிவிக்கும் உரிமை’ உண்டு என்றதும் தீர்ப்பின் சிறப்பு அம்சம்.

விசாகா வழக்கில், பாலியல் துன்புறுத்தல் வழக்குகளுக்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் இருந்தும், அதன் பற்றாக்குறையை உணர்ந்த நேரத்தில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு நிறைய பெண்களைத் தைரியமாக பேச முன் வர வைக்கும்.

காலதாமதமாக புகார் சொல்வது குறித்து, “பெரும்பாலான நேரங்களில், மூடிய கதவுகளுக்குப் பின்னால் பாலியல் துன்புறுத்தல் கருதப்படுவதை புறக்கணிக்க முடியாது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிரான தாக்குதலை அறிந்திருக்க மாட்டார்கள். ரமணி மற்றும் (கசலா வஹாப்) குறிப்பிடும் நேரத்தில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை முறையுடுவதற்கான வழிமுறைகள் இல்லாததை நீதிமன்றம் அறிந்து கொள்கிறது. ”

பாதிக்கப்பட்டவருக்கு பாலியல் துன்புறுத்தலின் தாக்கத்தை சமூகம் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

"கண்ணியத்திற்கான உரிமையின் விலையில் நற்பெயர் உரிமையை பாதுகாக்க முடியாது," என்று அது கூறியது.தான் தீர்ப்பின் உச்சம்

"பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுபவர்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒரு சாதாரண நபராக இருக்கலாம், அவர் புகழ் பெற்ற நபராகவும் இருக்க முடியும் என்பதை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்களில் பெரும்பாலோர் களங்கம் மற்றும் அவரது தன்மை மீதான தாக்குதல் காரணமாக அடிக்கடி பேச முடியாது. ”

"பெண்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்கள் சமூகத்தில் முன்னேறுவதைத் தடுக்காது" என்று நீதிமன்றம் மேலும் கூறியது.

Priya Ramani: ‘I spoke because women before me spoke up. I spoke so people after me can speak up’

இந்த தீர்ப்பு பெறுவதற்கு போராடிய பிரியா ராமனை வாழ்த்தி சமூகவெளியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

"இந்த தீர்ப்பு பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில், தகுதியான கவனத்தை ஈர்த்துள்ளது" என்றார் ரமணி.

"இது அதிகமான பெண்களைப் பேச வைக்கும் என்று நான் நம்புகிறேன், மேலும் இது சக்திவாய்ந்த ஆண்கள், தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் பெண்கள் மீது பொய் வழக்குகளைத் தாக்கல் செய்வதை ஊக்கப்படுத்தாது என்றும் நம்புகிறேன்" என்றார்.

ஊடகங்களும் ரமணிக்கு ஆதரவாக மகிழ்ச்சியை தெரிவித்தன. பத்திரிகையாளர் ரோஹினி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில், "என்ன ஒரு சண்டை # பிரியரமணி. ஒவ்வொரு பாலியல் வேட்டையாடும் வீழ்ச்சியும் ஒரே வழி." என்றார்.

ராணா அய்யூப் ரமணியுடன் ஒரு படத்தை வெளியிட்டு, "இதை இடுகையிட வேண்டியிருந்தது. பிரியா ராமனின் அன்புக்காக" என்றார்.

தி வயர் அர்ஃபா கானும் ஷெர்வானி, “ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக நிற்கும்போது, ​​அவள் எல்லா பெண்களுக்கும் துணை நிற்கிறாள்” என்று ட்வீட் செய்துள்ளார். "எங்கள் அனைவருக்கும் துணை நின்றதற்கு # பிரியரமணி நன்றி. நீங்கள் எங்கள் ஹீரோ!" என்றது அவர் ட்வீட்.

ஆனால் உண்மையில் வருத்தம் என்னவென்றால் நமது தமிழ் ஊடகங்கள் இந்த தீர்ப்பு குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை..

யார் கண்டது…எந்த புற்றில் என்ன பாம்பு இருக்கிறதோ?!


ஞாயிறு, 6 ஜூன், 2021

பல்லாவரத்தில் கர்ப்பிணியை தரதரவென இழுத்துச் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்ததற்கு பதிலாக என்கவுண்டர் செய்திருக்கலாமே, இவர்கள் வெளியே வந்து இதேதான் செய்யப்போகிறார்கள். நாட்டிற்கு ஏன் இவர்கள் தேவை?

 மற்ற நாடுகளில் உள்ள சட்ட நடைமுறைகளும், இந்தியாவில் உள்ளதும் வேறு வேறானவை.

நம்முடைய அடிப்படையே "ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம்..ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது" என்பதே.

அவர் மீதுள்ள குற்றச்சாட்டை சொல்லி, அவர் தரப்பு பதிலை பெற்று ஒப்புக்கொண்டால் தான் தண்டனை அளிக்கப்படும். மறுக்கும் பட்சத்தில், அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, நீதி விசாரணை செய்யவேண்டும்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட போது, கையும் களவுமாக பிடிபட்டாரே என்று கேட்கலாம்..யாருக்கு தெரியும்..அவர் வெறும் அம்பு தானா..எய்தவர் வேறு ஒருவரா என்று?ஞாபகம் இருக்கிறதா… "அஞ்சாதே" என்று ஒரு படம் வந்ததே..காவல் அதிகாரியாக வேண்டியவன் எப்படி குற்றவாளி ஆனான் என்று சொல்லுமே..

அதை விசாரிக்கும் போது தானே தெரியும்?

அடுத்து, போலீசார் என்கவுண்டர் செய்வது?சட்டத்தை அவர்களே எடுத்து கொள்ள அனுமதிப்பது, எவ்வளவு பெரிய சட்ட சீர்கேட்டிற்கு வழி செய்யும்?

ஏற்கெனவே வடநாட்டில் பொய்யான என்கவுண்டரில் போலிஸ் அதிகாரிகள் எதிரிகளை தீர்த்து கட்டிவிடுவதாக குற்றச்சாட்டு உள்ளதே..

இஷ்ரத் ஜகான் வழக்கு, விகாஸ் துபே கொல்லப்பட்டது நினைவு இருக்கிறதா?

அதுவும் அதிகாரம் இருப்பவர் அதை துஷ்ப்ரயோகம் செய்யும் வாய்ப்பு அதிகம்..

இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமாயின், ஒரே வழி ..

பெண்கள் தங்க நகைகள் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும்.

சவுகார்பெட் பெண்களை பார்த்தாலே தெரியும்.மெல்லிய சங்கிலி தான் கழுத்தில் அணிந்திருப்பர்.இது உடமைக்கும் நல்லது.உயிருக்கும் நல்லது..

நாம் தான் தாலிக்கொடி என்று கனத்த சங்கிலியை போட்டுக் கொண்டு அலைகிறோம்.

ஏதோ கணவனின் உயிரே அந்த தாலியில் தான் உள்ளது என்பது போல…

கோராவிலே வரும் கேள்வி கூட பாருங்கள்..தாலியை பெண்கள் கழற்றி வைப்பது நல்லதான்னு …

  1. அந்த அளவுக்கு தமிழ் சினிமா தாலி சென்டிமெண்டை வச்சி மூளை சலவை செஞ்சுருக்காங்க..🤣 
  2.  
  3.  
  4. தாலி அணிவது என்பது சங்க காலத்தில் எல்லாம் கிடையாது.பின்னாடி பெண், ஆணின் சொத்து என்று காட்டுவதற்கு அடையாளமாய் இந்த தாலி வந்தது. 

இப்போ தான் பெண் ஒரு பொருளல்ல, ஒருவனின் சொத்து அல்ல..உணர்வும் உயிரும் உள்ளவள்ன்னு ஆயிடுச்சே..

ஆனாலும் அதுக்காக நான் தாலி அணிவதுக்கு எதிரானவள்னு எடுத்துக்க கூடாது.

திருமணமாவள்ன்னும் தெரியணும்.அதே சமயம் அது அவள் உயிருக்கு உலை வைக்கவும் கூடாது. .

எதுஎதிலெல்லாம் மற்றவரை காப்பியடிக்கிறோமே..இதை செய்தால் என்ன?

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் யாரையும் தப்பு செய்யத் தூண்டுகிறது..

நாமே அந்த தூண்டுகோலாக இருக்கக்கூடாது!!


சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...