வெள்ளி, 25 ஜூன், 2021

படிக்காத ஒரு ஆணை படித்த பெண் மணப்பது நல்லதா? இல்லை கவலைகள் நிறையுமா?

 படித்த பெண்ணும் படிக்காத ஆணும்.

படிக்காத பெண்ணும் படித்த ஆணும்

படித்த பெண்ணும் படித்த ஆணும்

படிக்காத பெண்ணும் படிக்காத ஆணும்

இந்த நான்கு வகையில் ஏதேனும் ஒன்றில் தான் திருமணம் செய்பவர்கள் வருவார்கள்…

முதலில் கீழேயிருந்து வருவோம்..படிக்காத பெண்ணும் ஆணும்…இந்த ஜோடிக்கு பெரிதாக துன்பம் இருக்காது.உடல் உழைப்பு சார்ந்த வேலையை இருவரும் செய்வர்..குடும்பத்தில் இருவரின் பங்கும் இருப்பதால், பெரிதாக ஈகோ இருக்காது..டாஸ்மாக் எட்டி பார்த்தாலும் கூட.. குடித்துவிட்டு வந்த அடிக்கும் கணவனை எதிர்த்து, போலீஸ் ஸ்டேசனுக்கு போக மாட்டாள்.. விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போக மாட்டாள். வரதட்சனை பிரச்சினை கிடையாது.. .அடித்தட்டு மக்களின் பிரதிநிதிகள் தான்.. ஆணால் கையில் கொண்ட காசை கொண்டு, அன்றைய தினத்தை உண்மையில் ப்ரெசென்ட ஆக வாழக்கூடியவர்கள்.

படித்த பெண்ணும் படிக்காத ஆணும்…

ஆயுர்வேத டாக்டருக்கு படித்து கொண்டிருந்த விஸ்மயாவும் அவள் கணவன் மோட்டார் வாகன ஆய்வாளர் கிரணும்

நர்சிங்குக்கு படித்த அர்ச்சனாவும் அவள் படித்த கணவன் சுரேசும்

இவையெல்லாம் நாட்டிலேயே அதிக படிப்பறிவு கொண்ட பெண்கள் உள்ள கேரளாவில் சமீபத்தில் நடந்தது.

கேரள காவல்துறையிடம் கிடைத்த தரவுகளின்படி, கணவர் அல்லது அவர்களது குடும்பத்தினரால் 1,080 வீட்டு வன்முறை வழக்குகள் இந்த ஆண்டு மே 31 வரை மாநிலத்தில் பதிவாகியுள்ளன,. கடந்த ஆண்டு முழுவதும் இதேபோன்ற 2,715 சம்பவங்கள் நிகழ்ந்தன.என்றும் தெரிகிறது?இதன் பொருள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சராசரியாக 200 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஒரு மாதத்தில் பதிவாகியுள்ளன.

எத்தனை சட்டம் போட்டு  என்ன?

 இரண்டு பேரும் படித்திருந்தால் மட்டுமே துன்பம் குறையமா என்றால் கவலைகள் தான் அதிகம் நிறையும். என்று தெரிகிறது.மேல்தட்டு மக்களுக்கே உரிய ஆசைகள், கனவுகள், அதனால் செய்யும் செயல்கள், அதில் ஏற்படும் ஏமாற்றங்கள் என்று படித்த படிப்பினால் வரக்கூடிய அறிவு பின்னுக்கு போவது அதிகம் தெரிகிறது..ஆனால் அதனை கட்டுக்குள் வைத்தவர்கள் வெற்றிபெறுகிறார்கள்.

படிக்காத பெண்ணும் படித்த ஆணும்…

கண்ணகி படித்ததாக இல்லை. அவளுக்கும் கோவலனுக்கும் பூசல் வந்ததாக குறிப்பு இல்லை..ஆனால் படித்த மாதவியும் கோவலனும் பிரிந்து விட்டார்கள்!.

இது தான் முந்திய நடுத்தர வர்க்கமாக இருந்தது..அப்போதைய சினிமாவை பார்த்தாலேயே தெரியும். ஹீரோ தன் தங்கையை கல்யாணம் செய்து கொடுப்பதும், தம்பியை படிக்க வைப்பதும் தான் தன் லட்சியம் என்பான்!

தன்னுடைய முறைப்பெண் என்று கிராமத்திலிருந்து கல்யாணம் செய்துகொண்டு பட்டனத்துக்கு வந்து ஒண்டிக்குடித்தனத்தில் கணவனின் வருவாயில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்த காலம் நன்றாக தானே இருந்திருக்கும்…?

ஆனால் அடிமைகளிடம் விசுவசத்தை எதிர்பார்க்கலாம் …நேசத்தை?

காலம் மாறிவிட்டது.இப்போது கிராமத்து பெண்பிள்ளைகள் நன்றாகவே படிக்கிறார்கள்.

கடைசியில் வந்து நிற்பது..

படித்த பெண்ணும் படிக்காத ஆணும்.

இப்போதெல்லாம் வரும் சினிமாக்களில், இப்படி தானே ஜோடியை காட்டுகிறார்கள்.ஆனால் கல்யாணம் செய்வதோடு படம் முடிந்து விடுகிறது..நிஜ வாழ்க்கையில் அங்கே இருந்து தான் ஆரம்பிக்கும்!

ஆணாதிக்க மனோபாவம் கொண்ட சமுதாயம் இது. சம நிலையில் உள்ள போதே, போட்டி இருக்கும்போது, தன்னை விட உயரத்தில் உள்ளவள் தன் மனைவி என்னும்போது..?

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்.

அந்த இரண்டில் ஒன்று பெரியதென்றால் எந்த வண்டி ஓடும்? என்ற பாட்டு ஞாபகம் வருதா?

அதனால் ஏற்றத்தாழ்வு இருக்கும் இடத்தில் எப்போதும் இன்பம் துன்பம் என்ற இரண்டு வித நிலையும் மாறி மாறி இருக்கும்…

அதற்காக ஒத்த படிப்பு, வசதி, வேலை என்று இருக்கும் தம்பதிக்குள் மட்டும் அந்நியோனியம் வந்து விடுமா என்ன?

கனிந்த வாழைப்பழம் பக்கத்தில் பச்சை தக்காளி காயை வைத்து பாருங்கள்.

வாழைப்பழத்திலிருந்து வெளிவரும் ஏத்திளீன் வாயுவால், தக்காளியும் கனிந்து விடும்..

அது போன்றது தான் அன்பு…அதுவே அந்நியோனியத்தை ஏற்படுத்தும்..எப்போது அந்நியோனியம் ஏற்படுகிறதோ அப்போது தான் அந்த இருவரும் அறிமுகமற்றவர்கள் என்பதிலிருந்து மாறுகிறார்கள்..

இங்கிலாந்து இராணியின் கணவர் ராஜா வல்ல.வெறும் இளவரசர் தான்..தன் மனைவிக்காக அவர் விட்டுக்கொடுத்தவை பல.அதற்கும் அந்நியோனியம் தானே காரணம்..

அது பொதுவாக இன்னாருக்கு இன்னாரிடம் வரும் என்று சொல்வதற்கில்லை..தடையின்றி, மனது தனக்கு ஒத்த இன்னொன்றுடன் உறவாட முடியும்போது வருவது.

வாழ்க்கை துணையிடம் அந்நியோனியம் கொள்ள தேவையானது நன்கு பயிற்றுவிக்க பழகிய மனது..

மனதின் அற்புதம் தான் தெரியமே..எனக்கு ஒன்றுமே சரியில்லை என்பவருக்கு அது தான் கிடைக்கும்!

ஒரு பயிலரங்கத்தில் மனவள பயிற்சி: நடந்துக் கொண்டிருக்கிறது..

பயிற்றுவிப்பாளர் எல்லோரிடமும் தனக்கு வாழ்விலும் நடைபெற்ற நல்ல விஷயங்களை ஒரு தாளில் எழுத சொன்னார் பிறகு அவற்றை வாங்கி ஒவ்வொன்றாக பார்வையிடும் பொழுது ஒன்று மட்டும் வெற்று தாளாக இருந்தது

அதில் உள்ள அவரின் பெயரை படித்து கூப்பிட்டபோது ஒருவர் எழுந்தார்.

" என்ன உங்களுடைய தாளில், நீங்க ஒன்றுமே எழுதவில்லை ?"

"என் வாழ்க்கையில் எந்தவித நல்லதும் நடக்கவில்லை அப்புறம் என்ன எழுதுவது?" என்று திருப்பிக் கேட்டார் .

அதைக் கேட்ட பயிற்றுவிப்பாளர் அவரிடம்

"உங்கள் மனைவி இப்போது யாரோட குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்டார்

அரங்கமே திடுக்கிட்டுப் போனது . அந்த நபர் அதிர்ச்சியடை ந்து போய் ,"அப்படியெல்லாம் இல்லையே என் மனைவி என்னுடன் தான் இருக்கிறார்" என்ற உடனே

" அதை ஏன் எழுதவில்லை? அது எவ்வளவு பெரிய விஷயம். இத்தனை வருடங்களாக உங்கள் மனைவி உங்களுடைய குறைகளை சகித்துக்கொண்டு உங்களுடன் குடும்பம் நடத்துவது பெரிய விஷயம் அல்லவா? அது எழுதுங்கள் "என்றார் பயிற்றுவிப்பவர்.

அடுத்து "உங்கள் மகன் போன வாரம் ஜெயிலில் இருந்து வந்து விட்டானா?" என்று கேட்டார் .

இவருக்கு தர்மசங்கடமாகி விட்டது எல்லாரும் முன்நிலையிலும் தன்னுடைய குடும்பத்தை பற்றி யாராவது தவறாக சொல்லி இருக்கிறார்கள் என்று நினைத்து "என் மகன் இப்ப காலேஜ்ல தான் படிச்சுகிட்டு இருக்கான். என் கூட தான் இருக்கான்" என்றார்

"எத்தனையோ பிள்ளைகள் போதை மருந்துக்கு அடிமையாகி , பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கை சீரழிகிறது/ சீரழிந்து போயிருக்கிறது அப்படியில்லாமல் உங்கள் பிள்ளை நல்ல குணங்களுடன் உங்களுடன் இருக்கிறார் என்பது பெரிய வரப்பிரசாதம் அல்லவா ?அதையும் எழுதுங்கள்" என்றாராம்

இப்படி நம் வாழ்க்கையில் இருக்கும் நல்ல விஷயங்களை நம் மனக் கண்ணால் பார்க்கும் சக்தி இல்லாமல் இருக்கிறோம்

இது ஓஷோவுக்கு தெரியாமலா?

"கணவன் தான் உரிமையுடன் பெறுவதற்கு உரியது தனக்கு கிடைக்கவில்லை என்று எண்ணுகிறான்; மனைவியும் தான் உரிமையுடன் பெறுவதற்கு உரியது தனக்கு கிடைக்கவில்லை என்று எண்ணுகிறாள். மனைவி தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைக்கிறாள், கணவனும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைக்கிறான். நேசம் எங்கே இருக்கிறது? யாரும் கொடுப்பது பற்றி அக்கறை கொள்வதில்லை, எல்லோரும் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள். ஆனால், எல்லோரும் பெறுவதிலேயே குறியாக இருக்கும் பொழுது, ஒருவருக்கும் அது கிடைப்பதில்லை. எல்லோரும் வெறுமையாக, இறுக்கத்துடன், செய்வதறியாது இருப்பதாக உணர்கிறார்கள்,

அடிப்படை அஸ்திவாரம் இங்கு இல்லை, நீங்கள் அஸ்திவாரம் இன்றி கோவில் கட்ட ஆரம்பித்துவிட்டீர்கள். அது எந்தக் கணம் வேண்டுமானாலும் நொறுங்கி விழுந்துவிடப் போகின்றது. உங்களுடைய காதல் எத்துனை முறை நொறுங்கி விழுந்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும், இருப்பினும், நீங்கள் அதே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்."

படித்த ஆணோ, படிக்காத ஆணோ, ஒரு படித்த பெண்னை திருமணம் செய்துக் கொள்ளலாம்…ஆனால் ஒரே நிபந்தனை..

அவளை தேவதையாக வைத்துக்கொள்ள வேண்டும்!!

இதை நான் மட்டும் சொல்லவில்லை..

தன் நெஞ்சில் இடம் கொடுத்து, தன்னில் பாதி கொடுத்து…இப்படி காட்டியவர்களே நம் கடவுளர் தானே!

அப்படியும் இல்லையென்றால் .

இனி, வரதட்சணை சாவுகள் நடக்காது..

சிங்கத்தின் துணை கொண்டவளுக்கு நந்தி தான் என்ன செய்வார்!

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...