இதை பற்றி பல தடவை சொல்லியுள்ளேன். கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படை சட்டத்தை பற்றி..
ஏதேனும் பிரச்சினை வரும்போதே நாம் காவல் நிலையத்தையும், நீதிமன்றத்தையும் தேடிப் போகிறோம்.அப்படி போகும்போது, தன் தரப்பு நியாயத்தை மட்டுமே பார்க்கும் நாம் அது , பொது நியாயத்தில் வருமா என கவனிக்க தவறுகிறோம்.இதனால் தான் பல சுற்று வழக்காடலுக்கு பிறகும் நம் கட்சி தோற்றுப்போகிறது..அது ஏற்றுக்கொள்ளப்படாத வாதம் என்று முன்னரே நமக்கு தெரிந்திருந்தால் அத்தனை கால விரயம், பொருள் விரயம் செய்திருப்போமா?
ஆனால் ஏற்றுக்கொள்ளத்தக்கது எது? எது அப்படி இல்லாதது?
உறவினரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பிள்ளை திடீரென ஒருநாள் "பேசி"னார். அவர் அப்பா சாலை விபத்தில் அடிபட்டு இவர்கள் தகவல் தெரிந்து போகும்முன்பே இறந்து விட்டுள்ளார்..நஷ்டஈடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல, சாலை விபத்தில் இடித்துவிட்டு போன வண்டி விவரம் தெரியாது என்பதால், என்ன செய்யலாம் என்று கேட்டார்..பேசும்போது தெரிந்தது, அவர் ஏற்கெணவே போலீசில் புகார் கொடுத்துள்ளார், அதில், அவர் தந்தையின் தவறால் விபத்து ஏற்பட்டது என்று..என்ன இப்படி எழுதி கொடுத்துளளீர்களே என்று கேட்டால், ஏட்டு எழுத, நான் கையெழுத்து மட்டும் போட்டேன், இப்போது அதை மாற்ற முடியமா? என்றார்..இதை காவல் நிலையம் போகும் முன்பேயல்லவா கேட்டிருக்கவேண்டும் எண்றேன்..விவரம் தெரியாமல் அரசு கொடுக்கும் நஷ்டஈடு கூட பெற வழியில்லாமல் போயிற்று.
அடுத்து அவர் கேட்டார் பாருங்கள் ..பணம் கொடுத்தால் புகாரை மாற்ற முடியுமா?"☺️
நிறைய பேர், "சட்டம் எங்களுக்கு எதற்கு? . நாங்கள் சரியாக நடப்பவர்கள்" என்கிறார்கள்.
உண்மை…பிளாட்டோவும் அதைத் தான் சொல்கிறார்..
"நல்ல மக்களுக்கு, பொறுப்பாக நடந்த கொள்வது எப்படி என்று சொல்ல சட்டம் தேவையில்லை.ஆனால் மோசமான மக்களுக்கு அதை வளைக்கும் வழி தெரியும்" என்கிறார்.
ஒரு வழிப்பாதையின் எதிர்திசையில் வேகமாக வண்டியோட்டி வருபவர்களை பார்த்திருக்கிறோம் தானே…?
அதைக் கூட விடுங்கள்..நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்களின் மீது வண்டியை ஏற்றி கொன்றுவிட்டு, வாளா இருப்போரையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்…?!
இத்தனைக்கும் தன் மகன் தேரில் அடிபட்டு ஒரு கன்று இறந்தது என்று தன் மகனையே பலியிட்ட மனுநீதி சோழன் ஆண்டதும் இங்கு தான்.
அதிகாரத்தை கொண்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கொண்டே அவனில் உள்ள மனிதத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
வலியை உணர்ந்தால் உயிருடன் உள்ளோம் என்று அறியலாம் .மற்றவரின் வலியை உணர்ந்தாலோ மனிதனாக இருக்கிறோம் என்று…லியோ டால்ஸ்டாய் சொல்கிறார்.
"சொல்றவன் சொல்லிக்கிட்டு இருக்கட்டும், என்று பணமும் அதிகாரமும் இருந்தால் சட்டத்தை வளைத்து விடலாம் தான்..ஆனால்..
வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை" என்று எச்சரிக்கிறாள் அவவை.
வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.
இங்குள்ள பிரச்சினையே புத்திசாலிகள் எல்லாம் ஏகப்பட்ட சந்தேகங்களுடன் இருக்க, அறிவிலிகள் மட்டும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது தான்..!!
ஏதோ ஒரு வகையில்..
அது சட்டத்துக்கு புறம்பனது ஆனாலும்
வாழ்க்கையில் ஜெயிப்பவனிடன் பேசத தான் ஆசைப்படுகிறார்கள்.தோற்று போனவனிடம் பேச யாருக்கும் நேரமில்லை
அவன் நேர்மையான வழியில் போய் தோற்றாலும் கூட!
வரலாறு முழுதும் பார்த்திருக்கிறீர்களா ?
யார் செயல் புரிந்திருக்க வேண்டுமோ அவர்கள் செய்யாமல் விட்டதும், நன்றாக தெரிந்து அறிந்திருக்க வேண்டியவர்களே அதை விட்டொழித்ததும், எப்போது அதிக தேவையோ, அப்போது நீதி ஊமையாகிப்போனதும், இவையெல்லாம் தான் அரக்கர்கள் வெற்றி கொள்ள உதவியது.
பீஷ்மர் எவ்வளவோ அறிந்திருந்தும் , நடக்கும் அநீதி தெரிந்தும் வாளாயிருந்ததால் தானே பழிக்கு ஆளானார்!!
ஆனாலும்…எந்த தவறும் செய்யாதிருப்பினும் சிலருக்கு காராக்கிரகம். போகும் சூழல் வரும்..
’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; என்று கம்பர் பாடவில்லை?
எல்லாம் ஜென்ம ஜாதகத்தில் 12ம் பாவம் கெட்டிருக்கும்!
இப்படித் தான் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் விசாரணை படக்காமலேயே 12 வருடம் சிறையில் இருக்கிறார்.இவருடைய பெயில் மனு விசாரனைக்கு வரும்போது, கேரள உயர்நீதிமன்றம் " ஒருவரின் சட்டப்பூர்வ அல்லது அரசியலமைப்பு உரிமைகளை பற்றி ஆராய்வதை, அவர்கள் "இறந்த பிறகு" பிரேத பரிசோதனை செய்வதாக நீதிமன்றங்கள் இருக்கக்கூடாது அதற்கு பதிலாக, அத்தகைய உரிமைகளைக் அவை அணைக்கப்படுவதற்கு முன்பு" காப்பாற்றும் டாக்டராக இருக்க வேண்டும் ... ," என்றுருக்கிறது!!
நீதிமன்றங்கள் தன் கதவை தட்டுபவருக்கு நீதி வழங்க தயாராகத் தான் இருக்கிறது!
நமக்கு தான் தெரிய வேண்டும்..நம் உரிமைகளை பற்றி மட்டுமல்ல.. கடமைகளையும்!!
"எனக்கு அதெல்லாம் தெரியாது, தெரிய வேண்டிய தேவையும் இல்லை" என்று கர்மாவின் சட்டத்திற்கு முன் சொல்ல முடியாதே!!.