முதல் தகவல் அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் தகவல் அறிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூன், 2021

முதல் தகவல் அறிக்கையும் ஒருவர் கைது செய்யப்பட்டாலும் அவருக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

 

முதல் தகவல் அறிக்கை

 ஒருவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தால், காவல்துறை எத்தனை நாட்களுக்குள் அவரை கைது செய்ய வேண்டும்?

FIR பதிவு செய்தாலே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டது புலன்விசாரனை செய்ய வேண்டிய ஒன்றாகவோ, அல்லது குற்றவாளி அதே போன்ற ஒரு குற்றம் செய்ய இருக்கிறார் என்று தெரிந்தாலோ அல்லது அவர்  தப்பித்துப்  போக வாய்ப்புள்ளது என்றாலோ புலன் விசாரனை அதிகாரி கைது செய்யலாம். குற்றம் சாட்டப்பட்டவரை .கைது செய்யலாமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் அதிகாரம் அந்த அதிகாரிக்கு மட்டுமே உண்டு.

ஆனால் அவர் அவ்வாறு கைது செய்யும் போது அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் கோரலாம்.  அல்லது நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக வழக்கு போட்டு நஷ்டஈடும் தண்டனையும் கோரலாம்.

இப்படித்தான் சமீபத்தில் ஒரு டிரக் ஓட்டுனரை பீஹார் போலீசார் எந்தவித சட்ட நடைமுறையும் பின்பற்றாமல் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்திருந்தனர். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மாண்புமிகு பாட்னா உயர் நீதிமன்றம், மேற்படி மனுதாரரின் 35 நாள் சட்டவிரோத காவலால் அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு மாநில அரசு ஐந்து லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Truck Driver Illegally Detained By Police: Patna High Court Asks Govt To Give 5L CompensationM For Violation Of Fundamental Right

என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டன?

  1. வண்டியை போலீசார் பிடித்தவுடன் ஏன் முதல் தகவல் அறிக்கை போடவில்லை?

அது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது[1]

  1. சட்டவிரோதம் என்றால் ஏன் வண்டியை போலீசார் கைப்பற்றவில்லை?
  2. கைது செய்யப்பட்ட ஓட்டுநர் ஏன் உடனடியாக 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை?
  3. புகாரெதுவும் இல்லாமல் , கண்ணுற்ற சாட்சிகளின் வாக்குமூலம் இல்லாமலேயே எப்படி போலீசார் நடந்த சம்பவம் இன்னினது என்று ஒரு குற்றம் நடந்ததாக அறிய முடிந்தது?
  4. அவர் கைது செய்யப்பட்ட தகவல் அவர் நண்பருக்கோ குடும்ப உறுப்பினருக்கோ தெரியப்படுத்தப்படவில்லை

இதுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது

5. கைதியிடம் அவர் கைது செய்யப்பட்ட காரணம் கூறாததால் அவர் பிணை மனு செய்ய முடியவில்லை

இதுவும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுக்கு எதிரானது

இவையெல்லாம் குடிமகனுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறல் என்பதால் அரசு அதை சரி செய்யும் கடமைக்குள்ளானது.

6.கைது நமூணாவில் சரியான விவரங்கள் இன்றி,சாட்சிகள் விவரம் இன்றி தயாரிக்கப்பட்டது.

7.வண்டியின் உரிமையாளருக்கு அறிவிப்பு கொடுக்கவில்லை.

இவையெல்லாம் குற்றவியல் நடைமுறை சட்ட விதிகளுக்கு எதிரானது.

8.கைது செய்யும்போது உச்சநீதிமன்றம் வகுத்த விதிகள் மீறப்பட்டுள்ளன[2]

இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்ட உயர் நீதிமன்றம், லாரி ஓட்டுனர்கள் நீண்ட தொலைவுக்கு குறுகிய காலத்திற்குள் பொருட்களை கொண்டு போய் சேரக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், சரியான உணவு, தூக்கம், சுகாதாரம் இன்றி தங்கள் குடும்பங்களை பிரிந்து வேலை செய்யும்போது, நெடுஞ்சாலைகளில் போலீஸாராலும் அரசு தரப்பாலும் நடக்கும் பகல் கொள்ளையிலிருந்து அவர்களை காப்பாற்றவேண்டும்" என்று சுளீர் உத்தரவு போட்டுள்ளது.

நஷ்டஈடு வழங்க உத்தரவு போட்டதோடு அல்லாமல்

  1. தனிப்பட்ட முறையில் மனுதாரருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு நீதிமன்றம் அணுகலாம்
  2. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக துறை நடவடிக்கை மூன்று மாதத்திற்குள் எடுத்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
  3. ஒரு மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை அதன் விவரங்களை மாநில டி ஜி பி.தன் பிரமாண பத்திரத்தின் மூலம் திமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

சூப்பரான தீர்ப்பு இல்லே.💪💪💪🙏🙏🙏

  

அடிக்குறிப்புகள்


ஒரு வழக்கில் சாட்சி இருந்தால் தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்வோம் எண்கிறார்கள். சாட்சி ஏதும் இல்லை உறவினர் இருவர் பெயரை கொடுக்க சொல்கிறார்கள் கொடுத்து விடுகிறீர்கள். விசாரணையின் போது குற்ற நேரத்தில் சாட்சிகள் இல்லை என்று உண்மை சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?

 

  1. வழக்கு பதிவு செய்வதற்கு சாட்சி தேவையில்லை…
  2. எப்.ஐ. ஆர். போடுவதற்கு உண்டான பிடிவாரண்ட் போடக்கூடிய அளவிலான குற்றம் நடந்தது தெரிய வரும்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது.காவலரின் பணி.
  3. உடன் அவர் முதல் தகவல் அறிக்கை தயார் செய்து விடவேண்டும்.
  4. பின், சம்பவ இடத்திற்கு உடன் சென்று, சாட்சிகள் உள்ளனரா என்று விசாரித்து, அவர்களிடம சம்பவம் குறித்து விசாரித்து பதிவு செய்ய வேண்டும்
  5. சாட்சிகள் கொண்டு வருவது புகார்தாரரின் வேலை கிடையாது.
  6. அப்படியே சாட்சிகள் தானாகவே முன்வந்து சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் தெரிவித்தால், அவற்றை பதிவு செய்யவேண்டியது அவரின் கடமை.
  7. போலீசார் சொல்கின்றனர் என்று சம்பவ சாட்சி என்று நின்று விட்டு, பின்னர் நீதிமன்ற விசாரணையின் போது, அது குறித்து தெரியாது என்று சொன்னாலும், தெரியும் என்றாலும், குறுக்கு விசாரணை செய்யப்படுவார்.
  8. பொதுவாக சாட்சி நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாக மாறும்போது, தண்டனை ஏதும் கொடுப்பதில்லை
    1. ஆனால் அவர் அரசு பணியில் இருந்து, சாட்சி சொல்ல அழைக்கும்போது, நீதிமன்றத்தில் மாற்றி சொல்லும்போது, சில சமயம் பின் விளைவுகள் இருக்கும்.
    2. ஆனால் உண்மை அதுவே என்றால் கவலைப்பட தேவையில்லை.
      1. ஒரு குற்ற வழக்கில், குற்றவாளி தரப்பு சாட்சியாக ஒரு அரசு ஊழியர் சாட்சியம் அளித்தார். சாட்சியின் மேலதிகாரியாக குற்றவாளி இருந்தவராம். அவருடைய நல்ல நடத்தை, சம்பவத்தின் போது தான் உடன் இருந்து பார்த்தது, போலீசார் எப்படி பொய் வழக்கு போட்டுள்ளனர் என்று சாட்சியம் அளித்தார்.உண்மையில் அந்த சாட்சியின் நேர்மை அரிதானது.💌மற்றவருக்கு பிரச்சினை வரும்போது ஓடி ஒளிபவர்கள் இருக்கும் இன்றைய நிலையில், பின் விளைவுகள் தெரிந்தும், தைரியமாக அவர் முன்வந்து சாட்சியம் அளித்தார். அவருடைய நியாயமான பின்னணி, மற்றும் சாட்சியத்தின் உண்மைத்தன்மை தெரிந்ததால் அரசு தரப்பால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய சாட்சியம் தான் முக்கிய பக்கபலமாக இருந்து வழக்கிலிருந்து குற்றவாளிக்கு விடுதலை வாங்கிக்கொடுத்தது!! அவர் குடும்பம் என்றும் நன்றாக இருக்கும் என்று இந்த நேரத்தில் கூட நினைக்கத் தோன்றுகிறது!!💐

சாட்சிகள் போலீஸ் விசாரணையில் போது ஒன்றும், நீதிமன்ற விசாரணையின் போது வேறொன்றும் சொல்வதை தவிர்க்க, சாட்சி விசாரணையை ஆடியோ, வீடியோவாக பதிவு செய்யவேண்டும் என்ற சட்டத் திருத்தம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

அப்படி வருமாயின், தேவையற்ற பொய் வழக்கு போடுவது குறையும் என்று நம்பலாம்.

காவல் நிலையங்களில் போடப்படும் ஜீரோ எப்.ஐ.ஆர் (zero first information report) என்றால் என்ன?

 பாட்னாவில் வாழும் சுஷாந்த் சிங் ராஜ்புத் தந்தை , அங்குள்ள காவல் நிலையத்தில் , ரியா சக்ரபோர்த்திக்கு எதிராக , தன மகனின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியதாகவும் மனதளவில் கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டி புகார் கொடுத்துள்ளார்.

நமது மாண்புமிகு உச்ச நீதிமன்றம், புலன் விசாரணை செய்யக்கூடிய குற்றம் நடந்தது தொடர்பாக புகார் கொடுத்தால், அதனை தன காவல் நிலைய அதிகார வரம்பிற்குள் வரவில்லை என போலிஸ் அதிகாரி மறுக்கக் கூடாது என்றும், அதனை பெற்று எப்.அ.இ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று வழிமுறைகளை வகுத்துள்ளது. இதைத்தான் ஜீரோ எப்.ஐ.ஆர் என்கின்றனர்.

மேலும், குற்ற விசாரணை நடைமுறைச்சட்டப் பிரிவு 154 லிலும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகார வரம்பிற்குள் தான் புலன் விசாரணை செய்ய வேண்டிய குற்றம் நடந்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே பீகார் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய அதிகார எல்லை குறித்து முரண்படும் போது ,இதே போன்ற ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் காவல் அதிகாரி என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. அவர் புகாரை பெற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்தவுடன், பிரிவு 156ன் கீழ் விசாரணை நடத்தி குற்றத்தின் மூல காரணம் காவல் நிலைய அதிகார எல்லைக்கு வெளியே நடந்தது தெரிய வரும்போது, அது குறித்த அறிக்கையையும் வழக்கின் கோப்புகளையும் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கோ அல்லது அந்த காவல் நிலையத்திற்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

என் கருத்துப்படி, பிஹார் போலிசாரும் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்டு தான், அது போன்ற விசாரணை நடத்த மும்பை வந்துள்ளனர். வந்த இடத்தில் அவர்களில் காவல் உயர் அதிகாரி கொரண்டைன் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று அரசு உத்தரவு போட்டு உள்ளது.


இதோ இந்த வாரம் இந்த வழக்கு [1] [2] மேற்கோள் காட்டப்பட்டுள்ளது கர்நாடகா உயர்நீதிமண்றம் முன்பு வந்த வழக்கு ஓன்றில் https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-386321.pdf

அந்த ஆட்கொணர்வு வழக்கில் ஒரு பெண் தன் காணாமல் போன மகனை குறித்து புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றும் அது தங்கள் லிமிட்டில் வரவில்லை என்று புகார் பதியவில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல் நிலைய ஆய்வாளரின் மன்னிப்பையம் இனி இது போன்ற தவறை செய்யமாட்டேன் என்று அவர் கொடுத்த உத்தரவாதத்தையும் ஏற்றுக்கொண்டு

  1. அவர தன் காவல் நிலையம் முன் இருக்கும் சாலையை ஒரு வாரம் சுத்தம் செய்ய வேண்டும் என்றும்
  2. சீரோ எப்.ஐ.ஆர்.குறித்து பயிற்சி வகுப்புகள் காவல் துறை தன் அதிகாரிகளுக்கு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.😂🤣😁

Centre asks CBI to investigate actor Sushant Singh Rajput death case

அடிக்குறிப்புகள்


ஒரு புகாரை காவல் நிலையத்தில் எப்படி கொடுப்பது? வாங்க மறுக்கும்போது செய்யவேண்டியது என்ன?

 ஒரு குற்ற வழக்கிற்கு ஆதாரமாக இருப்பது புகார் தான்.


புகார் என்றால் என்ன?

நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தைப் பற்றி குறை சொல்வது தான் ஒரு புகார்

இரண்டு விதத்தில் இந்த அதில் உள்ள விவரஙகள் / இல்லாத விவரங்கள் மு.த.அ.வில் முறையே இல்லாதோ/இருந்தாலோ அந்த வழக்கே ஆட்டம் கண்டு விடும். அதனால் தான் புகார் ஒரு குற்ற வழக்கின் முக்கியமான அம்சம்.

அதனால் தான் நிறைய காவல் நிலையத்தில் அவர்களே புகாரை எழுதி புகார்தாரர் கையொப்பம் வாங்குகிறார்கள். எழுத படிக்க அதிகம் தெரியாத நிசம் நாட்டில் இது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும் நீதி விசாரனையின் போது புகார்தாரர் அதில் எழுதப்பட்ட விஷயங்களை சொல்ல வேண்டும்.அவர் கொடுத்த புகாரில் உள்ள தகவலின் பேரில் தான் நடவடிக்கையே தொடங்குகிறது என்பதால் அவர் சொல்லும் சாட்சியம் முக்கியம்.அவர் அதை மாற்றி சொல்லும்போது, அந்த முரண்பாட்டின் காரணமாக வழக்கு குற்றவாளிக்கு சாதகமாக அமைவதுண்டு. அதனால் தான் புகார் குற்ற வழக்கில் முக்கிய இடம் பிடிக்கிறது.

அந்த புகாரில் என்னென்ன விஷயங்கள் இருக்க வேண்டும்?

  • ஒரு குற்றம் அதுவும் பிடிவாரன்ட் இல்லாமல் நடவடிக்கை எடுக்க கூடிய குற்றம் குறித்த தெளிவான விவரங்கள் இருக்க வேண்டும்.
  • எந்த தேதி நேரம் இடம் யார் யார் இருக்கும்போது என்னென்ன நடந்தது என்ற சம்பவத்தின் விரிவாக்கம் இருக்க வேண்டும்.
  • புகாரில் சொல்லியதற்கு பிறகு கூடுதல் இணைப்பு எதுவும் கொடுக்கமுடியாது என்பதால் அனைத்தும் இதிலேயே இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம்.
  • ஒரு சம்பவம் குறித்து அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கும் போது எழுத்து மூலமான புகாருக்கே மதிப்பு.புகார்தாரர் சொல்லும் சாட்சியம் அதோடு ஒத்து இருந்தால் தான் ஏற்றுக கொள்ளப்படும்.முரண்பாடாக, புகாரில் இல்லாத புதிய விஷயங்களை சொன்னாலும் ஏற்கப்படமாட்டாது.
  • நடந்த குற்ற சம்பவம் குறித்து எத்தனையோ அறிக்கைகள் விசாரணையின் போது பெறப்பட்டாலும், முதல் தகவல் அறிக்கை என்பது இந்த புகாரை கொண்டே அமையும்.

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்

  1. ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக காவல்நிலையத்தில் புகார் செய்து நடவடிக்கை மேற்கொள்வது என்பது, தற்போது சவாலான அம்சம்தான். ஏனெனில் ஒரு குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  2. நடைமுறையில் காவல்நிலையத்திற்கு வரும் எந்த ஒரு புகாரையும் விசாரணைக்கு ஏற்காமல் தட்டிக்கழித்து csr மட்டுமே பதிந்து அனுப்பி விடுகின்றனர்.
  3. இத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட ஒரு வழக்கறிஞர் உதவியுடன் புகார்களை அளிப்பது நல்லது. இந்தப்புகார் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறையினர் முனைப்பு காட்டாத நிலையில், அந்தப் புகாரின் நகல் ஒன்றை ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் மூலம், குறிப்பிட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பலாம். மேலும் புகாரின் நகல்களை, தொலைநகல் மூலம் காவல்துறை ஆணையர் போன்ற உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பலாம். இதன் மூலம் காவல்துறையினர், குறிப்பிட்ட புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கான அழுத்தத்தை அளிக்கலாம்
  4. இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவ ர்கள், தங்கள் நியாயமான புகார்கள் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 200 ன் கீழ், ஒரு குற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் நேரடியாக குற்றவியல் நடுவரை அணுகலாம்.
  5. இவ்வாறு பெறப்படும் ஒரு புகாரை விசாரிப்பதற்கு குற்றவியல் நடுவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் புகாரை விசாரிக்கும் குற்றவியல் நடுவர், புகார்தாரரையும் அவர் தரப்பு சாட்சிகளை விசாரித்து, புகாரில் உண்மையும் – குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதற்கான முகாந்திரமும் இருப்பதாக திருப்தி அடைந்தால் அப்பகுதிக்குரிய காவல்துறை அதிகாரிகளிடம், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடலாம். இதற்கான அதிகாரம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 (3)ன் படி குற்றவியல் நடுவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  6. இதற்கு மாற்றாக குற்ற நிகழ்வுகளில் உயர்நீதிமன்றத்தை அணுகலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482, ன் அடிப்படையில் கீழ்நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றங்களுக்கும், காவல்துறைக்கும் உரிய அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  7. இந்த அதிகாரத்தின்கீழ், நியாயமான காரணங்களுக்காக புகாரை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துமாறு குற்றவியல் விசாரணை நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கு உள்ளது.
  8. இப்படி உத்தரவு பெற்றும், அந்தப் புகாரை உரிய முறையில் விசாரிக்காமல் போலீசார் தள்ளிவிட முயற்சிக்கவும் வாய்ப்புள்ளது..
  9. புகார்தாரர் நீதிமன்ற விசாரணையில் பங்கேற்கவும் சட்டம் வழிகாட்டுகிறது.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 301 (2), புகார்தாரரின் தரப்பில் அரசு வழக்கறிஞருக்கு துணையாக, ஒரு வழக்கறிஞர் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கிறது. குறிப்பிட்ட குற்றப்புலனாய்வு ஆவணங்களையும் புகார்தாரர் பெறமுடியும். கிரிமினல் ரூல்ஸ் ஆஃப் பிராக்டிஸ் கீழ் ஆவணங்களைப் பெறலாம்.
  10. புகார்தாரரின் வழக்கறிஞர், சாட்சிகள் மற்றும் சான்றாதாரங்கள் ஆய்வு முடிந்த பின்னர், அரசு வழக்கறிஞர் பரிசீலிக்கத் தவறிய அம்சங்கள் ஏதேனும் இருந்தால் அதனை எழுத்து மூலமாக வடித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்.
  11. இவ்வாறு குற்றவியல் வழக்கில் புகார்தாரர் சார்பில் தனி வழக்கறிஞரை அனுமதிப்பதற்கு உயர்நீதிமன்றத்தை அணுகு வேண்டும்..
  12. காவல்துறை நடத்தும் விசாரணை அல்லது வழக்கின் போக்கு நியாயமாக நடக்கவில்லை என்று நம்புவதற்கு இடம் அளிக்கும் நிலையிலும்கூட புகார்தாரர் அதில் தலையிடலாம். அதை நீதிமன்றம் ஏற்கும் வகையில் நிரூபித்தால், அந்த வழக்கின் விசாரணையையோ, வழக்கையோ உள்ளூர் காவல்துறை அல்லாத வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்த உத்தரவிட வேண்டி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 482ன் கீழ், உயர்நீதிமன்றத்தை அணுகலாம்
  13. அப்போது இந்த புகார் அல்லது வழக்கு, சிபிசிஐடி, சிபிஐக்கோ மாற்றப்படலாம். அவ்வாறு புகார் மீதான விசாரணை மாற்றப்படும்போது, புகார்தாரர் உரிய புலனாய்வு அதிகாரிகளை அணுகி, தங்கள் ஐயப்பாடுகளை எடுத்துரைக்கலாம்.
  14. இவை அனைத்திற்கும் குற்றவியல் சட்டத்தில் அனுபவமும், நேர்மையும் கொண்ட வழக்கரிஞரின் உதவியை நாடலாம்
 காவல் நிலையத்தில் புகாரை தொலைபேசி வழியாக கொடுக்கலாமா?

வழக்கமாக நாம சினிமாவிலே பார்க்கிற ஒரு காட்சி…

ஒரு போலீஸ் ஸ்டேஷன்…

போலீஸ் அதிகாரி இருக்கும் போது, போன்.அடிக்கும்.இவர் எடுத்து பேசுவார் "என்ன…..நடந்திருச்சா….எங்கே?….

இவரு நீங்க யாருன்னு கேக்கும்போது போன் கட்டாகிடும். இவர் உடனே கிளம்பி போவார்.

படிமப்புரவு. கூகிள்

இந்த தொலைப்பேசி தகவல், குற்றம் நடந்தது பற்றிய முதல் தகவல் ஆகுமா?

ஒரு குற்றம் நடந்ததை கண்டும், கேட்கும் ஒரு குடிமகன் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கவேணடியது அவரின் கடமை..

ஆனால் தன்னைப் பற்றிய பெயர், விவரம் சொல்லாமல், ஏன் நடந்த குற்றத்தின் முழுமையான விவரம் கூட இல்லாமல் தொலைப்பேசி மூலம் வரும் அனைத்தும் முதல் தகவல் ஆகாது.(1)

ஆனால் அந்த காவல் அதிகாரி அந்தத் தகவலே நம்புற மாதிரி இருக்குன்னு, அதை ஒரு அறிக்கையா ..FIR ன்னு பதிவு செய்து ,விசாரனை செய்வதற்கு சம்பவ இடத்திற்கு போறார் என்றால் அது முதல் தகவல் தான்(2)

ஆனால் அப்படி வர்ற தகவல் ரத்தின சுருக்கமா இருந்தா அது FIR னு சொல்ல முடியாது.

அதே போல பெயில்லே விட கூடாத குற்றம் நடந்துருக்குன்னு விவரத்தோட சொன்னாலும் அப்படி வர்ற எல்லா தொலைபேசி தகவலையும் FIR ஆகிடாது.(3)

சூழ்நிலை எதுவானாலும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர்ற எந்த ஓரு தொலைப்பேசித் தகவல்னாலும் FIR ன்னு நினைக்க முடியாது.

அப்ப எப்ப தான் இது மாதிரி வர்ற தகவல் FIR ன்னு சொல்லலாம்?

இந்த குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை பைபிள், கீதை, குரான்னு சொல்லல்லாம் இது தான் எந்த ஒரு குற்றம் நடந்தாலும் அதை எப்படி காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் வரை எப்படி கையாள்வதுன்னு வழிகாட்டுவது.

இந்த சட்டத்தின் படி, எந்த ஒரு தகவல் கிடைத்தாலும், அதன் படி முறையான விசாரணை ஒண்ணு ஆரம்பிக்காதவரை , அது முதல் தகவல் கிடையாது(4) அது மட்டுமில்லே அந்த தகவலை அறிக்கையா, அது தான் FIR ன்னு(5) அதை பதிவு செய்த பிறகு விசாரணைக்கு கிளம்பினால் தான் கருதவே முடியும். (6)

இதிலேயிருந்து ஒரு காவல் நிலையபொறுப்பு அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவில்லாத அதிகாரத்தை உணர்ந்துக் கொள்ளலாம். முதலில் அவர் அப்படி ஒரு குற்றம் நடந்திரூக்கிறது என்று திருப்தியாக வேண்டும். அப்புறம் தான் விசாரணை எல்லாம்.

சரி தொலைப்பேசி தகவல் வந்தவுடன் விசாரணைக்கு சினிமாவில் காட்டுவது போல கிளம்பிவிடுகிறார், அப்புறம் வந்து விரிவாக குற்றவாளிகளை பற்றிய விவரங்களோடு வாக்குமூலங்கள் தயாரிக்கலாமா என்றால் கூடாது(7)

இப்ப ஒரு தலைமை காவலாளி ரோந்து போய்ட்டு இருக்கும்போது, குற்றம் நடந்திருக்கறதை பார்க்கிறார். தொலைபேசியிலேயே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்ககிறார்..போலீஸ் அதிகாரியும் அதை விசாரிச்சுட்டு வர சொல்றார்.திரும்ப வந்து அந்த போலீஸ் ஏட்டு எழுதிக் குடுக்கிறது தான் முதல் தகவல்.ஏன்னா அது தான் நடவடிக்கை எடுக்க காரணமா இருந்தது.அதுக்கப்புறம் புகார் வாங்கி பதிவு செய்தால் அது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது(8)

அப்ப மொபைல் போன், வாட்சப்ப் இதிலே குடுக்கிற தகவல்?

மேலே சொன்ன அதே விதிமுறை தான் இவற்றுக்கும்.

மூலம்:

1.தபீந்தர் சிங் எதிர் பஞ்சாப் அரசு 1971(1) 1SCR 599

2.பியாரா மற்றும் பலர் எதிர் ராஜஸ்தான் அரசு 1997 Crl.l.j.1065 Raj.

3.ராம் சிங் பாவாஜி ஜடேஜா எதிர் குஜராத் அரசு 1994 Crl..L. J.3067; ஜகத் சிங் எதிர் ராஜஸ்தான் அரசு. 2008 Crl.l.j.1744 Raj.

4.பிரிவு 154, கு.வி.மு.ச.

5.பிரிவு 162 கு.வி.மு.ச.

6.பலராமன் எதிர் அரசு1991 Crl. L.J.166 Mad.

7.சோமப்ப வாமணப்ப மடர் மற்றும் ஷங்கரப்பா மற்றும் ராவனப்பா கட்டி எதிர் மைசூர் அரசு 1979 SCC (Crl) 910: 1979 Crl.1358: பிரிவு 162 கு.வி.மு.ச

8.பிரிவுகள்154, 162 கு.விமு.ச.ரபேரி சான் கோவா எதிர் குஜராத் அரசு 1977 Crl. L. J.107 SC.



சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...