நவராத்திரியோட கடைசி நாள் விஜயதசமி .கல்வி கடவுள் சரஸ்வதியை கொண்டாடி வித்தைகளில் சிறந்து விளங்க வேண்டிகிட்டு கொண்டு வச்ச புஸ்தகங்களையெல்லாம் எடுத்து அடுக்க ஆம்பிச்சேன்.
அப்ப தான் இது என் கண்ணில் பட்டது.
யாருன்னு தெரியுதா…
இந்த வீடாவது அடையாளம் தெரியுதா?
சரி போகட்டும் இந்த இடம்
ஹாத்ராஸ்.
இந்த குக்கிராமம் உத்தரப்ரதேசத்திலே, அதுவும் நம்ம நாட்டுக்குள்ளே தான் இருக்குன்னு தெரிஞ்சிக்க அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வேண்டாம்.
முதுகெலும்பு உடஞ்சு, கண்ணு, முகம், உடம்பு எல்லாத்தளையும் ரத்தம் பெருக்கெடுத்து ஓட, தன் கிட்டேயிருந்த துணியை போட்டு வாரி சுருட்டி, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய், ரத்தம் கொட்டினாலும் பதட்டமே படாம, மெதுவா போலீஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க, என்ன நடக்குதுன்னு புரியாம தவிச்சு போயிருக்கிற அந்த குடும்பத்தை தொல்லை பண்ண வேண்டாம்னு போலீசே சிதைய எரிக்கும் வேலைய செய்யுது. போலீஸ் நம்ம நண்பன்ன்னு வேற எப்படி நிரூபிக்கிறது ?
அந்த சம்பவத்தை பேசும் போது அவங்க அண்ணி சொன்ன வார்த்தைகள் தான் "அவள் படிக்க போயிருந்தால் இப்படி ஒண்ணு நடந்திருக்காது"
உணமை. அதை தான் நம்ம அரசும் பெண்ணைக் காப்பாற்றுங்கள்.. பெண்ணை படிக்க வையுங்கள்" என்கிறது. எவ்வளவு தீர்க்கதரிசனம்?!
வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது.
இது போன்ற காரணத்தினால குறைஞ்சுகிட்டே வர்ற பெண் குழந்தைகளோட விகிதத்தை சரி செய்யவும், பெண் கல்வியை அதிகப்படுத்தவும் அவங்களுக்கு எதிரா இருக்கிற இந்த ஏற்றத்தாழ்வை மாற்றவும் மத்திய அரசு எடுத்திருக்கிற முயற்சியின் அடையாளமா கொண்டு வந்த திட்டங்கள் .பல.
பெண்கல்வின்னு பார்க்கும்போது, அந்தக் காலத்திலே பெண்கள் கற்றவர்களாகத்தான் இருந்திருக்காங்க.
காளிதாசரே குமார சம்பவத்தில் (1-30) உமா கற்ற கல்வி பற்றி இப்படி சொல்றார்
“பூர்வ ஜன்மத்தில் கற்றதெல்லாம் அவளுக்கு நினைவில் இருந்தன. கல்வி போதிக்கப்பட்டவுடன் இவை எல்லாம் நினைவுக்கு வந்தன. இது இலையுதிர்க் காலத்தில் அன்னப் பறவைகள் கங்கை நதிக்குத் திரும்புவது போலவும், இரவு நேரத்தில் மூலிகைச் செடிகளுக்கு அவற்றின் ஒளி திரும்பிவருவது போலவும் இருந்தது”.
கிராமப்புறங்களில், பெண் கல்வியின் நிலை, சொல்லிக்கிற மாதிரி இல்லை. கடைக்கோடிச் சிறுமிக்கும் கல்வி கொண்டு சேர்க்கப்படுவதில் தான் அரசு அக்கறை காட்டணும்ன்னு சொன்னாலும் இதப்பத்தி பெத்தவங்க உணர்ந்தால்தான் அது தன் கடமையும்கூடன்னு புரிஞ்சுக்கிட்டு பிள்ளைகளை படிக்க வைப்பாங்க..அந்த விதத்தில் ஹத்ராஸ் சம்பவத்தினால, அந்தப் பெண்ணின் குடும்பம் மட்டுமில்லே மத்தவங்களும் அதை புரிஞ்சுக்கிட்ட மாதிரி தான் தெரியுது.
ஆனால், எனக்கு சில கேள்விகள் உண்டு. 1.பெண் கல்வியின் நோக்கம், படித்த பெண்களிடையேயாவது நிறைவேறியிருக்கிறதா?
2. பெண் குறித்த சமூகத்தின் கோணல் பார்வை மாறியிருக்கிறதா?
3. பாலியில் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டுவிட்டனவா?
4. பெண்களுக்கு எதிராகப் பெருகி வரும் வன்முறைகளிலிருந்து படித்த பெண்களுக்காவது பாதுகாப்பு கிடைத்திருக்கிறதா?
5. குடும்பத்தில், சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் படித்த பெண்கள் தங்களுக்கு உரிய பங்கையும் முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும் சமத்துவத்தையும் பெற முடிகிறதா?
கசப்பான உண்மை என்னன்னா இந்தக் கேள்விகளுக்கு பதில் ‘இல்லை’ ன்னு தான் இருக்கும்
இதெல்லாம் மாறணும்னா, ஆண் பெண் சமத்துவம், அனைவருக்கும் பொதுவான மனிதநேயம், மனித உரிமைகள், இதைத் பத்தி பேசிப் ப்ரயோஜனமில்லை. சின்ன வயசிலேயே குழந்தைகளின் மனசிலே பதிய வைக்க, இதெல்லாம் பள்ளிப் பாடங்களாக ஆக்கப்படும்போது தான் உண்மையான மாற்றம் வரும்.
தசரா விற்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு. தஸ் என்றால் பத்து..ஹரா என்றால் ஓழித்தல் தீமையை ஒழிக்கும் நாள் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம். அடுத்து வரும் தசராவாவது பெண் குழந்தைக்கு எதிரான தீமையை ஒழித்த நாளாக உண்மையாகக் கொண்டாட.
பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக