பிணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிணை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 ஜூன், 2021

முன்‌ ஜாமீன் என்றால் என்ன? அதை எதற்கெல்லாம் வழங்குவார்கள்? ஏன் வழங்குகிறார்கள்?

         முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் சம்பந்தப்பட்ட செய்தி அடிபடும் நேரம்.இது..

        முதலில் இந்த மீன் …முன் ஜாமீன்" என்றால் என்னன்னு தெரிஞ்சுப்போம்.  இதற்கு விளக்கம் கொடுத்தது மாண்புமிகு உச்ச நீதிமன்றம்..

        "முன் ஜாமீன்" என்பது "கைது செய்யப்படுவதை எதிர்பார்த்து பிணை. ஒரு தகுதியான நீதிமன்றம் இதை வழங்கும்போது, ​​கைது செய்யப்படும் நேரத்தில் ஒருவரை விடுவிப்பதற்கான உத்தரவு வழங்கப்படும்".

        இதோட அர்த்தத்தை சட்டப் புத்தகத்தில் பார்க்கலாம்னா, ஆச்சரியம் என்னன்னா குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 இல் இதைப் பத்தி சொல்லபடவேயில்லை. அதுக்கும் முந்தைய 1898 சட்டத்தில் கூட இது இல்லை.

        அப்புறம் எப்படி இது முளைச்சது? முதன்முறையாக 41 வது சட்ட ஆணைய அறிக்கை, 1969 ல் இந்த சொல் குறிப்பிடப்பட்டுள்ளது,

ஏன்?

        ஏனென்றால் இப்போது போலவே அப்போதும், ..முக்கிய நபர்கள், தங்கள் போட்டியாளர்களை தவறான வழக்குகளில் சிக்க வைக்க குற்றம் சாட்ட முயற்சித்து , சில நாட்கள் சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களை இழிவுபடுத்துகிறார்கள். என்று உணரப்பட்டது.அப்போது தான், அத்தகைய ஜாமீனில் வெளிவராத குற்றத்திற்காக கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு காரணம் உள்ள ஒரு குற்றவாளியைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடு.தேவை, அது சேர்க்கப்பட வேண்டும் என்று உணரப்பட்டது

        ஒரு குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட நபர், ஜாமீனில் இருக்கும். போது தப்பி ஓடுவதற்கோ அல்லது அதை தவறாகப் பயன்படுத்துவதற்கோ குறைவான வாய்ப்புகள் தான் உள்ளன என்று இருந்தால், அவரை முதலில் காவலில் வைத்து, பிறகு சில நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனுக்கு மனு செய்வது சரியல்ல என்பதால், அந்த ஏற்பாட்டின் தேவை எழுந்தது,

        பாராளுமன்றமும் இந்த பரிந்துரையை பரிசீலித்து, 1973 சட்டத்தை இயற்றும்போது, ​​பிரிவு 438 இன் கீழ் "கைது செய்யப்படுபவருக்கு ஜாமீன் கொடுப்பதற்கான ஏற்பாட்டைச் சேர்த்தது.

        முன் ஜாமீனை ஒரு "பாதுகாப்பு போர்வையில், எதிர்காலத்தில், அவர் இன்னும் குற்றங்களைச் செய்து, அதிலிருந்து கைது செய்யாமலிருக்க .அனுமதிப்பதோ இதன் நோக்கம் கிடையாது,

        ஒன்று தெரியுமா?

        குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு விட்டால், இது உதவாது. .கைது செய்யப்பட்ட பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட வேண்டுமென்றால், ஜாமீன் தான் கேட்க வேண்டும்

பிரிவு 437 அல்லது 439 சி.ஆர்.பி.சி.யின் கீழ் தான். தீர்வு காண வேண்டும்.

        இந்த முன் ஜாமீனை உரிமையாக கேட்க முடியுமா?

        அதுவும் கிடையாது..

        "1973 க்கு முன்னர் இந்த முன் ஜாமீன் என்பதே ஓரு சட்டரீதியான உரிமையாக இல்ல என்பதால், இந்திய அரசியலமைப்பபு சட்ட 21 வது பிரிவின் கீழ் அதை ஒரு அடிப்படை உரிமையாக கருத முடியாது"ன்னு சொல்லிடுச்சு. உச்ச நீதிமன்றம்

  • "ஜாமீனில் வெளிவராத குற்றத்திற்காக எந்தவொரு நபரும் கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு ஒரு காரணம் இருந்தால், அவர் உயர்நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றத்திற்கு முன் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியும்.   தன் விருப்பப்படி ஜாமீன் கொடுக்க விரும்புகிறதா இல்லையா என்று நீதிமன்றம் முடிவு செய்யும்.

இப்போது புரிந்திருக்கும்... வழக்கமான ஜாமீனோ Cr.P.C. பிரிவு 167 (2) ன் கீழ் கொடுக்கப்படும் இயல்புநிலை ஜாமீன் போல, குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமைக்கான விஷயம் கிடையாது!!

  • முன் ஜாமீன் கேட்பவர்,  தான் ஜாமீனில் வெளிவராத குற்றத்திற்காக கைது செய்யப்படலாம்ன்னு நம்புவதற்கு, நியாயமான அடிப்படை இருக்கணும். வெறும் "பயத்தை" அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது அவரது நம்பிக்கையின் நியாயத்தை தீர்ப்பதற்கு நீதிமன்றத்திற்கு உதவக்கூடிய குறிப்பிட்ட சம்பவங்கள்/உண்மைகளை சொல்ல வேண்டும்."

        2005 ஆம் ஆண்டில் பாராளுமன்றம் பிரிவு 438 இல் சில திருத்தங்களை அறிமுகப்படுத்தியது,

  • இந்த விதியின் கீழ் எந்தவொரு நிவாரணமும் வழங்கப்படும். அதே நேரத்தில்  நீதிமன்றங்கள் அதிக விழிப்புடன்   பின்வருவனவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்:
    • குற்றச்சாட்டின் தன்மை மற்றும் ஈர்ப்பு
    • மனிதரரின் பின்னணி, அவரது முந்தைய தண்டனை அல்லது அறியக்கூடிய குற்றத்திற்காக சிறைவாசம் பற்றிய உண்மை.
    • ஜாமீன் வழங்கப்பட்டால் அவர் விசாரணையைத் தவிர்த்து, நீதியிலிருந்து தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு
    • எஃப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் அவரை கைது செய்வதன் மூலம் துன்புறுத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ  கொல்லப்பட்டதாக இருந்தால்

        இந்த அனைத்தையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யலாம் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்கலாம்.இந்த இரண்டில் எது நடந்தாலும், விசாரணை அதிகாரி, எந்த வாரண்ட்டும் இல்லாமல் கைது செய்யலாம்.

அதுக்காக, தள்ளுபடி ஆனதுனாலேயே கைது செய்ய தேவையும் இல்லை .

        பாராளுமன்றம் சேர்த்த துணைப்பிரிவு 1 (ஏ) , 1 (பி) ன்படி,

  • 1(ஏ) ..அந்த மனுவில், ஏதேனும் தகுதியைக் கண்டால், முன் ஜாமீனு மனுவை நிராகரிக்கவில்லை என்றால், அரசு வக்கீலை கேட்ட பின், முடிவு எடுக்க, அதை இறுதியாக விசாரிப்பதற்கு முன்னர் அரசு வழக்கறிஞர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு (எஸ்.பி.) 7 நாட்கள் அறிவிப்பு வழங்கப்படும்.

அது போன்ற சமயத்தில் கைது செய்யாமல் இருக்க இடைக்கால உத்தரவு போடும். ஆனால் அது முன்ஜாமீன் கிடையாது!!

  • 1 (பி) .. இறுதி விசாரணையின் போது மனுதாரர் தேவை என்று  அரசு வக்கீல் ஒரு மனுவை அளித்து, நீதிமன்றமும் அவர் ஆஜராவது கட்டாயமானது என்று நினைத்தால், அதை அனுமதிக்கும்.

        உயர்நீதிமன்றம் அல்லது அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கும்போது சில நிபந்தனைகளை விதிக்கலாம்;

  • தேவைப்படும் போதெல்லாம் அந்த நபர் காவல்துறை அதிகாரியால் விசாரிக்க ஆஜராக வேண்டும்.
  • வழக்கின் உண்மைகளை அறிந்த எந்தவொரு நபருக்கும் அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வற்புறுத்தவோ, அச்சுறுத்தவோ அல்லது வாக்குறுதியளிக்கவோ கூடாது.
  • குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறக்கூடாது,
  • பிரிவு 437 (3) இன் கீழ் விதிக்கப்படும் பிற நிபந்தனைகளை நீதிமன்றம் விதிக்க முடியும்.
  • குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டால், அப்போதோ அல்லது எந்த நேரத்திலும் அதிகாரியின் காவலில் இருக்கும்போது அவர் முன் ஜாமீன் பெற்றால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்படவேண்டும்.
  • அதே போல, ஒரு மாஜிஸ்திரேட் அந்த குற்றத்தை அறிந்துக் கொண்டு, அந்த நபருக்கு எதிராக முதல் சந்தர்ப்பத்திலேயே வாரண்ட் பிறப்பிக்க முடிவு செய்தால், அது ஜாமீன் பெறும் வாரண்டாக தான் இருக்க வேண்டும், ஆனால் மாஜிஸ்திரேட் அவருக்கு தெரியாமல், ஜாமீனில் வெளிவராத வாரண்ட் பிறப்பித்தால், குற்றம் சாட்டப்பட்டவரின் முன் ஜாமீன் உத்தரவு பின்னர் நீதிமன்றத்தின் நிர்வாக அதிகாரி ஜாமீன் உத்தரவைப் பற்றி அறிந்தால், அவர் அதை ஜாமீன் வாரண்டாக மாற்றி ,அதை போலீஸ் அதிகாரி மூலம் மாஜிஸ்திரேட்டுக்கு தெரிவிப்பார்.

        இந்த முன்ஜாமீன் எந்த குற்றத்திற்கு கிடைக்காது?

  • கற்பழிப்பு /கூட்டு கற்பழிப்பு.

        மேலும் கீழே சொல்லும் சில வழிமுறைகள் விதித்துள்ளது உச்சநீதிமன்ற. 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்

  • வழக்கு பொருட்களை குற்றவாளியை வைத்து தான் போலீஸ் எடுக்க உத்தேசித்துள்ளது
  • புகார் பார்த்த மாத்திரத்தில் பொய் என்றோ, ஆதாரம் இல்லை  என்று நீதிமன்றம் கருதினால் ஒழிய, மரணம்/ஆயுள் தண்டனை வழங்கங்கக்  கூடியவற்றில்
  • பொருளாதார ஏமாற்றுதல் குற்றங்கள்
  • வழக்கமான பிணை வழங்கும் பிரிவில் சொல்லாத சிறப்பு காரணம் இருக்கவேண்டும்.
  • வெகு அரிதாக வழங்க வேண்டும்…
  • வரதட்சணை கொடுமை வழக்குகளில் , அதுவும் திருமணம் ஆன ஏழு வருடங்களுக்குள் என்றால், விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக சொல்லி நிபந்தனை இருக்க வேண்டும்

        சரி…எப்போது தான் ன்ஜாமீன் உத்தரவு முடிவுக்கு வரும்?

  • எந்த மாற்று உத்தரவும்  வராத வரை, நீதிமன்ற விசாரணை முடிந்து, தண்டனை கொடுக்கப்பட்டால், அது வரை.

        முன்ஜாமீன்  கைது செய்வதிலிருந்து பாதுகாக்க அல்ல…

கைது செய்த பிறகு காவலில் வைக்கப்படுவதில் இருந்து பாதுகாக்க..

        அதே போல,, முதல் தகவல் அறிக்கை இல்லாத போதும், முன்ஜாமீன் கேட்கலாம். சம்பவங்களின் அடிப்படையில் வந்த "சந்தேகம்" இருந்தால் மட்டும் போதுமானது.

        குற்ற விசாரணையே சந்தேகத்தில் இருந்து தானே ஆரம்பிக்கிறது….

        எப்போதெல்லாம், துன்பம் சூழ்கிறதோ, அப்போது, நமக்கும்  "சந்தேகம்" வரத்தானே செய்கிறது?!

        பாரதிக்கும் வந்தது

        "தர்மமே வெல்லும் எனும் சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ?"…

        அவ்வையின் பாணியே தனி... 

        "இட்டமுடன் என்தலையில் இன்னபடி என்றெழுதி

        விட்டசிவ னுஞ்செத்து விட்டானோ – "என்று சந்தேகம் கொண்டாலும்,

        பின்பு  ஆறுதல் தருகிறாள்..

"முட்டமுட்டப் பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கென்னாய்

கொஞ்சமே அஞ்சாதே நீ. 73

இதற்கு பொருள்:   

 "நெஞ்சமே! பெரும் பஞ்சமே ஆனாலும் அஞ்சாதே. இதுதான் உனக்கு என்று தலையில் எழுதிய சிவன் சாகவில்லை. காப்பான்.

திங்கள், 7 ஜூன், 2021

ஒருவரை ஜாமீனில் எடுப்பதற்கு குடும்ப அட்டை அல்லது வீட்டு பத்திரத்தை நீதிமன்றத்தில் எதற்காக கேட்கிறார்கள்?

 

ஜாமீன்


 ஒருவரை ஜாமீனில் எடுப்பதற்கு குடும்ப அட்டை அல்லது வீட்டு பத்திரத்தை நீதிமன்றத்தில் எதற்காக கேட்கிறார்கள்?

அந்த காலத்து முறை அப்படியே தொடர்கிறது. ஒருவன் சிறையில் இருந்து நிபந்தனையுடன் வெளியே வர அனுமதிக்கப்படும் போது, அவன் எனக்கு தெரிந்தவன், அவன் நிபந்தனை கடைப்பிடிக்க நான் உறுதி கூறுகிறேன், அவ்வாறு அவன் நிபந்தனையை மீறினால், நான் எழுதிக் கொடுக்கும் ஜாமீன் பத்திரத்தில் உள்ள தொகையை கட்ட சம்மதிக்கிறேன் என்று தானே ஜாமின் பேப்பரில் கையெழுத்து போட்டிருப்போம்.

அதற்கு ஆதாரமாக நம் குடியிருப்பு விலாசம் மற்றும் சொத்து விவரம் சொல்லும் குடும்ப அட்டை மற்றும் வீட்டு பத்திரம் கேட்கிறார்கள

'Transit Bail' என்றால் என்ன?

          அண்மையில், 'டூல்கிட்' வழக்கை அடுத்து, "டிரான்ஸிட் பெயில்" "டிரான்ஸிட் முன் ஜாமீன்" போன்ற வார்த்தைகள் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளன.

        டூல் கிட் வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்படவிருந்த சாந்தனு முலுக்கிற்கு மாண்புமிகு பம்பாய் உயர் நீதிமன்றம் கடந்த வாரம், 10 நாட்களுக்கான பயண முன் ஜாமீன் வழங்கியது. 

        இதைத் தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அட்வா. இதே போல, இந்த வழக்கில் சிக்கியுள்ள வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் என்பவருக்கும். மூன்று வார பயண முன் ஜாமீன் வழங்கபட்டது.மாண்புமிகு மும்பை உயர் நீதிமன்றம்
    
        'டிரான்ஸிட் ஜாமீன்' அல்லது 'டிரான்ஸிட் முன் ஜாமீன்' என்ற சொற்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழோ அல்லது நடைமுறையில் உள்ள வேறு எந்த சட்டத்தின் கீழும் வரையறுக்கப்படவில்லை,
ஏன்?

        இவை "நீதிபதி உருவாக்கிய சட்டம்" என்பதால்.
அவ்வப்போது, ​​இந்திய நீதிமன்றங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே படிப்பதன் மூலம் இந்த கருத்தை விளக்குகின்றன, இதன் மூலம், இந்த அசாதாரணமான சட்டத்திற்கு, சட்டவியலில் ஒரு கட்டமைப்பு கொடுக்கப்படுகிறது.

        அவ்வப்போது, ​​இந்திய நீதிமன்றங்கள் குற்றவியல் சட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு இடையே படிப்பதன் மூலம் இந்த கருத்தை விளக்குகின்றன, இதன் மூலம், இந்த அசாதாரணமான சட்டத்திற்கு, சட்டவியலில் ஒரு கட்டமைப்பு கொடுக்கப்படுகிறது.

        சரி.... இந்த "பயண ஜாமீன்" என்றால் என்ன?

        பொதுவாக, ஜாமீன் என்பது,  குற்றம் நடந்த இடத்தின் மீது அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தால் தான் ஜாமீன் வழங்கப்படும். அப்படியில்லாமல் அதிகார வரம்பு இல்லாத நீதிமன்றம் கொடுப்பது தான் இந்த டிரான்ஸிட் ஜாமீன்.
இன்னும் விளக்கம் வேண்டுமெனில், ஒரு நபர், தான் தற்போது உள்ள மாநிலத்தைத் தவிர வேறு ஒரு மாநிலத்தின் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதை தடுக்க மனு செய்வதே "பயண முன் ஜாமீன்" ஆகும்.

         "பயண" என்ற சொல் குறிப்பிடுவது போல, இது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்தப்படுவது அல்லது கொண்டு செல்லப்படுவது.   உதாரணமாக, சென்னையில் வசிப்பவர் மீது, ஆந்திர போலீசார் வழக்கு பதிவு செய்யலாம் என்ற அச்சம் இருந்தால், சாதாரணமாக, அவருக்கு ஜாமீன் வழங்க ஆந்திரா நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால், ஜாமீன் பெறுவதற்காக சென்னையிலிருந்து ஆந்திராவுக்குச் செல்ல வேண்டியிருக்கும். 

        ஆனாலும், சென்னை அதிகார எல்லைக்குள் ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால்,  அவர் ஜாமீன் கோரியோ, அல்லது கைது செயயும் அச்சம் இருக்கும்  போது, முன்ஜாமீனை,கோரி. உள்ளூர் நீதிமன்றங்களை அணுகலாம். நீதிமன்றமும், வரையறுக்கப்பட்ட பாதுகாப்பான பயண ஜாமீனை வழங்குகின்றன.


        பெரும்பாலும், பயண முன் ஜாமீனின் நோக்கம், குற்றம் சாட்டப்பட்ட நபர் பொருத்தமான நீதிமன்றத்தை அடையும் வரை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் வழங்குவதாகும், இதனால் காவல்துறையினர் கைது செய்யப்பட விரும்பினால், அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார். எவ்வாறாயினும், நடந்துக் கொண்டிருக்கும் விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அத்தகைய ஜாமீன் வழங்கப்படுகிறது. 

        குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 438 இது சம்பந்தமாக என்ன சொல்கிறது?
        
        "கைதுசெய்யப்படும் அச்சுறுத்தல் உள்ள நபருக்கு ஜாமீன் வழங்குவதற்கான உத்தரவு" தொடர்பானது::

        கைது செய்யப்படுவதற்கு முன், ஜாமீன் வழங்குவதை இந்த விதிமுறை நேரடியாகக் குறிக்கவில்லை என்றாலும், ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றத்தைச் செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்படலாம் என்று நம்புவதற்கு காரணம் இருக்கும் போது, ​​அவர் முன்ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம்.   இந்த பிரிவின் கீழ் ஒரு அமர்வு நீதிமன்றமோ அல்லது உயர் நீதிமன்றமோ, பொருத்தமானது என்று நினைத்தால், அத்தகைய கைது ஏற்பட்டால், அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்ற உத்தரவு பிறப்பிக்கலாம்..

        பயண முன் ஜாமீன் வழங்குவதற்கான சட்டம் "ஒரு நீதி விளக்கமளிக்கும் சட்டம் " என்பதால், அதன் கொள்கைகளை வகுக்கும் சில முக்கியமான தீர்ப்புகளைப் பார்ப்போம்.
  • கைது பற்றிய அச்சம்- முக்கிய காரணி
        சாந்தனு முலுக் வழக்கில் அண்மையில் மாண்புமிகு மும்பை உயர்நீதிமன்றத்தின் (அவுரங்காபாத் பெஞ்ச்) தன உத்தரவில்,"கைது குறித்த அச்சமே முக்கிய காரணியாகும், அதாவது இதுபோன்ற விண்ணப்பங்களில் பரிசீலிக்கப்பட வேண்டியது"

        "பொருத்தமான நிவாரணம் கோருவதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியை அணுகுவதற்கு விண்ணப்பதாரருக்கு பயண ஜாமீன் மூலம் சுதந்திரம் வழங்க முடியுமா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியது மட்டுமே ஒரே அம்சமாகும் "

        "டெல்லி காவல்துறை அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருப்பதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள அவர்கள் உள்ளூர் காவல்துறையின் உதவியைப் பெற வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், டெல்லி காவல்துறை இந்த மனுவில் இல்லை என்ற அடிப்படையில் மட்டுமே மனுவை நிராகரிக்க முடியாது.   "
 
        முன்னோடி வழக்குகளை[1] மேற்கோள் காட்டிய மாண்புமிகு பம்பாய் உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் [2]
"... அதிகார வரம்பு கொண்ட ஒரு இடத்தில், ஒரு நபர் இருககும். போது, குற்றங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வெளியே நடந்ததாகக் கூறப்பட்டாலும் கூட , தான் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கும் போது, பிணையோ முன் பிணையோ வழங்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது " என்றது. 

        மாண்புமிகு தில்லி உயர்நீதிமன்றமோ  [3] மனுதாரருக்கு புகார் வழக்கு பதிவு செய்யப்பட்ட நீதிமன்றத்தில் அவர்களுக்கு "தீர்வு காணும் வழியை" பெற ஏதுவாக பயண ஜாமீன் வழங்கியது.

        ஒரு விமான நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் சந்தைப்படுத்தல் முகவர் ஆகியோருக்கு எதிராக 420, 420, 34 ஐபிசி. கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றம் சம்பந்தமாக, அவர்களின் ஜாமீன் கோரும் மனுவை [4] அண்மையில் பம்பாய் உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும் போது, ​​ தகுந்த நிவாரணங்களுக்காக தகுதிவாய்ந்த அதிகார வரம்பை அணுகும்வரை முன்ஜாமீன் உத்தரவிட்டது.

        சமீபத்தில், மாண்புமிகு கர்நாடக உயர்நீதிமன்றம், புகழ்பெற்ற டிஆர்பி ஊழல் வழக்கில் ரீ பப்ளிக் தொலைக்காட்சி சிஓஓ பிரியா முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியபோது, ​​
        ".. ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, கைது செய்யப்படுமோ என்ற அச்சம் இருக்கும்  போது, ​​மனுதாரர் Cr.P.C இன் பிரிவு 438 ஐ நீதிமன்றம் முன் நிவாரணம் பெறலாம்" என்றது. 

        வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பிற்கு போக்குவரத்து ஜாமீன் வழங்கும் உத்தரவில்,[5] மாண்புமிகு மும்பை உயர் நீதிமன்றம் தான் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளை[6] மேற்கோள் காட்டி,

"சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், உடனடியாக கைது செய்வதைத் தவிர்ப்பதற்கும் தற்காலிக நிவாரணம் இந்த நீதிமன்றத்தால் வழங்கப்படலாம். பொதுவாக ஜாமீன் மனுக்களில் உயர்நீதிமன்றத்தின் அதிகாரங்கள் அதன் பிராந்திய அதிகார வரம்புக்கு உட்பட்டவை. இருப்பினும், ஜாவேத் ஆனந்த் வழக்கில் காணப்பட்டபடி, பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், ஒரு நபரின் சுதந்திரம் பாதிக்கப்படும். பிரிவு 438 இன் கீழ் மனு செய்வதற்கான உண்மையான காரணம், நபரை கைது செய்ய வலுவான அச்சம் உள்ளது" என்றது.  
  • மனுதாரர் அதன் அதிகார எல்லைக்குள் தான் குடியிருக்கிறாLரா என்பதை நீதிமன்றம் ஆராயலாம்

        பிரபலமான குர்மீத் ராம் ரஹின் சிங் வழக்கில்[7] , ஹனி ப்ரீத் சிங் ஒரு பயண முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ப்ரீத், பொதுவாக ஹரியானாவில் வசிப்பவர் டெல்லி நீதிமன்றத்தில் இருந்து பயண முன் ஜாமீன் கோரியிருந்தார். டெல்லி உயர் நீதிமன்றம்,
        "நீதிமன்றத்திற்கு முன்பாக முன் ஜாமீனுக்கான மனு செய்யப்படும் போதெல்லாம், வேறு எங்காவது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள போது, சட்டத்தின் செயல்பாட்டைத் தவிர்ப்பதற்காக அல்லாமல், அந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு உள்ளே வழக்கமாக மனுதாரர் குடியிருக்கிறாரா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இந்த அம்சத்தில் நீதிமன்றம் திருப்தி அடையவில்லை என்றால்,  வழக்கின் தகுதிகளுக்குச் செல்லாமல் நிராகரிக்கப்பட வேண்டியது அவசியம். " என்றது . 

        ஆனால், இந்த விஷயத்தில் மாண்புமிகு பாட்னா உயர் நீதிமன்றம் வேறுபட்ட கருத்தை எடுத்துள்ளது.[8]
""பிரிவு 438 ,குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்தவொரு உயர்நீதிமன்றத்தையம் அல்லது எந்தவொரு அமர்வு நீதிமன்றத்தையும் முன்ஜாமீன் வழங்க தேர்வு செய்ய அனுமதிக்காது, அத்தகைய அதிகாரம், குற்றம் சாட்டப்பட்ட குற்றத்தின் இருப்பிடம் குறித்த அதிகார வரம்பைக் கொண்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்திற்கு மட்டுமே இந்த அதிகாரம் கொண்டது.. "
  • பயண முன் ஜாமீன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இருக்க முடியும்
        மாண்புமிகு கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் [9] பாட்னா உயர்நீதிமன்ற முழு பெஞ்ச் முடிவோடு ஒத்துக்கொண்டு, ​​பயண முன்ஜாமீன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என்றது.

        பயண முன் ஜாமீன் தொடர்பான சட்டம் பெரும்பாலும் நீதித்துறை ரீதியாக விளக்கப்படுவதால், ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வேறுபடலாம். எனவே, ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்ற ஒரே மாதிரியான கொள்கை இல்லை.
இருந்தாலும் நீதிமன்றம் பொதுவாக கவனிக்கும் அம்சம்
  • பயண முன் ஜாமீனின் மனுக்களைக் கையாளும் போது, ​​நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளுடன் விளையாடுவதில் எந்தவிதமான முயற்சியும் இல்லை என்பதை உறுதிப்படுத்த நல்ல காரணங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஜாமீன் வழங்கும் போது சட்டத்தின் சரியான செயல்முறை துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதைப் புரிந்துக்கொள்வது
        கடுமையான மற்றும் தீவிரமான குற்றங்களில்  பயண முன் ஜாமீன் வழங்கும்  போது நீதிமன்றங்கள் மாறுபாட்டைக் காட்டக்கூடும். அத்தகைய ஜாமீன் நீதிபதியின் விருப்பப்படி முற்றிலும் வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோருவதற்கு வழக்கமான அதிகார வரம்பைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பயண முன் ஜாமீன் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா?

 


 இந்த கேள்வியை பார்த்ததும் சமீபத்தில் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் நினைவுக்கு வந்தது.

பாலியல் குற்றச்ச்சாட்டுக்கு உள்ளான ஒருவனுக்கு பிணை கேட்டு வந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு விதித்த நிபந்தனை என்ன தெரியுமா?

"அந்த பெண்னின் கையில் ராக்கி கட்டவேண்டும்"

அத்தோடு நிற்கவில்லை. அந்த 26 வயது குற்றவாளிக்கு பிணை வழங்கிய அந்த உத்தரவில் மேலும் சில நிபந்தனைகளை கேட்டால்…

"ரக்க்ஷா பந்தன் அன்று அந்த பாதிப்பிற்கு உள்ளாகிய பெண்ணிற்கு. ராக்கி கட்டுவதோடு மட்டுமல்லாமல், அவளுக்கு, சகோதரர்கள் கொடுப்பது போல பணமாக ரூபாய் 11,000 கொடுக்கவேண்டும்.

மேலும் அவள் பிள்ளை துணிமணிகள், இனிப்பு வாங்க அவர்களுக்கு ரூபாய் 5000 கொடுக்க வேண்டும்"

இனிப்பு கொடு..கொண்டாடு என்கிறதோ?!😣

நல்ல வேளை. உடன் இடை மறித்தது மாண்புமிகு உச்ச நீதிமன்றம்…🙏

"உயர்நீதிமன்றங்களின் இத்தகைய தீர்ப்புகள், இத்தகைய கொடூரமான குற்றத்தை அற்பமாக்குவதில் தான். முடிவடையும்,.

மேலும் இது போன்ற உத்தரவுகள், அடிப்படையில் அந்த குற்றத்தை இயல்பாக்குவதற்கு வழிவகுக்கும், அது சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது ”என்ற கருத்தக்கூடிய வலுவான வாய்ப்பு உள்ளது”. என்று வருத்தம் தெரிவித்ததோடு

அந்த உத்தரவுக்கு தடை விதித்தது,.

அது மட்டுமல்லாமல், கீழமை நீதிமன்றங்கள், இதுபோண்ற வழக்குகளில் பிணை உத்தரவு போடும்போது கருத்தில் கொள்ளவேண்டிய சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது…

அந்த ஏழு கட்டளைகள் என்னென்ன?

  1. குற்றவாளி எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தொடர்பு கொள்வதை அனுமதிக்கவோ, கட்டாயப்படுத்துவது போலவோ பிணை உத்தரவு இருக்கக்கூடாது.அந்த நிபந்தனைகள், புகார்தாரரை குற்றவாலி மேலும் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாதவாறு இருக்கவேண்டும்.
  2. குற்றம் சாட்டப்பட்டவர்; பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துவதற்கான சாத்தியமான அச்சுறுத்தல் இருக்கலாம் என்று நீதிமன்றம் நம்புவதற்கான சூழ்நிலைகள் இருந்தாலோ அல்லது அப்படியொரு அச்சம் வெளிப்படுத்தப்பட்டாலோ, காவல்துறையினரிடமிருந்து அது சம்பந்தமான அறிக்கைகளை பெற்றபின், அந்த பெண்ணின் பாதுகாப்பின் தன்மை தனித்தனியாக பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவருடன் எந்த தொடர்பும் செய்யக்கூடாது என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக; ஒரு உத்தரவும் போடவேண்டும்.
  3. இது போன்ற வழக்குகளில், ஜாமீன் வழங்கப்பட்டவுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக புகார்தாரருக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் இரண்டு நாட்களுக்குள் அவருக்கு / அவளுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவின் நகல்; கொடுக்கவேண்டும்.
  4. ஜாமீன் நிபந்தனைகள் மற்றும் உத்தரவுகளில், பெண்களை பற்றியும் சமூகத்தில் அவர்களின் இடம் பற்றிய ஒரே மாதிரியான அல்லது ஆணாதிக்க கருத்துக்கள் பிரதிபலிப்பதைத் தவிர்க்க வேண்டும், மேலும் கண்டிப்பாக குற்றவியல் நடைமுறை சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்பஉத்தரவு இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புகார்தார்ரின் உடை, நடத்தை அல்லது கடந்தகால “நடத்தை” அல்லது “ஒழுக்கநெறிகள்” பற்றிய விவாதம், ஜாமீன் வழங்கும் தீர்ப்பில் நுழையக்கூடாது;
  5. நீதிமன்றம் பாலினம் தொடர்பான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையில் திருமணம் செய்து கொள்ள, பரிந்துரைக்கவோ கூடாது (குற்றம் சாட்டப்பட்டவருக்கும் உயிர் பாதிக்கப்பட்டவருக்கும் இடையில் எந்தவொரு வடிவத்திலும் மத்தியஸ்தம் பரிந்துரைக்க அல்லது கட்டாயப்படுத்தக் கூடாது. அது அவர்களின் அதிகாரங்களுக்கும் அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டது என்பதால் சமரசம் செய்யக்கூடாது.
  6. ;நீதிபதிகள் வழக்கு விசாரணையின் போதும் அல்லது வாதங்களின் போதும் தங்கள் உணர்வுத்திரன் வெளிப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,
  7. நீதிபதிகள் ஒரு பக்கச்சார்புடனோ பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கையை குறைக்கக்கூடிய அல்லது அசைக்க்கக்கூடிய எந்தவொரு வார்த்தையையும் குறிப்பாக பேசவோ அல்லது எழுதவோ பயன்படுத்தக்கூடாது,

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் அட்டர்னி ஜெனரலின் உதவியை கோரியுள்ளது.

மேற்படி. ஜாமீன் உத்தரவை “நாடகம்” என்று கூறி, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பேசும்போது,. ~இதுபோன்ற உத்தரவுகளை கண்டிக்க வேண்டியது அவசியம் என்றும், நீதிபதிகள் பாலின உணர்திறன் குறித்த பயிற்சியையும் பெற வேண்டும்" என்றும் பெஞ்சிற்கு தெரிவித்திருந்தார்.

" நீதி வழங்கினால் மட்டும் போதாது. நீதி வழங்கப்படுகிறது என்ற தோற்றமும் இருக்க வேணடும்" என்ற விதிக்கேற்ப, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு இந்திய நீதிமன்றங்களில் தகுந்த தண்டனை கிடைக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள, மேற்கண்ட கட்டளைகளை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்றுகின்றனவா என்று நாமும் உன்னிப்பாக கவனிப்போம்..

நமக்கும் சமூக கடமையுள்ளதே

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...