உயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 மே, 2022

எனது அண்ணன் மகன் இறந்து விட்டார் அவரது பெயரில் உள்ள வீடு அவரது சட்ட படியான வாரிசுகள் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது தந்தையாகிய எனது அண்ணன் உயில் எழுதி வைக்கலாமா?

நம் நாட்டில் சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்ததே. ஆனால் நீங்கள் எந்த மதம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இருந்தாலும், மூர்த்தி பெரியசாமி, நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் என்ற எண்ணத்தில் கீழே பதில்:

        உங்கள் அண்ணன் மகன் இறந்து விட்டார். அவர் சொத்துக்களுக்கு  உங்கள் அண்ணன் உயில் ஏதும் எழுதி வைப்பதா? முதலில் அவருக்கே அந்த சொத்தில் உரிமை இல்லை.... அது தெரியுமா அவருக்கு?!

        இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 8 ன் படி, உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு இந்து ஆணின்  சொத்துகளை அவரின் சட்டப்பூரமான வாரிசுகள் என்று,  முதல் பட்டியலில்  இருக்கும், அவர் மனைவி, பிள்ளைகள், அவர் தாயார் என்று சமமாக  பங்கு பிரித்து கொடுக்கப்படும். 

    இந்த வாரிசுகள் யாரும் இல்லையென்றால் மட்டுமே அவரின் தந்தைக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளது. (இப்படியிருக்க உயிலாவது, எழுதுவதாவது!!.....

    உடனே...என்ன.".என் அண்ணன் சொத்தில் அவன் பிள்ளைக்கு பங்கு இருக்கும் போது, பிள்ளை சொத்தில் அவன் அப்பாவுக்கு பங்கில்லையா?"  என்று பொங்கக் கூடாது!! இதுவே ஒரு இந்து பெண் உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால், அவளின் பெயரில் உள்ள சொத்து எப்படி பங்கிடப்படும் தெரியுமா?

    அவள் பிள்ளைகள் மற்றும் கணவனுக்கு சமமாக..

அவர்கள் யாரும் இல்லையென்றால், அடுத்து அவள் கணவனின் வாரிசுகளுக்கு: அவர்களும் இல்லையென்றால் தான் அவள் அப்பாவின் வாரிசுகளுக்கு இல்லை அம்மாவின் வாரிசுகளுக்கு...இந்த வரிசையில் தான் சொத்து போய் சேரும்.

        ஆனால் இதுவே அந்த சொத்து அவள் பெற்றோர் மூலமாக பெற்றது என்றால், அவள் பிள்ளைகளுக்கும், அவர்கள் இல்லையென்றால், அவள் அப்பாவின் வாரிசுகளுக்கும் போகும்.

        அதுவே அந்த சொத்து அவள் மாமனார், மாமியாரிடமிருந்து பெற்றிருந்தால், அவள் பிள்ளைகளுக்கு முதலிலும், அவர்கள் இல்லையென்றால்,  அவள் கணவனின் வாரிசுகளுக்கு போய் சேரும்.

        இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிரானது, பாலின பாகுபாடு காட்டுகிறது என்றெல்லாம் சொல்லி, வழக்கு போட்டார்கள்.. "அதெல்லாம் சரியாகத்  தான் இருக்கிறது.  எங்கிருந்து வந்ததோ அங்கேயே தான் போய் சேர வேண்டும்" என்று சொல்லி விட்டது நீதிமன்றம்...வேறு என்னத்தை சொல்ல!!

        இந்த பதிலை முடிக்கும முன் என் சிறு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.   இன்றைய உலகில் மலிவாக..இல்லையில்லை இலவசமாக  கிடைப்பது இன்னொருவருக்கு கொடுக்கும் அறிவுரை தான். ஆனால்  அதையே பனம்  கொடுத்து  நாம் பெற்று கொள்வது டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் தான். ஏனெனில் இரண்டுமே அவர்களின் உயிரையே குடிக்கக் கூடியது. அதே சமயம், ஆலோசனை/அறிவுரை சொல்லும் மருத்துவரும்  வழக்கறிஞரும் தங்களை,  கண நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தத்தம்  துறையில் பயின்றுக்  கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் , அவர்கள் செய்யும் தொழிலுக்கு PRACTISE எனப்பட்டது. 

        அப்படிப்பட்ட கடினமான ஒரு துறையில் ஒருவர் சந்தேகம் கேட்கும் போது, அது பற்றிய விஷய  ஞானம் இல்லாமல்  சிலர் பதில் கூறுவது சரியானதல்ல.  அதை  விவரமில்லாத பலர் நம்பி ஏமாறக்  கூடும்..வழி மாறி போகக் கூடும்!!

( இஸ்லாந்து  எங்கேயிருக்கிறதுன்னு கண்டுபிடிககிறதுகுள்ள...!!)

  

சனி, 12 ஜூன், 2021

எப்படி என் தாத்தா பெயரில் உள்ள சொத்து ஆவணங்களை மாற்ற முடியும்? என் பெயரில் உயில் ஒன்றை வைத்துவிட்டு அவர் காலமானார். ஆனால் என் அத்தை அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அது உயிலை மாற்ற முடியுமானால் அதற்க்கு செயல்முறை என்ன?

 உங்கள் கேள்வியில் முழு விவரம் இல்லை. வழக்கு முடியும்போது எந்த மாதிரி உயிலை செயல்படுத்துவது என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறன்.

உயில் எழுதியது செல்லும், எனத் தீர்ப்பு வருமேயானால், உடண் உயிலில் சொன்ன ஷரத்துகளின்படி, அந்த சொத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த உயிலை நிறைவேற்றுபவர் என்று யாரையேனும் உயிலில் நியமித்திருந்தால், அவர் அந்த உயிலை செயல்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இல்லையாயின், அந்த சொத்தை பெறும் நபரே, அதற்கான வேலையை செய்யலாம்.

அல்லது உயில் செல்லாது என்று தீர்ப்பு வரின், நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்[பட வேண்டும்.

திங்கள், 7 ஜூன், 2021

தாத்தாவின் சுயசொத்தினை உயில்படி அவரின் மூன்று மகன்களும் சரிபாகமாக பிரித்துக் கொள்ள வேண்டியது. ஆனால் மூத்த மகன் இறந்த நிலையில் அவர் வாரிசுகளை தவிர்த்து மற்ற இரண்டு மகன்களும் தமது பங்கை பாகப்பிரிவினை செய்து அவரவர் பெயரில் பட்டா மாற்றம் செய்ய முடியுமா?

         தாத்தா A விற்கு மூன்று பிள்ளைகள் B, C, D என்று வைத்துக்  கொள்வோம் அவர்கள் சரிசமமாக பிரித்துக்  கொள்ள உயில் இருக்கும் போது, ஒரு பிள்ளை B இறந்தால்…அவர் பிள்ளைகள் E, F என்று வைத்துக் கொள்வோம்.

(பின்னே நான் கணக்கு படித்தேன் என்று எப்படி ஞாபகப்படுத்துவது 😂)

தாத்தா                       A

                                 /           |                      \

                                B           C                      D

                          /          \        |                       |

                           E          F      C                      D

இந்த இறந்த மகன் B க்கு கிடைக்க வேண்டிய பாகத்தை அவர் பிள்ளைகள் E,, F தங்கள் சித்தப்பா C மற்றும் பெரியப்பா D யோடு சேர்ந்து பெற வேண்டும்.

அவ்வாறு கொடுக்காமல் உயிருடன் இருக்கும் மகன்கள் மட்டும் பிரித்துக் கொண்டால், அது செல்லாது. 

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது

  1. பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டிய அரசு அலுவலகங்களில் உங்கள் ஆட்சேபனை மனுவை உயில் நகல் இருந்தால் அதனுடன் சேர்த்து கொடுங்கள்.  அதன் மூலம், தாத்தாவின் சொத்து உயிலுக்கு எதிராகப் பெயர் மாற்றம் பெறாது.
  2. அடுத்து, சமரச மையத்திலும் மனு கொடுங்கள்.  அவர்கள் இரண்டு தரப்பையும் கூப்பிட்டு சமரசமாக தீர்வு காண்பார்கள்.


முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்

ஒருவர் அவர் வாழ்ந்த வீட்டின் அனுபவ பாத்தியத்தை மட்டும் வைத்து, பத்திரம், ஆவணங்கள் ஏதும் இன்றி உயில் எழுத முடியுமா? எழுதினால் அது செல்லுமா?

 


 சொந்த வீட்டை வாடகைக்குன்னு விட்டு, வாடகை ஒழுங்கா குடுக்கலைனாளும் பரவாயில்லை, இருக்கிற காலம் வரைக்கும் இருந்துட்டு போகட்டும்னு பெரிய மனசோட விட்டு வச்ச வீட்டு சொந்தகாரர்கள் எல்லாம் , இதை படிச்சுட்டு டென்ஷன் ஆயிர போறாங்க😂

உயில் எழுதுவது எதற்கு?

தன்னுடைய காலத்திற்கு பிறகு தனக்கு சொந்தமான சொத்தை யார் அனுபவிப்பது என்ற உரிமையை கொடுப்பது…

இங்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன.

  • சொத்து தனக்கு சொந்தமாய இருக்க வேண்டும்.
  • அதனை அனுபவிக்க மாற்றி கொடுக்கும் உரிமை

அனுபவ பாத்யதையால் .உரிமை வந்தது என்றால், முதலில் அதை கொண்டு, அந்த சொத்தை தன் பெயருக்கு சட்ட பூர்வமாக மாற்ற வேண்டும்.

வெறும் அனுபவம் மட்டுமே கொண்டு உரிமை கொண்டாடும் போது, அதை நிரூபிப்பது சற்று கடினம்.

அதை அவர் செய்யாமல் இன்னொருவரிடம் தள்ள முடியாது

அப்படியே எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர் உயில் எழுதி வைத்தாலும், அது செல்லுமா என்பது சந்தேகமே.

அவர், சொத்து உரிமையாளர் வந்து கேட்கும்போது, கோர்ட்டு, கேஸ் என்று அலைய வேண்டும்.

இந்த சமயம் படித்த ஒரு கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.

ஒரு பணக்காரர், நல்ல குளிர் காலம் ஒன்றில், அலுவலகத்தில் இருந்து இரவு திரும்பும் வழியில், ஒரு முதியவரை எந்த போர்வையும் இல்லாமல் இருப்பதை பார்த்தார். தன்னால் கம்பளி ஆடை இல்லாமல் வெளியே வரமுடியாத இந்த குளிரில் அவரால் எப்படி இருக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டு போய், அவரிடம் கேட்கிறார். முதியவரிடம் வேறு துணி இல்லாதது பார்த்து, தான் வீட்டில் போய் ஒரு கம்பளி போர்வையை கொண்டு வந்து தருகிறேன் என்று அவரிடம் சொல்லிவிட்டு வீடு வந்து சேர்கிறார்.வீட்டில் மற்ற வேலையில் மறந்து போகிறார். காலையில் ஞாபகம் வந்து, அவசரமாக கம்பளி போர்வையுடன் போனபோது, அந்த முதியவர் அங்கு இறந்து கிடந்தார். பக்கத்தில் ஒரு தாளில் இப்படி எழுதப்பட்டிருந்தது:"எனக்கு போர்வை இல்லாதபோது, குளிர் எனக்கு உரைக்கவில்லை. ஆனால் கம்பளிப் போர்வை வரும் என்ற நம்பிக்கையே, இப்போது குளிரை தாங்கிக்கொள்ள முடியாமல் செய்து விட்டது"

படிமப்புரவு கூகிள்

அது தான் நம்பிக்கை பொய்த்து போனால் ஏற்படுத்தும் வலி, வேதனை…

உயிலை எழுதும் போது ஏன் வில்லங்கத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்?

முறையாக சொத்தின் பெயர் மாற்றம் செய்து விட்டு, உயில் எழுதி வைக்கவும்.

உயில் எழுதுவது எப்படி ? அதை எவ்வாறு பதிவு செய்வது வெவ்வேறு ஊர்களில் உள்ள சொத்துக்களை ஒரே ஊரில் பதிவு செய்யலாமா ? உயில் பதிவு செய்ய மொத்தமாக எவ்வளவு செலவு ஆகும் ?

 .😀சர்வே ஜன: சுகினோ பவந்து

கிரயப் பத்திரம், தானப் பத்திரம், செட்டில்மெண்ட் பத்திரம்ன்னு ஒரு சொத்தின் உரிமை மாற்றத்தை செய்ய ஏகப்பட்டது பயன்பட்டாலும், உயில் இதில் முக்கியமானது. ஏனென்றால்

  • ,அதில் ஏதும் தவறு இருந்தால் அதை சரி செய்ய முடியாது.எழுதியவர் தான் போய்ட்டாரே…கோர்ட்டுக்கு தான் போய் மத்தவங்க நிற்கணும்..
  • எழுதியவர் யாருக்கு என்ன சொத்து என்று உரிமையை பிரித்து எழுதியதை பார்க்கும் போது தான் அவர் தன் குடும்பத்தினர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடு தெரிய வரும்.

சரி எப்படி உயில் எழுதுறது?

மத்த பத்திரங்கள் எழுதுறதுனா வக்கீலையோ பத்திரம் எழுதுறவர் கிட்டே பொறுப்பை ஒப்படைச்சுரலாம். ஆன்னா இந்த உயில் விவகாரம் ரொம்ப ரகசியமா செய்ய வேண்டியது…வெளியே தெரிஞ்சுது…நம்மை வெச்சு செஞ்சுருவாங்க..😀

நல்லா தெரிஞ்ச வக்கீல் கிட்டேயும் பத்திரம் எழுதுபவர் கிட்டேயும் உயில் எழுதுற வேலையை கொடுக்கலாம்..இதிலே ரெண்டு ஆபத்து இருக்கு..

  1. இவ்ளோ சொத்து இருக்கானு அவர் பீஸ் கூட கேட்கும் வாய்ப்புண்டு..😀சும்மா தமாசுக்கு..வக்கீல் யாரும் கோவிச்சுக்க வேணாம்😃 
  2. ரகசியம் பாதுகாக்கப்பட்டதான்னு சொல்ல முடியாத. 

எப்படினாலும் நாமும் சில அடிப்படை தெரிஞ்சுகிறதுலே தப்பில்லை.. தவறு இல்லாமல் உயில் எழுதி, அதன்படி எந்த கஷ்டமும் இல்லாமல் சொத்து பிரிபட இது உதவும்.

  1. எந்த முத்திரை தாளிலும் எழுதனும்னு கட்டாயம் கிடையாது. வெள்ளை பேப்பரில் கூட எழுதலாம்.
  2. அந்த உயில் நாம தான் எழுதினோம்ன்னு தெளிவா காட்ட, நம்ம கையெழுத்துலே இருக்கிறது நல்லது.அதுக்காக டைப் பண்ணக்கூடாதா என்றால் அப்படியில்லை.டைப் செய்யப்பட்ட உயிலில் கையெழுத்து மட்டும் போடும்போது, அது நம்முடையதுதானான்னு பின்னாடி கேள்வி எழும்பும் வாய்ப்பு உண்டு.அதை தவிர்க்கலாம்.
  3. அப்புறம் நாம் தான் உயில் எழுதுனோம்னு, நமக்கு பிறகு யாராவது சொல்லணுமே.. அதுனால ரெண்டு சாட்சிகள் முன்னாடி எழுதுறது நல்லது..அது கட்டாயம் கிடையாது..அந்த சாட்சிகள் உயிலினால் பயன் அடைபவராக இருக்கக் கூடாது.
  4. யாருக்கு எந்த சொத்து சேரணும்னு, தெளிவா எழுதி சொத்து விவரத்தை சேர்ப்பது நல்லது.
  5. அதே போல ஒருத்தருக்கு கூடுதலாவும் இன்னொருவருக்கு குறைவாகவோ அல்லது ஒன்னும் குடுக்கலைன்னாலும் காரணம் எழுதுறது நல்லது. தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கும்.
  6. அதே போல தனக்கு இருக்கும் கடனை குறிப்பிட்டு, அதை யார் எப்படி பைசல் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுவது நல்லது.
  7. உயிலை செயல்படுத்த போபவரையும் குறிப்பிட்டால், நல்லது.அவர் உயிலினால் பயன் அடையாதவராக இருப்பது நல்லது. அது ஒரு வழக்கறிஞர் ஆக இருப்பது செயல்படுத்தும் சிரமத்தைத் தவிற்கும்.
  8. பரம்பரை சொத்தை குறித்து பேரன் பேத்தி என்ற அதிகாரத்திலேயே பிள்ளைகளுக்கு கிடைத்துவிடுவதால், அதை எழுத தேவையில்லை. அதே போல, அவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் அந்த சொத்தை எழுதி வைக்க முடியாது.
  9. முஸ்லிம்களை பொறுத்து, அவர்கள் சுய சம்பாத்தியத்தில் பெற்ற சொத்து என்றாலும், மூன்றில் இரண்டு பங்கு குடும்பத்தினருக்கே போய் சேர வேண்டும்.
  10. அதே போல கிறித்துவர்கள், பார்சிகள் என்றால் உயில் எழுதிய பிறகு திருமணம் செய்து கொண்டால் அது செல்லாது போகும்.
  11. ஒவ்வொரு உயிலும் அதற்கு முன்னர் எழுதப்பட்ட உயிலை செல்லாததாக ஆக்கும்.
  12. பின்னாலே பிரச்சினை வருவதை தவிர்க்க பதிவு செய்றது நல்லது.
  13. உயில் பதிவு செய்த பிறகும், அதில் மாற்றமோ, இணைப்போ "கோடிசில்"என்ற துணை பத்திரத்தில் கொண்டு வரலாம்.அதை பதிவு செய்ய வேண்டும்.
  14. சென்னையில் உள்ள அசையா சொத்து குறித்து, உயில் எழுதியதை "பிரொபேட்"செய்ய வேண்டும். அதாவது நீதிமன்றத்தின் அத்தாட்சியுடன் உயிலின் சான்றிட்ட நகல் கிடைக்கும். இது உயிலின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும்.
  15. அதே போல உயிலை செயல்படுத்துபவர் லெட்டர் ஆப் அட்மினிஸ்ட்ரேசன்" நீதிமன்றத்தின் மூலம் பெறுவது, அவர் உயிலை செயல்படுத்தும் அதிகாரத்தை கொடுக்கும்.

உயிலை பதிவு செய்வது எப்படி?

  1. நாம குடியிருக்கும் இடத்திற்கு உட்பட்ட பதிவு அலுவலகத்தில் மற்ற பத்திரங்கள் போலவே பதிவு செய்ய வேண்டும்.
  2. அதற்கு இரண்டு சாட்சிகள் வேண்டும்.
  3. பதிவு கட்டணம் தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை.600 ரூபாய் என்று இருந்தது.அது தான் இப்போதும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
  4. இரண்டு போட்டோ,அடையாள சான்று இவற்றுடன் உயில் பதிவு செய்ய செல்வது அவசியம்.

அதே போல உயிலை பத்திரமா பாதுகாப்பா வைக்க, பதிவு அலுவலகத்தில் டெபாசிட் செய்யலாம்.அதனோட ஒரு சான்றிட்ட நகலை எழுதியவர் மட்டும் தான் வாங்க முடியும்.

பின்னால் எழுதியவரின் இறப்பு சான்றிதழ் கூட வைத்து, உயிலை செயல்படுத்த வேண்டியவர் மனு செய்து, உயிலை பிரிக்க செய்து, பதிவு செய்யலாம்.

ஒருவருக்கு மாற்றிய உயிலை அவர் நடத்தை சரியில்லாத காரணத்தால் வேறொருவருக்கு மாற்ற முடியுமா? உயிலை எழுதி கொடுத்தவர் உயிருடன் உள்ளார்.

 நாம் உயிருடன் இருக்கும் வரையில், எத்தனை முறை வேண்டுமானாலும்,உயிலை மாற்றி எழுதலாம்..


வழக்கு எண் தெரியாமல் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் பெயரைக் கொண்டு, 20 ஆண்டுகளுக்கு முன்பு, கீழமை நீதிமன்றத்தில் ஒரு உயில் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பின் நகலைப் பெற முடியுமா?

கடந்த ஏழெட்டு வருடங்களாகத் தான் விசாரணை நீதிமன்றங்களில் அணைத்து நடவடிக்கையும் கணிணிமயமாக்கப்பட்டது. அதனால் அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து வழக்கு எண் இன்றி தேடுவது கடினமே..தீர்ப்பு தேதி தெரிந்தால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பதிவறை ஊழியர் உதவக் கூடும்.


சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய இரு காலியிடங்களை உயில் மூலம் தன் மகனுக்கு பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஒருவர் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளார். பின் அதில் ஒரு இடத்தை அவரே விற்றுவிட்டார். அந்த உயில் அவருக்கு பின் விற்காத இடத்திற்கு பொருந்துமா?


ஒரு உயில் எழுதுவதே தன் காலத்திற்கு பிறகு தனக்கு உரிமையான சொத்தை எப்படி யார் பயன்படுத்தலாம் என்று உரிமையாளர் வழி வகுப்பதே.. சொத்து உள்ளது.உயிலும் உள்ளது…பின்னர் அதை செயல்படுத்த என்ன தடை? இல்லாத சொத்து குறித்த உயிலின் ஷரத்துகள், எழுதியவரே மாற்றிவிட்டதால் அவற்றிற்கு மதிப்பில்லை.

வில்லங்கம் செய்ய வருவோருக்கு முன் செயல் படுங்கள்😁

அரசு பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட உயில் பொது ஆவணமா? எனின் அதன் சான்றளிக்கப்பட்ட நகலை அதில் சம்பந்தப்படாத பொது நபர் பதிவு அலுவலகத்தில் இருந்து பெற முடியுமா?

 சட்டென்று விடைக்குள் போய் விடலாம்.

  • உயில் என்பது பொது ஆவணம் கிடையாது.
  • அந்த சொத்தில் சம்பந்தப்படாத ஒருவர் பதிவு செய்யப்பட்ட உயிலின் நகலை பெற முடியாது.

இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழும்…

சில பிரபலங்கள், "நான் இறந்த பிறகு என் சொத்து அனைத்தும் பொது மக்களையே போய் சேரும்" என்று அறிக்கை விடுகிறார்களே. அந்த வகையில் நானும் ஒரு பயனாளி தானே..அப்போது அந்த உயிலின் நகல் பெற முடியாதா ? என்று கேட்கலாம்..😃

கஷ்டப்பட்டு சம்பாரித்த☺️ சொத்தை அப்படி விட்டுவிடுவார்களா என்ன?

அல்லது …அதை அவர்கள் குடும்ப உறுப்பினர் தான் பார்த்து கொண்டிருப்பார்களா?!!

சட்டத்தின் சந்து பொந்துகளை நன்கு அறிந்தவர்கள் செய்யும் "ஸ்டண்ட் " வேலை இது

உடனே நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்று தெரியும்.அதற்கு நான் பொறுப்பு கிடையாது.😁

பதிவு செய்யப்பட்ட உயிலின் சான்றிட்ட நகல், அதை அமுல்படுத்துபவருக்கு மட்டும் கொடுக்கப்படும்..மற்றும் அந்த உயிலின் படி, சொத்தின் உரிய வாரிசுகளும் உயிலின் நகல் பெறலாம். மற்றவருக்கு அனுமதி கிடையாது.

ஏன்?

பொதுமக்களுக்கு உரியது என்றால்… அதில் நீங்கள் ஒரு சிறு துளி தானே..

எல்லாம் அதை அமுல்படுத்துபவர் பார்த்துக்கொள்வார். நீங்கள் இடத்தை காலி செய்யுங்கள் என்று சேதி வரும்😃

ஒன்னும் வேண்டாம்..அனைத்து பெரிய நிறுவனங்களின் கட்டுமான சமயத்திலேயே ஒரு குறிப்பிட்ட திறந்த வெளி, பொதுமக்களுக்கான பூங்காவாகவோ ஒன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். என்பது விதி..

  • ஆனால் நான் பார்த்த வரையில், அதில் நுழைந்து, இளைப்பாறும் வசதி நமக்கு மறுக்கப்படுகிறது…
  • அதன் நுழைவுவாயில் பூட்டப்பட்டு, சாவி, நிறுவனம் வசமிருக்கும்.
  • இது போன்று நிறைய இடங்களை, சென்னை அண்ணாசாலையிலேயே பார்த்திருக்கிறேன்.

இதை எந்த Mr. பொதுஜனமாவது கேட்டிருக்கிறாரா?

இல்லை…ஏன்?

வேறு யாராவது கேட்கட்டுமே.. என்ற அவரின் எண்ணம் தான் அவர்களை கொண்டு செலுத்துகிறது.

பிரபலங்களின் ஸ்டண்ட்டும் அந்த தைரியத்தில் தான் விடப்படுகின்றன!!😄


ஒருவர் உயிலை தமிழ் நாட்டில் உள்ள மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்ய முடியுமா? (எகா) கோவை மாவட்டத்தில் உள்ள ஒருவர் கரூர் மாவட்டத்தில் உயிலை பதிவு செய்ய முடியுமா? அவ்வாறு பதிவு செய்தால் அது செல்லுமா?

 


உயில் என்பது ஒரு உணர்ச்சிபூர்வமான விஷயம் என்பதால் மற்றவர்க்கு தெரியாமல் அதனை எழுதி பதிவு செய்ய வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ளது தான். அதனை தெரிந்து தான சட்டத்தில் அதனை பதிவு செய்வதில் அதிக விதிகள் இயற்றவில்லை. மட்டற்ற ஆவணங்கள் எல்லாம், எழுதிய 4 மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்றுள்ளபோது அதுபோன்ற எந்த காலக் கெடுவும் உயில் பதிவு செய்வதற்கு இல்லை. அதனை எழுதி எப்போது வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இன்னொரு விஷயம் அதனை பதிவு செய்வதும் கட்டாயம் கிடையாது. ஆனால் பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கும். ஆனால் அந்த பதி செய்யப்பட்ட உயிலிற்கு பின், ஒரு பதிவு செய்யப்படாத உயில் எழுதபட்டிரிந்தால் கடைசியாக எழுதப்பட்டிரிந்ததே செல்லும். அடுத்த சலுகையாக உயிலுக்கு ஸ்டாம்ப் dutyயும் கிடையாது. உயிலை வெற்றுத் தாளிலும் எழுதலாம். கை எழுத்திலும் இருக்கலாம். ஆனால் அது புரியும்படியாக இருக்க வேண்டும்.

சரி கேள்விக்கு வருவோம். எந்த பதிவு அலுவலகத்தில் பதியலாம் என்பது தான. உயில் என்பதே தன காலத்திற்கு பின்பு தன சொத்துக்கள் யார் யாருக்கு பிரிக்கப்பட வேண்டும் என்பது தானே? அதனால் சொத்துக்கள் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது பெருவாரியான சொத்துக்கள் எங்குள்ளதோ அங்கும் செய்யலாம். ஆவணம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம் என்று சொல்லப்பட்டாலும், பிற்காலத்தில் அதன் செயல்படுத்தும்போது தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க. பதிவு செய்யும் அலுவலகத்திற்கும் சொத்திற்கும் அல்லது உயில் எழுதுபவர்க்கும் சம்பந்தம் உள்ளவாறு பார்த்துக் கொள்ளுவது சிரமத்தை தவிர்க்கும்.


உயிலின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டியது அவசியமா? (1995இல் தட்டச்சு(Type) செய்யப்பட்ட ஒரு உயிலில் சொத்து தாரர் கடைசி பக்கத்தில் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளார். இப்பொழுது ஒரு சாட்சி மட்டுமே உயிரோடு உள்ளார், உயில் பதியப்படவில்லை)

 

உயிலின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்து இட வேண்டியது அவசியமா? (1995இல் தட்டச்சு(Type) செய்யப்பட்ட ஒரு ல்

அப்படி எந்த கட்டாயமும் இல்லை.

  • உயில் எழுதுவதற்கு எந்த முறையும் கிடையாது.
  • ஒரு துண்டுசீட்டிலும் எழுதலாம்.
  • சாட்சி இருவர் இருந்தால் நலம்.இல்லையென்றாலும் பாதிப்பில்லை.
  • பதிவு செய்தால் நல்லது.இல்லையெண்றாலும் பாதகம் இல்லை.
  • அது தான் இறந்தவரின் கடைசி உயில் என்றால் போதுமானத

ஞாயிறு, 6 ஜூன், 2021

இரு வருடங்களுக்கு முன் பாட்டி உயிருடன் இருக்கும் போது சொத்தின் ஒரு பகுதியை என் அம்மாவின் பெயரில் சொத்து மதிப்பிடாத உயில் சாசன பத்திரம் பதிவு செய்தார். அந்த இடத்தை எனது மாமா தர மறுக்கிறார். பத்திரம் மற்றும் பட்டா மாற்றம் செய்வது எப்படி?

 நீங்கள் செய்ய வேண்டியவை

  • பதிவு செய்யப்பட்ட உயில் எனில் அதன் சான்றிட்ட நகலை பதிவு அலுவலகத்தில் பெறலாம்.
  • அதன் நகலை பாட்டியின் இறப்பு சான்றிதழ் நகலுடன் இணைத்து, தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு செய்யவும்
  • சொத்து பிரிபடாதது எனில், இந்த ஆவணங்களை கொண்டு, சொத்தின் உங்கள் சொந்தமான இடத்தை உட்பிரிவு செய்து, பிரித்துக்கொடுக்குமாறு மனு செய்யவும்.
  • அவர்கள் அவ்வாறு செய்து முடித்து, பட்டா பெற்று, உங்கள் இடத்திற்கு வேலி போட்டுக்கொள்ளவும்.அவர்கள் தடுக்கும் பட்சத்தில், போலீஸ் புகார் கொடுக்கலாம்.


உயில் எதுவும் விட்டு செல்லாத எனது தந்தையின் சுய சம்பாத்தியம் சொத்தை, தாயாரை விட மிகவும் வயது குறைந்த ஒருவரால் உயில் எழுதப்பட்டுள்ளது. சார்பதிவாளர் எந்த முன் ஆவணமும் சரி பார்க்கவில்லை. பதிவு அலுவலகம் திருத்தம் செய்வது தானே சரி?

 உங்கள் தந்தையின் சொத்து குறித்து உங்கள் தந்தை மட்டுமே உயில் எழுத முடியும்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...