நம் நாட்டில் சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்ததே. ஆனால் நீங்கள் எந்த மதம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இருந்தாலும், மூர்த்தி பெரியசாமி, நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் என்ற எண்ணத்தில் கீழே பதில்:
உங்கள் அண்ணன் மகன் இறந்து விட்டார். அவர் சொத்துக்களுக்கு உங்கள் அண்ணன் உயில் ஏதும் எழுதி வைப்பதா? முதலில் அவருக்கே அந்த சொத்தில் உரிமை இல்லை.... அது தெரியுமா அவருக்கு?!
இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 8 ன் படி, உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு இந்து ஆணின் சொத்துகளை அவரின் சட்டப்பூரமான வாரிசுகள் என்று, முதல் பட்டியலில் இருக்கும், அவர் மனைவி, பிள்ளைகள், அவர் தாயார் என்று சமமாக பங்கு பிரித்து கொடுக்கப்படும்.
இந்த வாரிசுகள் யாரும் இல்லையென்றால் மட்டுமே அவரின் தந்தைக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளது. (இப்படியிருக்க உயிலாவது, எழுதுவதாவது!!.....
உடனே...என்ன.".என் அண்ணன் சொத்தில் அவன் பிள்ளைக்கு பங்கு இருக்கும் போது, பிள்ளை சொத்தில் அவன் அப்பாவுக்கு பங்கில்லையா?" என்று பொங்கக் கூடாது!! இதுவே ஒரு இந்து பெண் உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால், அவளின் பெயரில் உள்ள சொத்து எப்படி பங்கிடப்படும் தெரியுமா?
அவள் பிள்ளைகள் மற்றும் கணவனுக்கு சமமாக..
அவர்கள் யாரும் இல்லையென்றால், அடுத்து அவள் கணவனின் வாரிசுகளுக்கு: அவர்களும் இல்லையென்றால் தான் அவள் அப்பாவின் வாரிசுகளுக்கு இல்லை அம்மாவின் வாரிசுகளுக்கு...இந்த வரிசையில் தான் சொத்து போய் சேரும்.
ஆனால் இதுவே அந்த சொத்து அவள் பெற்றோர் மூலமாக பெற்றது என்றால், அவள் பிள்ளைகளுக்கும், அவர்கள் இல்லையென்றால், அவள் அப்பாவின் வாரிசுகளுக்கும் போகும்.
அதுவே அந்த சொத்து அவள் மாமனார், மாமியாரிடமிருந்து பெற்றிருந்தால், அவள் பிள்ளைகளுக்கு முதலிலும், அவர்கள் இல்லையென்றால், அவள் கணவனின் வாரிசுகளுக்கு போய் சேரும்.
இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிரானது, பாலின பாகுபாடு காட்டுகிறது என்றெல்லாம் சொல்லி, வழக்கு போட்டார்கள்.. "அதெல்லாம் சரியாகத் தான் இருக்கிறது. எங்கிருந்து வந்ததோ அங்கேயே தான் போய் சேர வேண்டும்" என்று சொல்லி விட்டது நீதிமன்றம்...வேறு என்னத்தை சொல்ல!!
இந்த பதிலை முடிக்கும முன் என் சிறு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். இன்றைய உலகில் மலிவாக..இல்லையில்லை இலவசமாக கிடைப்பது இன்னொருவருக்கு கொடுக்கும் அறிவுரை தான். ஆனால் அதையே பனம் கொடுத்து நாம் பெற்று கொள்வது டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் தான். ஏனெனில் இரண்டுமே அவர்களின் உயிரையே குடிக்கக் கூடியது. அதே சமயம், ஆலோசனை/அறிவுரை சொல்லும் மருத்துவரும் வழக்கறிஞரும் தங்களை, கண நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தத்தம் துறையில் பயின்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் , அவர்கள் செய்யும் தொழிலுக்கு PRACTISE எனப்பட்டது.
அப்படிப்பட்ட கடினமான ஒரு துறையில் ஒருவர் சந்தேகம் கேட்கும் போது, அது பற்றிய விஷய ஞானம் இல்லாமல் சிலர் பதில் கூறுவது சரியானதல்ல. அதை விவரமில்லாத பலர் நம்பி ஏமாறக் கூடும்..வழி மாறி போகக் கூடும்!!
( இஸ்லாந்து எங்கேயிருக்கிறதுன்னு கண்டுபிடிககிறதுகுள்ள...!!)
