ஏமாற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏமாற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 ஜூன், 2021

மாப்பிள்ளை எனது அக்காவை பதிவு திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு சென்று, பின்னர் பிடிக்கவில்லை என்றார். விவாகரத்துக்கு கோரி இருக்கிறோம். நாளை நீதிமன்றத்திற்கு முதன்முறையாக செல்ல இருக்கிறார். காது கேட்காது. சமாளிப்பது எப்படி?

 உங்கள் மீது அனுதாபம் தான். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணம் நடத்த வேண்டும் என்பார்கள். அது போல உங்கள் காது கேட்கும் குறைபாட்டை மறைத்து திருமணம் நடந்திருக்கும் என்று உங்கள் கேள்வியை பார்க்கும்போது தோன்றுகிறது.

நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடக்கும்போது, நீங்கள் காது கேட்கும் கருவி பயன்படுத்தினால், அந்த குறை குறித்து மற்றவருக்கு தெரிய வாய்ப்பு உண்டு. இப்போது அதற்கான கருவி என்ற தெரியாத அளவில் நவீனமாக வந்துள்ளது. அதை பயன்படுத்தவும்.

அவரே விவாகரத்து கேட்கிறார்.இந்த குறை தெரிந்தால் தான் என்ன என்கிறீர்களா? கீழே உள்ளச் செய்தி படியுங்கள்.

சமீபத்தில் கேரளா நீதிமன்றம், ஒரு விவாகரத்து வழக்கில், திருமணத்திற்கு முன்பே தனக்கு இருந்த இதய நோயை மறைத்து திருமணம் செய்த மனைவியின் செயல் ஒரு ஏமாற்று வேலை என்று தீர்ப்பளித்து குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை உறுதி செய்தது.

திருமனத்திற்கு சம்மதம் பெறும்போது தவறான தகவல்களை அளித்து, உண்மையை மறைத்து, அதனால் குடும்ப வாழ்வில் ஈடுபட முடியா நிலை உருவாக்கியதற்கு, "Fraud " நடந்துள்ளது என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது..

அதோடு விடாமல், மனைவி கணவனுக்கு ரூபாய் 10,000யை திருமணம் நடந்த நாள் முதலாக வட்டியுடன் சேர்த்து கொடுக்கவேண்டும் என்றும் சொல்லியுள்ளது.

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இது இரண்டு தரப்பிற்கும் பொருந்தும் .உண்மையை மறைத்து செய்யும் செயல்கள் அனைத்தும் Fraud தான். எனவே…

defective product sold.. will not be taken back என்பதெல்லாம் இனி இல்லை. வட்டியோடு வசூலிக்கப்படும் என்று சொல்லிக்கொண்டு……

திங்கள், 7 ஜூன், 2021

இன்றைய காலக்கட்டத்தில் நம்மை எப்படி ஏமாற்றுகிறார்கள்? நூதன பணம் திருடும் கும்பல்கள் பற்றி குறிப்பிட முடியுமா? (scam alert)

 நம்மோட ஞாபக மறதிக்கு குறை ஏது?

ஃப்ரீடம் 251..மறக்கக்கூடிய மோசடியா அது?

வெறும் 251 ரூபாய் கட்டினால் போதும் ஓரு மொபைல் பெறலாம்ன்னு 2016ல் திரு கோயலோட ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவிச்சப்ப, அந்த நிறுவனத்தை பத்தி ஒன்னும் தெரியலை...

கோயல் பேட்டியெல்லாம் கொடுத்தார்..2016 ஃபிப்ரவரிக்குள்ள பணம் கொடுத்த எல்லோர் கையிலும் ஃப்ரீடம் இருக்கும்னு…

அவர் சரியாத் தான் சொன்னாரோ?😀

எங்கேயும் பரபரப்பு தொத்திக்கிச்சு…பேப்பரில் தலையங்கமே இது தான்..

நல்ல வேளை, இப்ப இருக்கிற அளவிற்கு சேனல்கள் அப்ப இல்லே..இருந்தா ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை லைவ் போட்டு கொன்னுருப்பாங்க😂

ஞாபகம் இருக்கா..பணம் வசூல் எல்லாம் அவங்க கம்பனியோட ஆன்லைன் பக்க மூலம் தான் நடந்துச்சு..கேஷ் ஆன் டெலிவரி கிடையாதுன்னுட்டாங்க.

நமக்குத்தான் சந்தேகப்படவோ, யோசிக்கவோ நேரமே இல்லையே.. வழக்கம் போல, மத்தவன் போறதுக்குள்ள நாம கட்டிடனும்ன்னு 30,000 பேர் ஓடிப் போய் பணம் கட்டினார்கள்.. 😄 ஏழு கோடி பேர் அந்த சான்ஸை விட்டுட்டோமேன்னு வருத்தத்தோட பதிவு செஞ்சுகிட்டாங்க😂

படிமப்புரவு கூகிள்

பிப்ரவரியும் வந்து போச்சு..ஆனால் போன்? அது பத்தின பேச்சே இல்லை. அதுக்குள்ள பணம் கட்டினவங்கல்லாம் ஒரே கசாமுசானு சத்தம் போட , பணத்தை திருப்பிக் குடுக்குறோம்னு சொன்னாங்க. குடுத்தாங்களான்னு விவரம் இல்லே.

அப்புறம் ஜூன் மாசம் 30 ந் தேதிக்குள்ள 2 5 லட்சம் போன் டெலிவேரி செய்யப்போறோம்ன்னு சொன்னாங்க. பிறகு 2 லட்சம் தான் தயாராகுதுன்னாங்க. அப்புறம் ஜூலைன்னாங்க. கடைசியா சொன்னது முதல் கட்டமா 5000 பேருக்கு மட்டும் செய்வோம்..மீதி பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து குடுப்போம்ன்னு சொல்லி..🤣

இதுக்கு நடுவுல கோயல், பிரதமருக்கு லெட்டர் போடுறாரு…கொஞ்சம் இந்த திட்டத்தில் பணம் போடுங்க..அப்படி செஞ்சா 75 கோடி பேரு பயன் அடைவாங்கன்னு.. அதிகமில்லை பாஸ்..ஜஸ்ட் 50,000 கோடி ரூபாய் தான் கேட்டார்..

என்ன ஒரு தெகிரியம் 😂

ஆனால் ஆச்சரியம் பாருங்க மானியம் அதாங்க சலுகை எதுவும் வேணானுட்டார்😄

2017 வரைக்கும் கோயல் , பணம் கட்டினவங்களுக்கு கண்டிப்பா அவர் நிறுவனம் ஃப்ரீடம் போன் குடுத்துடுவோம்னு சொல்லிக்கிட்டு இருந்தார்…

இதை விடக் கொடுமை என்னன்னா அந்த 5000 பேருக்கு குடுத்துட்டோம்னு வேற சொன்னார்.ஆனா யாரும் அதை வாங்கினதா ஆதாரமே இல்லை😗

கோயல் விட்ட ஸ்டேட்மெண்ட்டெல்லாம் பயங்கரம்…😎

ஒரு ஃப்ரீடம் 251 மொபைல் போன் தயாரிக்க தங்களுக்கு 1180 ரூபாய் செலவாகுதுன்னும் ஆனால் நஷ்டத்துக்கு தான் அதை ஜனங்சுளுக்கு விக்கிறோம்னு …அதோட இந்த விலையும் 75 கோடி போன் ஆர்டர்னா குறையும்ன்னு தான் கவர்மெண்ட்டை கேட்டோம்னு ஒரு பிட் போட்டாரு பாருங்க 😄

அவர் சொன்னதுலே இன்னொரு ஹைலைட்..… இந்த போன் அஸெம்பலிங் எல்லாம் ஹரித்வாரிலே😉 நடக்குது, 60 % உள்ளூர் தயாரிப்பு வச்சு செய்றோம்.இத 100% ஆக்கிறது தான் குறிக்கொள்னு…

ஆனால் அது பொய்..அது போல ஒண்ணு தயாரிக்க ரூபாய் 2000_2500 செலவாகும்னு இந்திய செல்லுலார் சங்கம் சொல்லி பார்த்துச்சு..நம்ம ஆளுங்க காதிலே ஏறினா தானே!!😁

அட..இதுக்கு எப்படி அவ்ளோ பணம் மூலதனம்ன்னு காரணம் வேற சொன்னார்..நாடு முழுதும் கிட்டத்தட்ட 300 டிஸ்ட்ரிபுயுடர்கள் இருக்காங்க..அவங்க மூலமா ஒரு 10 கோடி ரூபாய் வந்துச்சு…ஒரு 23 கோடி ரூபாய் இந்த பிஸின்ஸ்க்கே ஒதுக்கிட்டோம்ன்னு கலர் கலரா..சொல்லிட்டு..🤔

பாவம் அதுக்கப்புறம் 2017ல் அவர் "உள்ளே" போனதுனாலே தொடர்ந்து சொல்ல முடியலை. இப்ப போன காரணம் வேற..ஏதோ ஒரு வழக்கில் முடித்து வைக்க ஆட்களை மிரட்டி பணம் பறிச்சார்ன்னு😃

ஒரு ஆறு மாசம் முடிச்சுட்டு வெளியே வந்தார்…இப்பவும் நம்ம ஆட்கள் நம்பிக்கையை விடலை.அவர் சொல்றதை கேட்டுக்கிட்டாங்க.."நான் இல்லாதப்ப நான் வச்ச ஆட்கள் சரியில்ல. அரசாங்கம் உதவி செய்ய மாட்டேன்னுட்டுது. எனக்கு இன்னொரு வாய்ப்பு குடுங்க🙏

அது எப்படி எல்லோரும் ஒரே மாதிரி கேட்கிறீங்க😄

ஆனால் இன்னி வரைக்கும், நானும் ஒவ்வொருத்தர் கையிலே இருக்கிற போனைத் தான் பார்க்கிறேன்..எங்கே அந்த ஃப்ரீடம் 251..நீங்க பார்த்தீங்க?😁

ஏன்னா கடைசி வரைக்கும் கோயல் சொன்னது..நாங்க 5000 போன் டெலிவரி பண்ணிட்டோமே"

கிடைக்காதவங்களுக்கு "பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்" ன்னு சொல்ல மாட்டேன்..ஏன்னா 2018 ஜூனுக்கு பிறகு அப்படி ஒரு நிறுவனமே காணாம போயிடுச்சு..😊

எனக்கு தெரிஞ்சு இந்த 251 ரூபாய் பணம் கட்டிய ஒரு பேராசிரியரை கேட்டேன்..

"போன் வந்துச்சா..பணம் வந்துச்சா..?"

"ரெண்டுமே இல்லை."

"அப்புறம் என்ன பண்ணினீங்க,?"

"இந்த பணத்துக்கு என்னத்த அலையறது..அதுவும் நான் ஏமாந்துட்டேன்னு சொல்லிக்கிட்டா இருக்கமுடியும்?"

இது தான் நம் பலவீனம்.அவர்களின் பலம்.!!


ஏமாற்றுபவன், ஏமாறுபவன் - இவர்களில் யார் குற்றவாளி?

கண்டிப்பாக நடைமுறையிலும் சட்டப்படியும் எமாற்றுபவனே குற்றவாளி . 420 என்று தானே அவனைச சொல்கிறோம?

ஆனால் ஏமாறுபவன் என்று ஒருத்தன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் இருக்கத்தானே செய்வான்? ஒவ்வொரு ஐந்து ஆண்டும் நாம் ஏமாறுவதில்லையா? அது போலத் தான்.

கதாநாயகன் தன் தந்திரத்தையும் அறிவையும் பயன்படுத்தி பல்வேறு மக்களை பல்வேறு விதமாக ஏமாற்றுகிறார். அதற்கு அவர் சொல்லும் ஒரே காரணம் "ஏமாறுபவன் இருக்கும்வரை ஏமாற்றுபவனும் இருப்பான்"

இப்போது சொல்லுங்கள் யார் குற்றவாளி?"


Status Update

By Boogeyman


இந்தியாவில் ஒருவரிடம் பணத்தை ஏமாந்து விட்டால் அதைத் திரும்பப் பெறவே முடியாத அளவிற்கு ஏன் சட்டங்கள் மோசமாக உள்ளன?


உண்மை தான் சட்டங்கள் அனைத்தும் மோசமாக தான் உள்ளது…

இந்த முடிவை நீங்களே எடுத்துவிட்டு அதற்கு ஆதாரம் தானே கேட்டீர்கள்?😅

எப்படி என்று பார்ப்போமா?

படிமப்புரவு ஏமாற்றாத கூகிள்

  1. நாம் இன்னொருவரிடம் பணத்தை ஏமாந்துவிட்டோம் என்றால், அதை அப்படியே நம்பி எதிர் ஆளை பிடித்து ஜெயிலில் போடாமல், நான் சொன்னதற்கு ஆதாரம் கேட்கிறது. சட்டம் மோசம் தான்!!
  2. பணப் பரிவர்த்தனை என்றால் எழுத்து மூலம் தான் இருக்க வேண்டும் என்கிறது. நான் இன்னொருவன் மேல் நம்பிக்கை வைத்து கொடுத்தேன் எதுவும் எழுதி வாங்கவில்லை என்றால் ஏற்றுக கொள்ளாதாம். சட்டம் மோசம் தான்!!
  3. சரி இன்னொருவர் முன்னால் தான் கொடுத்தேன் என்றால் அவனை கூட்டி வந்து அதை நிரூபி என்கிறது. அவன் எங்கே என்றே தெரியவில்லை. வந்தாலும் எனக்காக சொல்வானோ மாட்டானோ..! பணம் வாங்கிவனிடம் இவனும் பணம் வாங்கிக்கொண்டு நான் பணமே கொடுக்கவில்லை என்றாலும் ஆச்சரியம் இல்லை. சட்டம் மோசம் தான்!!
  4. எழுதி வாங்கிக்கொண்டு தான் கொடுத்தேன் என்று அதை காட்டினால், அதில் உள்ள வாசகங்கள், கடனாக கொடுத்ததாக சொல்லவில்லையே என்கிறது.சட்டம் மோசம் தான்!!
  5. அப்படியே கடன் ஆவணம் சரியாக எழுதி இருந்தாலும் கடன் கொடுத்தது காலாவதியாகிவிட்டதே என்கிறது. "பயிர் பாராமல் கெடும்.கடன் கேளாமல் கெடும்" என்று ஊரில் சொல்வதில்லையா?..நீ கடன் திருப்பி கேட்டாய் என்பதற்கு ஆதாரம் காட்டு'என்கிறது.சட்டம் மோசம் தான்!!
  6. அதற்கு ஆதாரம் காட்டி, அப்படியும் அவன் தரவில்லை என்று வழக்கு போட நான் வைத்த வழக்கறிஞர், வாய்தா வாங்கிக்கொண்டு வழக்கை இழுத்துக்கொண்டு இருக்கிறார்..சட்டம் மோசம் தான்!!
  7. வழக்கை சுமூகமாக முடிக்க மக்கள் நீதிமன்றம், சமரச மையம் போன்றவை செயல்பட்டாலும், அங்கு என் வழக்கை எடுத்துப்போய் சீக்கிரம் தீர்வு காண நான் முயற்சிக்க வேண்டுமாம்.!!சட்டம் மோசம் தான்!!

ஒரு ஏமாளி கிடைத்து விட்டான் என்பதற்காக இப்படியா சட்டம் ஏமாற்றுவது?😅😃

சட்டம் ரொம்ப மோசம் தான்!!

நன்றி படித்தமைக்கு.

ஸ்ரீஜா.






உண்மை கசக்கும் அல்லது சுடும் என்பதற்காகவே சிலர் அல்லது பலர் அதை மறைப்பது ஏன்?

 பள்ளியில் படிக்கும் போது, தமிழில் உன்னை பற்றி ஒரு கட்டுரை எழுது , என்று ஒரு நாள் ஆசிரியர் சொன்னார்.அப்போது தான் என்னை பற்றி என்ன எழுதுவதுன்னு முதன்.முதலில் ஒரு குழப்பம்.வந்தது.என் கிட்டே இருக்கிற நல்ல குணம் எது, கெட்டது எதுன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.ஆனா, நல்லதை எழுத கை பரபரத்தது மாதிரி அடுத்ததை எழுத தோணலை..அப்படியும் ஒரு பக்கம் தான் வந்தது

ரொம்ப தன்னடக்கம். 😀

தன்னை பற்றி சொல்வதன் முக்கியத்துவம், வேலை /பெண் 😁 தேடுபவருக்கும். தெரிந்திருக்கும்.

பின்னாளில் என் தம்பி resumai பார்த்து தான் எப்படி தன்னை பத்தி எழுதுறதுலே எதெல்லாம் முக்கியம் காட்டனும்னு புரிஞ்சுது..

அதுனாலே தான் அவன் இன்போஸிஸ்லே இருக்கான்…நான் இங்கே…😆

ஆனா பாருங்க…நம்மை பற்றிய இந்த மைனஸ் விஷயங்களை எங்கே சொல்லணுமோ அங்கே சொல்லிடனும்..

மனைவி கிட்டே, வேலை கொடுக்கிறவர் கிட்டே.

மனைவி கிட்டே மறைச்சா வாழ்க்கை பறிபோகும்.வேலை தேடும்போது மறைச்சா..?

இது சம்பந்தமா நம்ம சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்லுதுன்னு பாருங்க..

தமிழ் நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்காக டிஎன்பிஎஸ்சி, 88 அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை தேர்வு செய்ய 2013-ல் அறிவிப்பு வெளியிட்டது.ஞர்பகம் இருக்கா?

இதில் தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மங்கலநாதன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவரது தேர்வு ரத்து செய்யப்பட்டது.

டிஎன்பிஎஸ்சி விண்ணப்பத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததற்காக மங்கலநாதன் ஒரு ஆண்டுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வில் பங்கேற்க தடை விதித்தும் டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.

இதை ரத்து செய்யக்கோரி அவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மாண்புமிகு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காரன் விசாரித்தார்.

மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீதான 2 வழக்குகளில் ஒரு வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது என்றார்.

ஆனால், டிஎன்பிஎஸ்சி தரப்பில், "விண்ணப்பிக்கும் போது, நேர்கானல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது மனுதாரர் குற்ற வழக்கு இருப்பதை தெரிவிக்கவில்லை. தற்போது அவர் மீது வழக்குகள் இல்லாவிட்டாலும். விண்ணப்பிக்கும் போது வழக்கு நிலுவையில் இருந்துள்ளது. அந்த விபரத்தை விண்ணப்பத்தில் மறைத்துவிட்டார்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, "டிஎன்பிஎஸ்சி விதிப்படி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளிப்பவர்கள், குற்ற வழக்குகளை மறைப்பவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பது கட்டாயமாகும். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கான நிபந்தனைகள், விதிமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை மாற்றவோ, தளர்த்தவோ உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

இதனால் குற்ற வழக்கு இருப்பதை விண்ணப்பத்தில் மறைத்த மனுதாரரின் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவு சரியானது. "ன்னு மனுவை தள்ளுபடி செய்து விட்டார்.

ஒழுங்கா உண்மைய முதலிலேயே சொல்லியிருக்கலாம்லே?!!

இதே போல தான் திருமணம் செய்ய உடல் தகுதி இல்லாதவர், அதை மறைத்து திருமணம் செய்துக் கொண்டாலும், ..

பின்னர் தெரிய வரும்போது, அந்த காரணத்திற்காகவே திருமணத்தை செல்லாதது என்று ஆக்கலாம்.

ஆனால் அது போன்ற பந்தத்தில் இருந்து அந்த பெண் வெளி வந்தாலும், "அடுப்பில் வைத்த விறகுக்கட்டை" .நிலை தான்.

இந்தக் கோராவிலேயே, இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு பெண்ணின் மனக்குமுறலையும் பார்த்தேன்.

தன் குறை வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, ஒரு பெண்ணின் வாழ்க்கையையே வீணாக்கும் இந்த கயவர்களை என்ன செய்வது?

இனிமேல் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதோடு, உடல் தகுதி மருத்துவ சான்றும் பார்க்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கூட கொண்டு வர வேண்டும்!!

ஞாயிறு, 6 ஜூன், 2021

தாத்தாவின் சொத்தை ஏமாற்றி வாங்கியிருந்தால் அதனை மறுபடியும் பேரன் மீட்க முடியுமா?

 ஒருவர் ஏமாறுதல் என்பது அவரது தனிப்பட்ட அனுபவம் இல்லையா…?

அவர்களுக்குள் என்ன நடந்தது, எப்படி இவர் ஏமாந்தார்…அவர் என்ன வார்த்தை சொல்லி ஏமாற்றினார் என்பதெல்லாம் இவருக்கு மட்டுமே தெரிந்தது. ஆயிற்றே..இதில் மூன்றாம் நபருக்கு என்ன தெரியும்?

இப்படி தான் என் அப்பா ஆடை வியாபாரம் செய்துக் கொண்டிருந்த போது, என் அம்மா அவருக்கு உதவியாக கடைக்கு போவார்..அப்படி போகும் சமயம்,, விற்பனைக்கு இருந்த ஆண்கள் ஆடைகளை ஒரு ஐந்து ரூபாய் கூட வைத்து விற்றுருக்கிறார்.

சும்மா கைசெலவுக்கு இருக்கட்டுமேன்னு.

இது என் அப்பாவிற்கு தெரிந்த போது, ரொம்ப கோபட்டார். அது 50 பைசா கூட வைத்து விற்றாலும் நம்பி வரும் வாடிக்கையாளரை ஏமாற்றுதல் என்றார். அத்தோடு என் அம்மா அதை விட்டுவிட்டார்.

அன்று என் அப்பா "என்ன இப்படி பிழைக்க தெரியாதவராக இருக்கிறார் , அம்மா என்ன அப்படி தப்பு செய்துவவிட்டார்" என்று நினைத்தோம் நாங்கள்...

ஆனால் ஏதை செய்தாலும் அதில் தர்மம் இருக்கவேண்டும் என்று அன்று அவர் போதித்தது தான், .இன்று நான் நெறி பிறழாமல் இருப்பதற்கும் வித்தானது என்பேன்.!!

அதே தான் உங்களுக்கும் சொல்லலாம்.

உங்கள் தாத்தா சொத்து விற்பனையில் "ஏமாந்தது போல" உங்களுக்கு தோன்றலாம்.. ஆனால் அவருக்கு அது நியாயமாகவும் தோன்றியிருக்கலாம். அதை அவர் தான் சொல்லவேண்டும்.

இன்னொருவர் செயலுக்கு நீங்கள் காரணம் கற்பிக்க முடியாது..சட்டப்படியும் கூட...

அப்படியும் தாத்தா ஏமாந்தார் என்றால் அதை தாத்தாவே தான் நியாயம் கேட்க வேண்டும்..ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள்…தானே "போஸ்டமார்ட்டமே" செய்ய வேண்டும்..

அதனால் அமைதி கொள்ளுங்கள்..

பெரியோர் எது செய்தாலும் நன்மைக்கே இருக்கும்!!

நம் பார்வையை மாற்றிக் கொள்வோம்..

வரலாறு முழுவதும் ஏமாற்றுதல் ஏன் இத்தகைய கொடூரமான குற்றச்சாட்டாகப் பார்க்கப்பட்டது?

 கணக்கில் தீர்வு காண்பதற்கு ஒரு வழியை உபயோகிப்போம்.


இந்த சூத்திரத்தை 'நிரூபி' என்றால், முதலில் அது உண்மையில்லை எனக் கொண்டு அடுத்த அடுத்த 'ஸ்டெப்' களை போட ஆரம்பிப்போம். கடைசியில் நாம் அனுமானித்தது தவறு என்று வரும்..எனவே சூத்திரம் நிரூபிக்கப்பட்டுவிடும்

இந்தக் கேள்வியும் அது போலத் தான்.. தன்னுள்ளே ஒரு கருத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை நிரூபிக்க கேட்கப்பட்டது போல தெரிகிறது!!

நான் கணக்கில் முதல் வகுப்பு பட்டதாரி என்று வேறு எப்படி தான் சொல்வதாம்?😀

அதாவது, வரலாறு முழுதும்" ஏமாற்றுதல்" ஒரு கொடூரமான குற்றச்சாட்டாக பார்க்கப்பட்டது என்ற கருத்தை முன்வைக்கிறார் வினா எழுப்பியவர். அது ஏன் என்ற காரணத்தை தான் நம்மிடம் கேட்கிறார்.

அந்த கருத்து எப்படி ஏற்பட்டது என்பதை அவர் சொல்லவில்லை. அதே போல அவசர சொல்லும் வரலாறு என்பது எந்த காலக்கட்டத்தில் இருந்து தொடங்குகிறது என்றும் சொல்லவில்லை.

இன்றைக்கு குற்றங்களுக்கு தண்டனை அளிக்க நம்மிடம் இருப்பது, 1872ல் ஆங்கிலேயர் தந்த இந்திய தண்டனை சட்டமும், 1973ல் கொண்டு வந்த குற்ற விசாரணை நடைமுறை சட்டமும் தான்.அவ்வப்போது அதில் திருத்தங்கள் செய்துக் கொண்டு, பயன்படுத்துகிறோம். ரெண்டும் பழசு..

அதனால், வரலாறு என்றால் இந்த கடைசி 100 , 150 ஆண்டுகள் எனலாமா?

இந்த சட்டங்களின் படி, ஏமாற்றுதல் கொடூரமான குற்றச்சாட்டாக தான் பார்க்கப்பட்டதா? இன்றும் பார்க்கப்படுகிறதா? என்று பார்ப்போம்.

ஒரு குற்றம் நடக்கிறது.என்று வைத்துக்கொள்வோம்.விசாரணை செய்த காவலர், குற்றவாளி மீது குற்றச்சாட்டு சுமத்தி, ஒரு குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்.

இது தான் எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும்…அது கொடூரமோ.. கடூரமோ இல்லே. சாதரணமானதோ. நடைமுறை..

அடுத்து என்ன நடக்கும்.?

நீதிமன்றம், வழக்கை விசாரணைக்கு எடுக்கும் போது, குற்றவாளி ஆஜராவதை எப்படி உறுதி செய்கிறது?

குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தின் அத்தியாயம் VI இந்த நடைமுறையை விரிவாக விளக்குகிறது,

விசாரணை தேதியில் ஆஜராக சம்மன் அனுப்பப்படும். தவறும் பட்சத்திலோ அல்லது ஏற்கெனவே தலைமறைவாகி இருந்தாலோ கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்.

இந்த பிடிவாரண்டில் இரண்டு வகை உண்டு..ஜாமீனில் வரக்கூடியது மற்றொன்று அப்படி வர முடியாதது…இதெல்லாம் அந்த சட்டத்தில் கிடையாது.ஆனால் எதுஎதுல ஜாமின் கொடுக்கலாம்னு இந்தர் மோகன் கோஸ்வாமி எதிர் உத்தராஞ்சல் மாநிலம் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொல்லியாச்சு.

சரி .ஒருத்தருக்கு சம்மன் அனுப்பப்பட்டாலும், அவர், எந்த விளக்கமும் அளிக்காமல் ஆஜராகத் தவறினால், அவர் கைது செய்ய ஒரு வாரண்ட் பிறப்பிக்கப்படலாம் [1]

வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் என்ன ஆகும்?

அவர் வேண்டுமென்றே வாரண்டைத் தவிர்க்கிறார் என்று நீதிமன்றம் நம்புவதற்கு காரணம் இருந்தால், எழுத்துப்பூர்வ பிரகடனம் வழங்கலாம்.[2]

அதாவது நாளிதழ்களில் அதை வெளியிடுவது, முரசு அடித்து அறிவிப்பது என்ற அடிப்படையில் இந்த பிரகடனம் இருக்கும்.[3] அதன்படி, ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அது கோரும். .

ஆனால், பிரகடனம் இருந்த போதிலும், அந்த நபர் தோன்றத் தவறினால் என்ன செய்வது?

தலைமறைவு குற்றவாளிகள்

ஒரு பிரகடனத்திற்குப் பிறகும் அவர் ஆஜராகத் தவறினால் அந்த நபரை "பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி" என்று ஒரு அறிவிப்பை வெளியிடவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கொடுத்தது பிரிவு 82 (4) . இது, 2006 ஆம் ஆண்டில் தான் சேர்க்கப்பட்டது,

இதில் முக்கியமாக, கவனிக்க வேண்டியது என்னவென்றால், எல்லாக் குற்றங்களுக்கும் இது பொருந்தாது. "கொடும் குற்றம்" என்று வகைப்படுத்திய இந்திய தண்டனை சட்டத்தின் 82 (4) 302, 304, 364, 382, ​​392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 402, 436 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கான பிரகடனங்களுக்கு மட்டும்..தான் அவை.

கவனிக்க..இதில் 'சீட்டிங்' என்னும் 'ஏமாற்றுதல்' இல்லை..

இதனால் என்ன நடக்கும்?

ஒரு பிரகடனத்தின் விளைவுகள்

  1. ஒரு பிரகடனம் பிறப்பிக்கப்பட்டால், பிரிவு 83 Cr.P.C.படி, பிரகடனப்படுத்தப்பட்ட நபருக்கு சொந்தமான எந்த சொத்தையும் அட்டாச் செய்ய நீதிமன்றம் உதவும் அவை தொடர்ந்து விற்கப்படலாம்.
  2. ஐபிசியின் பிரிவு 174-ஏ (அதே திருத்தச் சட்டத்தால் 2006 இல் செருகப்பட்டது) பிரிவு 82 சி.ஆர்.பி.சி.யின் கீழ் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டும் அவர் ஆஜராகவில்லையென்றால் அதுவும் ஒரு குற்றமாகும்.

இந்த 174-A ஐபிசியில் ஒரு வித்தியாசம் பார்க்கலாம்.

  1. பிரிவு 82 (1) பிரகடனத்தை மீறுவது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும், ஆனால் பிரிவு 82 (4) இன் கீழ் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டால் ஒரு நபருக்கு கட்டாய அபராதத்துடன் 7 ஆண்டுகள். சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் 

இந்த சமயத்தில் ஒன்று சொல்லணும்..

"பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி" என்ற வார்த்தை 1872 சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 1882 சட்டப் பிரிவு 45ல் தான் இந்த வார்த்தை முதலில் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

அடுத்து, 1894 ஆம் ஆண்டில் பிரிவு 45 இல் ஒரு விளக்க விதி சேர்க்கப்பட்டது, இதன் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியின் வரையறையை விரிவுபடுத்தியது..

ஏன்?

சி.ஆர்.பி.சி. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லாது..இல்லையா..அதனால் சில அதிகார எல்லை பிரச்சினை ஏற்பட்டது.அந்த விதியை படிச்சாலே ஏன் திருத்தம் கொண்டுவரப்பட்டடதுன்னு தெரியும்.!!

"பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்ற வெளிப்பாடு, இந்த கோட் நீட்டிக்கப்பட்ட பிரதேசங்களில், 302, 304, 364, 382, ​​392, 393, 394, 395, 396, 397, 398, 399, 400, 402, 436, 449, 459 என்ற இந்திய தண்டனைச் சட்டத்தின் பின்வரும் எந்தவொரு பிரிவின் கீழும் தண்டனைக்குரியது. அல்லது 460 (இரண்டும் உள்ளடக்கியது) என்ற எந்தவொரு செயலையும் செய்தால், அது இந்த கோட் நீட்டிக்கப்படாத இந்தியாவின் எந்தவொரு பிரதேசத்திலும் உள்ள எந்தவொரு நீதிமன்றம் அல்லது அதிகாரத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட எந்தவொரு நபரையும் உள்ளடக்கியது",.

இந்த குறிப்பிட்ட பிரிவுகளின் பட்டியலுடன் உட்பிரிவைச் இணைத்து, 1894 இல் சட்டத்தை ஏன் திருத்த வேண்டும் என்று தெரிகிறதா?

ஆனால் பிரிவு 82 இல் இந்த பிரிவுகளின் பட்டியல் ஏன் குறிப்பாக இணைக்கப்கப்பட்டது? என்பதற்கு எந்த பதிலும் காணவில்லை.

பிரிவு 82 (4) ல் தற்போது காணப்படும் பிரிவுகளின் பட்டியல் , சட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது இதுவே முதல் நிகழ்வு.

இந்த முன்மொழிவு 1894 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைக் கோட் (திருத்தம்) மசோதாவாக கொண்டு வரப்பட்டு, சட்ட ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளில் சேர்க்கப்பட்டிருந்தாலும், அறிக்கையில் எந்த விவாதமும் இல்லை.

இந்த குற்றங்கள் ஒரு தனி வர்க்கத்திற்கு தகுதியானவை என்று வாதிடுவதற்கு ஏற்றாற்போல, ஐபிசியின் கீழ் கடுமையான குற்றங்களின் தொகுப்பு என்று கருத முடியாது. இந்த குற்றங்களின் பட்டியல் பிரிவு 82 (4) Cr.P.C. இன் கீழ் தன்னிச்சையாக வைக்கப்பட்டுள்ளது என்று தான் தெரிகிறது.

பின்னர் வந்த. 1898 கோட், அதன் திருத்தப்பட்ட வடிவத்தில், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் தொடர்பாக பிரிவு 45 ன் விதிகளை தக்க வைத்துக் கொண்டது, இது தான் இன்று Cr.P.C. இன் பிரிவு 40.

தற்போதைய நிலைப்படி, பிரிவு 82 இன்று இரண்டு தனித்தனி பிரகடனங்களை உருவாக்குகிறது:

  • பிரிவு 82 (4) இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கானது, பிரிவு 174-ஏ ஐபிசியால் 82 (4) ன் கீழ் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்கப்படலாம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
  • பிரிவு 82 (1) இன் கீழ் வெளியிடப்பட்ட பிற பிரகடனங்களுக்கு கீழ்ப்படியாததற்கு அத்தகைய அறிவிப்பு எதுவும் இல்லை,

இது உண்மையிலேயே ஒரு சிக்கலை கொண்டு வருகிறது.

அதாவது பிரிவு 82 (4) இன் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவிர வேறு நபர்களை அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்க முடியுமா?

இல்லை என்று தான் சொல்கின்றது சட்டம்.

'Proclaimed Offender' Declaration Under Section 82(4) CrPC Cannot Be Made Against Person Accused Of Sections 406, 420 IPC : Delhi High Court
The Delhi High Court has held that a person accused of offences under Section 406(criminal breach of trust), 420(cheating) and 120B(criminal conspiracy) under the Indian Penal Code(IPC) cannot be...

இதோ டெல்லியும் சொல்லிடுச்சு..420 அதாவது "ஏமாற்றதல் குற்றச்சாட்டு" உள்ள ஒருவன் கோர்ட்டுக்கு வரலைநாலும் அவனை "தலைமறைவு குற்றவாளி"ன்னு அறிவிக்க முடியாது"ன்னு. அவரா வந்தா தான் உண்டு!!,

அப்ப.. இது கொடூர குற்றச்சாட்டாக அப்போதிலிருந்து இன்று வரை பார்க்கப்படலைன்னு மட்டும் தெரியுது!!

ஏன் கிற காரணம் அவங்களும் சொல்லலை நமக்கும் தெரியலை!!

அதுனால தான் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசுறாங்களான்னு கேட்டா எனக்கு தெரியாதுப்பா…தெரியாது!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...