புதன், 7 ஜூலை, 2021

உங்களின் வங்கிக்கணக்கு தகவல்களையும், தனிப்பட்ட விவரங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றன. இருப்பினும் சிலர் அவர்களின் தகவல்களை பகிர்ந்து பணத்தை இழக்கின்றனர். இது ஏன்?

 பல வருடம் முன்பு, காஞ்சீபுரத்துக்கு போனபோது, நண்பர் கேட்டார்..இன்னிக்கு உங்க வேலை எதுவும் இல்லைன்னா நாடி ஜோதிடம் பார்க்க போவோமா?

அது பற்றி கொஞ்சம் தெரியும் என்பதால், போகலாமே என்றேன்.

அடுத்த 10வது நிமிடம் அங்கே.

அவர்களுக்கு எந்த விவரமும் நாமாக தரக்கூடாது என்று மனதிற்குள் நினைத்து கொண்டே கேள்விகளை எதிர்கொண்டேன்..

ஒவ்வொரு ஓலைசுவடியாக படித்துக்கொண்டே வரும்போது, ஆம் இல்லை என்று மட்டும் சொல்லிக்கொண்டு தான் வந்தேன்..ஆனாலும் பாருங்க ..

எனக்கே தெரிடாமல். ஊர்வசியாகிட்டேன்!☺️

அப்புறம் என்ன..எல்லாம் கபகபண்ணு முடிஞ்சுது.

ஏதோ தோஷம் கழிக்கணும்னு சொன்னாங்க..அதுலே எனக்கு நம்பிக்கை இல்லே..லீவு கிடையாதுன்னு சொன்னேன்.

அதுக்கென்ன. நாங்களே பணணிடுறோம்.னாங்க. போங்கப்பா போங்க..!

இதே கதை தான் இந்த வங்கி பேரை சொல்லிக்கிட்டு வர்ற போன் காலிலும்..

நாம் அந்த பாத்திரத்தில் ஒன்றி போகிடாம, ஓஷோ சொன்ன மாதிரி விழிப்புணர்வுடன், சாட்சி பாவமா பார்த்துகிட்டு இருந்தா தப்பிச்சோம்!!

இல்லே..கதை கந்தல் தான்!!

இதற்கென்றே இளம் வயது பெண்கள், நுனி நாக்கு ஆங்கிலத்தில் உச்சரிப்பு, இல்லையென்றால் ஹிந்தியில். மொழிதல்….

இப்படி தான் எனக்கு ஒரு முறை அந்த வங்கியின் கிரெடிட் கார்ட் பகுதி என்று போன் வந்தது..

உங்களுடைய டெபிட் கார்ட் எண்ணை சொல்லுங்கள் என்றான் ஒருவன்.கொச்சை ஹிந்தியில்..

கிரெடிட் கார்டிலிருந்து எதற்கு டெபிட் கார்ட் எண்?

உங்களுடைய டெபிட் கார்ட் முலம் செய்த பேமெண்ட் நிறுத்தப்பட்டுள்ளது..அதனால்" என்றான்..

அதற்கு சில காலம் முன்பு தான், எனக்கு கிரெடிட் கார்ட் தேவையில்லை என்று அதை உடைத்து, அவர்களுக்கு அனுப்பியிருந்தேன்..!!

அது இருந்தவரைக்கும் ஏகப்பட்ட பிரச்சினை!

நல்லது..என்றேன்..

பணம் உடன் கட்டாததால், உங்கள் மேல் ஒரு கேஸ் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள இந்த நம்பரில் உடனே தொடர்பு கொண்டு பேசுங்கள் .எண்று ஒரு நம்பர் சொன்னான்.சரி என்று வைத்துவிட்டேன்.

அவன் சொன்னது போல போன் செய்யவில்லை.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வேறு நம்பரில் இருந்து போன்..இப்போது ஒரு பெண்.

நீங்கள் போன் செய்யவில்லை இருந்தாலும் நீங்கள் எங்கள் வாடிக்கையாளர் என்பதால், உங்களுக்கு உதவ விரும்புகிறோம். உங்கள் கார்ட் விவரங்களை சொல்லுங்கள் " என்றாள் ஆங்கிலத்தில்..

"எதற்கு?"

"அப்போது தானே உங்கள் மேல் என்ன கேஸ் என்று பார்த்து சொல்ல முடியும்?"

"நீ சொல்லலைனாலும் பரவாயில்லை"☺️என்று  வைத்துவிட்டேன்.

நம்முடைய பதட்டம் தான் அவர்களுக்கு ஊற்றுக்கண்.அதுவும் யோசிக்க நேரம் கொடுக்காமல் முயல்வது..அந்த ஷண நேரம் சுதாரித்தால் போதும்.! மீண்டு விடலாம்.

ஆனாலும் இவர்களை பிடிக்க முயல்வது தான் கடினம்..அதுவும் இதுக்கு போயி போலீசுக்கு அலஞ்சு..அது இதை விட மோசம்😀

ஏமாற்றுபவர்கள் இருக்கத்  தான் செய்வர்..ஏமாறுபவர்கள் இருக்கும்வரை!

அது சரி மிருகசீரிடம் 4ம் பாதம், கிருத்திகை 3ம் பாதம், கேட்டை 4ம் பாதம் ஜாதகர் ஏமாற்றுகாரர்களாக இருப்பார்கள் என்கிறதே.அது சரி தானா என்று அந்த நட்சத்திரகாரர்கள் யாராவது சொல்லுங்களேன்...

இன்னொன்னு ..ஏமாற்றுதல் இருக்க காரணமே ஏமாந்து போக நாம் ரெடியா இருக்கிறது தான்னு சொன்னா நிறைய பேருக்கு கோபம் வரும்..அது எப்படி..அவங்க புது புது டெக்னீக்கோட வராங்க.. நமக்கு அந்த அளவுக்கு கெட்ட புத்தி இல்லையே புரிஞ்சுக்க.. அவ்ளோ வெல்லந்தியா இருக்கோம்பாங்க..

நான் படிச்ச கதை ஒண்ணு சொல்றேன்

சீடர் ஒருவர் குருவிடம் வந்து 'ஐயா, சில சமயம் என் நண்பர் என்னைக் கிண்டல் செய்தால், நானும் சிரித்து பதிலுக்கு கிண்டலாக ஏதாவது சொல்லி விஷயத்தை அத்தோடு முடித்து விடுவேன். ஆனால், சில சமயம் அதே போன்ற நண்பரின் கிண்டல் எனக்குள் எரிச்சலைக் கிளப்புகிறது. என்ன காரணம், சுவாமி?' எனக் கேட்டார்.

குரு உடனடியாக எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். சீடரும் உடன் சென்றார். முதலில் வறண்ட கிணற்றில் வாளியை விட்டார். குரு, மேலே இழுத்தபோது வெறும் வாளியாகவே காலியாக திரும்பியது. அதுபற்றி சீடர்எதுவும் கேட்கவில்லை. அடுத்ததாக குருநாதர் நீருள்ள கிணற்றிற்குச் சென்று வாளியை விட, வாளி நீருடன் திரும்பியது. அதையும் சீடர் பார்த்துக் கொண்டிருந்தார். இப்பொழுது குரு சீடரிடம் கேட்டார

"உன் கேள்விக்குப் பதில் கிடைத்ததா! ?"சீடர் ஒன்றும் புரியாமல் விழித்தார்.

குரு சொன்னார் 'கிணற்றில் வாளியை விட்டால் உள்ளே உள்ளதை மட்டுமே அதனால் கொண்டுவர முடியும். வாளியால் நீரை உருவாக்க முடியாது.. அடுத்தவர்கள் வாளிகளைப் போன்றவர்கள். அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத்தான். அது கோபமாகட்டும், வெறுப்பாகட்டும், அன்பாகட்டும், நல்லதாகட்டும், தீயதாகட்டும். அதனால்தான் நீ சந்தோஷமாக இருக்கும்பொழுது நண்பரின் கிண்டலை சாதாரணமாக எடுத்துக் கொண்டு ரசிக்கிறாய். ஆனால், ஏதாவது பிரச்சனைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால், அந்த நண்பரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும். அதனால் உனக்கு எரிச்சல் வருகிறது."

கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் அந்தக் கோபத்திற்கு மருந்து என சீடர் புரிந்து கொண்டார்.

இது தாங்க கதை. இதுக்கும் நம்ம வினாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறவங்களுக்கு…

நமக்குள்ளே இருக்கிறது தானே வெளியே வரும்..நம் ஆசை, பொறாமை, கோபம் போன்றவை தான் நம் துன்பத்திற்கு காரணம்.. அதை அகற்றுவது தான் ஞானம்..

"ஞானம் அடைவது "ன்னு சொல்றாங்க. ஆனா நம்மிடம் உள்ள இந்த தீக்குணங்களை நீக்குவது தான் ஞானம்.அதை தான் புத்தரும் போதிக்கிறார்..ஓஷோவும் வழிமொழிகிறார்...

இப்போது சொல்லுங்கள்…நம் துன்பத்திற்கு காரணம் நாம் தானே..

எல்லாம் விதி என்றும் தள்ளிவிடமுடியாது..ஏமாந்து போனவர்கள் சொல்லும் கட்டுக்கதை தான் இது..

12ம் வகுப்பு முடித்து எந்த கோர்ஸில் சேர்வது என்று ஏகப்பட்ட ஆப்ஸன் இருக்கும்..அதில் ஒன்றை தேர்ந்து எடுப்போம்..அது "மதி" அதை தொடர்ந்து நம்மை கூட்டி செல்லும் "விதி"!

இப்படித்தான் நம் முன் வினைகளும் தற்போதையு வினையும் சேர்ந்து நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது..

அதுனால நிறைய பேர் ஈதுக்கு வம்புன்னு செய்ய வேண்டிய கர்மாக்களை கூட செய்யாமல் விடுகிறார்ர்கள். அதில் ஏதாவது பிரச்சினை வந்தால்?" என்று.

ஆனால் செய்ய வேண்டிய பணிகளை, அதற்கான சம்பளம் வாங்கிக்கொண்டு செய்யாமல் இருப்பதும் கெட்ட கர்மாவில் தான் முடியும்!!

அது மட்டுமல்ல தடுக்கப்பட்டஒரு செயலை செய்வதோ அல்லதுசெய்ய கடமை பட்டதை செய்யாமல் விடுவதோ குற்றம் ஆகும்..

ஆனாலும் சில சமயம், இதற்கு விதிவிலக்கு உண்டு..

குற்றச் சட்டத்தின் கொள்கைகளில் ஒன்று, அந்தச் செயலைச் செய்த நபரின் மனம் குற்றத் தன்மை இல்லாது செய்யும்போது குற்றமாகக் கருத முடியாது என்று கூறுகிறது.

ஏன்?

தண்டனை கொடுப்பதின் அடிப்படைக் கொள்கையே, ஒரு லத்தீன் மாக்சிம் தான் “Actus non facit reum nisi mens sit rea”

இதன் பொருள் “சட்டமும் நோக்கமும் ஒரு குற்றத்தை உருவாக்க ஒன்றுக்கொன்று ஒப்புக் கொள்ள வேண்டும்”.

இன்னமும் எளிமையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு நபர் செய்த குற்றத்தை, அவர் குற்ற உணர்ச்சியுடன் செய்யாவிட்டால் அது குற்றமாக கருதப்படாது.

உதாரணமாக, ஒரு மருத்துவர் நோயாளிக்கு தேவையான சிகிச்சையை அவரே முடிவு செய்கிறார்.இதில் நோயாளிக்கு துன்பம் ஏற்பட்டாலும், அந்த நோயில் இருந்து அவரை விடுக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் செய்ததால், அதன் பின்விளைவுகளுக்கு அவர் பொறுப்பாளி ஆகமாட்டார்..ஆனால் அவரே, தன் சுய ஆதாயத்திற்கு செய்திருந்தால், அது குற்றமே!!

கோரனாவுக்கு முந்தி, ஒருதடவை என் மகளுக்கு சாதாரண காய்ச்சல்.. பாட்டி வைத்தியம் செய்தாயிற்று. மூன்று நாட்கள் ஆனாலும் குறையவில்லை.அவளுக்கு டாக்டரிடம் கூட்டி போகவில்லை என்ற குறை..சரி என்று பக்கத்தில் உள்ள ஒரு பிரபல வானவில் குழந்தை மருத்துவமனைக்கு கூடடிப்போனேன். வரவேற்பறையில் யாரும் காத்திருக்கவில்லை..ஆனாலும் ஒரு மணி நேரம் கழித்தே மருத்துவர் அறைக்கு உள்ளே அனுப்பப்பட்டோம்!!

அவரும் சோதித்து விட்டு, ப்ரிஸ்க்ரிப்ஸின் எடுத்தார். எழுதினார்..எழுதினார் அடுத்த பக்கம் வரையில் மருந்துகள் வரிசை!!

இதையெல்லாம் 3 நாள் குறையாமல் கொடுத்து விட்டு, பிறகும் அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு வரவாம்!! வெளியே வந்தால், இவருக்கு ஃபீஸ் என்று ஆயிரம் ரூபாய்..கீழேயே பார்மஸி..அதில் ஒரு ஆயிரம்

ஒரு குழந்தைக்கு இவ்வளவு ஆன்டிபயாடிக்ஸ் தேவையா ? அதற்கு பின்விளைவுகளை குழந்தை தாங்குமா? என்று கூட நினைக்காமல் பரிந்துரைக்கும் மருத்துவருக்கு உள்ளது நல்ல உள்நோக்கமா??

ஒரு குற்றத்தின் மிக முக்கியமான மூலப்பொருள் "மென்ஸ்ரியா" எனப்படும் தீய செயலை அதன் தீய விளைவுகளை அறிந்துசெய்வதற்கான நோக்கம்.. .

ஏன் மனதில் நினைப்பது கூட குற்றமாகிறது?

ஒரு குற்றத்தை செய்யும் முன் தவறு செய்யும் மனம் இருக்க வேண்டும். இந்த மென்ஸ்ரியா ஒரு செயலைச் செய்வதற்கான நோக்கத்தையும், , செய்ய வேண்டிய ஒரு செயலைச் செய்வதைத் தவிர்ப்பதையும் உள்ளடக்கியது. ஒரு தவறான செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்றம் செய்ய விருப்பம் இருந்ததாக நிரூபிக்கப்பட்டால் தண்டனை அடைவார்,

ஆனால் அதை எதிர் தரப்பில்தான் நிரூபிக்க வேண்டும், மேலும் அந்த நோக்கம் இருப்பதாக முடிவு செய்ய போதுமான நியாயங்களும் இருக்க வேண்டும்.

அவர் மனதில் கெட்ட எண்ணம் இருந்தது என்று எப்படி நிரூபிக்க முடியும்?

அது அவருடைய நடத்தையை கொண்டு..

ராமச்சந்திர குஜார் வழக்கில்Ramachandra Gujar, (1937) 39 BOM LR 1184 நீதிமன்றம் ஒரு நபரின் நடத்தையிலிருந்து மட்டுமே நோக்கத்தை ஊகிக்க முடியும் என்றும், அத்தகைய நடத்தையின் சாத்தியமான விளைவையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறியது.

 மகாராஷ்டிரா மாநில அரசு எதிர் எம்.எச். ஜார்ஜ் வழக்கில்,மான்புமிகு உச்சநீதிமன்றம், "குற்றவியல் நோக்கம் என்பது ஒரு உளவியல் உண்மை, அது குறிப்பாக நிராகரிக்கப்படாவிட்டால் , சிறப்புச் சட்டங்களின் கீழ் உள்ள குற்றங்கள் குறித்து கூட நிரூபிக்கப்பட வேண்டும்" என்றது.,

அதேபோல, ஹரி மோகன் மண்டல் எதிர் ஜார்க்கண்ட் மாநில அரசு வழக்கில் கூட, "மரணத்தை ஏற்படுத்தும் திறன் கொண்ட உடல் காயம் மட்டுமே குற்றவாளிக்கு தீய எண்ணம் இருந்தது என்று சொல்லமுடியாது.கொலை செய்வதற்கான எண்ணம் அல்லது அந்த காயத்தை ஏற்படுத்தினால் மரணம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தாரா என்பதே தெளிவாக்கப்படவேண்டியது" என்று கூறியது.

 மாநில அரசு எதிர் சலாவுதீன் @ ராஜா & அன் வழக்கிலும். பிரிவு 307 ஐபிசியின் கீழ் ஒரு குற்றத்திற்கு உள்நோக்கம் அல்லது அது குறித்து அறிவு, ஒரு முக்கிய மூலப்பொருள் என்றது.

ஷெராஸின்  வழக்கில்,Sherras vs. De Rutzen (1895) 1 Q B 918 நீதிமன்றம் கீழ்கண்டவற்றிற்கும் கெOட்ட உள்நோக்கம் இருந்தால் குற்றம் என்றது

(1) உண்மையான அர்த்தத்தில் சில குற்றமற்றவை இல்லை என்றாலும், பொது நலனுக்காக அபராதம் விதிக்கப்படுபவை

மாஸ்க் போடாமல் பொதுவெளியில் வரக்கூடாது என்பது

(2) பொதுத் தொல்லை

(3) குற்றவியல் வடிவத்தில் உள்ளவை ஆனால் அவை உண்மையில் ஒரு சிவில் உரிமையைச் செயல்படுத்தும் சுருக்க முறை மட்டுமே.

இந்த குற்ற எண்ணம் இல்லாமலேயே சில செயல்களுக்கு தண்டனை உண்டு என்றும் இ.த.ச சொல்கிறது..அவை நாட்டிற்கு எதிரான செயல்கள்

  • கள்ள நாணயங்கள் அச்சிடுவது (பிரிவு .232),
  • கடத்தல்
  • தேசத் துரோகம் (பிரிவு 124 ஏ),

இந்த மனநிலையை நிரூபிக்க வேண்டாம் என்ற நிலையையே இன்று தவறாக பயன்படுத்தும் நிலைக்கு ஆகிவிட்டது!

அதே போல வேலையாள் செய்ததற்கு எஜமானரும் பொறுப்பா என்பதை அந்த சூழ்நிலை தான் சொல்லும்!

இதை கொண்டு வலைதளத்தில் போடும் பதிவுக்கு என் அட்மின் தான் காரணம்னு சொல்லி தப்பிக்கிறாங்க!☺️

ஆனால் டி.ஜி.பி.விடுத்த செய்தி எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்!!

முடிவாக குற்றவியல் சட்டத்தின் கொள்கையின்படி, குற்றவாளியின் செயல் என்னும் ஆக்டஸ் ரியஸ் மற்றும் மனம் / நோக்கம் ஆகிய இரண்டையும் சேர்த்து தான் குற்றமா இல்லையா என்று பார்க்கப்படும் எண்றாலும் பொதுவாக அனைத்து குற்றங்களுக்கும் இந்த கொள்கையைப் பயன்படுத்துவது சாத்தியமில்லை என்பதால் தான் ஒவ்வொரு வழக்கையும் கவனமாக மதிப்பீடு செய்வது அவசியமானது

இதிலிருந்து "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பது புரிந்தால் சரி..

சிலர் சொல்வார்கள்..நான் பாட்டுக்கு கம்முன்னு தான் இருந்தேன்.அவனா வந்து வம்புக்கு இழுத்தான்"ன்னு

அதுக்கு உளவியலாளர்கள் ஒன்று சொல்கிறார்கள்..நம் மனம் தான் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தது..நம் மனதின் எண்ணங்கள் தான் வம்பை வா வா என்று வருந்தி அழைத்தது" என்று.அதற்கு தான் நேர்மையான எண்ணங்களை வளர்த்து கொள்ளவேண்டும் என்கின்றனர்!!

ஒரு பெண் என்னிடம் ஒரு நாள் வந்தார்.தன் கணவர் கல்யாணம் ஆன நாளிலிருந்து, கொடுமைப்படுத்துகிறார்.தன் வீட்டாரை கண்டபடி பேசுகிறார் என்றார்..நான் விவரம் கேட்டுக்கொண்டு வருகையில், இதெல்லாம் எப்போ நடந்ததுன்னு கேட்டேன்..அவர் குனிந்து, தன் பையில் எதையோ தேடினர்..ஒரு டைரியில் இருந்த நீளமான பேப்பரை  எடுத்து என் கையில் வைத்தார்..இதிலே தேதி வாரியாக என் கணவர் செஞ்சதை குறிச்சு வச்சிருக்கேன் மேடம்" என்றார்.

எனக்கு ஒரே ஆச்சர்யம்.."எப்படி தேதி வாரியாக சொல்றீங்க.?"

எதுக்கும் இருக்கட்டும்னு கல்யாணம் ஆனவுடனேயே இதுக்குன்னு ஒரு டயரி போட்டுட்டேன்"


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...