ஞாயிறு, 7 நவம்பர், 2021

சாதி அடிப்படையில் மிகுந்த பாகுபாடு உள்ள துறைகளைப் பற்றிக் கூறுக?

 


அரசு துறைகளில் சாதி பாகுபாடு உண்டு என்றாலும், மக்களுடன் அதிகம் நெருங்கி பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிவற்றில் நடக்கும் சாதி பாகுபாடு, பளிச்சென்று வெளியே தெரியும்.

அரசின் அன்னதான திட்டத்தில், கூட சேர்ந்து உணவு அருந்த அமைச்சர் வர வேண்டி இருக்கிறது.!! முதல்வர் வீடு தேடி போய், சாதிப் பாகுபாடு காட்டுபவருக்கு கடுமையான செய்தி சொல்கிறார்.!!

மற்ற துறையில் எல்லாம் சாதிப்பாகுபாடு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றை அடிக்கும் என்றால், போலீஸ் துறையின் லத்தி அவர்களையே அடிக்கும்!!

போலீசாரின் இந்த சாதிய ரீதியான அதிகார வன்முறை, இப்போது வெளிவந்துள்ள ஜெய் பீம்” படத்தில் பட்டவர்த்தனமாக காட்டப்பட்டிருக்கும்..

அதுவும் சாதீய ரீதியான ஒதுக்கீட்டிற்கு வன்முறையை கையாண்டு போரிடும் சாதிகளுக்கு நடுவில், இருப்பதற்கு வீடோ, குழந்தைகளுக்கு உரிய கல்வியோ,ஏன் ரேஷன் கார்டு கூட இல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கே போராடும் மலை ஜாதியினர், மற்ற ஜாதியினரால் சுரண்டப்படுவதும் இல்லாமல், “ஏன் ?” என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாமல், போலீசாரின் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை போட்டு உடைத்திருக்கிறது!!

இந்த உண்மைக் கதையின் சுருக்கம்;

ராஜகண்ணு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் (அனைவரும் இருளா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்) தான் கொள்ளையடிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். , குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி காவலில் சித்திரவதை செய்யப்படுகிறது.

போலீசார், ராஜகண்ணுவைக் கொள்ளை வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் எந்த நியாயமான விசாரணையும் இல்லாதது, ஒருபுறம் இருக்க, ராஜகண்ணு போலீசாரின் மிருகத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாட்களில், ராஜகண்ணு, கைது செய்யப்பட்ட மற்றவர்களுடன் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார்.. இதைத் தொடர்ந்து, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதியான வழக்கறிஞர் சந்துரு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார்..அதன் பிறகு நடப்பவை அனைத்தும் சுவாரசியமான திருப்புமுனைகள்..

உண்மை கதை தான் எப்போதும் திரைகதையை விட சுவை அதிகம் கொண்டது..அது கசப்பு சுவை என்றாலும் கூட!

அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, பாதிக்கப்பட்டவரிடம் போலீசார் கையாளும் வன்முறை, நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

“Law is a powerful weapon. .யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது”. என்கிறார் ஹீரோ..

உண்மை தான் அவர் அளவுக்கு வழக்கறிஞர்கள் அவ்வளவு எளிதில் செங்கேணி போன்ற எல்லோருக்கும் கிடைத்தும் விடுவதில்லை..

அவர் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு கூடவே உறுதுணையாய் இருக்கிறார் செங்கேணி..காவல் துறையின் உயர் அதிககாரிகளே வழக்கை நீர்த்துபோக செய்ய எடுக்கும் முயற்சிகளில், பணத்தை இழப்பீடாக வழங்க முன்வருவதும் இருப்பினும், சண்டையில் (வழக்கு) தோற்று வேண்டுமானால் போவேன்., ஆனால் கணவனின் கொலையின் பிச்சையில் வாழமாட்டேன் என்று செங்கேனியின் பதில் ஊன்றி கவனிக்கவேண்டியது!! எத்தனை செங்கேணிகள் இப்படி மனம் தளராமல் போராடுகிறார்கள்?

இப்படி எல்லாம் நடக்கும் சாதியல் ரீதியான இந்த போலீஸ் அதிகார தூஷபிரயோகத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளில், கடுமையான நடவடிக்கை எடுத்து போலீசை ஒழுங்கப்படுத்த முனைந்தும், இன்றும் சாத்தாம்குளம். சம்பவங்கள் .தொடர்கின்றன

.சமீபத்தில் அந்த வன்முறையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

மாண்புமிகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்,,காயம்பட்ட ஒரு சீக்கிய முதியவரை அவர் தர்பனை அவிழ்த்து, போட்டோ எடுத்து வலைத்தளத்தில் போட்டது “மனரீதியான துன்புறுத்தும் செயல்” எணறிருக்கிறது.

டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் (1997 (1) SCC 416) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும், நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய நிலையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பாக 11 வழிகாட்டுதல்கள். வெளியிட்டது.

அதை, கீழ்ப்படியாத காவல்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், அதை பின்பற்றாத நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியது. 24 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எத்தனை பேர் அந்த அவமதிப்புக்கு ஆளாகினர்? ஒருவர் கூட இல்லை என்பது தான் வேதனையான உண்மை!!.

இவ்வளவு பாடம் கற்பித்தும் போலீஸ் அராஜகம் குறையாததற்கு, காரணம் என்ன?

அடிப்படையில் எங்கே தவறு?

காவல்துறையின் இந்த ஒழுக்கமின்மைக்கான காரனத்தை சற்று வரலாற்றை ஆராய்ந்தால் கிட்டும்.

போலிஸ் சட்டம் என்று இன்னமும் 1888 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் தான் நாம் இன்னும் ஆளப்படுகிறோம்…சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இருந்து, குற்றங்களை கண்டறிவதில் போலீஸ் அறிவியல் ரீதியாக இன்னமும். முன்னேறவில்லை.

சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், ஆங்கிலேயர்கள் நாட்டை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து. நிர்வாக அமைப்புகளைக் கொண்டிருந்தனர். இல்லையா? அப்போது தான், பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தையும் அவர்கள் இயற்றினர். குற்ற பரம்பரை சட்டம் பற்றி தெரியும் தானே? இதன் மூலம், குற்றத்தைக் கண்டறிவது அவசியமில்லை, ஒரு பகுதியில் ஏதேனும் குற்றம் நடந்தால், அங்குள்ள அனைத்து பழங்குடியின ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்களாக ஆவார்கள். 24 மணி நேரத்திற்குள் வட்டக் காவல் நிலையத்திற்கு முன் சரணடையாதவர்கள் எவரோ, அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து நீண்ட போராட்டங்கள் நடந்தன, ஆனால் அது, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தான் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும். பழங்குடியினர் பாதிக்கப்படுவதிலிருந்து விடுபடவில்லை. தொடர்ந்து, டிநோட்டிஃபைட் பழங்குடியினர் (டிஎன்டி) தங்கள் பகுதியில் செய்யப்படும் எந்த குற்றங்களுக்கும் காவல்துறையின் பார்வையில் தொடர்ந்து சந்தேக நபர்களாக இருந்தனர். அவர்களல் சிலர் மட்டுமே நிலத்தை உடைமையாக்கி, எல்லா குடிமை உரிமைகளையும் பெற்றனர். மறுபுறம், பெரும்பான்மையான பழங்குடியினர் குற்றவாளிகளாகக் கருதப்படுவதும், நாளுக்கு நாள் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதும் இன்றும் தொடர்கிறது.

ஒரு வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தவுடனேயே வேறொரு வழக்கில் பிடித்து உள்ளே போடுவது தொடர்கிறது. அந்த படத்தின் முதல் காட்சியே அதை தான் முகத்தில் அறைந்தது போல சொல்கிறது.!

இன்னொரு காரணம், போலீசாரின் அத்துமீறல்கள், அட்டூழியங்களை மக்கள் கொண்டாடுவதும் போலீசாரின் இந்த தொடர் வெறியாட்டத்துக்கு காரணம். ஹைதராபாத் என்கவுண்டர் சமீபத்திய உதாரண.ம்..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட போலீசாரை ,பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.. அதையே சாக்காக வைத்து பொய்யான என்கவுன்டர் நடத்தப்படுகின்றன.

உண்மையில் இதே சூர்யா நடித்த “சிங்கம்” திரைப்படத்தில் காவல்துறை வன்முறையும் அவர்களின் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் பற்றியது..அதுவும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு போலீசார் செய்த அராஜகம் விமர்சிக்கப்படவேயில்லை. !!

ஆனால் "ஜெய் பீம் 'காவலர் வன்முறை, காவல்துறை சித்திரவதை மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மோசமான பக்கத்தை காட்டுகிறது.. இது காவல்துறையின் மிருகத்தனத்தை இவர்களின் லட்சியம்” என்று அடையாளபடுத்துவதற்கான இமேஜை ஓரளவு உடைக்கிறது.!!

சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் காவல்துறை காவலில் 117 இறப்புகளும், நீதிமன்ற காவலில் 1,606 இறப்புகளும் பதிவாகியுள்ளன. காவலர் வன்முறையின் இந்த புள்ளிவிவரங்கள் எல்லா நேரத்திலும் அதிகமானவை.; அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு திகைக்க வைக்கின்றன;

இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இல்லை!!.

2005 முதல் 2018 வரை போலீஸ் காவலில் சித்திரவதைக்கு ஆளான 500 பேர் இறந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு தண்டனை கூட இல்லை என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 58 போலீஸ்காரர்கள் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் யாரும் தண்டனையை எதிர்கொள்ளவில்லை.!!

நமக்குத்தான்.நம் வீட்டு கதவில் அறைந்தால் மட்டும் தானே அலறவே செய்வோம்!!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) மற்றொரு அறிக்கையில் 1,723 நபர்கள் காவலில் இறந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்களில் பெரும்பாலானவை காவல்துறையின் சித்திரவதையின் விளைவாகும் என்று NHRC அறிக்கை மேலும் கூறியது.

இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள பொதுவான ஒன்று ….,

அவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். போலீஸ் காவலில் இறந்த 125 பேரில், இறந்தவர்கள் 75 பேர் (60 சதவீதம்) விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 13 பேர் தலித்துகள் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 15 பேர் சிறு குற்றங்களுக்காகப் பிடிக்கப்பட்ட முஸ்லிம்கள். சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில், அருண் வால்மீகி என்ற தலித் துப்புரவுத் தொழிலாளி, போலீஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படுகிறது. அருணின் குடும்பத்தினர், "தனது மனைவி கண்முன்னே அவர் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டார்" என்று நினைவு கூர்ந்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,189 பேர் சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும், 348 பேர் போலீஸ் காவலில் இறந்ததாகவும் மக்களவையில் அரசு அறிக்கை அளித்துள்ளது..

இப்போது யதார்த்தத்திற்கும் காவலர் வன்முறையின் சினிமா அம்பலத்திற்கும் இடையிலான தொடர்பைத் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்!!.

குற்றவியல் நீதி மற்றும் காவல்துறை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அறிக்கையான "டிரங்க் ஆன் பவர்", எப்படி, துல்லியமாக கலால் சட்டத்தை அடக்குமுறையின் ஆயுதமாகப் பயன்படுத்தி, 'விமுக்தா' சமூகங்கள் பலியாவதைப் பற்றி பேசுகிறது. விமுக்தா சமூகங்கள் தொடர்ந்து 'பரம்பரை குற்றவாளிகளாக' கருதப்படுகின்றன. உள்ளூர் சட்ட அமலாக்கத்தால் அவர்கள் விகிதாசாரமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிறார்கள். அதேபோல், இருளா பழங்குடியினர் பரம்பரை குற்றவாளிகள் என்று அட்வகேட் ஜெனரலும் காவல்துறை அதிகாரிகளும் சாதரணமாக திருப்தியடைந்த பல நிகழ்வுகளை படத்தில் காணலாம்.

ஒரு விதத்தில். "ஜெய் பீம்", நாதியற்ற பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கதையை சொன்னது, காவல்துறை வன்முறையின் கொடூரமான பக்கத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்கது. இது போன்ற திரைப்படங்கள் பொது மக்களுக்கு காவல்துறை அமைப்பைப் பற்றி மிகவும் யதார்த்தமான புரிதலை ஏற்படுத்தும்., போலீசாரின் அதிகப்படியான செயல்களை வீரமாகக் கொண்டாடுவதை விட காவல்துறையிடம் அதிக பொறுப்புக்கூறலைத் தேட அவர்களை ஊக்குவிக்கும்.

ஆனால் மக்களின் மனோநிலைக்கும் ஒரு காரணம் உண்டு. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசார் கொண்டாடப்படுவதற்கான காரணம், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம்தான். குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைத்தால் மட்டுமே, நீதித்துறை மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

இதில் வழக்கறிஞர்கள் பங்கும் முக்கியமானது..வழக்கறிஞர் சந்துரு போல, தேவையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடாமல், தன்னை நம்பியுள்ள கட்சிக்காரருக்கு அதனால் மேலும் தாமதம் ஆகும் என்பதையும் உணர்ந்தவராய், எதிர்க்கட்சி வழக்கறிஞருடன் ரகசிய ஒப்பந்தம் போடாமல், கட்சிக்காரர் கொடுக்கக் கூடிய ஃபீசில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நீதி பெற்று கொடுப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்படுவது தொழில் தர்மத்தை மேம்படுத்தும்.

வழக்கில், சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றத்தை வற்புறுத்தி, கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னுதாரணத்தை மேற்கோள் காட்டியதன் மூலம், ஆட்கொணர்வு அதிகார வரம்பில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. .மேற்படி மேற்கோள் வழக்கில் ஹேபியஸ் கார்பஸ் பற்றிய கருத்து விரிவுபடுத்தபபட்டு,. தனிப்பட்ட சுதந்திரத்திற்கானது மட்டுமில்லாமல் குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதில் ஹேபியஸ் கார்பஸ் மனுவின் அதிகாரத்தைக் காட்டுகிறது.

இதில் நீதியரசர் கிருஷ்ண ஐயர் பங்கு வரலாற்று சிறப்பானது.

அது போலீசின் அதிகார அத்துமீறல்களை எதிரான, சாமானியர்களின் கைகளில் உள்ள ஆயுதங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.. சுனில் பத்ரா வழக்கைப் பார்த்தால், சிறைச் சீர்திருத்தங்களுக்கும் கூட, ஹேபியஸ் கார்பஸ் ஒரு தீர்வாக கூட இருக்கலாம் என்கிறது.

. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, 80களின் முற்பகுதியில் கிருஷ்ணய்யர், சின்னப்பா ரெட்டி போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களால் கொடுக்கப்பட்ட இத்தகைய விரிவான விளக்கங்களுக்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிமன்றங்களில் இருந்து உத்தரவுகளைப் பெற மக்கள் போராடுகிறார்கள்.

இன்றைய நாட்களில், அரசு சாரா அமைப்புகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளுடன், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான இடம் சுருங்கி வருவதை நாம் காண்கிறோம். சமூக ஆர்வலர்கள் மூலம் தான் ராஜகண்ணு வழக்கு வழக்கறிஞரை எட்டியது. ஆனால் இன்று அவர்களின் 'செயல்பாடு' ஒரு ஆபத்தான செயலாக பார்க்கப்படுகிறது, அவர்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு மட்டுமல்லாது UAPA பாய்வதை பார்க்கிறோம்.

கடந்த 3 ஆண்டுகளாக பீமா கொரேகான் வழக்கில் 13 பேர், யுஏபிஏவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்..திரிபுரா பற்றி எரிகிறது” என்று சமூக வலைதளத்தில டுவிட் செய்தவருக்கு அதே கதி!

படித்தவர்களுக்கே இந்நிலை என்றால், பழங்குடியினருக்கு?

அவர்களுக்கு வீட்டு மனைகளுக்கான பட்டாக்கள் இல்லை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை, பொது விநியோகத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. நாடோடி வாழ்க்கை முறையால், குழந்தைகளை வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை...அனுப்பமுடிவதில்லை.. அவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் முறைசாரா துறைகளில் தான் உள்ளன.

இவையெல்லாம் மாற ஒரே வழி.. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், அப்போது தான் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துவதாகவும் இந்த படம் இருக்கிறது. அதனால்தான் படத்தின் முதற்கட்டத்தில் அந்த பழங்குடியினப் பெண் நீதிமன்ற மனுவில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக அவரது கட்டைவிரல் அடையாளத்தை ஒட்டியதாகக் காட்டப்பட்டது. , படத்தின் முடிவில், அவரது மகள் நம்பிக்கையுடன் வழக்கறிஞர் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பதாக முடியும்..

எழுத்தறிவினால் மட்டுமே அவர்கள் முன்னேற முடியும் என்பதுதான் அந்தச் செய்தி.

ஆனால், நம் நாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயர்கல்வி படித்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் தங்கள் அலட்சியத்தால் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளால் நாட்டையே தவறான திசையில் கொண்டு செல்கிறார்கள்.

ஜெய் பீம் போலீஸ் காவலில் நடக்கும் வன்முறையை மட்டும் காட்டவில்லை. .இது அரசின் நோக்கத்தையும், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பலிவாங்கலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே விளிம்புநிலையில் உள்ள பாதிக்கபப்பட்ட மக்களை அடிபணியச் செய்வதற்காக சீருடை அணிந்த சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை என்பது, போலீஸ் துறை, எந்தளவுக்கும் செல்லும் ஒரு வன்முறை இயந்திரம் என்பதையும் அதை எப்படியாவது மூடி மறைக்க பார்க்கும் அரசின் உண்மையான தன்மையையும், தெளிவாகக் காட்டுகிறது.,

அரசு துறைகளில், சாதிய படிநிலை அமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளது, அது தான் பாரபட்சமான கொள்கைகளின் மைய துருவமாக உள்ளது.

டாக்டர். அம்பேத்கரின் கருத்துக்கள் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நீதியான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் ஒரு அரணாக இருந்தபோதும் – அரசு இயந்திரங்கள், அவருடைய தொலைநோக்கு கொள்கைகளை முற்றிலும் மறந்துவிட்டன.

அவர் தான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி!

"எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது கெட்டதாக மாறுவது உறுதி, ஏனென்றால் அதைச் செயல்படுத்த அழைக்கப்படுபவர்கள் கெட்டவர்களாகவே இருப்பார்கள்.." என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு எவ்வளவு பொருத்தம்!!

விளிம்பு நிலை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறியதை அரசியல் சாசனத்தின் தோல்வியாகப் பார்க்க முடியாது, ஏனென்றால் மக்கள் தான் தலைமையில் அமர்ந்திருக்கிறார்கள்.

செங்கேனியின் நீதிக்கான தேடலானது அரசியலமைப்பு கோட்பாடுகளின் எடுத்துக்காட்டு. இருந்தும், இது வழக்கறிஞர் சந்துருவின் வீரத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துடன் வருகிறது. ஒரு வழக்கறிஞரின் அபூர்வ 'ஹீரோயிசம்'

பின்தங்கிய குழுக்களின் நலன்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு தூரம் உணர்ந்து, அரசுத்துறை பாகுபாடுகளுக்கு எதிராக வலியுறுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மையான கேள்வி?

விளிம்பு நிலையில் உள்ள மக்களை இந்த அளவுக்கு பாதிப்படைய அனுமதிக்க விட்டிருக்கலாமா?

ஒவ்வொரு செங்கேனியும் போராட்ட குணமுள்ள வழக்கறிஞரை கண்டுபிடித்து விடமுடியுமா?

ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் செங்கேனி கடந்து வந்ததைச் போல தான் கடந்து வரவேண்டும் என்று இந்த அமைப்பு ஏன் கட்டாயப்படுத்துகிறது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தவித பாரபட்சமும் இல்லாத சுயபரிசோதனை தேவை.

உண்மையில், இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க, ஒவ்வொரு புதிய பரிமாணம் தெரிகிறது. இதை அரசு துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பாடத்தை சொல்கிறது.. அது…

“செங்கல் செங்கலாக தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.”என்று.

ஆனால், அதற்கான நம்பிக்கை துளிர் விட வைக்கிறது அம்பேத்கரின் முழக்கமான ஜெய் பீம்

“பீம் “ என்பது ஒளிக்கற்றை தானே!

.இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய இந்த பயணத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்வோம்!!

மேற்கோள்கள்:

http://www.uncat.org/wp-content/uploads/2020/06/INDIATORTURE2019.pdf

Suggestions To Curb The Menace Of Custodial Violence And Brutality: Targeting The Ill-Conceived Notion Of 'My Area, My Custody, And My Law'

https://nhrc.nic.in/sites/default/files/NHRC_AR_EN_2017-2018.pdf

Agra Custodial Death: Man Died Of Heart Attack, Say Police Citing Autopsy

348 died, 1,189 tortured under police custody in last 3 years, Centre tells Lok Sabha | India News - Times of India

https://cpaproject.in/wp-content/uploads/2021/08/Drunk-on-Power-A-study-of-Excise-Policing-in-Madhya-Pradesh-CPA-Project-14-Aug-2021-1.pdf

தீர்ப்புகள் கவித்துவமாகவும் இருக்குமா?

 சட்டம்,  நீதிமன்றம் என்றாலே ஒரு வறட்சியானதாக பார்க்கும் மனப்பான்மை தான் இங்கு பெரும்பாலும் உண்டு..ஆனால் இங்கே இலக்கியத்தில் வித்தகர்கள் எல்லாம் இருந்துள்ளனர்...இருக்கின்றனர்..

எனக்கு தெரிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக அழகு சேர்த்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் கம்பன் கழகத்தின் தீவிர பங்களிப்பாளர். அத்தோடு நீதியரசர் வள்ளிநாயகம் அவர்கள், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு ராம சுப்ரமணியம் அவர்களின் இலக்கிய சொற்பொழிவுகள் நிறையக் கேட்டிருக்கிறேன்..

இலக்கியமும் சட்டமும் வெவ்வேறு பாதையாக எண்ணாமல் இரண்டையும் ஒன்றிணைத்து தங்கள் தீர்ப்புகளிலேயே தங்கள் இலக்கிய ஆளுமையை காட்டியுள்ளவர் பல நீதிபதிகள் .

அவர்கள் தங்கள் தீர்ப்புகளை எழுதும்போது, ​​​​கவிதை வசனங்கள் /பிரபலமானவர்களின் மேற்கோள்கள் மூலம் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துகிறார்கள்..

நீதிமன்றத் தீர்ப்புகளில் இத்தகைய இலக்கியக் குறிப்புகளைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டுமா என்பதில் ஒவ்வொருக்கும் கருத்து வேற்றுமை இருக்கலாம்.

ஆனால் அவை பெரும்பாலும் தீர்ப்பினை படிப்பவர்களுக்கு நீதிபதியின் உணர்வோடு சார்ந்து இருக்க வைக்ககின்றன,

அதை கொடுத்த நீதிபதிகள் பிரபல வழக்கை விசாரணை செய்யாததால் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கலாம். ஆனால் இந்த இலக்கிய நயம் மிகுந்த தீர்ப்புகள், படிப்பவரை "யார் இந்த நீதிபதி?" என்று திரும்பிப்  பார்க்க வைத்துள்ளன.

அதில் சிலவற்றை மட்டும் இங்கு கோடிட்டு காட்டுகிறேன். முடிந்தவரை அந்த கவிதைகளை மொழிபெயர்க்க முயற்சித்துள்ளேன்.

சமீபத்தில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உத்தரவில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அனுஜ் அகர்வால், சுவாமி விவேகானந்தரின் மேற்கோளுடன் தனது தீர்ப்பைத் தொடங்கினார்.

நீதிபதி விவேகானந்தரை மேற்கோள் காட்டி,

நம் எண்ணங்கள் தான் நம்மை உருவாக்குகிறது. நாம்தான்; எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். சொற்கள் இரண்டாம் நிலை தான்.. எண்ணங்கள் தான் வாழ்கின்றன; அவை வெகுதூரம் பயணிக்கின்றன."

"பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம்" என்ற அடிப்படை உரிமை பற்றிய தன் கருத்தை சொல்ல முனைந்த நீதிபதியை, பிரிட்டிஷ் கவிஞர் ஜான் மில்டனை மேற்கோள் காட்டத் தூண்டியது.

"எல்லா சுதந்திரங்களுக்கும் மேலாக, தெரிந்துக் கொள்ளவும், சுதந்திரமாக வாதிடவும், மனசாட்சிப்படி பேசவும் எனக்கு சுதந்திரம் கொடுங்கள்."

தீர்ப்பின் இறுதியில், இமாமின் ஜாமீன் நிராகரிக்கப்பட்டது, அவரது பேச்சு ஒரு கும்பலை கலவரத்தில் ஈடுபடத் தூண்டவில்லை என்று முதல் பார்வையில் தெரிந்தாலும், வகுப்புவாதம் மற்றும் பிளவுபடுத்தும் வகையில்" இருந்தது என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மற்றொரு தில்லி நீதிபதி அஜய் கோயல், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐஎம்ஏ) தலைவர் ஜான்ரோஸ் ஆஸ்டின் ஜெயலால் சொன்னதை, நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட ஒரு வழக்கில் , ஜூன் 6, 2021 அன்று, தீர்ப்பளித்தார்.

ஜெயலால் பேச்சு, இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு.. இந்த உத்தரவில், கவிஞர் முஹம்மது இக்பாலின் புகழ்பெற்ற வரிகளான "சாரே ஜஹான் சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா" எடுத்தாளப்பட்டது.

"மதங்கள் நமக்கிடையே பகைமை கொள்ள கற்றுதரவில்லை. நாம் எல்லோரும் ஹிந்துஸ்தானிகள். ஹிந்துஸ்தான் நம் தாய்நாடு.

உலகம் முழுவதையும் விட சிறந்தது, நமது ஹிந்துஸ்தான்"

நம் நாட்டில் காலங்காலமாக நிலைத்திருக்கும் "நம்முடைய நம்பிக்கை மற்றும் மதச்சார்பின்மைக்கு வலிமை" கொடுத்தது எப்படி என்பதை நீதிபதி கோயல் இந்த கவிதை மூலம் விளக்குகிறார்..

"ஒரு முஸ்லீம் கவிஞரால் எழுதப்பட்ட இந்த கவிதையில் "இந்தி" என்ற வார்த்தை இந்துக்களைக் குறிக்கவில்லை, ஆனால் மதச்சார்பின்மைக்கு அழகான சாதி, நிறம் மற்றும் மதம் வேற்றுமை இல்லாத அனைத்து ஹிந்துஸ்தானிகளையும் குறிக்கிறது" என்று அவர் உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இறுதியில் ஜெயலால் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரை எச்சரிக்கவும் செய்தது..

'

நீங்கள் இருக்கும் கூண்டிலிருந்து உங்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்'

இவையெல்லாவற்றையும் விட என்னைக்  கவர்ந்தது தன் தீர்ப்பையே கவிதை நடையில் எழுதிய, நவம்பர் 7, 2020 டெல்லி கலவரம் தொடர்பான ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத். .

அந்த கவிதை இப்படி போகிறது:

பாபு தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கடுமையாக எதிர்க்கும் மாநில அரசு.

கோடை காலம் கடந்துவிட்டது, குளிர்காலம் வந்துவிட்டது;

ஆனால் நீங்கள் செய்த குற்றம், ராகுல் அழுதார்.

நான் ஒருவனல்ல, நான் ஒருவனல்ல;

மிகக் கடுமையான குற்றச்சாட்டு, நடிக்க வேண்டாம்.

நான் யாரைத் தாக்கினேன், அவன் எங்கே;

ஓ! நமக்குத் தெரியும், விசாரணையில் பார்ப்போம்.

நீங்கள் நான் முதலிலிருந்து மறுக்கிறேன் என்று சொல்கிறீர்கள்;

ராகுல் இன்னும் போயிருக்கலாம் என்றார் சதீஷ்.

நாங்கள் சொன்னோம் அல்லவா; அவசரப்பட வேண்டாம்;

என்னை விடுங்கள், நான் போகவேண்டும். இம்ரான் கூட ஜாமீனில் இருக்கிறார்.

அப்போதும், அப்போதும்;

இது ஒரு மென்மையான பயணம் அல்ல.

நிறுத்து! நிறுத்து! நிறுத்து! நிறுத்து;

நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், கேட்டிருக்கிறேன்.

மனம் தெளிவானது, உயரமான கூற்றுகளுடன்;

நான் அழைப்பை எடுக்க வேண்டிய நேரம் இது.

பாபுவுக்கு ஒரு மோசமான கடந்த காலம் உண்டு; ஆதாரம் மிகக் குறைவு, அது நீடிக்காது.

அவரது சர்வ வல்லமை கருத முடியாது;

மறைந்த ராகுலுக்கு ஏற்பட்ட ஆபத்தில், சட்டரீதியாக கோபம்.

நீங்கள் இருக்கும் கூண்டிலிருந்து உங்கள் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்;

விசாரணை முடியும் வரை அரசே ஆட்சியில் இருக்கும்.

அரசுக்கு அறிவிக்கப்படுகிறது; கேக்கை வைத்துக்கொள்ளலாம் உண்ணவும் செய்யலாம் ;

நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது ; கேக் சாப்பிடுவதற்கு முன், அதையும் சுடவும் வேண்டும்."

ஒரு வழக்கின் சம்பவங்களும் வாதாடுதலும் வசன நடையில் வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம், அதுவும் ஒரு சீரியஸான வழக்கில்.!!

இறுதியில் பெயில் கொடுத்தும் விட்டார்! காரணம்…புகார்தாரர் காணவில்லை!!

அடுத்து வரிசையில் உள்ள மூன்று கவிஞர்கள் ஓப்ரா வின்ஃப்ரே, மெரில் ஸ்டீப் மற்றும் கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ்

இந்த மூன்று பிரபலங்களின் மேற்கோள்கள், 2019 இல் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முகமத ஃபரூக்கின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவை, மகப்பேறு விடுப்பை நீட்டித்ததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வழக்கில் தான் நீதிபதியின் தீர்ப்பில் வந்தது.

பழம்பெரும் நடிகர் மெரில் ஸ்ட்ரீப் கூறியது:

"

தாய்மை மிகவும் மனிதாபிமான விளைவைக் கொண்டுள்ளது. அனைத்தும் அத்தியாவசியமானவையாகக் குறைக்கப்படுகின்றன."

இந்த உத்தரவு, டாக் ஷோ தொகுப்பாளரும் பரோபகாரியுமான ஓப்ரா வின்ஃப்ரேயின் மேற்கோளையும் சுட்டிக் காட்டியது,

"ஒரு தாயாக மாறுவதற்கான தேர்வு, என்பது மிகப்பெரிய ஆன்மீக ஆசிரியர்களில் ஒருவராக மாறுவதற்கான தேர்வாகும்."

நீதிபதி, ஹாலிவுட் நட்சத்திரம் கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் கூறியதையம் மேற்கோள் காட்டினார்.

"உங்கள் கர்ப்பம் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டதா, மருத்துவ ரீதியாக திட்டமிடப்பட்டதா அல்லது ஆச்சரியமாக நடந்தாலும் ஒன்று நிச்சயம், உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இனி ஒரே மாதிரியாக இருக்காது."

மகப்பேறு நலனுக்கான உரிமை ஒன்றும் பொதுநல சேவை போல "போனால் போகிறது "என்று கொடுக்கும் விஷயம் அல்ல" என்பதைக் குறிப்பிட நீதிபதி ஒருவேளை இவ்வாறு முயற்சித்திருக்கலாம்.

தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி, நீதிபதி எஸ் முரளிதர் அவர்களின் தீர்ப்புகள் புகழ்பெற்றது.

நீதியரசர் எஸ் முரளிதர்

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கின் 207 பக்க தீர்ப்பு, அவருடையது. அதில், 1947 பிரிவினையின் போது நடந்த சோகமான காட்சிகளை உள்ளடக்கியது. அது, புகழ்பெற்ற கவிஞர் அமிர்தா ப்ரீதமின் பயணத்தின் குறிப்புடன் தொடங்கும்..

புகழபெற்ற கவிஞர் அம்ரிதா ப்ரீதமின் 'ஓட் டு வாரிஸ் ஷா'வில் இருந்து பின்வரும் மொழிபெயர்க்கப்பட்ட பகுதி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் எழுதியிருந்தார்

"

முளைத்த நச்சுக் களைகள் தூரத்திலும் அருகாமையிலும், வெறுப்பின் விதைகள் அதிகமாக வளர்ந்த இடங்களிலும்,

எங்கும் இரத்தம் சிந்துகிறது/காட்டில் நச்சுத் தென்றல் மூங்கில் புல்லாங்குழல்களை பாம்புகளாக மாற்றியது/அவற்றின் விஷம் பிரகாசமான மற்றும் ரோஜா போன்ற பஞ்சாபை நீலமாக மாற்றிவிட்டது."

பிரித்தம் லாகூரிலிருந்து தனது குழந்தைகளுடன் தப்பி ஓடியபோது, அவரது பயணத்தின் போது கண்டதில் உள்ள சோகத்தை நீதிபதி கண்டார் போல..

1984-ல் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ​​37 ஆண்டுகளுக்குப் பிறகும், ப்ரீதம் சந்தித்ததற்கும், அதற்குப் பிறகு நடந்ததை போலவே இருந்தது.என்று இந்தத் தீர்ப்பில் சொல்கிறார்.,

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இதே வரிசையில் வருகிறார், நீதிபதி முரளிதரின் பாராட்டலுக்கு உள்ளாகிய முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான பாரத் சுக்

இரயில்வே மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய பிறகு டெல்லி ஜூடிசியல் அகாடமியில் ஒரு கவிதையை எழுதியதற்காக நீதிபதி சுக்கை நீதிபதி முரளிதர், 2018 இல் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையில் குறிப்பிட்டு பாராட்டினார்.

தீர்ப்புகளில் கவிதையை புகுத்தலாமா?" என்பதற்கு,

"தீர்ப்புகளை எழுத சட்டம் ஒரு கட்டமைப்பை மட்டுமே வழங்கியுள்ளது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளில் இலக்கியக் குறிப்புகளைச் செய்வதைத் தடுக்கவில்லை "என்கிறார்..

"நீங்கள் அதை எப்படி எழுதுகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம். நீங்கள் ஒரு கவிதையை நுழைப்பதோ அல்லது ஒரு வரலாற்று சூழலை அல்லது தத்துவத்தை அல்லது இலக்கியத்தை கையாள்வதையோ சட்டம் தடுக்கவில்லை. உங்கள் எண்ணங்களை முன்வைக்கும் வரை அனைத்தையும் செய்ய முடியும், அது சிவில் வழக்குகளில் கூட தான்,”.

அவர் எழுதிய "தேநீர் விற்பவர் மற்றும் நீதிபதி என்ற தலைப்பில் ஒரு கவிதை, , லைசென்ஸ் இல்லாமல் ரயில்களில் டீ விற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பதின்ம வயது சிறுவனால் ஈர்க்கப்பட்டது

இரவும் பகலும்; முடியாமல் யோசித்த பிறகு,

ஒரு சிறுவன் என் முன் ஆஜர் படுத்தப்பட்டான்.

அவனுடைய கொடிய வறுமை எல்லோருக்கும் தெரியும்படி இருந்தது.

ஏழைகள் நிறைந்த இந்தியாவில்,

ஏழையாக இருப்பது அவன் குற்றம்.

அவன் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்று ‘வெல்ஃபேர் ஸ்டேட்’ முடிவு செய்தது.

ரயிலில் உரிமம் இல்லாமல், 'டீ' விற்றதாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவன் வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமத்திலிருந்து புலம்பெயர்ந்தவன்.

அவனுடைய வலியைக் காண முடிந்தது;

அவரது தந்தை தூக்கில் தொங்கினார்.

விதைகள் மீது பெருகிவரும் கடன்களிலிருந்து, அவர் விடுபட விரும்பினார்.

அந்த கிழிந்த சட்டையுடன் அடக்கம் என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே என்பது போல,

சட்டமா அல்லது நீதியா?, முதலில், எதை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை;

நீங்கள் ஏன் நீதி கேட்கிறீர்கள்?

இது சட்டத்தை பார்க்கும் நீதிமன்றம் -

அவனிடம் சொல்லிவிட்டு இன்னும் நான் நானாக இருக்க முடியவில்லை;

ஒரு ‘முடிவு’ சட்டம் ஆனது, ஏன்?

நீதியின் அளவை மீண்டும் அளவீடு செய்ய முடியவில்லையா, நாம் முயற்சி செய்ய வேண்டுமா?

சட்டம் அவனை தண்டிக்க வேண்டும் என்றது.

இது வறட்சியான, கண்மூடித்தனமான கட்டளை மற்றும் தன்னிச்சையான விருப்பம்;

நான் அவரை விடுவிக்கத் முடிவு செய்தேன்., ஆனால் எதுவும் சொல்லவில்லை;

அவனுடைய ரொட்டியை சம்பாதிக்காதே என்று நான் எப்படி அவனிடம் கேட்க முடியும்?.

அரசால் கொண்டுவர முடியாத போது;

இதைவிட கௌரவமான வழியை நான் நினைக்க முடியுமா,

இந்த பையன் ஒரு வாழ்க்கையை சம்பாதித்திருக்கலாம் -

நேர்மையான தேநீர் விற்பனை - நியாயமான கட்டணத்துடன்.

நான் சட்டத்தின் கடுமையான எழுத்தின் படி நன்றாக செய்தால்,

ஏற்கனவே கொதித்த மனசாட்சியுடன் உள்ள என்னால் தூங்க முடியாது.

சட்ட அதிகாரம் இருந்தது; ஆனால் தார்மீக அதிகாரம் என்னிடம் இல்லை,

என் தேசத்தின் சட்டம் ஓரளவு தோல்வியடைந்தது, வறுமை வென்றது.

அப்போது, ​​ரயிலில் தேநீர் விற்று வாழ்க்கையைச் சந்திக்க முயன்ற பல இளைஞர்களை குற்றமற்றவர். என்று நீதிபதி சுக விடுதலை அளித்தார்.

அவர் வழக்கமாக வசனங்களில் தனது தீர்ப்புகளை எழுதவில்லை என்றாலும், அந்த கவிதை அவருடைய கோபத்தின் வெளிப்பாடாகவும், சூழ்நிலையை உணர்த்தும் வழியாகவும் மாறியது.

அவர் சொல்கிறார்,

"அன்றைய தினம் நான் எழுதிய கவிதையில், ஒரு கடினமான வழக்கில் என் உணர்வுகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதைப் பற்றி அதிகமாக இருந்தது, சட்டம் 'x' என்று கூறும் போது நீதி 'y' என்று கூறுகிறது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தது. ' நீங்கள் எப்படி அந்த இடைவெளியைக் குறைப்பீர்கள் ? ஒரு வழியைக் கண்டறிந்து சட்டத்தைப் பற்றிய உங்கள் புரிதலை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?"

ஆனால் தீர்ப்புகளில் கவிதையைப் பயன்படுத்துவதில் அவர் தனிப்பட்ட முறையில் முரண்படுகிறார்.

"இது ஒரு கற்பனைப் படைப்பாக இருக்கக் முடியாது. ஒரு நீதிபதியாக நீங்கள் உண்மைகளை சுதந்திரமாக எடுக்க முடியாதே!!

கவிதையின் முழுப் புள்ளியும் சில சமயங்களில் சுருக்கமாகவும், விஷயங்களை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவும் வேண்டும் ஆனால் "நீங்கள் தெளிவாக இருக்க வேண்டிய ஒரு தீர்ப்பில் அது நன்றாக வேலை செய்யாது."

"எப்படி இருந்தாலும்,, ஒரு வழக்கைப் புரிந்துக் கொள்வதற்காக ஒரு கருத்தை வெளிப்படுத்தவும், தீர்ப்பை "உயிருடன் வெளியே கொண்டு வரவும்" ஒரு குறியீட்டைப் பயன்படுத்துவதை நான் பொருட்படுத்தவில்லை"

"அது ஏற்கத்தக்கது என்றாலும், மக்கள் கடக்கக்கூடிய மெல்லிய கோடு. உதாரணத்திற்கு முழு தீர்ப்பையும் வசனத்தில் எழுதினால்…, உலகின் பிற இடங்களில் உள்ள நீதிபதிகள் அதை சிறந்த பாணியுடன் முயற்சித்திருந்தாலும் கூட,…அது நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல." என்கிறார்.

2011 ஆம் ஆண்டு கருணைக் கொலை தொடர்பான முக்கிய தீர்ப்பை எழுதிய நீதிபதி மார்கண்டேய கட்ஜு, புகழ்பெற்ற கவிஞர் மிர்சா காலிப்பின் இரட்டை வசனத்துடன் தான் அதைத் தொடங்கினார்.

"மர்தே ஹைன் ஆர்ஸூ மே மர்னே கி, மௌத் ஆத்தி ஹை பர் நஹின் ஆத்தி" (ஒருவர் மரணத்திற்காக ஏங்கி இறக்கிறார், ஆனால் மரணம், தணிந்தாலும், மழுப்பலாக இருக்கிறது).

இதை பற்றி கருத்து கேட்கையில்,

"அது அழகாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது, மேலும் இதனால் தீர்ப்புகளை படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. மேலும இது வெகுஜனங்களுக்காக எழுதப்பட்டது தானே - அவர்கள் தானே நீதியின் நுகர்வோர்." என்கிறார்.

உண்மை தான்.அத்தகைய ஆர்வத்தை மிகைப்படுத்தாமல், தீர்ப்புகளில் வகுக்கப்பட்ட சட்டத்தின் தெளிவை சமரசம் செய்யாமல் இருக்கும் வரை, அத்தகைய கவிதைகள் தீர்ப்பில் இடம்பெறுவது படிக்கும் நமக்கு சுவாரஸ்யத்தை தரும் தான்..அது எவ்வளவு சீரியஸான வழக்கு என்றாலும்!!

Poetic Justice: When judges referred to literary works and famous quotes in their verdicts

சனி, 6 நவம்பர், 2021

கடன் வழங்கும் போது எழுதப்படும் Promissory Note சட்டப்படி எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும்?

 புரோ நோட்டு எழுதப்பட்ட நாளிலிருந்து மூன்று வருடங்\களுக்கு செல்லுபடியாகும் என்றாலும் அந்த கடன் குறித்து அந்த காலகெடுவிற்குள் கடன் பெற்றவர் கடனை ஒப்புக்கொண்டு அந்த புரோ நோட்டில் ஒரு மேற்குறிப்பு செய்தால், அந்த புரோ நோட்டின் காலக்கெடுவை அது நீடிக்கும்.

அந்த கடன் ஒப்புதல் என்பது ஒரு கடிதமாகவும் இருக்கலாம். மொத்தத்தில், கடன் நிலுவையை கடனாளி எழுத்து மூலமாக ஒப்புக்கொண்டிருந்தால், அது அந்த கடன் காலாவதியாவதை தடுக்கும்.

வியாழன், 4 நவம்பர், 2021

விவாகரத்து செய்யாமலேயே இன்னொரு திருமணம் செய்யலாமா?

 திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு சரி செய்யமுடியாத நிலையில் விரிசல் ஏற்படும் போது அதை தவிர்த்துவிட்டு இன்னொரு துணை வைத்துக் கொள்ளலாமா?

"முடியாது" என்று நமக்கு தெரியும்..அதை நீதிமன்றம் மூலமாக ரத்து செய்த பின்னரேயே இன்னொரு திருமணம் செய்துக் கொள்ள முடியும் தானே?!!.

அப்படி செய்யாமல் இன்னொருவரைத் திருமணம் செய்துக் கொண்டால், அது இருதார மணச் செயல் என்று தண்டிக்கிறது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 494..

அதுவும், அந்த குற்றம் செய்ததாக முதல் கணவனோ அல்லது மனைவியோ போலீசில் புகார் கொடுக்கும்போது தான், அந்த குற்ற நடவடிக்கை தொடங்குகிறது.

முதல் மனைவியின் சம்மதம் பெற்று இரண்டாம் திருமணம் செய்யும் ஆண்களுக்கு மத்தியில், சிலர் மறைத்து இரண்டாம் திருமணம் செய்துவிட்டு, அந்த மனைவியை அழைத்து வந்து காட்டும்போது தான் முதல் மனைவிக்கு விவரம் தெரியும்.கணவனை பொருளாராத ரீதியாக சார்ந்திருக்கும் போது கையறு நிலையில், கள்வனாலும் கணவன்…இல்லையில்லை…கல்லானாலும் கணவன்” என்று ஏற்றுக்கொள்ளும் கட்டாயத்தில் அவன் இருக்க, அந்த கணவன்மார்கள் அந்த குற்றத்திலிருந்து தப்பித்து வந்தனர்!!.

இப்போது பெண்களுக்கு சிறப்பு சட்டங்கள், சமஉரிமை என்று வந்துவிட,, போதாதற்கு ஒரு குடும்பத்தையே நடத்த திண்டாடும் நிலையில், இரண்டாவது குடும்பமா என்று யோசிக்கும் நிலைக்கு போயினர் ஆண்கள்.!!.

இதில், அந்த திருமணமும் தோற்று போகும் போது, விவாகரத்து கோரி, உரிய காலத்தில் தாக்கல் செய்தாலும், அவருடைய துணை அதற்கு மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் வழக்கு நீண்டுக் கொண்டே போய் உரிய காலத்தில் விவகாரத்து கிடைக்காமல், இன்னொரு திருமண அமைப்பே ஏற்பட முடியாமல் காலம் தாழ்ந்து விடுகிறது.

இதுவே இருவரும் மணமொத்து சேர்ந்து தாக்கல் செய்தால், ஆறு மாதத்தில் மணவிலக்கு பெற்று விடலாம்..

இந்த இடைப்பட்ட காலத்தில் திருமணம் செய்தாலும் "இரு மணம் செய்த குற்ற"த்திற்கு உள்ளக நேரிடும்!!.

இப்படி ஒரு கடுமையான அமைப்பு இருப்பதன் காரணம், திருமண உறவை சீர்குலையாமல் நீடிக்க வைக்க செய்யும் முயற்சியே…

அப்படியே விவாகரத்து கேட்டு மனு செய்தாலும், இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காணவே முயற்சிக்கப்படும்.இதில் தோல்வியுற்ற பின்னரே நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

இது முடிந்து தீர்ப்பு வந்தாலும், பாதிக்கப்பட்டவர மேல்முறையீடு போய்…

முடிவே இல்லாத தொடர்கதையாகி இளமையை தொலைக்கின்றனர்…அநேகர்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவருக்கு தனி சட்டமும், அதில் விவாகத்தை ரத்து செய்வது எளிது மட்டுமல்லாமல் நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதால் (இப்போது இங்கு யாரும் அதை பின்பற்றுவதில்லை) அந்த மதத்தை சேர்ந்த ஆண்களுக்கு பிரச்சினை இல்லை..இதில் பாதிப்படைவது அந்த பெண்கன் மட்டுமே.!!

கிறித்துவ மதத்தில் அப்போதிருந்தே, விவாகரத்து ஒரு கடினமான நடைமுறை..

விசாரணை நீதிமன்றம் விவாகரத்து வழங்கினாலும், அதை மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் தான் செல்லும்..நல்லவேளை..இது போன்ற விதி இந்து திருமணத்திற்கு இல்லை.

ஆனாலும் இந்த இரு துணை குற்ற சட்டபிரிவு இருக்கிறதே..

இதை குறித்து சில வினாக்கள்..உங்களிடம் கேட்கவா? விடையை மனதில் குறித்து கொண்டே வாருங்கள்.. கடைசியில் பார்க்கலாம்..

  1. இந்திய தண்டனை சட்டம் என்பது சாதி, மதம், பாலினம், , இனம் மற்றும் தேசியம் போன்ற வித்யாசம் இல்லாமல், , 3, 4 மற்றும் 5 பிரிவுகளுக்கு உட்பட்டு, எல்லோருக்கும், பொருந்தக் கூடிய மதச்சார்பற்ற சட்டம் என்னும்போது, . ஒரு செயல் சில பிரிவினருக்குக் குற்றமாகவும் மற்றவர்களுக்கு குற்றம் இல்லாமலும் இருக்க முடியாது இல்லையா?
  2. ஆனால், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494 இந்து மக்களை மட்டும் தானே தண்டிக்கிறது? இது, அவர்களின் தனிப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, அதன் அடிப்படையில் இரண்டாவது திருமணத்தின் செயலைத் குற்றமாக்குகிறது. அப்படியானால் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே அது பாகுபாடு காட்டுகிறதே?."
  3. இது, குடிமக்களுக்கு சம உரிமை கொடுக்கும் அரசியலமைப்பபு சட்டப்பிரிவு 14 வது பிரிவை மீறுவதாக உள்ளது தானே?.
  4. பிரிவு 494, கிரிமினல் நோக்கம் இல்லாத குற்றம் தானே?. இது கடுமையான பொறுப்புக் குற்றங்களின் வகைக்குள் எப்படி வரும்?..
  5. "ஒரு குற்றமிழைக்கக்கூடிய மன நிலை இல்லாத குற்றத்திற்காக ஒருவர் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுபவது, தேவையில்லாதது, நியாயமற்றது, சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 14 மற்றும் 21 வது பிரிவுகளுக்கு எதிரானது அல்லவா?
  6. அந்த குற்ற வழக்குக்கு விதிவிலக்காக தனிப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் முஸ்லிம் செய்யும் இன்னோரு திருமணத்தின் செல்லுபடியை அங்கீகரிக்கிற. அளவிற்கு, சட்டப்பிரிவு 494, இந்து, கிறிஸ்தவம் அல்லது பிற சமூகங்களுக்கு அங்கீகாரம் கிடையாது..இது சமத்துவத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது தானே?.
  7. இந்த குற்றம் உலகளாவியதும் அல்ல என்னும்போது, இருதாரமணச் செயல் குற்றமாக்கப்படக் கூடாத ஒன்று என்பதைத் தானே குறிக்கிறது?.
  8. சுருக்கமாக, குற்றம் எண்ணம் இல்லாததும் சமூகத்தின் ஒரு பிரிவினருக்கு இருதார மணம் குற்றமல்ல என்பது, இருதார மணத்தின் செயலில் உள்ளார்ந்த குற்றவியல் எதுவும் இல்லை என்பதை தானே சுட்டிக்காட்டுகிறது ?
  9. இருதார மணம் என்பது விவாகரத்துக்கான காரணமாக கருதப்பட வேண்டுமே தவிர, கிரிமினல் குற்றமாக அல்ல.. இருதார மணம் என்பது திருமண வாழ்க்கை தொடர்பான தனிப்பட்ட விவகாரம் என்பதால், அதை குற்றமாக்குவது திருமண வாழ்க்கையின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதற்கு உதவாது தானே?
  10. திருமணமான ஒருவர் மற்றொருவருடன் இணைந்து வாழ்வது குற்றமல்ல என்னும்போது, , திருமணம் போன்ற முறையான ஏற்பாட்டிற்குப் பிறகு இதுபோன்ற கூட்டுவாழ்வு ஏற்பட்டால், அந்தச் செயல் எப்படி குற்றமாகும்.?
  11. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, இருதார மணம் ஒரு குற்றமாக தொடர அனுமதிப்பது காலத்துக்கு மாறானது மட்டுமல்ல, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது தானே?

என்ன,..இப்படியெல்லாம் கேட்க முடியுமா? என்று தானே யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்..?

இந்த வினாக்களை எல்லாம் நான் கேட்கவில்லை…

தங்கள்.தரப்பு வாதங்களாக வைத்து ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..கல்வியறிவு அதிகம் கொண்ட கேரளத்தின் மாண்புமிகு உய்ரநீதிமன்றத்தில்.!!

என்னவென்று?

"இந்த இரு தார மணம் என்பது குற்றச்செயல் என்னும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 494, குடிமக்களுக்கு சமஉரிமை கொடுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவை மீறுவதாகவும், அதை ரத்து செய்யக் கோரியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

அதுவும் இந்த வழக்கை தாக்கல் செய்தது ஒரு பெண்னின் தந்தை என்று தெரிந்தால் இன்னமும் ஆச்சரியப்படுவீர்கள்

ஆண்களுக்கு கூட இல்லாத அவசரம் அவசியம் அவருக்கு என்ன என்றால், ..இருக்கிறதே..!!

அவரும், அவரது மகள் மற்றும் பிற உறவினர்கள் ஐபிசியின் பிரிவு 34 , பிரிவு 494 இன் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக கிரிமினல் வழக்கை எதிர்கொள்கின்றனர்.

அவர்கள் மீதான குற்றம் தான் என்ன? என்கிறீர்களா?

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர் தனது மகளுக்கு இன்னோரு திருமணம் செய்துவைத்துள்ளார் என்பது தான்.!!.

இந்த மனுவை சமீபத்தில் விசாரணைகு ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம் கேரள அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது..

நாமும் இந்த வழக்கின் தீர்ப்புக்காக காத்திருப்போம!!

செவ்வாய், 2 நவம்பர், 2021

வக்பு வாரிய கல்வி நிலையங்களில் இந்துக்கள் பணியாற்றுகின்றனரா?

 வக்பு வாரியம் அரசின் நிதியால் நடத்தப்படுவது..அதனால் அங்கு அரசிலைமப்பு சட்டத்தின் படி பணியமர்த்துவதில் எந்த பாகுபாடும் காட்டமுடியாது..

ஆனால் இந்த அறநிலைய துறைக்கு கோவில்களில் வரும் பணம் உபயோகம் செய்யப்படுகிறது.. அறநிலைய துறை அதிகாரிகளுக்கு கார் வாங்க கோவில் பணம் செலவழிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்ததே!!

அதனால் தான் அங்கு இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர்!

உயர் நீதிமன்றம் ஆர்யனுக்கு ஜாமீன் வழங்க முடியும் என்றால், அமர்வுகள் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் ஏன் அவ்வாறு செய்யவில்லை? உயர்நீதிமன்றத்தில் என்ன புதிய வாதம் முன்வைக்கப்பட்டது?

 அனைவரும் தடுமாறும் இடம் இது தான்.மாண்புமிகு உயரநீதிமண்றத்தால் பிணை வழங்க முடியம் என்றால் அமர்வு நீதிமன்றமோ மாஜிஸ்திரேட் நீதிமன்றமோ அதை செய்யாதது ஏன்? என்கிறார்கள்.

அவர்கள் மறந்தது இது தான்.👇

மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அதற்கு மேற்பட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டும் இந்திய தண்டனை சட்டம், குற்ற விசாரணை நடைமுறை சட்டம் மற்றும் அந்த குறிப்பிட்ட சிறப்பு சட்டம்,.இங்கு போதை தடுப்பு சட்டம் இவற்றின் அடிப்படையிலேயே செயல்பட முடியும்

பிணையில்லா குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதன் போக்கை இடைஞ்சல் படுத்தும் வண்ணம், ஜாமீன் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதுவும் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது, பிணை வழங்க முடியாது.

ஆனால் மாண்புமிகு உயர் நீதிமன்றத்திற்கு அரசியல் அமைப்பு சட்டத்தின் துணை உள்ளது. அதற்கென்றே உள்ள விசேஷ அதிகாரத்தை கொண்டு, ஒரு குடிமகன், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள போது,, தேவையின்றி சிறைக்காவலில் உள்ளார் என்று கருதும் போது, உடன் அவரை விடுவிக்க உத்தரவு இடலாம்.அதன் அடிப்படையில் மாண்புமிகு உயர்நீதிமன்றமும் சில நிபந்தனைகள் கீழ் இந்த பிணை உத்தரவும் இட்டுள்ளது..

அப்படியானால் நேரிடையாக உயர்நீதிமன்றத்தில் பிணை மனு போடலாமே என்றால் கூடாது.

விசாரணை நீதிமன்றங்களில் பிணை மனு போட்டு அங்கு மறுக்கப்பட்டாலேயே உயர்நீதிமன்றத்தில் மனு செய்ய முடியும்

வெள்ளி, 29 அக்டோபர், 2021

வாரிசு இல்லா சொத்து யாருக்கு சொந்தம்?

 அரசுக்கு தான் ..இதிலென்ன சந்தேகம்…

அதை விட, ஒருவருக்கு சொந்தமான இடத்தில் புதையல் கண்டு எடுத்தாலும் அரசுக்கு தான் அது சொந்தம்…அது நியாயமோ இல்லையோ …!!

சென்னை; உயர் நீதிமன்ற வளாகத்தில், தான் அரசு பேராட்சியர் மற்றும் சொத்தாட்சியர் அலுவலகம் உள்ளது. அதை நிர்வகிப்பது மாவட்ட நீதிபதி என்றாலும், அது அரசு அலுவலகம் தான்.வாரிசு இல்லாதவர்களின் சொத்துகளை அரசு தன நிர்வாகத்தில் எடுத்துக் கொள்ளும். அதன் சொத்தாட்சியராக, அந்த மாவட்ட நீதிபதி செயல்படுவார்.

சமீபத்தில் கூட ,பச்சையப்பன் அறக்கட்டளையை அரசு சொத்தாட்சியர் தான் நிர்வகிக்க வேண்டும் என்று மாண்புமிகு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கும். அது போல ஒரு பொது அறக்கட்டளையில் நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தால், அரசே அதை தன நிர்வாகத்தில் எடுத்து கொள்ளும்… சொத்தாட்சியர் தான் அறங்காவளரும் கூட. ஆனால், நடைமுறையில், மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்பவே அவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், தங்கள் உயிலின்படி சில சொத்துகளை ஒதுக்கி, அரசு நிர்வாகம் செய்து, தங்கள் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று எழுதி வைத்து விட்டு சென்றவர்களின் சொத்துகளும் அங்கு நிர்வகிக்கப்படுகின்றன. இன்றைய தேதியில் சுமார் 200 அறக்கட்டளை சொத்துக்கள் அவ்வாறு நிர்வகிப்படுகின்றன..

.சொத்தாட்சியருக்கு அந்த சொத்துகளை நிர்வகிப்பதில் ஏகபோக உரிமை, அதிகாரம் உள்ளது என்றாலும், அதை நிர்வகிப்பதில் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வந்த பெருமை மாண்புமிகு நீதியரசர் ஆதிநாதன் அவர்களையே சாரும்.

அவர் சொத்தாட்சியராக அங்கு பணிபுரிந்த காலத்தில், அந்த எஸடேட்டுகளில சொன்ன, தான தருமங்கள் காலத்திற்கேற்ப ஏற்றம் பெறாமலும், ஆனால் அதன் எஸ்டேட் குமாஸ்தாக்கள் சம்பளம் மட்டும் உயர்ந்துக் கொண்டே வந்ததையும், அறக்கட்டளை சொத்துகள் உரிய முறையில் பராமரிக்கபடவில்லை என்பதையும், அதன் வருவாய் வீனடிக்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துக்கொண்டு, அதில் மாற்றங்கள் கொண்டு வந்து, அதற்கு மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்று அமுல்படுத்தினார்.

சொத்தாட்சியர், இதற்கென்றே இருக்கும் மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிபயரசரிடம் கலந்து ஆலோசித்து தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். அந்த நிர்வாக சீர்திருத்தங்கள் எல்லோராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

உயிலில் சொன்ன தரும காரியங்கள் மட்டுமல்லாமல், கல்வி உதவி பணம் வழங்குதல் போன்ற பொது நலுனுக்கும், , அந்த எஸ்டேட் பணம் வழங்கப்படுகிறது. . சமீபத்தில் கூட முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் அவர்கள் கொடுத்ததாக செய்தி வந்தது நினைவிருக்கலாம்.

அங்கு நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துகளின் சொந்தக்காரர்களில் மறைமலை அடிகளார், புகழ் பெற்ற வழக்கறிஞர் எத்திராஜ் போன்றோரும் அடங்குவர். அவர்கள் இது குறித்து தங்கள் கைப்பட எழுதிய உயில் பிரதி அங்கு பாதுகாக்கபட்டு வருகின்றது. ,

வாரிசு இல்லையென்றால் தான் அரசு அந்த சொத்துகளை நிர்வகிக்க எடுத்துக் கொள்ளும் என்றில்லை., அது போல எடுத்துக்கொள்ள சொல்லி உயில் எழுதி வைத்தாலும் கூட , எடுத்து கொள்வது உண்டு என்பது தெரிகிறது அல்லவா…

அப்போதெல்லாம் நாடே தங்கள் வாரிசு என்று நினைத்த மாமேதைகள் இருந்தனர்.

ஆனால் இப்போது, நாடே தங்கள் சொத்து என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர்!!

பின்னே வாரிசுக்கு சாதாரண "சொத்தை!!" "வீட்டை கொடுப்பது கேவலமல்லவா??!!

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...