ஞாயிறு, 7 நவம்பர், 2021

சாதி அடிப்படையில் மிகுந்த பாகுபாடு உள்ள துறைகளைப் பற்றிக் கூறுக?

 


அரசு துறைகளில் சாதி பாகுபாடு உண்டு என்றாலும், மக்களுடன் அதிகம் நெருங்கி பழக வேண்டிய கட்டாயத்தில் உள்ள சிவற்றில் நடக்கும் சாதி பாகுபாடு, பளிச்சென்று வெளியே தெரியும்.

அரசின் அன்னதான திட்டத்தில், கூட சேர்ந்து உணவு அருந்த அமைச்சர் வர வேண்டி இருக்கிறது.!! முதல்வர் வீடு தேடி போய், சாதிப் பாகுபாடு காட்டுபவருக்கு கடுமையான செய்தி சொல்கிறார்.!!

மற்ற துறையில் எல்லாம் சாதிப்பாகுபாடு, பாதிக்கப்பட்டவரின் வயிற்றை அடிக்கும் என்றால், போலீஸ் துறையின் லத்தி அவர்களையே அடிக்கும்!!

போலீசாரின் இந்த சாதிய ரீதியான அதிகார வன்முறை, இப்போது வெளிவந்துள்ள ஜெய் பீம்” படத்தில் பட்டவர்த்தனமாக காட்டப்பட்டிருக்கும்..

அதுவும் சாதீய ரீதியான ஒதுக்கீட்டிற்கு வன்முறையை கையாண்டு போரிடும் சாதிகளுக்கு நடுவில், இருப்பதற்கு வீடோ, குழந்தைகளுக்கு உரிய கல்வியோ,ஏன் ரேஷன் கார்டு கூட இல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கே போராடும் மலை ஜாதியினர், மற்ற ஜாதியினரால் சுரண்டப்படுவதும் இல்லாமல், “ஏன் ?” என்று கேள்வி கேட்கக்கூட ஆளில்லாமல், போலீசாரின் கையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிக்கொண்டிருப்பதை போட்டு உடைத்திருக்கிறது!!

இந்த உண்மைக் கதையின் சுருக்கம்;

ராஜகண்ணு, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் (அனைவரும் இருளா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள்) தான் கொள்ளையடிக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். , குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி காவலில் சித்திரவதை செய்யப்படுகிறது.

போலீசார், ராஜகண்ணுவைக் கொள்ளை வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் எந்த நியாயமான விசாரணையும் இல்லாதது, ஒருபுறம் இருக்க, ராஜகண்ணு போலீசாரின் மிருகத்தனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாட்களில், ராஜகண்ணு, கைது செய்யப்பட்ட மற்றவர்களுடன் காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார்.. இதைத் தொடர்ந்து, மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதியான வழக்கறிஞர் சந்துரு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார்..அதன் பிறகு நடப்பவை அனைத்தும் சுவாரசியமான திருப்புமுனைகள்..

உண்மை கதை தான் எப்போதும் திரைகதையை விட சுவை அதிகம் கொண்டது..அது கசப்பு சுவை என்றாலும் கூட!

அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, பாதிக்கப்பட்டவரிடம் போலீசார் கையாளும் வன்முறை, நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

“Law is a powerful weapon. .யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்து இருக்கிறது”. என்கிறார் ஹீரோ..

உண்மை தான் அவர் அளவுக்கு வழக்கறிஞர்கள் அவ்வளவு எளிதில் செங்கேணி போன்ற எல்லோருக்கும் கிடைத்தும் விடுவதில்லை..

அவர் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு கூடவே உறுதுணையாய் இருக்கிறார் செங்கேணி..காவல் துறையின் உயர் அதிககாரிகளே வழக்கை நீர்த்துபோக செய்ய எடுக்கும் முயற்சிகளில், பணத்தை இழப்பீடாக வழங்க முன்வருவதும் இருப்பினும், சண்டையில் (வழக்கு) தோற்று வேண்டுமானால் போவேன்., ஆனால் கணவனின் கொலையின் பிச்சையில் வாழமாட்டேன் என்று செங்கேனியின் பதில் ஊன்றி கவனிக்கவேண்டியது!! எத்தனை செங்கேணிகள் இப்படி மனம் தளராமல் போராடுகிறார்கள்?

இப்படி எல்லாம் நடக்கும் சாதியல் ரீதியான இந்த போலீஸ் அதிகார தூஷபிரயோகத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டும் பல தீர்ப்புகளில், கடுமையான நடவடிக்கை எடுத்து போலீசை ஒழுங்கப்படுத்த முனைந்தும், இன்றும் சாத்தாம்குளம். சம்பவங்கள் .தொடர்கின்றன

.சமீபத்தில் அந்த வன்முறையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளது.

மாண்புமிகு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம்,,காயம்பட்ட ஒரு சீக்கிய முதியவரை அவர் தர்பனை அவிழ்த்து, போட்டோ எடுத்து வலைத்தளத்தில் போட்டது “மனரீதியான துன்புறுத்தும் செயல்” எணறிருக்கிறது.

டி.கே.பாசு எதிர் மேற்கு வங்க மாநிலம் (1997 (1) SCC 416) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றமும், நீதிமன்ற விசாரணைக்கு முந்தைய நிலையில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகள் தொடர்பாக 11 வழிகாட்டுதல்கள். வெளியிட்டது.

அதை, கீழ்ப்படியாத காவல்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், அதை பின்பற்றாத நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாண்புமிகு உச்ச நீதிமன்றம் சுதந்திரம் வழங்கியது. 24 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. எத்தனை பேர் அந்த அவமதிப்புக்கு ஆளாகினர்? ஒருவர் கூட இல்லை என்பது தான் வேதனையான உண்மை!!.

இவ்வளவு பாடம் கற்பித்தும் போலீஸ் அராஜகம் குறையாததற்கு, காரணம் என்ன?

அடிப்படையில் எங்கே தவறு?

காவல்துறையின் இந்த ஒழுக்கமின்மைக்கான காரனத்தை சற்று வரலாற்றை ஆராய்ந்தால் கிட்டும்.

போலிஸ் சட்டம் என்று இன்னமும் 1888 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் தான் நாம் இன்னும் ஆளப்படுகிறோம்…சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் இருந்து, குற்றங்களை கண்டறிவதில் போலீஸ் அறிவியல் ரீதியாக இன்னமும். முன்னேறவில்லை.

சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில், ஆங்கிலேயர்கள் நாட்டை வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்து. நிர்வாக அமைப்புகளைக் கொண்டிருந்தனர். இல்லையா? அப்போது தான், பழங்குடியின சமூகங்களை உள்ளடக்கிய குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தையும் அவர்கள் இயற்றினர். குற்ற பரம்பரை சட்டம் பற்றி தெரியும் தானே? இதன் மூலம், குற்றத்தைக் கண்டறிவது அவசியமில்லை, ஒரு பகுதியில் ஏதேனும் குற்றம் நடந்தால், அங்குள்ள அனைத்து பழங்குடியின ஆண்களும் சந்தேகத்திற்குரியவர்களாக ஆவார்கள். 24 மணி நேரத்திற்குள் வட்டக் காவல் நிலையத்திற்கு முன் சரணடையாதவர்கள் எவரோ, அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார்.

இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சுதந்திரப் போராட்டத்துடன் இணைந்து நீண்ட போராட்டங்கள் நடந்தன, ஆனால் அது, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தான் ரத்து செய்யப்பட்டது. ஆனாலும். பழங்குடியினர் பாதிக்கப்படுவதிலிருந்து விடுபடவில்லை. தொடர்ந்து, டிநோட்டிஃபைட் பழங்குடியினர் (டிஎன்டி) தங்கள் பகுதியில் செய்யப்படும் எந்த குற்றங்களுக்கும் காவல்துறையின் பார்வையில் தொடர்ந்து சந்தேக நபர்களாக இருந்தனர். அவர்களல் சிலர் மட்டுமே நிலத்தை உடைமையாக்கி, எல்லா குடிமை உரிமைகளையும் பெற்றனர். மறுபுறம், பெரும்பான்மையான பழங்குடியினர் குற்றவாளிகளாகக் கருதப்படுவதும், நாளுக்கு நாள் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதும் இன்றும் தொடர்கிறது.

ஒரு வழக்கிலிருந்து விடுதலையாகி வந்தவுடனேயே வேறொரு வழக்கில் பிடித்து உள்ளே போடுவது தொடர்கிறது. அந்த படத்தின் முதல் காட்சியே அதை தான் முகத்தில் அறைந்தது போல சொல்கிறது.!

இன்னொரு காரணம், போலீசாரின் அத்துமீறல்கள், அட்டூழியங்களை மக்கள் கொண்டாடுவதும் போலீசாரின் இந்த தொடர் வெறியாட்டத்துக்கு காரணம். ஹைதராபாத் என்கவுண்டர் சமீபத்திய உதாரண.ம்..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட போலீசாரை ,பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள்.. அதையே சாக்காக வைத்து பொய்யான என்கவுன்டர் நடத்தப்படுகின்றன.

உண்மையில் இதே சூர்யா நடித்த “சிங்கம்” திரைப்படத்தில் காவல்துறை வன்முறையும் அவர்களின் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் பற்றியது..அதுவும் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது..சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு போலீசார் செய்த அராஜகம் விமர்சிக்கப்படவேயில்லை. !!

ஆனால் "ஜெய் பீம் 'காவலர் வன்முறை, காவல்துறை சித்திரவதை மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மோசமான பக்கத்தை காட்டுகிறது.. இது காவல்துறையின் மிருகத்தனத்தை இவர்களின் லட்சியம்” என்று அடையாளபடுத்துவதற்கான இமேஜை ஓரளவு உடைக்கிறது.!!

சித்திரவதைக்கு எதிரான தேசிய பிரச்சாரத்தின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக ஐந்து இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டில் மட்டும் காவல்துறை காவலில் 117 இறப்புகளும், நீதிமன்ற காவலில் 1,606 இறப்புகளும் பதிவாகியுள்ளன. காவலர் வன்முறையின் இந்த புள்ளிவிவரங்கள் எல்லா நேரத்திலும் அதிகமானவை.; அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன என்று ஆராய்ந்தால் கிடைக்கும் முடிவு திகைக்க வைக்கின்றன;

இத்தகைய கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை இல்லை!!.

2005 முதல் 2018 வரை போலீஸ் காவலில் சித்திரவதைக்கு ஆளான 500 பேர் இறந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஒரு தண்டனை கூட இல்லை என்று தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 58 போலீஸ்காரர்கள் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களில் யாரும் தண்டனையை எதிர்கொள்ளவில்லை.!!

நமக்குத்தான்.நம் வீட்டு கதவில் அறைந்தால் மட்டும் தானே அலறவே செய்வோம்!!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) மற்றொரு அறிக்கையில் 1,723 நபர்கள் காவலில் இறந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மரணங்களில் பெரும்பாலானவை காவல்துறையின் சித்திரவதையின் விளைவாகும் என்று NHRC அறிக்கை மேலும் கூறியது.

இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ள பொதுவான ஒன்று ….,

அவர்கள் அனைவரும் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள். போலீஸ் காவலில் இறந்த 125 பேரில், இறந்தவர்கள் 75 பேர் (60 சதவீதம்) விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 13 பேர் தலித்துகள் அல்லது பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 15 பேர் சிறு குற்றங்களுக்காகப் பிடிக்கப்பட்ட முஸ்லிம்கள். சமீபத்தில் நடந்த ஒரு வழக்கில், அருண் வால்மீகி என்ற தலித் துப்புரவுத் தொழிலாளி, போலீஸ் காவலில் இறந்ததாகக் கூறப்படுகிறது. அருணின் குடும்பத்தினர், "தனது மனைவி கண்முன்னே அவர் இரக்கமின்றி அடித்துக் கொல்லப்பட்டார்" என்று நினைவு கூர்ந்துள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,189 பேர் சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும், 348 பேர் போலீஸ் காவலில் இறந்ததாகவும் மக்களவையில் அரசு அறிக்கை அளித்துள்ளது..

இப்போது யதார்த்தத்திற்கும் காவலர் வன்முறையின் சினிமா அம்பலத்திற்கும் இடையிலான தொடர்பைத் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்!!.

குற்றவியல் நீதி மற்றும் காவல்துறை பொறுப்புக்கூறல் திட்டத்தின் அறிக்கையான "டிரங்க் ஆன் பவர்", எப்படி, துல்லியமாக கலால் சட்டத்தை அடக்குமுறையின் ஆயுதமாகப் பயன்படுத்தி, 'விமுக்தா' சமூகங்கள் பலியாவதைப் பற்றி பேசுகிறது. விமுக்தா சமூகங்கள் தொடர்ந்து 'பரம்பரை குற்றவாளிகளாக' கருதப்படுகின்றன. உள்ளூர் சட்ட அமலாக்கத்தால் அவர்கள் விகிதாசாரமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டு, கண்காணிக்கப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகிறார்கள். அதேபோல், இருளா பழங்குடியினர் பரம்பரை குற்றவாளிகள் என்று அட்வகேட் ஜெனரலும் காவல்துறை அதிகாரிகளும் சாதரணமாக திருப்தியடைந்த பல நிகழ்வுகளை படத்தில் காணலாம்.

ஒரு விதத்தில். "ஜெய் பீம்", நாதியற்ற பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து கதையை சொன்னது, காவல்துறை வன்முறையின் கொடூரமான பக்கத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் குறிப்பிடத்தக்கது. இது போன்ற திரைப்படங்கள் பொது மக்களுக்கு காவல்துறை அமைப்பைப் பற்றி மிகவும் யதார்த்தமான புரிதலை ஏற்படுத்தும்., போலீசாரின் அதிகப்படியான செயல்களை வீரமாகக் கொண்டாடுவதை விட காவல்துறையிடம் அதிக பொறுப்புக்கூறலைத் தேட அவர்களை ஊக்குவிக்கும்.

ஆனால் மக்களின் மனோநிலைக்கும் ஒரு காரணம் உண்டு. என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசார் கொண்டாடப்படுவதற்கான காரணம், நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம்தான். குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைத்தால் மட்டுமே, நீதித்துறை மீது பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.

இதில் வழக்கறிஞர்கள் பங்கும் முக்கியமானது..வழக்கறிஞர் சந்துரு போல, தேவையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடாமல், தன்னை நம்பியுள்ள கட்சிக்காரருக்கு அதனால் மேலும் தாமதம் ஆகும் என்பதையும் உணர்ந்தவராய், எதிர்க்கட்சி வழக்கறிஞருடன் ரகசிய ஒப்பந்தம் போடாமல், கட்சிக்காரர் கொடுக்கக் கூடிய ஃபீசில் மட்டுமே கவனம் செலுத்தாமல் நீதி பெற்று கொடுப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாக செயல்படுவது தொழில் தர்மத்தை மேம்படுத்தும்.

வழக்கில், சாட்சிகளை குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்குமாறு உயர் நீதிமன்றத்தை வற்புறுத்தி, கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னுதாரணத்தை மேற்கோள் காட்டியதன் மூலம், ஆட்கொணர்வு அதிகார வரம்பில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. .மேற்படி மேற்கோள் வழக்கில் ஹேபியஸ் கார்பஸ் பற்றிய கருத்து விரிவுபடுத்தபபட்டு,. தனிப்பட்ட சுதந்திரத்திற்கானது மட்டுமில்லாமல் குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதில் ஹேபியஸ் கார்பஸ் மனுவின் அதிகாரத்தைக் காட்டுகிறது.

இதில் நீதியரசர் கிருஷ்ண ஐயர் பங்கு வரலாற்று சிறப்பானது.

அது போலீசின் அதிகார அத்துமீறல்களை எதிரான, சாமானியர்களின் கைகளில் உள்ள ஆயுதங்களில் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது.. சுனில் பத்ரா வழக்கைப் பார்த்தால், சிறைச் சீர்திருத்தங்களுக்கும் கூட, ஹேபியஸ் கார்பஸ் ஒரு தீர்வாக கூட இருக்கலாம் என்கிறது.

. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக, 80களின் முற்பகுதியில் கிருஷ்ணய்யர், சின்னப்பா ரெட்டி போன்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களால் கொடுக்கப்பட்ட இத்தகைய விரிவான விளக்கங்களுக்குப் பிறகு, 40 ஆண்டுகளுக்குப் பிறகும், நீதிமன்றங்களில் இருந்து உத்தரவுகளைப் பெற மக்கள் போராடுகிறார்கள்.

இன்றைய நாட்களில், அரசு சாரா அமைப்புகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் மீது அதிக கட்டுப்பாடுகளுடன், கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துவதற்கான இடம் சுருங்கி வருவதை நாம் காண்கிறோம். சமூக ஆர்வலர்கள் மூலம் தான் ராஜகண்ணு வழக்கு வழக்கறிஞரை எட்டியது. ஆனால் இன்று அவர்களின் 'செயல்பாடு' ஒரு ஆபத்தான செயலாக பார்க்கப்படுகிறது, அவர்களுக்கு எதிராக தேசத்துரோக குற்றச்சாட்டு மட்டுமல்லாது UAPA பாய்வதை பார்க்கிறோம்.

கடந்த 3 ஆண்டுகளாக பீமா கொரேகான் வழக்கில் 13 பேர், யுஏபிஏவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்..திரிபுரா பற்றி எரிகிறது” என்று சமூக வலைதளத்தில டுவிட் செய்தவருக்கு அதே கதி!

படித்தவர்களுக்கே இந்நிலை என்றால், பழங்குடியினருக்கு?

அவர்களுக்கு வீட்டு மனைகளுக்கான பட்டாக்கள் இல்லை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை, பொது விநியோகத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. நாடோடி வாழ்க்கை முறையால், குழந்தைகளை வழக்கமான பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை...அனுப்பமுடிவதில்லை.. அவர்களுக்கு கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் முறைசாரா துறைகளில் தான் உள்ளன.

இவையெல்லாம் மாற ஒரே வழி.. பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மக்கள் கல்வியறிவு பெற வேண்டும், அப்போது தான் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் உறுதி செய்யும் என்பதை வலியுறுத்துவதாகவும் இந்த படம் இருக்கிறது. அதனால்தான் படத்தின் முதற்கட்டத்தில் அந்த பழங்குடியினப் பெண் நீதிமன்ற மனுவில் கையெழுத்திடுவதற்குப் பதிலாக அவரது கட்டைவிரல் அடையாளத்தை ஒட்டியதாகக் காட்டப்பட்டது. , படத்தின் முடிவில், அவரது மகள் நம்பிக்கையுடன் வழக்கறிஞர் முன் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசிப்பதாக முடியும்..

எழுத்தறிவினால் மட்டுமே அவர்கள் முன்னேற முடியும் என்பதுதான் அந்தச் செய்தி.

ஆனால், நம் நாட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால், உயர்கல்வி படித்த கல்வியறிவு பெற்றவர்கள் தான் தங்கள் அலட்சியத்தால் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளால் நாட்டையே தவறான திசையில் கொண்டு செல்கிறார்கள்.

ஜெய் பீம் போலீஸ் காவலில் நடக்கும் வன்முறையை மட்டும் காட்டவில்லை. .இது அரசின் நோக்கத்தையும், ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பலிவாங்கலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஏற்கனவே விளிம்புநிலையில் உள்ள பாதிக்கபப்பட்ட மக்களை அடிபணியச் செய்வதற்காக சீருடை அணிந்த சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை என்பது, போலீஸ் துறை, எந்தளவுக்கும் செல்லும் ஒரு வன்முறை இயந்திரம் என்பதையும் அதை எப்படியாவது மூடி மறைக்க பார்க்கும் அரசின் உண்மையான தன்மையையும், தெளிவாகக் காட்டுகிறது.,

அரசு துறைகளில், சாதிய படிநிலை அமைப்பில் ஆழமாகப் பதிந்துள்ளது, அது தான் பாரபட்சமான கொள்கைகளின் மைய துருவமாக உள்ளது.

டாக்டர். அம்பேத்கரின் கருத்துக்கள் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும், நீதியான சமுதாயத்தை வளர்ப்பதற்கும் ஒரு அரணாக இருந்தபோதும் – அரசு இயந்திரங்கள், அவருடைய தொலைநோக்கு கொள்கைகளை முற்றிலும் மறந்துவிட்டன.

அவர் தான் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி!

"எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அது கெட்டதாக மாறுவது உறுதி, ஏனென்றால் அதைச் செயல்படுத்த அழைக்கப்படுபவர்கள் கெட்டவர்களாகவே இருப்பார்கள்.." என்ற அம்பேத்கரின் வார்த்தைகள் இங்கு எவ்வளவு பொருத்தம்!!

விளிம்பு நிலை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அரசு தவறியதை அரசியல் சாசனத்தின் தோல்வியாகப் பார்க்க முடியாது, ஏனென்றால் மக்கள் தான் தலைமையில் அமர்ந்திருக்கிறார்கள்.

செங்கேனியின் நீதிக்கான தேடலானது அரசியலமைப்பு கோட்பாடுகளின் எடுத்துக்காட்டு. இருந்தும், இது வழக்கறிஞர் சந்துருவின் வீரத்துடன் ஒரு நீண்ட போராட்டத்துடன் வருகிறது. ஒரு வழக்கறிஞரின் அபூர்வ 'ஹீரோயிசம்'

பின்தங்கிய குழுக்களின் நலன்களைப் பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவை எவ்வளவு தூரம் உணர்ந்து, அரசுத்துறை பாகுபாடுகளுக்கு எதிராக வலியுறுத்தப்படுகின்றன என்பதுதான் உண்மையான கேள்வி?

விளிம்பு நிலையில் உள்ள மக்களை இந்த அளவுக்கு பாதிப்படைய அனுமதிக்க விட்டிருக்கலாமா?

ஒவ்வொரு செங்கேனியும் போராட்ட குணமுள்ள வழக்கறிஞரை கண்டுபிடித்து விடமுடியுமா?

ஒவ்வொரு பழங்குடி பெண்ணும் செங்கேனி கடந்து வந்ததைச் போல தான் கடந்து வரவேண்டும் என்று இந்த அமைப்பு ஏன் கட்டாயப்படுத்துகிறது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தவித பாரபட்சமும் இல்லாத சுயபரிசோதனை தேவை.

உண்மையில், இந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க, ஒவ்வொரு புதிய பரிமாணம் தெரிகிறது. இதை அரசு துறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஒரு பாடத்தை சொல்கிறது.. அது…

“செங்கல் செங்கலாக தான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.”என்று.

ஆனால், அதற்கான நம்பிக்கை துளிர் விட வைக்கிறது அம்பேத்கரின் முழக்கமான ஜெய் பீம்

“பீம் “ என்பது ஒளிக்கற்றை தானே!

.இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கிய இந்த பயணத்தில் நாம் அனைவரும் பங்கு கொள்வோம்!!

மேற்கோள்கள்:

http://www.uncat.org/wp-content/uploads/2020/06/INDIATORTURE2019.pdf

Suggestions To Curb The Menace Of Custodial Violence And Brutality: Targeting The Ill-Conceived Notion Of 'My Area, My Custody, And My Law'

https://nhrc.nic.in/sites/default/files/NHRC_AR_EN_2017-2018.pdf

Agra Custodial Death: Man Died Of Heart Attack, Say Police Citing Autopsy

348 died, 1,189 tortured under police custody in last 3 years, Centre tells Lok Sabha | India News - Times of India

https://cpaproject.in/wp-content/uploads/2021/08/Drunk-on-Power-A-study-of-Excise-Policing-in-Madhya-Pradesh-CPA-Project-14-Aug-2021-1.pdf

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...