இது பெரும்பாலோருக்கு உள்ள சந்தேகம் தான். ஒரு அரசு ஊழியர் குற்றங்களில் ஈடுபட்டு பிடிபட்டும் பனி மாறுதல் மட்டுமே செய்யப்படுகிறாரே அது ஏன்?
அரசின் ஊழியராக ஒருவர் நியமிக்கப்ப்படும்போதே, அவருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தின்311 பிரிவின் கீழ் அவரின் பணிக்கு பாதுகாப்பு கிடைத்து விடுகிறது.. ஏனெனில் ராஜாங்க காரியங்களில் அவர் ஈடுபடும்போது தேவையில்லாத இடர்ப்பாடுகள் வருவதை தவிர்க்கவும், அந்த பணியை மேற்கொள்வதால் அவரின் வேலைக்கு யாரும் தீங்கு இழைப்பதை தவிர்க்கவும், அப்போது தான் அவர் தனக்கு கொடுபட்ட பணியை உறுதியுடன் செய்யமுடியும் என்பது தான் அந்த விதியின் பின்னுள்ள காரணம்.
நிறைய அரசு ஊழியர்கள், பிரச்சினை வரக்கூடிய வேலை ஏதும் வந்தால், செய்யாமல் ஒத்திப் போடுவதன் பின்னுள்ள விஷயமும் இது தான். ஆனால் அது தவறான அணுகுமுறை.
அதே போல, அரசின் தலைமை மாறும்போது, காழ்ப்புணர்ச்சி காரணமாக, முந்தைய அரசின் தலைமையின் கொள்கையின்படி, சில அரசு அதிகாரிகள், எந்த தவறும் தன மீது இல்லாமல் , ஒரு நல்ல எண்ணத்தில் ,செய்த பணியில் களங்கம் கற்பிக்கப்படும் அவலமும் நடப்பதுண்டு. அதுவும் தவறான அணுகுமுறை தான்.
அதுவே அவர் சட்டத்திற்கு புறம்பான ஒரு குற்றம் செய்து விட்டார் என்றால், கையும் களவுமாக பிடித்து விட்டாலும், சிலர் நினைப்பது போல, அவரை பணியில் இருந்து நீக்கி விட முடியாது. அதற்கு என உரிய விசாரனை நடத்தப்பட வேண்டும்.
செய்த காரியம் குற்றச் செயல் என்றால், காவல் நிலையத்தில் புகார் பதியப்பட்டு, அவர் மீது குற்ற வழக்கு தொடரப்படுகிறது. அதே வேளையில் துறை ரீதியான விசாரணையும் தொடங்கப்படும். இவற்றிற்கெல்லாம் ஆதாரம் சேகரிக்க வேண்டும். அந்த அரசு ஊழியர் தொடர்ந்து அதே இடத்தில பணி செய்ய அனுமதிக்கப்பட்டால், இதெல்லாம் சேகரிக்க இயலாது. அவர் சாட்சி, சாட்சியங்களை கலைக்க இயலும். அதனால் மிக முக்கியமான தருனங்களில், அவர் பனி இடைநீக்கம் செய்யப்படுகிறார். அப்படி குற்றம் மேலெழுந்தவாரியாக தெரியவில்லை, விசாரணை நடத்தித்தான் ஆதாரம் எடுக்க வேண்டும் என்றால், அந்த இடத்திலிருந்து அவர் பணி மாற்றம் செய்யப்படுகிறார்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம், குற்ற வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், அதை காரணம் காட்டி , துறை ரீதியான விசாரணையில் இருந்து விடுவிக்க சொல்லி அவர் கோர முடியாது.
அதே போல குற்ற வழக்கில் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் தான் குற்றம் செய்தார் என்று அரசு நிரூபிக்க வேண்டும். ஆனால் துறை ரீதியான விசாரணையில் அவர் மீது சந்தேகம் எழுப்பக்கூடிய செயல்கள் புரிந்து இருந்ததாக நிரூபிக்கப்பட்டாலேயே அவருக்கு தண்டனை கிடைக்கும் வாய்ப்பு அதிகம். இவை எல்லாம் அதிகம் வெளியே தெரியாமல் நடக்கும் போது, குற்றம் செய்த அரசு ஊழியருக்கு கிடைக்கும் மாறுதல் உத்தரவு மட்டும் தான் வெளியே தெரிகிறது.
இன்னொன்று, மாறுதல் உத்தரவு என்பது ஒரு அரசு ஊழியருக்கு தண்டனை கிடையாது. அது ஒரு நிர்வாக ரீதியான நடைமுறை. ஒரு அரசு ஊழியரை எத்தனை முறை வேண்டுமானாலும், அரசு அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட எந்த பணி இடத்திற்கும் மாற்றும் அதிகாரம் உண்டு.
ஆனால் குற்றங்களை செய்யும் ரவுடிகளின் கதை வேறு.
அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து வேறு ஒரு ஊருக்கு இட மாற்றம் செய்வது ?
யார் அதை செய்வது?
அத்தோடு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த இடத்திலும் போக வர உள்ள உரிமை என்பது அவனுக்கு உள்ள அடிப்படை உரிமையல்லவா ...அதை தடுக்கவேண்டும் என்றால் அதை சட்டப்படியானதாக இருக்க வேண்டும்.
அதற்கு முதலில் அவர் குற்றவாளியா இல்லையா ? அந்த குற்றத்தை அவர் தான் செய்தாரா என்பதை நிரூபிக்க வேண்டுமே?
அதற்கு தான் அரசு, தன் காவல் துறை சார்பாக அந்த ரவுடிக்கு எதிராக ஒரு குற்ற வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும். நீதிமன்றத்தின் அதிகாரத்தின் உள் அது வந்தவுடன், அரசின் செயல்பாடுகள் எதுவுமில்லை. ஆனால் அந்த குற்றம் செய்த ரவுடியை ஒரு சிறையிலிருந்து வேறு ஊரில் உள்ள சிறைக்கு மாற்றலாம். தண்டனை கொடுக்கப்பட்ட பின்பு கூட, அந்த சிறை தண்டனையை அவர் எந்த சிறையில் இருந்து அனுபவிக்கவேண்டும் என்ற முடிவு செய்யும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உண்டு. அதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவர் நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும்.
குற்ற வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், அவர் குற்றவாளி என்று தீர்மானித்து, அவர் அந்த ஊரில் இருந்தால், தொடர்ந்து அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று முடிவு செய்தால், அவர், அந்த ஊருக்குள் நுழையக் கூடாது என்று ஒரு தடை உத்தரவை போடலாம். அது போன்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே?
இந்த தடை உத்தரவை , அரசும் கூட. குற்றம் நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இருக்கும் போது செய்யலாம். ஒரு குறிப்பிட்ட நபர், அவர் இருக்கும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வந்தால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றால், அந்த எல்லைக்குள் நுழைய முடியாமால் அவரை தடுக்க முடியும். மீறி வருபவரை கைது செய்து அடைத்து வைக்கலாம். ஏன், அவர்களை வீட்டுக் காவலில் கூட வைக்கலாம்.
அது வரைக்கும் ஏன் போறீங்க. .. ஒரு நேர்மையான துடிப்பான காவல் அதிகாரி, அந்த காவல் நிலையத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று கேள்விப்பட்டாலேயே, நிறைய ரவுடிகள் அந்த காவல் நிலைய எல்லையை விட்டு இடம் மாறி விடுகிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக