வியாழன், 16 டிசம்பர், 2021

தாய் பத்திரம் இல்லாத நத்தம் பட்டாவை பெயர் மாற்றம் செய்வது எப்படி? பத்திரம் இல்லாத இந்த சூழ்நிலையில் எப்படி பத்திர பதிவு செய்வது?

 கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள் தான் நத்தம் என்று சொல்லப்படும்.

அதை ஆக்கிரமித்து குடியிருப்புபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு கொடுக்கப்பட்டது தோராய பட்டா என்று சொல்லியுள்ளீர்கள்.

"தோராய பட்டா" என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக கொடுக்கப்படுவது.

இதை அரசு கொடுப்பதன் நோக்கவே, அந்த நிலங்களை சரியான முறையில் ஆவணப்படுத்தி, நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் ,அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கி, அந்த நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரூவதற்கே..

"தோராயம்" என்றால் "ஏறக்குறைய" என்று தானே பொருள்..இந்த பட்டாவிற்கு "தோராய பட்டா" என்ற பெயர் வந்த காரணமே, பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் தவறுகள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்பட்டால், திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்பதாலேயே..

நிலவரியை கட்டுவதன் மூலம், அரசு நிலத்தில் தான் நாம் குடியிருக்கிறோம் என்பதை அங்கு வசிப்பவர் ஒத்துக்கொள்கிறார்..ஆட்கள் வேண்டுமானாலும் மாறலாம்.அவர்கள் பெயர்கள், பட்டாவில் மாற்றம் செய்து தரப்பட்டாலும், அது எந்த வித உரிமையையும் வசிப்பவருக்கு, ஏற்படுத்தி தராது.

உரிமை உள்ள சொத்தையே ஒருவர் இன்னொருவருக்கு, உரிமை மாற்றம் செய்துக் கொடுப்பது தான் கிரயம்..இங்கு எந்த உரிமையும் இல்லாத தோராய பட்டாவை மட்டும் கொண்டு கிராயம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அது சட்டப்படி செல்லுபடியாகாது. வங்கியில், அந்த நிலத்திற்கு எந்த கடனும் தர மாட்டார்கள்.அரசு எந்த நேரத்திலும் வெளியேற சொல்லி அறிவிப்பு கொடுத்தால், கிளம்பத்தான் வேண்டும். இத்தனை வருடங்கள் குடியிருந்தோம் என்று உரிமை கொண்டாட முடியாது.

மேலும் மூலப் பத்திரம் என்பது, நமக்கு அந்த சொத்தின் உரிமை எப்படி வந்து சேர்ந்தது என்பதை விவரிப்பது. அது இல்லாமல் அந்த நிலத்தை பொறுத்து, எந்த பாத்திரமும் பதிவு செய்ய முடியாது. இன்னொரு முக்கிய விஷயம்.அரசு நிலம் தானே நத்தம்..அதனால் பதிவுத் துறையிலும், அந்த நிலம் குறித்த எந்த பத்திரத்தையும் பதிய மாட்டார்கள்.

இதில் இன்னொரு சமூக நீதியும் உள்ளது. குடியிருக்க வழியில்லாதோருக்கு, வசிக்க அனுமதி மட்டுமே கொடுத்துள்ள போது, அதில் ஆதாயம் பார்க்க நினைப்பது கூடாதில்லையா?

சனி, 11 டிசம்பர், 2021

சட்டபூர்வமாக பெயர் மாற்றம் செய்வது எப்படி?

 ஒரு நாளிதழில் பெயர் மாற்றத்திற்கான விளம்பரம் கொடுத்து அதன் நகலுடன், சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் அலுவலகத்தில் உரிய படிவம் நிரப்பி, வேண்டிய ஆவணங்கள் இணைத்து உரிய கட்டணம் செலுத்தினால், பெயர் மாற்றம் பற்றியது அரசு கெசட்டில் வரும். அதன் பிரதிகளை நாம் பெற்று கொள்ளலாம். அது மட்டும் தான் பெயர் மாற்றத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட சட்ட நடைமுறை.

ஆனால் நீதிமன்றத்தில் பொதுவாக சட்டப் பூர்வ பெயர் மாற்றம் செய்வது கிடையாது.

தன்னுடைய பெயர் மாறிவிட்டதாக பிரமான பத்திரம் ஒன்றை தயார் செய்து அதில் நோட்டரியிடமோ நீதித்துறை நடுவரிடமோ அத்தாட்சி பெறுவதும் உண்டு. ஆனால் அது நீதிமன்ற உத்தரவு ஆகிவிடாது. சில இடங்களில் மட்டுமே அது போன்ற பிரமாண பத்திரங்கள் செல்லுபடியாகும்

பெயர் மாற்றம் செய்த பிறகு அதை தன்னுடைய கல்வி சான்றிதழ்களில் மாற்றம் செய்து தரவேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடுவதும் உண்டு. ஆனால் அந்த பெயர் மாற்றம் அந்த கல்வி ஆண்டிற்கு பிறகு நடந்த ஒன்று என்பதால் அந்த கோரிக்கையை கல்வி நிறுவன ங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பெயர் மாற்றத்தை குறிக்கும் அரசு கெஜட்டின் பிரதியை உடன் இணைத்தாலே போதுமானது.

ஆனால் ஒருவருக்கு இரண்டு பெயர்கள் இருந்து வேவ்வேறு ஆவணங்களில் அந்த இரண்டு பெயர்களும் இடம் பெற்று, ஆனால் அது அவரை தான் குறிக்கிறதா என்ற குழப்பம் ஏற்படும்போது நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு தொடர்ந்து விளம்புகை பரிகாரம் பெற முடியும். அதாவது அந்த இரண்டு பெயரும் ஒருவரையே குறிக்கும் என்ற விளம்புகை பரிகாரம் பெறலாம். 

 அது பொதுவாக குறுகிய காலத்திலேயே முடிந்து விடக்கூடிய வழக்கு .தான்..ஏன்? அதை கடைசியில் சொல்கிறேன்…

பொதுவாக பல பெயர்கள் வைத்துக கொண்டு ஏமாற்ற முனைபவர் தான் இருப்பர்.

ஆனால் அந்த வேறுபட்ட பெயர்களும் தன்னையே குறிக்கும் என்று ஒருவர் விளம்புகை கேட்டால், அதற்கு பெரிதான எதிர்ப்பு இருக்காது.. அதாவது எதிர்கட்சிக்காரிடம் இருந்து!!யார் அந்த எதிர்க்கட்சிக்காரர்??   வழக்கு தொடுக்க ஏதாவது ஒரு காரணம் இருந்தாக வேண்டுமே.. அதாவது மூலம். அது இருந்தால் தான் வழக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

பாண்டிச்சேரியில் வாரிசு சான்றிதழை இங்குள்ளது போல தாசில்தார் வழங்குவது கிடையாது. அதனால் இன்னாரின் சட்டப் பூர்வ வாரிசு தான் தான் என்று விளம்புகை பிரகாரம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தான் உத்தரவு பெறுவார்கள்.. பெறுகிறார்கள். அதற்கு எதிர்கட்சியாக அவர்கள் பெரும்பாலும் சேர்ப்பது தங்கள் நண்பர்களையோ அல்லது பக்கத்து வீட்டுககாரரையோ ஏன் சிலர் தங்கள் மனைவியை எதிர்க்கட்சியாக சேர்ககிறார்கள்!!… "நீ யாருக்கு பிறந்தாய்?" என்று என் மனைவி ஒரு சண்டையில் திட்டிவிட்டாள். அதனால் இந்த விளம்புகை பரிகாரம் வேண்டும் என்று!!…… 

சனி, 27 நவம்பர், 2021

எனது நண்பர் விபத்தில் இறந்துவிட்டார் அவர் வங்கியில் வாங்கிய லோன் இன்னும் கட்டி முடிக்கவில்லை அவரது மனைவி இப்போது என்ன செய்ய வேண்டும்?

 

எனது நண்பர் விபத்தில் இறந்துவிட்டார் அவர் வங்கியில் வாங்கிய லோன் இன்னும் கட்டி முடிக்கவில்லை அவரது மனைவி இப்போது என்ன செய்ய வேண்டும்?

விபத்தில் இறந்த குடும்பத் தலைவரால் நிலைகுலைந்து நிற்கும் குடும்பத்திற்கு, அது மேற்கொண்டு இயங்க கொடுக்கப்படுவது அந்த விபத்து நஷ்டஈடு தொகை.

அதை இப்போது கடனை அடைக்க எடுத்துக்கொடுப்பதை விட வேறு வழியில் அதை அடைக்க முயற்சிக்கவும்

இன்னொன்று, அந்த நஷ்டஈடு தொகை எப்போது கிடைக்கும் என்பதை உத்தரவாதமாக சொல்லமுடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாதா? மக்கள் நீதிமன்றம் என்னும் லோக் அதாலத்தில் வழக்கை முடிக்க முயலலாம்.இதில் நஷ்டஈடு தொகை சிறிது குறையலாம் என்றாலும் கிடைக்கும் காலத்தை கணக்கு போட்டால் லாபம் தான்.இன்னொரு சிறப்பாக,வழக்கு போட கட்டிய நீதிமன்ற கட்டணம் முழுதாக திருப்பி கிடைக்கும்.

அடுத்து, இறந்தவர் வாங்கிய கடனை திரும்ப கட்டும் விஷயத்தை பார்ப்போம்.எந்தவித உத்தரவாதம் இல்லாமல் கடனை வங்கி கொடுத்திருக்காது..அதை பற்றிய விவரங்களை சேகரிக்கவும்..

கடன் வாங்குவதற்கு உத்தரவாதம் கொடுத்த நபருடன் பேசியபிறகு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் குடும்ப நிலையை சொல்லி கடன் மற்றும் வட்டியை குறைக்க சொல்லலாம்.இல்லையென்றால் மக்கள் நீதிமன்றத்தில் கூட முறையிடலாம்.இங்கு பாதிக்கப்பட்டவரே வங்கியுடன் நேரிடையாக நீதிபதி முன்பு, பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வதால், மேலமுறையீடு கிடையாது..பிரச்சினை அன்றொடு முடிவுக்கும் வந்துவிடும்.

எனக்கு தெரிந்த ஒருவர் வங்கியில் கடன் வாங்கியிருந்தார்.நடுவில் அவரால் கடனை திருப்பி செலுத்தவோ வட்டியை கட்டவோ முடியவில்லை சிறிது காலத்தில் வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது.

எப்படி பணத்தை கட்டுவது என்று அவர் மண்டையை உடைத்துக்கொண்டிருந்த போது, இன்னொரு நீதிமன்ற செய்தியும் வந்தது."அந்த நிறுவனம் வங்கி தொழிலை செய்தாலும் அதை வங்கியாக .கருதமுடியாது" என்ற தீர்ப்பு தான் அது!! அது பற்றிய மேற்கொண்ட தகவலை இந்த பிளாக்கில்  தேடவும்

அவருடைய ஜாதகத்தில் ஆறாம் பாவத்தின் ஆறாம் பாவமான பதினொன்றாம் பாவம் வலுத்து இருந்திருக்கும். நிலையில், கடனை இப்படித் திருப்பி செலுத்த தேவையில்லாத நிலை தானாகவே அமைந்து விடும். !!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்பாக எந்தெந்த சட்டங்களின் கீழ் புகார் அளிக்கலாம்?

 பொதுவாக பெண்ணின் மாண்பை குலைக்கும் வண்ணம் செய்யும் செயலுக்கு இந்திய தண்டனை ச ட்டத்திலேயே தண்டனை குறித்து சொல்லப்பட்டு, அது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையகளில் புகார் கொடுக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே..

ஆனால் பணியிடங்களில் அவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்க சட்டம் ஒன்று 2013ல் கொண்டுவரப்பட்டது.. அதை பற்றி மட்டும்  சில விளக்கங்களை இங்கு பார்க்கலாம்.

விஷாகா வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் நாட்டில் உள்ள பல பணியிடங்களில் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. இத்தனைக்கும் விஷாகா என்ற மைல்கல் வழக்கு முடிந்து 16 ஆண்டுகள் ஆனபிறகு தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தச் சட்டத்தின் சிறப்பே, வயது அல்லது வேலையின் நிலையைப் பொறுத்து எந்த வித்தியாசமில்லாமல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும், எந்த வகையான துன்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான பணியிடத்தை வழங்குவதும் பணியிடத்தில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை பாதுகாப்பது மட்டுமின்றி தடுப்பதும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு விரைவான தீர்வை உறுதி செய்வதும் தான். இதே 2013 ஆம் ஆண்டில் தான்.  இந்திய தண்டனை சட்டத்திலும் ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, அதன்படி ஒரு பெண்ணை பின்தொடர்தல், பாலியல் துன்புறுத்தல் போன்றவையும் இப்போது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆனாலும் இதை எப்படி கையாள்வது என்பது குறித்த சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. அது குறித்த சில விளக்கங்கள் பாப்போம்.

இந்தச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, எந்தவொரு புகாரகளைத் தீர்ப்பதற்கும் குழுக்களை அமைப்பது. இது அமைப்புசாரா துறைகளுக்கும் செய்யப்பட வேண்டும்.

* 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தும் எந்தவொரு நிறுவனமும் அதன் அலுவலகம் அல்லது கிளையில் ICC என அழைக்கப்படும் உள் புகார்கள் குழுவைக் கொண்டிருக்க வேண்டும்.

* 10க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள்/அமைப்புசாராத் துறையினர் இவர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் எல்சிசி எனப்படும் உள்ளூர் புகார்க் குழு அமைக்கப்பட வேண்டும்.

ICC மற்றும் LCC ஒரு சிவில் நீதிமன்றத்திற்கு சமமான அதிகாரத்தை கொண்டவை. , பிரமாணத்தின் கீழ் எந்தவொரு குற்றம் சாட்டப்பட்ட நபரையும் அழைத்து விசாரணை செய்ய அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. புகார் தொடர்பான ஆவணங்கள், மற்றும் வழக்கை விரைந்து முடிக்க தேவையான எந்த விஷயமும் அவர்கள் மேற்கொள்ளலாம்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள், புகார் அளிக்க முன்வந்தால், என்னென்ன செய்யவேண்டும்>

  • நடந்த சம்பவத்தின்  எழுத்துப்பூர்வ புகார்களை வழங்க வேண்டும்.
  • இந்த புகாரில் பெயர்கள், சாட்சிகள் மற்றும் மிக முக்கியமாக கூறப்பட்ட சம்பவத்தின் சான்றுகள் உள்ளடங்கி இருக்க வேண்டும்.
  • துன்புறுத்தல் நடந்த 3 மாதங்களுக்குள் புகார் அளிக்கலாம். இந்த நேரத்தை இன்னும் 3 மாதங்களுக்கு குழுக்கள் அதிகரிக்கலாம்.
  • பாலியல் துன்புறுத்தல் ஒரு மனரீதியாக துன்புறுத்தும் கிரிமினல் நடவடிக்கையாக இருப்பதால், அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே அவர்கள் புகார்களை முன்வைக்கும் நிலையில் இருக்க மாட்டார்கள். உறவினர், உளவியலாளர், நண்பர்கள், சக பணியாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டவர் சார்பாக புகார் அளிக்க அதிகாரம் உள்ளது என சட்டம் கூறியுள்ளது.
  • ஐசிசி மற்றும் எல்சிசிக்கு இடைக்கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்டவருக்கு எதிரான பதிலளிப்பவரின் கடமைகளை மற்ற ஊழியர்களுக்கு மாற்றலாம்,
  • பாதிக்கப்பட்டவரை வேறொரு கிளை அல்லது பணியிடத்திற்கு மாற்றலாம் மற்றும் அவர்களுக்கு 3 மாதங்கள் வரை விடுமுறை அளிக்கப்படலாம்.
  • பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் தனி நபருக்கு விதிக்கப்படும் இழப்பீடுகள் மற்றும் தண்டனைகள் பற்றியும் சட்டம் விரிவாகக் கூறுகிறது.
  • நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ள விதிகளின்படி நிறுவன முதலாளி தண்டிக்க முடியும்.
  • ஆனால் அத்தகைய விதிகள் உருவாக்கப்படவில்லை என்றால், தண்டனையானது ஆலோசனை, சமூக சேவை, சேவை நிறுத்தம் அல்லது பதவி உயர்வு வரை இருக்கலாம்.
  • பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் இழப்பீடு, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் நபரின் சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும். பாதிக்கப்பட்டவர் அனுபவிக்கும் மன மற்றும் உடல் ரீதியான துன்பங்கள், வேலை இழப்பு, மருத்துவ செலவுகள், செலுத்த வேண்டிய இழப்பீட்டை தீர்மானிக்கிறது.
  • பாலியல் துன்புறுத்தல் புகார்களை நிவர்த்தி செய்ய எந்தவொரு அமைப்பும் ஐசிசியை அமைக்கவில்லை என்றால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

சரி….. இப்போது சில சந்தேகம் எழலாம்…

        1.   பணியிடத்தில் தொந்தரவு கொடுத்தால் தான் குற்றமா? அல்லது வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் சேவையைப் பயன்படுத்தி ஒரு சக ஊழியர் ஆன்லைனில் முன்மொழிகிறார், பாலியல் சலுகைகளைக் கேட்கிறார், காம எண்ணத்தை  வெளிப்படுத்துகிறார் அல்லது தன்னைப் பற்றிய பொருத்தமற்ற படங்களை அனுப்புகிறார். நீங்கள் பதிலளிக்க மறுக்கிறீர்கள் அல்லது அவரை நிறுத்தும்படி கேட்கிறீர்கள், ஆனால் அவர் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருக்கிறார். ஆன்லைனில் இது நடந்தாலும் பணியிடத்தில் இந்த பாலியல் துன்புறுத்தலா? என்ற சந்தேகம் இருக்கலாம். இது நிச்சயமாக பாலியல் துன்புறுத்தலாகத் தான் கொள்ளப்படும். 

  பாதிக்கப்பட்டவரும் துன்புறுத்துபவர்களும் பணியிடத்தில் (ஒரே அணியில் இருப்பதன் காரணமாகவோ அல்லது வேறு விதமாகவோ) தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டியிருந்தால், இது பாதிக்கப்பட்டவருக்கு விரோதமான பணிச்சூழலை உருவாக்குவதாகவும், அதன் அடிப்படையில் . பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல், என்றும் கருதப்படலாம்

எழுத்து மூலமான உரையாடல்  செய்திகளுக்கு மாறாக வாய்மொழித் தொடர்பு மூலம் ஒரு சம்பவம் நடந்தால், மீறலை எவ்வாறு நிரூபிப்பது??
இங்கே என்ன ஆதாரமாக இருக்கும்?
"இவை பெரும்பாலும் மிகவும் தந்திரமான சூழ்நிலைகள்"

 ஆவண ஆதாரங்கள் இல்லாத போது, ​​ யார்யாரெல்லாம்  பார்த்திருக்கலாம் என நினைக்கிறார்களோ அந்த சக ஊழியர்களின் பட்டியலை வழங்குதல், குற்றம் சாட்டப்பட்டவருடன் நடந்த உரைகள் அல்லது மின்னஞ்சல்கள் போன்ற ஏதேனும் எழுத்துப்பூர்வ தகவல் தொடர்புகளை வழங்குவது, சம்பவம் நடந்த உடனேயே அல்லது சம்பவம் தொடர்பாக (மன்னிப்பு கடிதம்  போன்றவை) அத்தகைய சந்தர்ப்பங்களில் ஆதாரமாக உதவியாக இருக்கும்

        ௨.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சம்பவம் நிகழ்ந்து, குற்றவாளி இனி அந்த அமைப்பில் பணிபுரிய வில்லை என்றால் அல்லது நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறியிருந்தால், அந்த நிறுவனத்தில் துன்புறுத்துதல் புகாரை இன்னும் பதிவு செய்து அவர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?


        சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் (அல்லது தொடர் சம்பவங்கள் நடந்தால் கடைசியாக நடக்கும்) பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகாரை அமைப்பின் ஐசிசியில் பதிவு செய்யலாம் என்று சட்டம் கூறுகிறது. ஐசிசி இந்த காலக் கட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க முடியும், அதன் பிறகு புகார்களுக்கு கால அவகாசம் உள்ளது. "பாதிக்கப்பட்டவர்"  அந்த அமைப்பில் இருந்து விலகியிருந்தாலும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புகார் அளிக்கப்பட்டாலும், அத்தகைய புகாரை ஐசிசி-யில் பதிவு செய்யலாம்.   இருப்பினும், சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தால், ஐசிசி புகாரை விசாரிக்க நேர தடை உள்ளது,

        பணி  செய்யும் ஒரு பெண்ணுக்குப் பரிகாரம் செய்வதற்கான வழிமுறைகள் இல்லாத நிலையிலிருந்து, நிவர்த்தி செய்வதற்கு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் வலுவான சட்டம் கொண்டு வரும் அளவிற்கு நாம் நிச்சயமாக வெகுதூரம் வந்து விட்டோம். பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தளை தடுக்கும் இந்த புரட்சிகரமான சட்டம் மிகப் பெரிய சமூக தாக்கங்களைக் கொண்டுள்ளது. ஆனால் நிச்சயமாக அதற்குத் தேவையானது பொது விழிப்புணர்வு, உணர்திறன் மற்றும் வலுவான செயல்படுத்தல் ஆகியவை தான்.

நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு உறக்கத்திலேயே இருக்கப் போகிறோம் ??

செவ்வாய், 23 நவம்பர், 2021

கொரோனா பெருந்தொற்று 2020 காலத்தில் வெளியில் சுற்றியதற்காக என் மீது ஒரு சிறிய பெட்டி வழக்கு போடப்பட்டு தற்போது உள்ளூர் காவல் நிலைய அலுவலர்கள் எனது கடவுச்சீட்டு (Pass port) விண்ணப்பத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வழக்கை முடிக்க ஏதேனும் வழி இல்லையா?

 எந்த வழக்கு நிலுவையில் இருந்தாலும் கடுவுச்சீட்டு பரிசீலனைக்கு அது தொந்தரவாகத் தான் இருக்கும்.

சமீபத்தில் லீனா மணிமேகலை அவர்கள் தனக்கு எதிராக போடப்பட்ட அவதூறு வழக்கை காரணம் காட்டி தன பாஸ்போர்டை முடக்கியதை எதிர்த்து மாண்புமிகு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் வந்த தீர்ப்பு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

"அவதூறு வழக்கு கொடுங் குற்றம் அல்ல. அதற்காக பாஸ்போர்டை முடக்கியது தவறு" என்று சொல்லவில்லையா?

உங்களடையது சிறு வழக்கு என்கிறீர்கள். கொரானா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் இருந்தது தவறு என்று நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு அதற்கான அபராதத்தை கட்ட முன்வந்தால் எல்லாம் சுபமே..

காவல் நிலையத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் போய் அந்த சிறு வழக்கின் குற்றப்பத்திரிகை நகலை கேளுங்கள். அநேகமாக ஏற்கெனவே உங்களுக்கு கொடுத்திருப்பார்கள். இல்லையென்றால் அதை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் காலை சரியாக பத்தரை மணிக்கு நீதிபதி இருக்கையில் அமர்ந்தவுடன், ஏதேனும் மனுக்கள் யாரும் கொடுக்க விருப்பம் இருந்தால் வாங்கி கொள்வார். அப்போது அந்த குற்றப்பத்திரிகையின் நகல் மற்றும், உங்களுடைய குற்ற ஒப்புதல் மனு, கோர்ட்டு வில்லையுடன் ஒட்டி, திறந்த நீதிமன்றத்தில் கொடுங்கள். இதற்கு எந்த வக்கீலின் உதவியும் தேவையில்லை. அப்படி தேவையென்றால், அந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்தின் உதவியை பெற்று கொள்ளலாம்.

உங்கள் மனு ஏற்றுகொள்ளப்பட்டு, அன்றைய தினமே பிற்பகலில் நீதிமன்றப் பணி உணவு இடைவேளைக்கு பிறகு துவங்கும்போது உங்கள் வழக்கு எடுத்துகொள்ளப்பட்டு, ( சில சமயம், அந்தந்த நீதிமன்ற பணிசுமைக்கேற்ப நேரம் மாறலாம். ஆனால் அன்றைய தேதியிலேயே வழக்கை முடித்து விடுவார்கள்) எவ்வளவு அபராதம் என்று உத்தரவிடுவார்கள். அதை நீங்கள் கட்டி ரசீது பெற்று, காவல் நிலையத்தில் காட்டலாம்.

ஆனால் குற்றப்பத்திரிகையை போலீசார் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றால், அதையே ஒரு தனி ப்புகார் மனுவாக எழுதி, போதிய நீதிமன்ற விலை ஒட்டி, நீதிபதியிடம் சமர்பிக்கலாம். உடனே இரண்டொரு நாளில் அந்த குற்றப்பத்திர்க்கை கோர்டில் தாக்கல் செய்யப்பட்டு உங்களுக்கு நகல் வழக்கப்பட்டு விடும்.

போலீசார் லஞ்சம் எதிர்பார்த்தே உங்கள் சிறு வழக்கை நிறுத்தி வைக்கிறார்கள்., அதனால் நீங்கள் அதை கொடுத்து விடுங்கள் என்று மற்றவர்கள் உங்களுக்கு அறிவுரை சொல்லலாம்.. ஆனால் நான் அவ்வாறு சொல்ல மாட்டேன்.

போலீசார் செய்யும் தவறான காரியங்களுக்கு உடந்தையாக நாம் இருந்து விட்டு, பிறகு அவர்களை குறை சொல்வது நியாயமல்ல.

நீங்கள் உங்கள் செயல்களில் சரியாக இருந்தீர்கள் என்றால், யாரும், போலீசார் உட்பட , உங்களிடம் சரியாகவே நடந்து கொள்வர்.

திங்கள், 22 நவம்பர், 2021

இறந்த மகனின் சொத்துக்கு சட்டப்பூர்வ வாரிசு ? யார் வருவார்கள்? 1) தந்தை உள்ளார், மனநிலை பாதிக்கப்பட்டவர். 2) இறந்தவருக்கு தம்பி உள்ளார், வயது 14. 3) தாய், வேறு திருமணம் செய்து, வேறு ஊரில் வாழ்ந்து வருகின்றார். இவர்களில் யார் வாரிசாக வருவார்கள்?

 திருமணமாகாத மகனின் வாரிசாக அவரின் பெற்றோரும் அவர்கள் இல்லாத பட்சத்திலேயே அவரின் சகோதரர் வாரிசாக முடியும்.

தந்தை மனநிலை பாதிக்கபட்டிருந்தாலும் வாரிசு தான்.

வேறு திருமணம் செய்திருந்தாலும் இறந்தவரின் தாய் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஞாயிறு, 7 நவம்பர், 2021

ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 ஆபாசத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

        ஆபாசம் என்பது பார்க்கும் பார்வையில் உள்ளது என்பது என் கருத்து.

        அதை மறைத்துக் கொண்டு மற்றவர் அணியும் உடையில் உள்ளது என்று குற்றத்தை மடை மாற்றுவார்கள்!!

        இப்போது அடுத்த படியாக தாய்மையும் ஆபாசம் என்ற நிலைக்கு வந்து  விட்டனர்!!

        பாலூட்டும் பெண்ணை தன் தாயாக, சகோதரியாக பார்க்கும் நிலை போய், தன் காம இச்சையை தூண்டும் தன்மையாக பார்த்ததும் இல்லாமல், அது "அசிங்கம்" என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரும் அளவிற்கு தரம் குறைந்து விட்டது!

        " 'தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணின்' படம் உள்ள பத்திரிக்கையின் அட்டை ஆபாசமானதாக அறிவிக்க கோரி மனு போடப்பட்டது இங்கல்ல...

        கற்றோர் அதிகம் உள்ள கடவுளின் நாடான கேரளத்தில்.


        ஆனால் அதை மறுத்த மாண்புமிகு கேரள உயர் நீதிமன்றம் "ஒருவரின் ஒழுக்கத்தை பற்றிய கருத்து அதிர்ச்சியடையச் செய்கிறது" என்றும் இது ஒரு "மழுப்பலான கருத்து" என்றும் கூறியுள்ளனர்.

        "ஒருவருக்கு ஆபாசமாக தெரிவது மற்றொருவருக்கு பாடல் வரிகளாக தெரியும்": என்றும் குறிப்பிட்ட. மாண்புமிகு தலைமை நீதிபதி ஆண்டனி டோமினிக் மற்றும் நீதிபதி தாமா சேஷாத்ரி நாயுடு ஆகியோர், “நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தாலும், ஆபாசத்தை எங்களால் பார்க்க முடியவில்லை." என்றனர்.

        அத்தோடு, நம் பண்டைய வரலாற்றை சுட்டிக்  காட்டி," இந்தியாவின் நீண்ட வரலாறு முழுவதும், இந்தியாவின் கலைகள்-காட்சி மற்றும் இலக்கியம்-மனித உடலின் அழகை தொடர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள், இதை பற்றிய குறிப்புகளை, அப்போதைய மிகவும் பாராட்டப்பட்ட பயண எழுத்தாளர் வில்லியம் டால்ரிம்பிள் நூலில் உள்ளது என்று சொல்லியதோடு அல்லாமல், அதை தங்கள் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

.         "யோகாவின் பாரம்பரியம், என்பது, அதை முழுமையாக்குவதையும் மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது என்று தொடரும் அவர் "வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உடலை கடவுளை போல மாற்றும் நோக்கம் கொண்டதே யோகக் கலை. இந்த பாரம்பரியத்தில் தெய்வீகம். , உணர்வு மற்றும் புனிதமானவை எதிர்க்கப்படவில்லை. உண்மையில் உணர்வுபூர்வமானது என்பது, புனிதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகத் தான் பார்க்கப்பட்டது.   அதனால் அவர்கள் கடவுள்களும் எப்போதும் மனிதாபிமானமுள்ளவர்களாக, மிகுந்த அழகுடையவர்களாக சித்தரிக்கப்பட்டனர்" என்று  அவர் குறிப்பிட்டதை கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்!

"காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்"

'One Man's Vulgarity Is Other Man's Lyric': Kerala HC Refuses To Declare 'Breastfeeding Woman On Magazine's Cover' As Obscene | Live Law 'One Man's Vulgarity Is Other Man's Lyric': Kerala HC Refuses To Declare 'Breastfeeding Woman On Magazine's Cover' As Obscene via @livelawindia William Dalrymple on Twitter

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...