வெள்ளி, 29 மார்ச், 2024

அரசு ஊழியர் நடத்தை விதிகள்

 

அரசு ஊழியருக்கு எதிராக பணியை தவிர்த்த சம்பவங்களில் FIR போட்டால் கூட, அது அவர் பணியை பாதிக்குமா?

 அரசு ஊழியர் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்கிறார். ஆனால் அவரின் சகோதரருக்கு எதிராக தொடரப்பட்ட இலஞ்சப் புகாரில் இவரும் இணைக்கப்படுகிறார்.  இலஞ்சப் பணம் இவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை அடுத்து..கைதும் ஆகிறார்..

இதைக் காரணம் காட்டி, இவர் துறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது .   "இது தவறு.  எனது அரசுப்பணிக்கும் இந்த குற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை .அதனால் எனக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோவை இரத்து செய்ய வேண்டும் என்று நமது உயர் நீதிமன்றத்தை   நாடுகிறார். 

அதற்கு உயர் நீதிமன்றம் சொன்னது?


"இவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால்,, ஒருவரை கொலை செய்ததால் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இன்னொரு அரசு ஊழியர் கூட , "இந்த குற்றம் , என் பணியோடு சம்பந்தப்பட வில்லை " என்று இதே வாதத்தை முன்வைக்கலாம்....  

பணியோடு சம்பந்தப்படாவிட்டாலும், மிகவும் மோசமான Misconduct இருப்பது தெரிய வந்தால், அந்த அரசு ஊழியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு துறைக்கு எந்த தடையும் இல்லை " என்று கூறி சமீபத்தில் மேற்படி  வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர் நீதியரசர்கள் G.ஜெயச்சந்திரன் மற்றும் C.குமரப்பன் அவர்கள்.Kramachandran v.The District Educational Officer(Elementary Education) & Another

இந்த வழக்கை சம்பந்தப்பட்ட ஆசிரியரே தாமாக வழக்கை நடத்தி இருக்கிறார்.

இந்த வழக்கின் சாராம்சத்தை பார்க்கும்போது,  அரசு ஊழியர் நடத்தை விதிகள் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் இது தொடரப்பட்டுள்ளது என்பது தெரிகிறது . 

ஒரு அரசு அலுவலக நடைமுறையை பற்றி  சொல்லும் கையேடு தான்   fundamental Rules.  இதில் அடிப்படை விதி 11 சொல்வதை பாருங்கள் :

Fundamental Rule 11 :: "unless in any case it be otherwise distinctprovided, the whole time of a Government servant is at the disposal of the Government which pays him and he may be employed in any manner required by proper authority without claim for additional remuneration."

ஒரு அரசு ஊழியரின் பணி நேரம் வரையறுக்கபட்டதல்ல . அது எப்போது வேண்டுமானாலும் , அவர் மேலதிகாரியினால் தேவைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படலாம்.  ஏற்கெனவே ஒரு பதிவில் , இந்த 'Whole" time employment குறித்து நான் பார்த்த அலுவலக குறிப்புகளை சொல்லியிருப்பேன் .  "Full" time Employee என்றில்லாமல் , "Whole Time"Employee  என்று சொல்வதில் இருந்தே இந்த  வித்யாசம் தெரிகிறதல்லவா?

இந்தப் புரிதல் இருந்தால் நிறைய அரசு ஊழியர்கள் தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ளமாட்டார்கள்.


வெள்ளி, 8 மார்ச், 2024

இரண்டாம் மனைவிக்கு ஜீவனாம்சம் பெறும் உரிமை உள்ளதா?

 1955 இந்து திருமண சட்டத்தின்படி, கணவனோ மனைவியோ இருக்கும் போது , மற்றவர் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டால், அதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது.

விவாகரத்து செய்வதற்கு உரிய காரணங்களை இந்து திருமண சட்டப் பிரிவு 13 குறிப்பிட்டாலும், முதல் மனைவியோ அல்லது கணவனோ இருக்கும் போது இரண்டாவதாக திருமணம் நடந்ததாக கணக்கில் கொள்ளப்படாது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை என்று தான் சட்டம் சொல்கிறது.

புகழ்பெற்ற லில்லி தாமஸ் எதிர் யூனியன் ஆப் இந்தியா MANU/SC/0327/2000 வழக்கில், கணவர் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வதற்காக முஸ்லிமாக மதம் மாறுகிறார், என்றாலும் அந்த இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் , இந்து திருமண சட்டப்பிரிவு 17 ன் படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு திருமணம் செய்வது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 494ன் படி தண்டனைக்குரியது என்றது.

அப்படி வாழும் மனைவியை அவள் வாழ்நாள் முழுதும் கணவன் பராமரிக்க வேண்டும் என்று இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம், 1956 (Hindu Adoption and Maintenance Act, 1956) சட்டப்பிரிவு 18 சொல்கிறது. மனைவி இருக்கும் போது , இன்னொரு திருமணம் செய்வது செல்லாது என்று சொல்லும் அதே வேளையில், ஷை சட்டப்பிரிவு 18(2) , இன்னொரு மனைவியுடன் கணவன் வாழ்ந்து வந்தால் , முதல் மனைவி அவளுடைய ஜீவனாம்சம் கோரும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் , தனியாக வாழலாம் என்றும் சொல்கிறது.

சட்ட நிலை இப்படியிருக்க, நம் நாட்டில் பெருவாரியான பெண்ணின் பகுத்தறியும் நிலை ஆண்களுக்கு இணையாக இல்லை என்னும் போது , அதை பயன்படுத்தி, முதல் திருமணத்தை மறைத்து , இன்னொரு திருமணம் செய்து, அந்த இரண்டாம் மனைவியை சரியாக கணவர் பராமரிக்காவிட்டால், அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும் அந்த கனவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும்உரிமையுள்ளதா? என்ற கேள்வி எழும்.

இதே போன்ற சூழல் கொண்ட நரிந்தர் பால் கவுர் சாவ்லா எதிர் மன்ஜீத் சிங் சாவ்லா Civil 2606 of 2004 என்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது, டெல்லி உயர் நீதிமன்றம், "இப்படி முதல் திருமணத்தை மறைத்து , இன்னொரு திருமணம் செய்த ஆணுக்கு இரண்டாம் மனைவியை பராமரிக்கும் கடமை இல்லடி என்றால், அந்த தவறை செய்ய ஊக்குவித்தது போலாகும்" என்று கூறி, இரண்டாம் மனைவியும் ஜீவனாம்சம் பெற உரிமையுடையவர் என்றது.

உச்ச நீதிமன்றமும் இதையே ஆமோதித்து , பாட்ஷா எதிர் ஊர்மிளா பாட்ஷா,(2014) 1 SCC 188. என்ற வழக்கில் , இரண்டு காரனங்களுக்காக இரண்டாம் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெறும் தகுதி உள்ளது என்றது..

  1. முதல் திருமணம் நடந்ததை இரண்டாம் மனைவ்யிடன் கணவன் மறைத்து திருமணம் செய்தது
  2. இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தது

ஆனாலும், இந்து திருமண சட்டப்பிரிவுகள் 5 மற்றும் 11 படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது , இரண்டாம் திருமணமே செல்லாது என்னும்போது அந்த மனைவிக்கு ஜீவனாம்சம் கோரும் உரிமை குறித்து நீதிமன்றங்களிடையே இரு வேறுபட்ட பார்வைகளே உள்ளது.

சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையை பயன்படுத்தி தான் இரண்டாம் திருமண ம் செய்யும் ஆண்கள் தப்பித்து வருகின்றனர்.

அப்படியானால், இரண்டாவது மனைவிக்கு தீர்வு தான் என்ன?

மேற்சொன்ன பாட்ஷா எதிர் ஊர்மிளா பாட்ஷா வழக்கிலும், அவள் கணவனும் , மேற்சொன்ன வாதங்களை தான் முன் வைத்தான். மேலும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 125 படி "மனைவி" என்ற சொல் "சட்டப்பூர்வமான மனைவியையே " குறிக்கும் என்று வாதாடினான்.

ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து, அவர்களுக்கிடையே திருமணம் இந்து முறைப்படி நடந்தது என்பதாலும், முதல் திருமணத்தை மறைத்த கணவனின் செயலினாலும், அவன் இரண்டாம் மனைவிக்கும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 125 படி ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவன் என்றது.

அதே போல 'கணவன் மனைவியாக வாழ்ந்ததை இரண்டாம் மனைவி நிரூபித்தாலும், அவர் ஜீவனாம்சம் பெற தகுதியுடையவர் என்று துவாரிகா பிரசாத் சத்பதி எதிர் பித்யுத் பரவா தீட்சித் மற்றும் ஒருவர் (1999) 7 SCC 675 என்ற வழக்கில் தீர்ப்பளித்தது.

சான்முனியா எதிர் வீரேந்திர குமார் சிங்க் குஷ்வாஹா மற்றும் ஒருவர் (2011) 1 SCC 14 என்ற வழக்கில், 'மனைவி ' என்ற சொல்லுக்கு பரந்த அளவில் பொருள் கொண்டு, நெடுங்காலமாக கணவன் மனைவியாக வாழ்பவரையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றது.

அதற்காக ஒரு பெண் தன் முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்திருந்தால்?" என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.

அதை 'துன்புறுத்தல் 'என்று வகைப்படுத்தி இரண்டாம் கணவன் விவாகரத்து பெறலாம்.

இன்னும் சொல்லப் போனால், உச்ச நீதிமன்றம் ஒரு படி முன்னேறி, ரமேஷ் சந்திர டாகா எதிர் ராமேஸ்வரி டாகா AIR 2005 SC 422 என்ற வழக்கில், இரண்தாம் திருமணம் சட்டப்படி ஏற்புடையது அல்ல என்றாலும், அவனை போருலாதாதார ரீதியாக சார்ந்திருக்கும் இரண்டாம் மனைவியை , இந்த காரணம் காட்டி புறம் தள்ளுவது சரியல்ல என்றது..

சமீபத்தில் இதே போன்ற ஒரு வழக்கு X v. State of Maharashtra, 2023 SCC OnLine Bom 2676...மும்பை உயர் நீதிமன்றம் முன்பு வந்தது. இந்த கணவர் ஒரு படி மேலேறி இரண்டாம் திருமணம் நடக்கவில்லை என்றும், அந்த பெண்ணை தனக்கு தெரியாது என்றும் அவருடன் ஒன்றாக வாழ்ந்ததே இல்லை எண்டும், அந்த பெண்ணின் பிள்ளைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும் அவருடன் தான் , தான் இன்னமும் வாழ்வதாகவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தின் மேற்சொன்ன வழக்குகளையெல்லாம் கணக்கில் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், கணவன் மனைவியாக லிவ் இன் தொடர்பில் உள்ளவரும் கு.வி.மு.ச.பிரிவு 125 படி ஜீவனாம்சம் பெற உரிமை உள்ள நிலையில், இரண்டாம் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்றது.

இதிலிருந்து , கணவன் மனைவியே யானாலும், பிரச்சினை என்று வரும் போது ஆண் தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் போது , நீதிமன்றங்கள் தான் பெண்களின் உரிமைகளை பேணிக் காப்பதில் முன்வகிக்கிறது என்பதை அறிவோம்.

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள் !!

வியாழன், 7 மார்ச், 2024

முஸ்லிம் பெண்களுக்கு 'குலா' என்னும் விவாகரத்து கொடுக்கும் உரிமை இன்னமும் இருக்கிறதா?

 முஸ்லிம் பெண்களுக்கு, அவர்கள் கணவரிடமிருந்து 'தலாக்'என்னும் விவாகரத்து பெறும் 'உரிமை(?!) மட்டும் தான் உள்ளது என்று தான் பெரும்பான்மையானோர் நினைத்திருப்பார்கள். சமீபத்தில் காட்டுத் தீயாய் பரவிய சானியா மிர்சா தன் கணவருக்கு 'குலா' என்னும் விவாகரத்து கொடுத்த செய்தியின் போது தான் , 'குலா" என்றால் என்ன? என்று தேட ஆரம்பித்தனர்.

'தலாக்'கிற்கும் 'குலா'விற்கும் என்ன வித்தியாசம்?

தலாக்கை கொடுப்பது ஆண் தன் மனைவிக்கு .

ஆனால் …

ஒரு திருமணமான பெண் தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத பட்சத்தில் , அவருக்கு 'குலா ' (விவாகரத்து) கொடுக்கலாம். இதை அவள் கணவன் ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவள் அந்த விவாகத்திலிருந்து 'விடுதலை' பெற , முதலில் அவர் கொடுத்த மகர் பணத்தை திரும்ப கொடுப்பது, பண சம்பந்தமான சுமூக தீர்வு காண்பது , தங்கள் குழந்தைகள் குறித்த முடிவுகளை சேர்ந்து எடுப்பது என்று அவர்கள் சம்பந்தப்பட்டவைகளுக்கு ஒத்த முடிவுகளை எடுக்கும் போது அவள் கணவன் சம்மதம் தெரிவிப்பான். அப்போது தான் அந்த பெண் அந்த திருமண பந்தத்திலிருந்து மீள முடியும்.

ஆனால் இதை அவள் கணவன் 'தலாக்' கொடுப்பது போல , தனித்து செய்ய முடியாது. ஒரு ஷரியத் அமைப்பிலோ அல்லது மத குருமார்களின் முன்போ அல்லது நீதிமன்றத்தின் மூலமோ மட்டுமே செய்ய முடியும்.

இந்த சட்ட அந்தஸ்து உள்ள ஷரியத் அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் இங்குள்ள பெரும்பான்மையான 'ஜமாத்' குழுவினர் , முஸ்லிம் தனிப்பட்ட சட்ட அம்சங்களான திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்தில் பங்கு பிரிப்பு என்று முஸ்லிம்களின் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு 'தீர்த்து' வைக்கின்றனர்.

அதுவும் ஒவ்வொரு முஸ்லிம் ஊருக்கும் , ஒரு ஜமாத் என்ற அமைப்பு இருக்கும். அந்த ஊரில் இல்லாமல், பெரும்பான்மையானோர் குடி பெயர்ந்து வேறு இடம் மாறினாலும், இந்த அமைப்பிற்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால், சொந்தம் பந்தம் இல்லாமல் 'தனித்து' விடப்படுவர். சென்னை திநகரில் இயங்கி வரும் கமுதி முஸ்லிம் நல சங்கம் இதற்க்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இது போன்ற தவ்லீக் ஜமாத்' என்ற அமைப்பு தான் முஹமத் ரபிக்கின் மனைவி சயீதா பேகத்தின் குலா என்ற விவாகரத்து கோரிய மனுவை விசாரித்து அதை அனுமதித்தது, அவர்களுக்கு 2013 ல் திருமணம். 2015ல் குழந்தை .2016 ல் ரபிக்குடன் வாழ பிடிக்காமல் சயீதா பேகம் வெளியேறுகிறார். 2017ல் குலா என்னும் விவாகரத்து கோரி அந்த ஜமாத்தை அணுகியது.

ஆனால் தன ஒப்புதல் இல்லாமல் அவர்கள் வழங்கிய இந்த சான்றிதழ் செல்லாது என்று கூறியும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியும் முகமத் ரபிக் உயர்நீதிமன்றத்தை நாடுகிறார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி சரவணன் அவர்கள்,

" இது போன்ற ஷரியத் அமைப்பு, சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை.. ஒரு 'அரசு அமைப்பு' போன்ற மாயையை ஏற்படுத்தினாலும் அவை 'அரசு' அல்ல.

மேலும் 2014லிலேயே 'விஷ்ணு லோசன் மதன்' என்ற வழக்கில் "ஷரியத் நீதிமன்றங்களுக்கு எந்த சட்ட அந்தஸ்தும் கிடையாது" என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதனால் , இது போன்ற விவாகரத்து சான்று வழங் க அந்த ஷரியத் அமைப்பிற்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று தீர்ப்பு எழுதுகிறார் நீதியரசர் சரவணன்.

ஆனால் இதை விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய ஒருவர், முஸ்லிம் பெண்கள் ஏற்கெனவே ஒரு பாரபட்சமான சூழலில் இருக்கும் போது அவர்களே விவாகரத்து வேண்டும் என்னும் போது, நீதிமன்றத்தை தான் அணுகவேண்டும் என்பது, அவர்களை இக்கட்டான சூழலில் இட்டு செல்கிறது என்றும் அதற்கு பதிலாக தம்பதியினரிடையே மத்தியஸ்தம் செய்வது போன்ற வழிகளை காட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருந்தார்.

நீதியரசர் சி.சரவணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு , முஸ்லிம் பெண்களுக்கு உள்ள உரிமைகளை மீடேடுப்பதர்கான ஒரு அம்சமாகத் தான் நான் பார்க்கிறேன். ஏனெனில், இந்த 'ஜமாத்' அமைப்பினர், 1937 ஷரியத் சட்டத்தின் கீழ் தங்களுக்கு ஒரு அதிகாரம் இருபபது போன்ற ஒரு தோற்றத்தை தந்து, முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் தலையிட்டு, அதை குறைத்து மதிப்பிட்டு வந்தனர். இதில் குறிப்பாக, எந்த ஒரு ஜமாத் அமைப்பிலும் ஒரு பெண் கூட அங்கள் இல்லை!!

நீதியரசர் சரவணனின் தீர்ப்பு அந்த மாயத் தோற்றத்தை கலைத்தது, அதற்கு முன்னரே எல்லாவற்றிலும் முன்னோடியாக நிற்கும் கேரளா உயர்நீதிமன்றம் இது குறித்து பரபரப்பு கிளப்பிவிட்டது.

.நீதியரசர்கள் முஹமது முஷ்டாக் மற்றும் நீதியரசர் சி.எஸ்.டையாஸ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ."முஸ்லிம் பெண்கள் தங்களின் கணவரின் சம்மதம் பெற்றே 'குலா' என்ற விவாகரத்து கொடுக்க முடியும் என்ற நிபந்தனை சரியானதல்ல. அவர்களுக்கு குலா' வழங்க முழு உரிமை உள்ளது" என்று அதிரடியாக தீர்பளித்தது. 'தலாக் ' வழங்கும் போது கணவனுக்கு உள்ள முழு அதிகாரம், 'குலா' வழங்கும் முஸ்லிம் பெண்ணிற்கும் உள்ளது. அதற்காக அவள் கணவனின் சம்மதம் பெறத் தேவையில்லை " என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முஸ்லிம் பர்சனல் போர்டு, கணவனின் சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் குலா கொடுக்க முடியாது என்று சொல்லியுள்ளது.

1939 ல் வந்த Dissolution of Muslim Marriage Act படி குலா வழங்க ஒரு முஸ்லிம் பெண் காட்ட வேண்டிய காரணங்களை தான் பட்டியலிடுகிறது. அப்படியானால் , அவள் தன் விருப்பமாக குலா ' கொடுக்க முடியாதா? " என்ற கேள்வியை முன் வைத்து தற்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

தற்போது பொது சிவில் சட்டம் நாடெங்கிலும் கொண்டு வரவிருபபதாக மத்திய அரசு சொல்லி வருகிறது. ஒரு விதத்தில் அது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு விடுவு காலம் கிடைக்கும் என்றே சொல்லலாம்.

இதோ அவர்கள் தனி சட்டத்தில், பெண்களுக்கு காட்டப்பட்டு ஏற்றத்தாழ்வை நீங்களே பாருங்கள்:

  1. ஒரு முஸ்லிம் ஆணின் சாட்சியம் இரண்டு முஸ்லிம் பெண்களின் சாட்சதிர்க்கு சமம்.
  2. ஒரு முஸ்லிம் ஆண் இறந்தால், அவன் சொத்தில் அவன் மனைவிக்கு, குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ,எட்டில் ஒரு பங்கும், குழந்தை இல்லை என்றாலோ கால் பங்கும் கிடைக்கும். இதுவே ஒரு முஸ்லிம் பெண் இறந்தால், அவள் கணவனுக்கு அவள் சொத்தில் குழந்தை இல்லாத போது, பாதி பங்கும் குழந்தை இருந்தால் கால் பங்கும் கிடைக்கும்.
  3. ஒரு முஸ்லிம் ஆண் அவன் மனைவியை தலாக் செய்ய எந்த காரனமும் சொல்லத் தேவையில்லை (இப்போது தான் ட்ரிபிள் தலாக் " ஏற்புடையது அல்ல என்பது சட்ட விதியாகியுள்ளது) ஆனால், அவன் மனைவி விவாகரத்து பெற விரும்பினால், அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் அத்தோடு நில்லாமல், அவள் கணவன் அவளுக்கு திருமணத்தின் போது கொடுத்த மகர் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். குழந்தை யை யார் பராமரிப்பது, சொத்து பணம் குறித்த விஷயங்களில் கணவன் சம்மதத்துடன் தீர்வு கண்ட பின்பே அவள் அந்த திருமண பந்ததிலிருந்து மீண்டு வர முடியும்.
  4. விவாகரத்து பெற எண்ணும் ஆண் , நேரில் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு முகவரை நியமித்து அவர் மூலமாகவும் இதை செய்யலாம். ஆனால் இதை ஒரு முஸ்லிம் பெண் செய்ய முடியாது.
  5. அதே போல ஒரு குழந்தையின் இயற்கை பாதுகாவலராக அதன் தந்தையும் அதற்கு பின் அதன் தாய் ' என்று இந்து சட்டம் சொல்ல(இதற்கே இப்போது பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது}ஆனால் முஸ்லிம் சட்டத்திலோ அதன் தகப்பன் மட்டுமே இயற்கை பாதுகாவலர். அதன் வாழ்விற்கு உரிய எந்த முடியும் எடுக்க அதன் தந்தைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தாய்க்கு எந்த வித உரிமையும் கிடையாது.
  6. முஸ்லிம் பெண் அவள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டால் , அவள் பெற்றோர், அல்லது அவள் சகோதரர்…அவர்களாலும் முடியவில்லையில்லை என்றால் வக்ப் போர்டு அவளுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று சட்டம் சொன்னாலும், நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமேயில்லை.

நிலை இப்படி இருந்தாலும் முஸ்லிம் பெண்கள் வாய் திறந்து தங்கள் உரிமை குறித்து பேச வர மாட்டார்கள். அவ்வளவு பயம்.!!!!

இதற்கு ஒரே தீர்வு UNIFORM CIVIL CODE!!

ஞாயிறு, 26 நவம்பர், 2023

தாய் வீட்டில் வசிக்கும் உரிமை திருமணமான பெண்ணுக்கு உள்ளதா?

 சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம, திருமணமான பெண் கணவருடன் வேறு ஊருக்கு குடித்தனம் செய்யப் போவதாலேயே, பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமையை இழந்து விட்டதாக கொள்ள முடியாது" என்றுள்ளது. 

இது நிறைய பேருக்கு ஒரு குழப்பத்தையே ஏற்படுத்திள்ளது.

திருமணமான பெண்ணுக்கு, சீர் வரிசை கொடுத்து வசதியாக, ஆடம்பரமாக திருமணம் செய்துக்  கொடுத்தாலும், சொத்தில் அவளுக்கு கொடுக்க வேண்டிய  பங்கை கொடுக்கத் தான் வேண்டும் என்றிருக்கும்போது,  இப்போது என்ன..புதிதாக ?....

"திருமணமான பின்னும், அவள் அங்கே வசிக்கும் உரிமை உள்ளது என்றால்...அவள் கணவனுடன் வந்து தங்கினால்...அது அங்கு வசிப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?

திருமணம் செய்து, சீர் கொடுத்து, சொத்தில் சம பங்கும் கொடுத்து,  வாழும் வீட்டிலும் தங்க இடமும் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி? என்று நிறைய பேருக்கு ஆதங்கம் உள்ளது

சமூக கண்ணோட்டத்தை  தவிர்த்து, சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், 

இந்து வாரிசுரிமை சட்டப் பிரிவு 23 யை பார்ப்போம்.

திருமணமான பெண் பிறந்த வீட்டில் , சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமை கிடையாது என்கிறது.  அதாவது, அந்த வீட்டில் அவளுடன் பிறந்த சகோதரர்கள் இருக்கும்போது,  அவர்கள் என்று சொத்தை பங்கு பிரிக்க நினைகிரார்களோ, அப்போது தான், அவளுக்கும் அதில் பங்கு கொடுக்கும் நிலை ஏற்படும்"  என்கிறது. 

அப்படியானால், ஆணுக்கு சமமாக பெண் வைக்கப்படவில்லையா?

அவள் சகோதரர்கள் விரும்பும் போது தான் சொத்து பங்கீடு செய்யலாம் என்றால், அவள் சட்டத்தின் பார்வையில் சற்று இறக்கமாகத் தானே வைக்கபடுகிறாள்?" என்ற கேள்விக்கு  உச்ச நீதிமன்றம்  ஒரு வழக்கில் பதிலளித்துள்ளது.

குடும்ப சொத்து துண்டுபட்டு விடக்கூடாது என்பதைத் தான் சட்டம் இயற்றியவர்கள் கருத்தில் வைத்துள்ளனர் என்றது. 

ஆனாலும், இந்த விஷயத்தில் தமிழ் நாடு புண்ணியம் கட்டிகொண்டது.

தமிழ்நாட்டில், பெண்களுக்கான சரி சமமான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதால், அவளும்,  இந்து கூட்டு குடும்பத்தில் , உரிமையாளர் ஆகிறாள் என்பதால், அவளுக்கும் அவள் சகோதரர்களை போலவே சம உரிமை வருகிறது என்பதால், அவர்களை போலவே, அவளுக்கு சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமையும் வந்துவிடுகிறது. 

சரி,  அது தான் அப்படி என்றால், திருமணமான பெண்னுக்கு  பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை , அவள் கணவன் இறந்து விட்டாலோ, பிரிந்து சென்றாலோ அல்லது கைவிட்டுவிட்டாலோ , தான் கிடைக்கும்.

அதாவது...அவள் கணவனுடன் வாழும் போது இந்த உரிமை கிடையாது என்கிறது.

இதிலும் ஒன்று கவனித்தீர்களா....

திருமணம் ஆன பெண்ணுக்கு தான் இந்த நிபந்தனைகள்

 திருமணமாகாத பெண்ணுக்கு  அப்படியில்லை.  பிறந்த வீட்டில் வசிக்கு உரிமை அவளுக்கு  உள்ளது. 

இது பெண்களுக்குள்ளேயே பாகுபாடு பார்ப்பதாகிடவில்லையா?

திருமணமான பெண்ணுக்கு வசிக்கும் உரிமை கிடையாது  ஆனால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு என்றால்?

 இது போன்ற வித்தியாசம் ஆணுக்கு இல்லையே..

அவனுக்கு திருமணம் ஆனாலும் சரி, ஆகவில்லை என்றாலும், அவனுக்கு பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு.

ஆனாலும் இந்த வேறுபாடு அப்படியே நிலைத்து இருக்கும் போது வந்தது குடும்ப வன்முறை சட்டம்.

அதில் பிரிவு 17 ல் சொல்லப்பட்ட "பகிர்ந்து குடியிருக்கும்  வீட்டில்" அவளுக்கு உரிமை உள்ளதோ இல்லையோ, ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்களுடன் அவளுக்கு குடும்ப  ரீதியான உறவு, ...அதாவது  தாய், மாமியார், மருமகள், சகோதரி என்று இருந்தால்,  அங்கு வசிக்கும் உரிமை உள்ளது?" என்று சமீபத்தில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.


அப்படியானால், திருமணமான பெண்ணுக்கு அவள் தாய் வீட்டில் வசிக்கும் உரிமை வந்து விடுகிறது.

இது கொஞ்சம் ஓவர் இல்லையா என்பீர்கள் சிலர். 

ஆனால், இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் போது சொன்ன காரணத்தை சற்று கவனியுங்கள்...

"இந்தியாவில், ஒரு பெண், தனது திருமணத்தின் போது தனது கணவருடன் வசிப்பது ஒரு சமூக விதிமுறையாகும், தொழில் அல்லது வேலை உறுதிப்பாடுகள் அல்லது பிற உண்மையான காரணங்களுக்காக, கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் வசிக்க முடிவு செய்கிறார்கள். ஒரு குடும்ப உறவில் இருக்கும் பெண் நியாயமான காரணத்திற்காக வேறு இடத்தில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் கூட, பகிரப்பட்ட குடும்பத்தில் வசிக்க அவளுக்கு உரிமை உண்டு."

அப்படியானால்....

கேள்விக்கு பதில் "ஆம்"..



புதன், 22 நவம்பர், 2023

ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?

ஏன் விவாகரத்தை விட நீதிமன்ற ஆணையுடன் பிரிந்து வாழ்வது சிறந்தது?



      திருமண உறவு நம் நாட்டில் ஒரு மங்களகரமான அம்சமாக பார்க்கப்படுகின்றது. இந்து திருமண சடங்குகளில் கூட, “இவர்கள் ஏழு பிரவியுளும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்ற  சடங்குகள் உண்டு. அவர்களுக்குள் பிரிவு என்பது ஒருவர் இறப்பில்  தான் இருக்க வேண்டும் என்ற நிலை தான் இருந்து வருகிறது . அதனால் தான், நம் அப்பா தாத்தா காலத்தில், ஒத்துப் போகாத தம்பதியரும் சேர்ந்து வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.  

 

        பின்னர், நாகரீகம் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக விவாகரத்து என்ற கருத்து இந்தியாவிலும்  புகுந்து , இந்து திருமணச் சட்டம், 1955 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

      அதன்படி, கணவன்-மனைவி இடையே தவறான புரிதல் அல்லது அலட்சிய நடத்தை காரணமாக ஏற்படும்  குடும்பத் தகராறுகளில். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்க, இந்து திருமணச் சட்டம், 1955ல் சில வழிமுறைகளை காட்டுகின்றது . அதில் சொல்லப்பட்ட திருமண உறவை தற்காலிகமாகவும் நிலையாவும் முறிக்கக் கூடிய, ‘ விவாகரத்து’ மற்றும் ‘நீதிமுறை பிரிவு’  என்ற  இந்த இரண்டு முறைகளும்   திருமண உறவில் உள்ள விரிசல்களை சரி செய்துக் கொள்ளவும், அது முடியாது போகும் போது முறித்துக் கொள்ளவும் உதவுகின்றன.

 

      இதில் விவாகரத்து எனப்படும் திருமண உறவையே 
ரத்து செய்யும் முறையை பற்றி நாம் அறிவோம். இதைப் பற்றி இந்து 
திருமண சட்டத்தின் பிரிவு 13 சொல்கிறது. ஆனால் இன்னொரு
 விதமான பிரிவை பற்றி நமக்கு பெரிதும் தெரிவதில்லை. அது 
தான் JUDICIAL SEPERATION எனப்படும்  நீதிமுறை பிரிவு .
 
      ;நீதிமுறை பிரிவு ‘ என்பது, கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஒரு  
தற்காலிகமான பிரிவு தான். அதை நீதிமன்ற அனுமதியுடன் பெறுகிறோம். “விவாகரத்து பெற விருப்பமில்லை, அதே சமயம் சேர்ந்து வசிக்கவும் ஆசையில்லை” என்றால் அதற்கு உரிய ஒரே வழி இந்து திருமண சட்டத்தின் பிரிவு 1௦யை நாடுவது தான். அது தான் நீதிமன்ற பிரிவு  
 
      இதைத் தான் ஹ்ரிதிக் ரோஷன் போன்ற பாலிவுட் ஹீரோக்களும்
 நாடுவது. 
 
      ஏன என்று பார்ப்போம். 
 
      நீதி முறை பிரிவு என்பது ஒரு சட்டப்பூர்வ செயல்முறை, இது 
விவாகரத்துக்கு முந்தைய நிலை என்றும் கொள்ளலாம்.  இது 
திருமண பந்தத்தில் உள்ளவர்களை   சட்டப்பூர்வமாக பிரித்து
 வைப்பதை குறிக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், 
நீதி முறை பிரிவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு,... அதிகபட்சமாக
 ஒரு வருடத்திற்கு, இருவரின்  சம்மதத்துடன் பிரிக்கப்படும்
 சூழ்நிலையைக் குறிக்கிறது.   இதை கணவன்-மனைவி இருவரும் 
விவாகரத்து நடவடிக்கைக்கு முன்னர் தங்கள் திருமண உறவை  
மேம்படுத்தி கொள்வதற்கான  மற்றொரு வாய்ப்பாக எடுத்து கொள்ள 
வேண்டும். 
 
விவாகரத்தும் நீதிமுறை பிரிவு இரண்டும் ஒன்று தானா? 
       இல்லை.  இரண்டு  சொற்களும் அவற்றின் அர்த்தங்களில் 
வேறுபட்டவை, அதனால்  ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்த 
முடியாது. விவாகரத்திற்கான காரனங்களை ஒத்துத் தான் நீதி முறை 
 பிரிவு கோருவதற்கும்.  
       இருந்தாலும், விவாகரத்திற்கான காரணத்தை நிரூபிக்காத போது,
 அதன்  மறு தீர்வாக நீதி முறை பிரிவை  வழங்க  இயலாது  என்று 
கேரளா உயர் நீதிமன்றம்.சமீபத்தில் ஒரு தீர்ப்பில் சொல்லியுள்ளது.  

 

இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

·        நீதிமன்ற பிரிவு கோரி, திருமணம் முடித்த பிறகு, எப்போது வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் மனு செய்யலாம்.  ஆனால், விவாகரத்து பெற, திருமணம் முடிந்து ஒரு வருடம் கழிந்த பிறகே கோர முடியும். அதுவும் மனமொத்த விவாகரத்து கேட்பது என்றால் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற கோப்பில் எடுத்த பின்பும், ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும்.

·        நீதிமன்ற பிரிவு என்பது விவாகரத்திற்கான முதல் நிலை

·        நீதி முறை பிரிவு, விவாகரத்து ஆகலாம் ஆனால் விவாகரத்து ஒருபோதும் நீதி முறை பிரிவாக மாற முடியாது. அத்தோடு  நீதி முறை பிரிவு என்பது விவாகரத்துக்கான காரணமாக ஏற்றுக் கொள்ளப்படும்.

·        நீதி முறை  பிரிவின் போது, தரப்பினர் தங்கள் திருமணத்தைப் பற்றி யோசித்து அதைச் சரி செய்யலாம் ஆனால் விவாகரத்திற்கு பிறகு அதற்கான வாய்ப்பு கிடையாது.

·        நீதி முறைப் பிரிவில், இரண்டு தரப்பினரும் இணைந்து வாழாவிட்டாலும் சட்டப்பூர்வமான திருமண உறவில்  தொடர்ந்து இருப்பதாகத்தான் கொள்ளப்படும்.  விவாகரத்து என்னும் போது,  அவர்களின் திருமணம் ரத்து செய்யப்படுகிறது,  அவர்கள் மறுமணம் செய்ய சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

·        நீதி முறைப் பிரிவின் போது, ​​மனுதாரர் சொல்லும் காரணம் 
நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால், உத்தரவு  வழங்கப்படுகிறது, ஆனால் விவாகரத்து கோரும்போது/ முதலில் திருமண உறவை சீர் செய்ய அவர்களுக்கு கவுன்சலிங்  செய்து, முடியாத பட்சத்தில்  விவாகரத்துக்கு உத்தரவிடப்படும்.

·        நீதி முறை பிரிவு வழங்கி நீதிமன்றம் தீர்ப்பாணை பிறப்பித்து விட்டால், தீர்ப்பாணை பெற்றவர், திருமண உறவில் உள்ள மற்றொருவருடன் இனைந்து வாழ வேண்டிய அவசியமில்லை. அதற்காக பாதிக்கப்பட்ட தரப்பினர் தனித்தனியாக வாழ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் ஒரே கூரையின் கீழ் வாழலாம். நீதித்துறை பிரிப்பு என்பது வீட்டில் இருந்து அல்ல கடமைகளில் இருந்து விடுபடுவது.

·        அதேசமயம், மனைவி தன்னையும் தன குழந்தைகளையும் பராமரிக்க இயலாத நிலையில் இருந்தால், அந்த நீதிமன்ற பிரிவு காலக்கட்டத்திலும்,  கணவன்  அவன் குடுமம்பதிற்கு போதிய

 பராமரிப்பு தொகை தர வேண்டும்.

·        நீதி முறை பிரிப்பு ஆணை வழங்கிய பின், தம்பதியினர் ஒன்று சேர நினைத்தால், மீண்டும் அதே நீதிமன்றத்தில் மனு செய்து முந்தைய உத்தரவை நீக்கம் செய்து பெறலாம்.  ஆனால் விவாகரத்து பெற்ற பின், அதில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், உயர் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும்.

 

விவாகரத்து, நீதிமுறை பிரிவாகுமா?

      இல்லை, விவாகரத்து என்பது நீதி முறை பிரிவாக இருக்க முடியாது,
 அதே சமயம் நீதி முறை பிரிவு விவாகரத்தாக  மாறலாம். 
      ஒரு தம்பதியருக்கு  பிரிந்து வாழ நீதிமன்றத்தால் 
அனுமதிக்கப்பட்டு  உத்தரவிடப்பட்டால்.அவர்கள் வாழ்க்கையில்
 ஒருவருக்கொருவரின் முக்கியத்துவத்தை அறிந்துக் கொள்வார்கள், 
ஆனால் 1 வருடத்திற்குப் பிறகும் அவர்கள் விலகி இருக்க முடிவு 
செய்தால் திருமண உறவை முறிக்க நேரிடும்.
 
      உதாரனத்திற்க்கு A, B என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார்.
அவர்களுக்கு ஒரு சின்ன விஷயத்தில் தகராறு ஏற்பட்டது, அந்த
 வாக்குவாதம் பெரிதாகி, அவர்கள் இனி ஒன்றாக வாழ  விரும்பவில்லை.
 என்றும் விவாகரத்துக்காக நீதிமன்றத்திற்குச் சென்றனர், அவர்களது 
பிரசசினையை தீர்த்துக் கொள்ள அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால 
அவகாசம் வழங்க நீதிமன்றம் முடிவு செய்து 1 வருடத்திற்கு நீதி முறை 
 பிரிவினைக்கு உத்தரவிட்டது. 1 வருடம் கழித்து, அவர்கள் தங்களுக்குள் 
உள்ள ககுத்து வேறுபாட்டை சரி செய்து, விவாகரத்து வேண்டாம் என்று 
முடிவு செய்தனர்.      1 வருடத்திற்குப் பிறகு, தம்பதியினர் தம் திருமண 
பந்தத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்தால், 
விவாகரத்துக்கான காரணத்தையும் விவாகரத்துக்கான 
செயல்முறையையும் நீதிமன்றம் தீர்மானிக்கும் 
  பரஸ்பர சம்மதத்தின் மூலமும் விவாகரத்து பெறலாம். 
தப்பன் குமார் எதிர் ஜோத்ஸ்னா

      இந்த வழக்கில் மனைவி கணவரை தனிக்குடித்தனம் வர சொல்லி வற்புறுத்தி வந்தார்.  கணவர் முடிவாக மறுத்த பிறகு, வீட்டை விட்டு வெளியேறி  தன சகோதரருடன் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். கணவர் ஜாமீன் பெற்றார். விவாகரத்து கோரி மனு செய்தார். தன்னை கணவரும் அவர் குடும்பத்தினரும் கொடுமை செய்ததாக மனைவி பதில் மனு தாக்கல் செய்தார்ர்.

 கணவர் விவாகரத்திற்காக சொன்ன காரணங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளா விட்டாலும், கணவருக்கு திருமண உறவுக்கு மீறிய உறவு உள்ளதாக பொய்யான குற்றம் சுமத்திய  மனைவியின் செயல் மன ரீதியான துன்புறுத்தலாக விவாகரத்து அளிக்கக் கூடிய  ஒன்றாக அமைந்துள்ளது என்று நீதிமன்றம் விவாகரத்து அளித்து தீர்ப்பளித்தது.


மன ரீதியான துன்புறுத்தல் என்றால் என்னென்ன?

      மன ரீதியான் துன்புறுத்தல் என்பது ஒருவரின் உடல் அல்லது மன 
ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கிறது அப்படிப்பட்ட துன்புறுத்தலில்
 என்னென்னவெல்லாம் அடங்கும்?
·        மணவாழ்வில் இரக்கம், அன்பு காட்டாதது.
·        மண உறவிற்கு வெளியே தொடர்பு உள்ளதாக பொய்யாக 
குற்றம் சுமத்துவது
·        தாம்பத்திய உறவிற்கு மறுப்பது
·         ஆண்மைக் குறைவு
·        முறையற்ற குழந்தைப் பிறப்பு
·        குடி போதை
·        தற்கொலை செய்துக் கொள்ளவதாக மிரட்டல் விடுப்பது
·        கணவரின் மேலதிகாரிக்கு மனைவி  பொய் புகார் எழுதுவது
·        இணக்கமில்லா மனோபாவம்
·        மீள முடியா மண முறிவு 



 



      இதைத் தவிர நீதி முறைப் பிரிவை பெறுவதற்கான காரணங்கள் விவாகரத்து கோருவதற்கான அதே காரணங்களை ஒத்து இருக்கும்.



·        மண வாழ்க்கைக்கு எதிரான உறவை கொள்ளுதல்..இது ஆணோ
 பெண்ணோ இரு பாலருக்கும் பொருந்தும். இந்திய தண்டனைச் 
சட்டத்தில் தான்,  மனைவி கணவனை தவிர்த்து இன்னொரு
 ஆணுடன் உறவு வைப்பது குற்றம் அல்ல என்றது. ஆனால் 
விவாகரத்து கோருவதற்கு இது ஒரு காரணமாக அமையும். 
·      வேண்டுமென்றே கவனிக்காமல் விடுதல் wilful Neglect
·        வேற்று மதத்திற்கு மாறுதல்
·        மன நிலை பிறழ்ந்து இருத்தல்
·        தொழு நோய் போன்ற தொற்று நோய்கள் இருப்பது
·        உலக வாழ்வை துறத்தல்
·        ஏழு வருடங்கள் தம்பதி குறித்த விவரங்கள் ஏதும் தெரியாது, 
 காணாமல் போதல்  
 
      இவற்றை தவிர்த்து , பிரிந்து வாழ்வதற்கு மனைவிக்கென சில 
கூடுதல்  காரணங்கள்: உள்ளன:
·        மனைவி இருக்கும் போதே இன்னொரு திருமணம் செய்தல்
·        கற்பழிப்பு குற்றம் நிரூபணம் ஆதல்
·        இந்து தத்தெடுத்தல்  மற்றும் பராமரிப்பு சட்டம், 1956 மற்றும் குற்ற 
விசாரணை நடைமுறை சட்டப் பிரிவு 125ன் கீழ் . பராமரிப்பு தொகை 
வழங்க சொல்லி  நீதிமன்ற உத்தரவு வழங்கிய பின்பும் ஒரு 
வருடத்திற்கு மேலாக  கணவன் சேர்ந்து வாழ மறுக்கும் போது
·        15 வயதுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தால் அதை 15 
வயதிலிருந்து 18 வயதிற்குள் அந்த சிறுமி  அதை ஏற்று கொள்ள 
மறுத்தால், நீதிமுறை பிரிவு கோரி மனு செய்யலாம்.  
 
இந்த நீதி முறை உத்தரவு இறுதியானதா?
      இல்லை/ மனு தாரரின் வாக்குமூலத்தின் உண்மையைக் கண்டு, 
நீதிமன்றம் திருப்தியடைந்து, நீதிமுறை பிரிவு தீர்ப்பாணை வழங்காமல்
 இருப்பதற்கு சட்டக் காரணம் எதுவும் இல்லாமல் இருக்குமானால், 
கணவன் மனைவி பிரிந்து வாழ ஆணை வழங்கலாம். ஆனால் அதை 
எதிர்த்து அடுத்தவர்  மேற்கொண்டு போடும் மனுவில் கூறப்படும்
 காரணங்களில் நீதிமன்றம் திருப்தியடையுமானால், ஏற்கெனவே
 வழங்கிய நீதி முறை பிரிவு தீர்ப்பானையை நீதிமன்றம் நிராகரிக்கலாம்.. அல்லது இல்லாததாக்கி விடலாம். அல்லது திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
 
      அதே போல, நீதித்துறை பிரிவினைக்கான ஆணை
 நிறைவேற்றப்பட்ட பிறகு, எந்த நேரத்திலும் கூட்டு-வாழ்வை புதுப்பிக்க
 கட்சிகள் ஒப்புக்கொண்டால், நீதிமன்றத்தில் மனு செய்து அந்த பிரிவு 
ஆணையை ரத்து செய்யலாம்
 
      பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றப் பிரிவினை 
வழங்குவதற்கான ஒரே நோக்கம் , அவர்களது உறவைப் பற்றி சிந்தித்து 
விவாகரத்துக்கு முன் மற்றொரு வாய்ப்பை வழங்குவதாகும். எனவே
 நீதிமுறை  பிரிவு என்பது நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படும்  சட்டப்பூர்வ முறிவு. இதுவே 
பின்னர் அவர்கள் மீண்டும் ஒன்று  இணைவதாக   மாறலாம். 
 
      எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால் , நீதி 
முறை பிரிவு என்பது குறிப்பிட்ட காலத்திற்கு திருமண  
கடமைகளிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. எனவே தம்பதியாக 
இருக்கும் போது., தாம்பத்திய உறவுக்கு மறுப்பது, சேர்ந்து வாழ மறுப்பது
 போன்றவை விவாகரத்திற்கான காரணமாக அமையும். அதை தவிர்க்க 
நினைப்பவர்கள் இந்த வழிமுறையை கையாளலாம். 
 
ஏன் விவாகரத்தை  விட நீதிமுறை பிரிவு சிறந்தது?
·          கருத்து வேறுபாடு கொண்ட தம்பதியினர் தங்கள் உறவை 
மறு பரிசீலனை செய்து தக்க வைத்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் 
அளிக்கிறது. 
·        நீதிமுறை பிரிவின் போது, கணவன் மனைவு உறவு நீடித்து 
இருப்பதால், இருவரின் சொத்து குறித்தோ அல்லது பராமரிப்பு 
குறித்தோ எந்த வித திட்டமிடலும் தேவையில்லை  ஏனெனில் 
இருவரும் ஒருவருக்கொருவர் சட்டபூர்வ வாரிசாக தொடர்ந்து  
 இருப்பதால் 
·        அதே போல குழந்தையை யார் வைத்துக் கொள்வது என்ற
 கேள்விக்கும் இடமில்லை.  ஏனென்றால் இருவருக்கு சாம் 
உரிமை உள்ளது.
 
அதனால் தான் அறிவான தம்பதியியர் தங்களுக்குள் பிணக்கு ஏற்படும் 
போது, நீதிமுறை பிரிவு ஜுடிசியல் SEPERATION மட்டுமே நாடுகிறார்கள். 
 
நமக்குத் தெரிந்த அறிவான தம்பதியினர் இருக்கிறார்களா??
 



 



சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...