நிலத்தை உங்கள் தந்தை பெயரில் வாங்கவுள்ளது நல்லது தான்.ஆனால் அவருக்கு கிரயம் செய்ய பணம் எப்படி வந்தது என்று பதிவு செய்வது…அது தேவையில்லாதது என்றாலும் கூட , அதன் உள்ளே ஒரு அவநம்பிக்கையும் தொக்கியுள்ளதே?
அவர் பெயரில் சொத்து வாங்கினால், பின்னாளில், அதை அவர் விருப்பப்படி மாற்றி விடுவார் என்றா?
பின்னாளில் சொத்தை அப்பா வேறு யாருக்காவது மாற்றி எழுதிவிட்டால், கேஸ் போட ஒரு ஆதாரம் என்று நினைப்பா?
மற்றபடி, அப்படி எழுதுவதால் மட்டுமே பணம் கொடுத்தவருக்கு உரிமை வந்துவிடாது.
நமக்கு முன் பின் அறியாத ஒருவர், திருமணம் ஆகி நம் துணை ஆனவுடன், அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கிறோம்? அவருக்கு நகை வாங்கி கொடுக்கவோ செலவழிக்கவோ யோசிப்பதுண்டா?
ஏனெனில் அவர் நம்மில் பாதி..
ஆனால் அப்பா அம்மாவுக்கு என்றால், ஏன் இந்த தயக்கம்?
நாம், நம் பெற்றோரின் "பிரதி"யல்லவா?
அதை எப்படி மறந்தோம்?
நம் அண்ணன் தம்பிக்கு எழுதி கொடுத்துவிடுவார் என்றா??
இதே அவநம்பிக்கையை நம் மீது அவர் வைத்து இருந்தால், இன்று வெளிநாட்டில் வேலை செய்யும் அளவிற்கு நம் கல்வி தகுதி கூடியிருக்குமா?
போன மாதம் ஒரு தம்பியிடம் பேச நேர்ந்தது..தன் அம்மா சொத்தில் பங்கு கொடுக்காமல், ஒத்தி போடுவதால், தான் வீட்டுக் கடனை தொடர்ந்து கட்டி அல்லல் படுவதாக "அலட்டி"க்கொண்டார்.
"உன் அம்மாவிற்கு இப்போது மாதம் மாதம் பணம் கொடுக்கிறாயா? "
"ஒரு தடவை என் க்ரெடிட் கார்டை போய் கொடுத்தேன்.செலவழித்துக்கொள்ள.. வேண்டாம் என்று விட்டார்கள்.".
"நீ அவர்களுக்கு பணமாகக் கொடுத்திருக்கலாம்.. மற்றவரை படிக்கக் கூட வைக்காமல், .உன்னை மட்டும் தான் தனியார் கல்லூரியில் படிக்க வைத்தார். கூடவே கம்புயூட்டர் டிப்ளோமா..பி.ஜி.படிக்க வைத்தார். அது தானே உன்னுடைய இந்த வேலைக்கு அடிப்படை?"
"என்ன பெரிதாக செல்வழித்து விட்டார்? சில ஆயிரங்கள் இருக்குமா? அதை வேண்டுமானால் இப்போது தந்து விடுகிறேன்"
சற்றென்று "காலத்தினால் செய்த சிறு உதவி" நினைவுக்கு வந்தது. பேச்சை நிறுத்தி விட்டேன்.
இதை தான் இந்த வினாவை படிக்கும் போதும் தோன்றியது..
தனக்கு பின்னால் தேவைப்படும் இந்த பணம் என்று சேமித்து வைக்காமல், அப்பா நம் படிப்புக்கு உதவி செய்தது ஏன் நினைவுக்கு வரவில்லை?
"அவர் ஒன்றும் பெரிதாக செலவழிக்கவில்லை.உபகார சம்பளம் பெற்று தான் படித்தேன்"…
இல்லை "பகுதிநேர வேலை பார்த்துக்கொண்டே படித்தேன்" என்போமா?
ஆனாலும், அதற்கு தகுதியான உடல் நலததை கொடுத்தது அவர் போட்ட உணவு அல்லவா?
"பிள்ளையை காப்பது அவருடைய கடமை" என்போமா? அப்படியானால் வளர்ந்த பிள்ளை, அப்பாவுக்கு திரும்ப செய்வதும் கடமை தானே?
"அவருக்கு உண்டான செலவுக்கு தான் பணம் கொடுக்கிறேனே?" என்போமா?
தன்மானம், சுய மரியாதை தராத பணம் உவப்பாக இருக்குமா அவருக்கு?
"தான் இனி இந்த குடும்பத்திற்கு வேண்டாத நபராகி விட்டோம்" என்ற உணர்வு தான் வீட்டின் குடும்ப தலைவராக இருந்த ஒருவருக்கு கிடைக்கும் மரண அடி!!
முன்னர் திருமணமான பெண்ணிற்கு கொடுக்கும் சொத்தை, அவள் வாழும் காலம் வரைக்கும் தான் அனுபவிக்கலாம்,. அதை தவிர்த்து அதை கிரயம் செய்யவோ, அதில் வில்லங்கம் ஏற்படுத்தவோ முடியாத அளவிற்கு தான் அவள் உரிமை ஒரு வரையரையுடன் இருந்தது..
இன்று அப்படி நிர்ணயம் செய்ய முடியாது..
பெண்ணுக்கே சொத்தில் முழு உரிமை என்னும்போது பெற்றவருக்கு?
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, "தனியொரு மனிதன்" படம் டிவியில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அரவிந்த சாமி தன் அப்பாவை தன்னுடைய கைப்பாவையாகவே வைத்திருப்பார்.. அவரை முழுதும் நம்பும் அவர் அப்பா..கடைசியில் பிள்ளை தான் தன்னை "முடிக்க" ஏற்பாடு செய்தான் என்னும் போதும், அவரின் பேச்சு பெருந்தன்மையாக இருக்கும். அது தான் ஒரு அப்பா, பிள்ளையின் மீது வைக்கும் பாசத்தின் வெளிப்பாடு..எந்த பணமும் சுகமும் அதை ஈடு செய்யாது.!!.
அப்பாவின் சட்டைப்பையில் பணம் எடுக்க பிள்ளைக்கு இருக்கும் சுதந்திரம், பெற்றவனுக்கு இருப்பதில்லையே?
அதை அவரும் கோருவதில்லை என்பது தான் உண்மை.
அதை அவரும் கோருவதில்லை என்பது தான் உண்மை.
பிள்ளை கொடுத்து பெறவேண்டும் என்றே நினைப்பார்..அதில் தான் அவரின் பெருமையும் அடங்கியுள்ளது..அதுவும் கணக்கு கேட்காமல், மகன் பணம் கொடுக்கிறான் என்றால், அவரின் பூரிப்புக்கு அளவேயிருக்காது. இதில் சொத்து வாங்கி அவர் பெயரில் எழுதுகிறீர்கள் என்றால், உற்சாகத்தின் உச்சிக்கே போய் விடுவார்..இதில், "பணம் வந்த வழியை" "இடைசெருகலாக" நுழைத்ததன் காரணம் தெரிந்தால்???
எந்த அப்பா தன் பிள்ளையின் முன்னால் அழுதிருக்கிறார்??!!
இன்று நாம் உலகத்தையே சுற்றலாம்..ஆனால், அவர் உயிரின் ஒரு துளியில் இருந்து தானே, நம் உலகமே தொடங்கியது..
இன்று நாம் போய் கொண்டிருக்கும் பாதையின் ஆரம்பத்தில், கைபிடித்து நம்மை நடக்க பழக்கியவரே அவர் தானே?
சற்றென்று ஒரு தருணத்தில் நம் பிடியை அவர் விட்டார் தான்...
அவர் பிடித்துக் கொண்டு இருப்பதாக எண்ணிக் கொண்டு தானே நம் பயணமும் தொடர்ந்தது??
இன்று வரை அந்த எண்ணத்தில் மாற்றம் இருக்குமா?
பிடியை விட்டாலும், நின்ற இடத்திலிருந்தே நம் பயணத்தை அவர் கண்காணித்து வரவில்லை??
அவர் நம் கையை பிடித்துக்கொண்டு இருப்பதாகத்தானே இன்னமும் நினைத்துக்கொண்டு பயணத்தை தொடர்கிறோம்?
அவருடைய தன்னம்பிக்கை தானே நம் நம்பிக்கையும் கூட??!!
"என்ன… ஒரு சந்தேகத்தை கேட்டதற்கு இவ்வளவு சொல்ல வேண்டுமா?" என்னும் உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.
இது எல்லாமே தன் அப்பாவை தன்னருகில் வைத்துக்கொண்டு, அவருக்கு வேண்டியதை செய்ய முடியாமல் போன, அவர் வாழும் காலத்தில் அவரிடம் தனக்கு உள்ள பிரியத்தை பலமுறை நினைத்தும் சொல்ல முடியாமல் போன ஒரூ மகளின் எண்ணக்குமுறல்..அதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.
என் பிரிய சகோதரர் நா.முத்துக்குமார் சொன்னது போல,
"கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா?"
"கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா?"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக