வியாழன், 16 டிசம்பர், 2021

என் தாத்தாவின் சுய சம்பாத்திய சொத்தை அவர் இறந்த பிறகு, என் அப்பா உட்பட 4 பெரியப்பா, பாகப்பிரிவினை பத்திரத்தின் மூலம் பங்கு பிரித்து கொண்டனர். இப்பொழுது என் அப்பாவின் பெயரில் உள்ள பங்கை, அப்பா என் பெயருக்கு மாற்றும்போது, என் சகோதரி கையெழுத்து அவசியமா?

 நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், பெரும்பான்மையோர் பின்பற்றும் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற அனுமானத்தில் விடையளிக்கிறேன்.

இந்து வாரிசு (திருத்தம்) சட்டம், 2005 மூலம் மூதாதையர் சொத்தில் பெண்களுக்கான உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், பரம்பரை சொத்திற்கு உங்களோடு சேர்ந்து உங்கள் சகோதரியும் இணையான உரிமையாளர் என்ற அந்தஸ்தையும் வழங்குகிறது.
 இதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனம்மா v. அமன் & ஓர்ஸ்.; (2018)3SCC343. என்ற வழக்கில் உறுதிப்படுத்தியும் உள்ளது.

என்ன சட்டம் இயற்றினாலும், ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கும்போது உங்கள் அப்பா, பூர்வீக சொத்தை உங்கள் சகோதரியை தவிர்த்து விட்டு உங்களுக்கு மட்டும் கொடுக்க விரும்புவது பெரும்பாலோரின் மனப்பான்மையை ஒட்டியது தான் என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்..

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ஆண் மட்டுமே தன சந்ததியை கொண்டு செல்பவன் என்பதால் ஆண் பிள்ளையை மட்டுமே வாரிசாகப்  பார்க்கும் வழக்கம் இன்று நேற்றல்ல, முற்காலத்திலிருந்தே இருந்து வருகிறது என்று தங்கள் செயலுக்கு நியாயம் சொல்வார்கள்.

ஆனால் வேத காலப் பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்றும் இந்து வாரிசுரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் தான் புதிதாக இந்த உரிமைகளை பெண்களுக்கு கொடுத்தன என்றும் . ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. அதற்கு அவர்கள் சுட்டிக் காட்டுவது மனுஸ்மிருதியை தான். 

ஆனால் மனு கூட , பெண்களின் தனியுரிமைகள் எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக கண்டிக்கவில்லை
வரலாற்றை பார்க்கும் போது, வேத காலத்தில் பெண் வாரிசுகளுக்கு பரம்பரையாக வந்து சேரும் சொத்து குறித்து ஒரு பாரபட்சம் இருந்ததென்னவோ உண்மை தான். . 

அசையாச் சொத்தைப் பெறுவதற்கான உரிமை ஒரு கட்டுபாட்டிற்கு உட்பட்டதாக தான் இருந்தது. இன்று போல் மகள்கள் சொத்தில் இணைப் பங்காளிகளாகக் கருதப்படவில்லை. இதற்கு முதன்மைக் காரணம், மகள்கள் திருமணம் செய்து வைக்கப்பட்டவுடன், அவரது கணவரின் குடும்பத்தில் இணைகிறார் என்பதாலும் குடும்ப சொத்தைப் பிரிக்க யாரும் விரும்பவில்லை என்பதுமே ..

தந்தையின் சொத்தை வாரிசாக அனுபவிக்கும் உரிமை ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே அங்கீகரிக்கபட்டது, ரிக் வேத காலத்திலிருந்து தான் இது கி.மு 400 வரை தொடர்ந்து அசையாச் சொத்தைப் பெறுவதற்கு சகோதரர்களைக் கொண்ட மகள்களை அனுமதிக்கவில்லை.  இருந்தாலும், திருமணமாகாத மகளுக்கு ஒரு சகோதரன் இருந்த போதிலும், சொத்தில் அவளுக்கு பங்கு இருந்தது.

ஆனால் இன்று?

"உனக்கு என்று எந்த குடும்பமும் இல்லாத போது, தனியாக உனக்கு சொத்து எதற்கு" என்கிறோம்!!

"உனக்கு தனியாக வசிப்பிடம் கூட எதற்கு? என் வீட்டிலேயே ஒரு மூலையில் இருந்து கொள்" என்று தாராளம் காட்டுகிறோம்!!

இந்த நான்கு வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளைக் கொண்ட பழங்கால நூல்களின் அடிப்படையில் டாக்டர் ஏ.எஸ் அல்டேகர் மற்றும் உபாத்யா,நடத்திய ஆய்வில், வேதகால இந்தியாவிள் குடும்பத்தில் பெண்களின் நிலைப்பாட்டை ப் பொறுத்து, சொத்து மீது அவர்களுக்கு பல்வேறு வகையான உரிமைகள் இருந்ததை காட்டுகின்றன.

"அசையும் சொத்துகள்" என்றாலே சொல்லப்படும் சீதனத்தின் மீது பெண்களுக்கு முழு உரிமை இருந்தது. 

" சீதனம்" என்றால் என்ன? என்பதை குறிப்பிட்டு வரையறுக்க முடியாததாய் இருந்தது. அதை மனு தான் வரையறுத்தார்.  பெண்ணிற்கு அவள் பெற்றோரும், சகோதரரும் திருமணத்தின் போதும் அவளை கணவனின் வீட்டிற்கு செல்லும் போதும் , திருமணத்திற்கு பிறகு கணவனும் அவளுக்கு கொடுக்கும் பரிசுகள் அனைத்தும் சீதனமாக கொள்ளப்பட்டன. அதில் அசையா சொத்துகளும் இருந்தன . இந்த சீதனப் பொருட்களின் மீது அவளுக்கு மட்டுமே ஏகபோக உரிமை இருந்தது. அதை அந்த பெண் தன விருப்பம் போல அனுபவித்துக் கொள்ளலாம். கணவனுக்கு கூட அதில் உரிமை இல்லை.!! அப்படியே அவள் கணவனுக்கு அது தேவை எனில், அதை அவன் வட்டியுடன் கூடிய கடனாக தான் பெறலாம்.!!

தற்போதும் சீதனப் பொருட்களுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 14 கீழ் பெண்ணுக்கு உள்ள தனி சட்ட உரிமையாகவும் ஆக்கப்பட்டது. அந்த சீதனத்தின் விளக்கத்தை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் Pratibha Rani vs. Suraj Kumar, 1985 (2) SCC 370 என்ற வழக்கில் கொடுத்துள்ளதை ஆர்வமுள்ளவர்கள் படித்து பார்க்கலாம்.

முடியாதவர்கள் ……………அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன சாராம்சத்தை கீழே படிக்கலாம்!!
“ திருமணமான இந்துப் பெண் தனது ஸ்ரீதன சொத்தின் முழு உரிமையாளராக இருக்கிறார், அதை அவள் விரும்பும் விதத்தில் பராமரிக்க முடியும், அது அவளுடைய கணவன் அல்லது அவளது மாமியார் பாதுகாப்பில் வைக்கப்பட்டாலும், அவர்கள் அதன் காவலர்களாகக் கருதப்படுவார்கள் . அவள் கேட்டால், அதையே திருப்பித் தரவும். அவர்கள் கட்டுப்படுவார்கள்"

ஆனால் இன்றைய நிலை?

அதை அப்படியே :தட்சணை" என்று மாற்றி கட்டாயபடுத்தி கணவன் வீட்டார் பெற்றதாலேயே, அதை தடுக்கும் சட்டமும் பின்னால் வந்து சேர்ந்தது.!!

இன்றும் கூட , பெண்ணிற்கு போட்டு அனுப்பும் நகையை கணவன் எடுத்து தனக்கும் தன குடும்பத்திற்கும் உபயோகப்படுத்துவதை பார்க்கிறோம்!!
கேட்டால், மனைவியிடம் உள்ளதில் கணவனுக்கு இல்லாத உரிமை என்று உள்ளதா என்ன? என்று திருப்பி கேட்கிறார்கள் பாவம்…

கணவனின் சொத்து என்றால் அதில் அவனுக்கு ஏகபோக உரிமையும் பின்னர் அவனின் வாரிசுகள் என்று சொல்லப்பட்டது போல, வாழும் காலத்தில் கணவனின் சொத்தில், கணவனும் மனைவியும் அந்த சொத்தின் கூட்டு உடைமை என்ற கருத்து வேத காலங்களில் இருந்தது தெரியுமா?
இன்று எத்தனை பேர் தன பெயரில் உள்ள சொத்தில், மனைவியையும் பங்குதாரராக மாற்றுவது இருக்கட்டும் அப்படி நினைக்காவாது செய்கின்றனர்?

அதே போல வேத காலத்தில், கணவனும் மகனும் இல்லாத நிலையில், கணவனின் சொத்தில் இருந்து அவளை பராமரித்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு இருந்தது. மைனர் மகனாக இருந்தால்,அவன் பாதுகாவலராகச் சொத்தை வாரிசாகப் பெற்று அதை அவனுக்காக பராமரிக்கும் உரிமை மட்டுமே அவளுக்கு உண்டு, சொத்தை மாற்றும் உரிமை இல்லை. மகனும் இல்லாத போது, அவள் வாழும் காலத்தில் அனுபவித்து முடித்த பிறகு, மீண்டும் அந்த சொத்து கணவனின் குடும்பத்திற்கே சென்று சேர்ந்து விடும்!! அது அவளின் கணவனின் சொத்தே என்றாலும், அவள் விருப்பம் போல கையாள முடியாது!! இந்த சட்ட நடைமுறை தான் இன்றும் தொடர்கிறது. இது குறித்து நான் எழுதிய விரிவான விடை சங்கடம் தவிர்க்கும் சட்டம் ப்ளாக்கில் உள்ளது. அதை திரும்பவும் இங்கே பதிவிட வேண்டாம் என்று நினைக்கிரேன்.


வேத காலத்துக்குப் பிறகு பெண்களின் உரிமைகள் படிப்படியாகக் குறைந்து, ஆங்கிலேயர் காலத்தில் மிகக் குறைந்த நிலையை அடைந்தன. அதற்கு காரணம் கல்வியில் சமூகத்திற்கு பெண்களின் பொருளாதார பங்களிப்பு ஆகியவை படிப்படியான சரிவு, அதன் பிறகு தான் ஆங்கிலேயர்கள் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுக்கு என்று தனி பள்ளிகள், கல்லூரிகள் நிறுவினார்கள். நான் படித்த பள்ளி மற்றும் கல்லூரியும் அவர்கள் நிறுவியது தான் !!

சொத்துரிமை என்று பார்த்தால், சுதந்திரத்திற்குப் பிறகுதான், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 போன்ற சட்டரீதியான தலையீடுகள் மூலம் பெண்களுக்கு பல்வேறு சொத்துரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.

நவீன இந்தியாவின் இந்துப் பெண்கள், வேதகாலப் பெண்களை விட அதிக உரிமைகளையும் சலுகைகளையும் அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் சொத்துரிமை பற்றிய கருத்து வேத காலப் பெண்களுக்கும் அந்நியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை எஎன்பதும் தவறானது.

ஆனாலும் இன்று எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், பெண்களின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம், அவள் பிறந்த வீட்டிலும் சரி……….. கணவன் வீட்டிலும் செய்யத்தான் செய்கிறார்கள் அதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம்,

வினாவிற்கு திரும்ப வரும்போது, அப்பாவின் சுய முயற்சியால் பெற்ற சொத்தை மட்டுமே அவர் தன் விருப்பம் போல இன்னொருவருக்கு மாற்ற முடியும். இது உங்கள் தாத்தாவின் சொத்து என்பதால், உங்கள் சகோதரிக்கும் அதில் பங்கு உண்டு. அவர் தனக்கு உண்டான உரிமையை விட்டுக்  கொடுத்தால் மட்டுமே உந்களுகு மட்டுமாக அந்த சொத்தை உங்கள் அப்பா எழுதி கொடுக்க முடியும்.

தாய் தகப்பன் மற்றும் சகோதரனின் அன்பையும் பாசத்தையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் உங்கள் சகோதரியும் தனக்கிருக்கும் சொத்தின் மீதான உரிமையை விட்டு கொடுக்கலாம்... அவள் கணவனும் அவள் குடும்பத்தாரும் அவள் கொண்டு வந்த சீதனப் பொருட்களின் மீது உரிமை பாராட்டலாம். அவள் உழைப்பில் சேர்த்த சொத்துகளுக்கு கணவன் உரிமை கொண்டாடலாம்... வாரிசு இல்லாத நிலையில், கணவனை இழந்த பிறகு தன்னை பராமரிக்க மட்டுமே அவன் சொத்துகளை அவள் பயன்படுத்தமுடியும் என்று முட்டுக்கட்டை போடலாம்....

ஆனால்…..

சக்கரம் சுழன்றுக் கொண்டு தான் இருக்கிறது. ..

இன்று அநாதரவாய் நம் சகோதரி…

நாளை அதே நிலையில் நம் மகள் அல்லது நம் பிரியத்துக்கு உரிய ஒரு பெண்?!!

கர்மா மிகவும் பொல்லாதது!!


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...