வியாழன், 4 ஏப்ரல், 2024

மாஜிஸ்திரேட்டு நீதிமன்றமா , முன்சீப் நீதி'மன்றமா ..... எது பெரியது ?

 மாஜிஸ்திரேட்டு  நீதிமன்றமா முன்சீப்  நீதிமன்றமா ...இரண்டில் எதற்கு அதிக அதிகாரம் என்ற கேள்வி எழும்போதெல்லாம், ஒருவரை சிறைக்கு அனுப்பும் அதிகாரம் இருப்பதால், மாஜிஸ்திரேட்டுக்கு தான் அதிகாரம் நிரம்ப என்று பெரும்பாலானவர் நினைத்திருப்பதை கண்டுள்ளேன். 

ஆனால் உண்மை அதுவல்ல. 

நீதிமன்ற அதிகார அமைப்பின்படி உள்ள அடுக்குகளில் , முதன்மையானது தான் இந்த சிவில் வழக்குகளை விசாரிக்கும் முன்சீப், மற்றும் குற்ற வழக்குகளை பொறுத்து விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்கள். 

இந்த நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் ,  ஒரே தரத்தில் இருந்தாலும்,  இவை வழக்குகளை விசாரிக்கும் முறையில் முற்றிலும் வேறுபட்டது.

சிவில் வழக்குகளை பொறுத்தவரையில் சாட்சிகளையும் ,சாண்றாவனங்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து தத்தம் தரப்பு கட்சிகளை நிரூபிக்கவேண்டியது இரண்டு தரப்பையும் சாரும்.  ஆனால் குற்ற வழக்குகளை பொறுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஏதும் நிரூபிக்க வேண்டியதில்லை. அவர் தான் இன்னின்ன குற்றம் செய்தார் என்று அரசு தரப்பில் , சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டியது கடமை. குற்றவாளி ஏதும் பேசக்கூட தேவையில்லலை. மவுனமாக நின்றாலே போதும். 

இத்தகைய பெரிய வேறுபாடு கொண்டதனால், சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு , மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தை கட்டுப்படுத்துமா ? அல்லது அதற்கு நேர்மாறா? என்ற கேள்வி எழும்.

இந்த கேள்வி, இன்று நேற்றல்லை...1954 லேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டு இதற்கான விடையை நமது உச்ச நீதிமன்றமும் வழங்கிவிட்டது. M.S.Sheriff vs.State of Madras என்ற வழக்கில் அரசியலமைப்பு பெஞ்ச்  , "ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை இன்னொரு நீதிமன்றத்தை கட்டுப்படுத்தும்  என்று சட்டம் வெளிப்படையாக சொல்லாததற்கு காரணம் , அது ஏற்படுத்தக்கூடிய தர்மசங்கடம்" என்றது.  ஆனால் அப்போதும், அதற்கு விதிவிலக்கு என்று " சிறை தண்டனை மற்றும்   அபராதங்கள் " என்றும் சொன்னது. 

இதுவே 1970 ல் உச்ச நீதிமன்றத்தின் பார்வை சற்று மாறி, சிவில் நீதிமன்றங்களின் தீர்ப்பு, குற்றவியல் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும். ஆனால் குற்றவியல் நீதிமன்றங்களிந தீர்ப்பு அப்படியல்ல " என்றது.

ஆனால் இது காலப்போக்கில் மாற்றப்பட்டது என்பதை Vishnu Dutt Sharma verses Daya Sapra வழக்கில் தெளிவாக்கியது.

கடைசியில் , Premshankar verses Inspector of Police வழக்கில் சிவில் நீதிமன்றம் கூட , குற்றவியல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை பரிசீலிக்கலாம்" என்றது.அத்தோடு  M.S.Sheriff vs.State of Madras  வழக்கையும் மேற்கோள் காட்டி ,'ஒரே மாதிரி தன்மையுடன் எல்லாவற்றையும் அணுகமுடியாது என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை சிவில் நீதிமன்றமும் குற்றவியல் நீதிமன்றமும்  வழங்கினாலும்,  சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தவிர்த்து , ஏனைய சமயத்தில் பொருட்படுத்தவேண்டியதில்லை என்றது.

கடைசியாக இந்த விஷயமாக Iqbal Singh Morwah verses Meenakshi Morvah  வழக்கில் அமைக்கப்பட்ட அரசியலமைப்பு பெஞ்ச் கூட ,  ஒரே விஷயமாக தொடரப்பட்ட குற்ற வழக்கு மற்றும் சிவில் வழக்கில் எதை நிறுத்தி வைப்பது என்ற கேள்வி எழுந்தபோது, "குற்றவியல் அமைப்பு தான் வேகமாக செயல்பட வேண்டியது. ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, 'நிரபராதிபதி "  என்று நிரூபிக்கும் வரையில், அவர் அந்த பழியை சுமக்க வேண்டிஇருக்கும் என்பதாலும், சாட்சியங்கள், சாட்சிகளிடையே பசுமையாக இருக்கும்போதே விசாரணை நடைபெரவெந்டிஉம் என்பதாலும், அதுவே சிவில் வழக்கேன்றால், வருடக்கணக்கில் நீளும் என்பதால் குற்ற வழக்கிர்க்கே முன்னுரிமை  கொடுத்து சிவில் வழக்கை நிறுத்தி வைக்கவேண்டும் என்றது. ஆனாலும் இது பொதுவானது அல்ல. முக்கால் வாசி சிவில் வழக்கு முடிந்திருந்தால், அதையே நடத்தலாம்' என்றும் சொன்னது.இந்த வழக்கில் கூட மM.S.Sheriff வழக்கு மேற்கோள் காட்டப்பட்டது.

எனவே இப்போதைக்கு பிரேம்ஷங்கர் வழக்கை தான் 




இதையெல்லாம் 

வெள்ளி, 29 மார்ச், 2024

அரசு ஊழியர் நடத்தை விதிகள்

 

அரசு ஊழியருக்கு எதிராக பணியை தவிர்த்த சம்பவங்களில் FIR போட்டால் கூட, அது அவர் பணியை பாதிக்குமா?

 அரசு ஊழியர் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்கிறார். ஆனால் அவரின் சகோதரருக்கு எதிராக தொடரப்பட்ட இலஞ்சப் புகாரில் இவரும் இணைக்கப்படுகிறார்.  இலஞ்சப் பணம் இவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை அடுத்து..கைதும் ஆகிறார்..

இதைக் காரணம் காட்டி, இவர் துறையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது .   "இது தவறு.  எனது அரசுப்பணிக்கும் இந்த குற்றத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை .அதனால் எனக்கு வழங்கப்பட்ட சார்ஜ் மெமோவை இரத்து செய்ய வேண்டும் என்று நமது உயர் நீதிமன்றத்தை   நாடுகிறார். 

அதற்கு உயர் நீதிமன்றம் சொன்னது?


"இவர் சொல்வதை ஏற்றுக் கொண்டால்,, ஒருவரை கொலை செய்ததால் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இன்னொரு அரசு ஊழியர் கூட , "இந்த குற்றம் , என் பணியோடு சம்பந்தப்பட வில்லை " என்று இதே வாதத்தை முன்வைக்கலாம்....  

பணியோடு சம்பந்தப்படாவிட்டாலும், மிகவும் மோசமான Misconduct இருப்பது தெரிய வந்தால், அந்த அரசு ஊழியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு துறைக்கு எந்த தடையும் இல்லை " என்று கூறி சமீபத்தில் மேற்படி  வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர் நீதியரசர்கள் G.ஜெயச்சந்திரன் மற்றும் C.குமரப்பன் அவர்கள்.Kramachandran v.The District Educational Officer(Elementary Education) & Another

இந்த வழக்கை சம்பந்தப்பட்ட ஆசிரியரே தாமாக வழக்கை நடத்தி இருக்கிறார்.

இந்த வழக்கின் சாராம்சத்தை பார்க்கும்போது,  அரசு ஊழியர் நடத்தை விதிகள் குறித்த சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் தான் இது தொடரப்பட்டுள்ளது என்பது தெரிகிறது . 

ஒரு அரசு அலுவலக நடைமுறையை பற்றி  சொல்லும் கையேடு தான்   fundamental Rules.  இதில் அடிப்படை விதி 11 சொல்வதை பாருங்கள் :

Fundamental Rule 11 :: "unless in any case it be otherwise distinctprovided, the whole time of a Government servant is at the disposal of the Government which pays him and he may be employed in any manner required by proper authority without claim for additional remuneration."

ஒரு அரசு ஊழியரின் பணி நேரம் வரையறுக்கபட்டதல்ல . அது எப்போது வேண்டுமானாலும் , அவர் மேலதிகாரியினால் தேவைக்கேற்ப நிர்ணயம் செய்யப்படலாம்.  ஏற்கெனவே ஒரு பதிவில் , இந்த 'Whole" time employment குறித்து நான் பார்த்த அலுவலக குறிப்புகளை சொல்லியிருப்பேன் .  "Full" time Employee என்றில்லாமல் , "Whole Time"Employee  என்று சொல்வதில் இருந்தே இந்த  வித்யாசம் தெரிகிறதல்லவா?

இந்தப் புரிதல் இருந்தால் நிறைய அரசு ஊழியர்கள் தேவையற்ற சட்ட சிக்கல்களில் சிக்கிக் கொள்ளமாட்டார்கள்.


வெள்ளி, 8 மார்ச், 2024

இரண்டாம் மனைவிக்கு ஜீவனாம்சம் பெறும் உரிமை உள்ளதா?

 1955 இந்து திருமண சட்டத்தின்படி, கணவனோ மனைவியோ இருக்கும் போது , மற்றவர் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டால், அதற்கு சட்ட அங்கீகாரம் கிடையாது.

விவாகரத்து செய்வதற்கு உரிய காரணங்களை இந்து திருமண சட்டப் பிரிவு 13 குறிப்பிட்டாலும், முதல் மனைவியோ அல்லது கணவனோ இருக்கும் போது இரண்டாவதாக திருமணம் நடந்ததாக கணக்கில் கொள்ளப்படாது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டிய தேவையில்லை என்று தான் சட்டம் சொல்கிறது.

புகழ்பெற்ற லில்லி தாமஸ் எதிர் யூனியன் ஆப் இந்தியா MANU/SC/0327/2000 வழக்கில், கணவர் இன்னொரு திருமணம் செய்துக் கொள்வதற்காக முஸ்லிமாக மதம் மாறுகிறார், என்றாலும் அந்த இரண்டாம் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் , இந்து திருமண சட்டப்பிரிவு 17 ன் படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இன்னொரு திருமணம் செய்வது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 494ன் படி தண்டனைக்குரியது என்றது.

அப்படி வாழும் மனைவியை அவள் வாழ்நாள் முழுதும் கணவன் பராமரிக்க வேண்டும் என்று இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம், 1956 (Hindu Adoption and Maintenance Act, 1956) சட்டப்பிரிவு 18 சொல்கிறது. மனைவி இருக்கும் போது , இன்னொரு திருமணம் செய்வது செல்லாது என்று சொல்லும் அதே வேளையில், ஷை சட்டப்பிரிவு 18(2) , இன்னொரு மனைவியுடன் கணவன் வாழ்ந்து வந்தால் , முதல் மனைவி அவளுடைய ஜீவனாம்சம் கோரும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் , தனியாக வாழலாம் என்றும் சொல்கிறது.

சட்ட நிலை இப்படியிருக்க, நம் நாட்டில் பெருவாரியான பெண்ணின் பகுத்தறியும் நிலை ஆண்களுக்கு இணையாக இல்லை என்னும் போது , அதை பயன்படுத்தி, முதல் திருமணத்தை மறைத்து , இன்னொரு திருமணம் செய்து, அந்த இரண்டாம் மனைவியை சரியாக கணவர் பராமரிக்காவிட்டால், அவருக்கும் அவர் குழந்தைகளுக்கும் அந்த கனவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறும்உரிமையுள்ளதா? என்ற கேள்வி எழும்.

இதே போன்ற சூழல் கொண்ட நரிந்தர் பால் கவுர் சாவ்லா எதிர் மன்ஜீத் சிங் சாவ்லா Civil 2606 of 2004 என்ற வழக்கு விசாரணைக்கு வந்த போது, டெல்லி உயர் நீதிமன்றம், "இப்படி முதல் திருமணத்தை மறைத்து , இன்னொரு திருமணம் செய்த ஆணுக்கு இரண்டாம் மனைவியை பராமரிக்கும் கடமை இல்லடி என்றால், அந்த தவறை செய்ய ஊக்குவித்தது போலாகும்" என்று கூறி, இரண்டாம் மனைவியும் ஜீவனாம்சம் பெற உரிமையுடையவர் என்றது.

உச்ச நீதிமன்றமும் இதையே ஆமோதித்து , பாட்ஷா எதிர் ஊர்மிளா பாட்ஷா,(2014) 1 SCC 188. என்ற வழக்கில் , இரண்டு காரனங்களுக்காக இரண்டாம் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெறும் தகுதி உள்ளது என்றது..

  1. முதல் திருமணம் நடந்ததை இரண்டாம் மனைவ்யிடன் கணவன் மறைத்து திருமணம் செய்தது
  2. இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தது

ஆனாலும், இந்து திருமண சட்டப்பிரிவுகள் 5 மற்றும் 11 படி, முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது , இரண்டாம் திருமணமே செல்லாது என்னும்போது அந்த மனைவிக்கு ஜீவனாம்சம் கோரும் உரிமை குறித்து நீதிமன்றங்களிடையே இரு வேறுபட்ட பார்வைகளே உள்ளது.

சட்டத்தில் உள்ள இந்த ஓட்டையை பயன்படுத்தி தான் இரண்டாம் திருமண ம் செய்யும் ஆண்கள் தப்பித்து வருகின்றனர்.

அப்படியானால், இரண்டாவது மனைவிக்கு தீர்வு தான் என்ன?

மேற்சொன்ன பாட்ஷா எதிர் ஊர்மிளா பாட்ஷா வழக்கிலும், அவள் கணவனும் , மேற்சொன்ன வாதங்களை தான் முன் வைத்தான். மேலும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 125 படி "மனைவி" என்ற சொல் "சட்டப்பூர்வமான மனைவியையே " குறிக்கும் என்று வாதாடினான்.

ஆனால் உச்ச நீதிமன்றம் இதை ஏற்க மறுத்து, அவர்களுக்கிடையே திருமணம் இந்து முறைப்படி நடந்தது என்பதாலும், முதல் திருமணத்தை மறைத்த கணவனின் செயலினாலும், அவன் இரண்டாம் மனைவிக்கும் குற்ற விசாரணை நடைமுறை சட்டப்பிரிவு 125 படி ஜீவனாம்சம் கொடுக்க கடமைப்பட்டவன் என்றது.

அதே போல 'கணவன் மனைவியாக வாழ்ந்ததை இரண்டாம் மனைவி நிரூபித்தாலும், அவர் ஜீவனாம்சம் பெற தகுதியுடையவர் என்று துவாரிகா பிரசாத் சத்பதி எதிர் பித்யுத் பரவா தீட்சித் மற்றும் ஒருவர் (1999) 7 SCC 675 என்ற வழக்கில் தீர்ப்பளித்தது.

சான்முனியா எதிர் வீரேந்திர குமார் சிங்க் குஷ்வாஹா மற்றும் ஒருவர் (2011) 1 SCC 14 என்ற வழக்கில், 'மனைவி ' என்ற சொல்லுக்கு பரந்த அளவில் பொருள் கொண்டு, நெடுங்காலமாக கணவன் மனைவியாக வாழ்பவரையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்றது.

அதற்காக ஒரு பெண் தன் முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் இரண்டாம் திருமணம் செய்திருந்தால்?" என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது.

அதை 'துன்புறுத்தல் 'என்று வகைப்படுத்தி இரண்டாம் கணவன் விவாகரத்து பெறலாம்.

இன்னும் சொல்லப் போனால், உச்ச நீதிமன்றம் ஒரு படி முன்னேறி, ரமேஷ் சந்திர டாகா எதிர் ராமேஸ்வரி டாகா AIR 2005 SC 422 என்ற வழக்கில், இரண்தாம் திருமணம் சட்டப்படி ஏற்புடையது அல்ல என்றாலும், அவனை போருலாதாதார ரீதியாக சார்ந்திருக்கும் இரண்டாம் மனைவியை , இந்த காரணம் காட்டி புறம் தள்ளுவது சரியல்ல என்றது..

சமீபத்தில் இதே போன்ற ஒரு வழக்கு X v. State of Maharashtra, 2023 SCC OnLine Bom 2676...மும்பை உயர் நீதிமன்றம் முன்பு வந்தது. இந்த கணவர் ஒரு படி மேலேறி இரண்டாம் திருமணம் நடக்கவில்லை என்றும், அந்த பெண்ணை தனக்கு தெரியாது என்றும் அவருடன் ஒன்றாக வாழ்ந்ததே இல்லை எண்டும், அந்த பெண்ணின் பிள்ளைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும் அவருடன் தான் , தான் இன்னமும் வாழ்வதாகவும் வாதிட்டார். உச்ச நீதிமன்றத்தின் மேற்சொன்ன வழக்குகளையெல்லாம் கணக்கில் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம், கணவன் மனைவியாக லிவ் இன் தொடர்பில் உள்ளவரும் கு.வி.மு.ச.பிரிவு 125 படி ஜீவனாம்சம் பெற உரிமை உள்ள நிலையில், இரண்டாம் மனைவிக்கும் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது என்றது.

இதிலிருந்து , கணவன் மனைவியே யானாலும், பிரச்சினை என்று வரும் போது ஆண் தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் போது , நீதிமன்றங்கள் தான் பெண்களின் உரிமைகளை பேணிக் காப்பதில் முன்வகிக்கிறது என்பதை அறிவோம்.

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள் !!

வியாழன், 7 மார்ச், 2024

முஸ்லிம் பெண்களுக்கு 'குலா' என்னும் விவாகரத்து கொடுக்கும் உரிமை இன்னமும் இருக்கிறதா?

 முஸ்லிம் பெண்களுக்கு, அவர்கள் கணவரிடமிருந்து 'தலாக்'என்னும் விவாகரத்து பெறும் 'உரிமை(?!) மட்டும் தான் உள்ளது என்று தான் பெரும்பான்மையானோர் நினைத்திருப்பார்கள். சமீபத்தில் காட்டுத் தீயாய் பரவிய சானியா மிர்சா தன் கணவருக்கு 'குலா' என்னும் விவாகரத்து கொடுத்த செய்தியின் போது தான் , 'குலா" என்றால் என்ன? என்று தேட ஆரம்பித்தனர்.

'தலாக்'கிற்கும் 'குலா'விற்கும் என்ன வித்தியாசம்?

தலாக்கை கொடுப்பது ஆண் தன் மனைவிக்கு .

ஆனால் …

ஒரு திருமணமான பெண் தன் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத பட்சத்தில் , அவருக்கு 'குலா ' (விவாகரத்து) கொடுக்கலாம். இதை அவள் கணவன் ஒத்துக் கொள்ள வேண்டும். அதாவது அவள் அந்த விவாகத்திலிருந்து 'விடுதலை' பெற , முதலில் அவர் கொடுத்த மகர் பணத்தை திரும்ப கொடுப்பது, பண சம்பந்தமான சுமூக தீர்வு காண்பது , தங்கள் குழந்தைகள் குறித்த முடிவுகளை சேர்ந்து எடுப்பது என்று அவர்கள் சம்பந்தப்பட்டவைகளுக்கு ஒத்த முடிவுகளை எடுக்கும் போது அவள் கணவன் சம்மதம் தெரிவிப்பான். அப்போது தான் அந்த பெண் அந்த திருமண பந்தத்திலிருந்து மீள முடியும்.

ஆனால் இதை அவள் கணவன் 'தலாக்' கொடுப்பது போல , தனித்து செய்ய முடியாது. ஒரு ஷரியத் அமைப்பிலோ அல்லது மத குருமார்களின் முன்போ அல்லது நீதிமன்றத்தின் மூலமோ மட்டுமே செய்ய முடியும்.

இந்த சட்ட அந்தஸ்து உள்ள ஷரியத் அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் இங்குள்ள பெரும்பான்மையான 'ஜமாத்' குழுவினர் , முஸ்லிம் தனிப்பட்ட சட்ட அம்சங்களான திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சொத்தில் பங்கு பிரிப்பு என்று முஸ்லிம்களின் அனைத்து விஷயங்களிலும் தலையிட்டு 'தீர்த்து' வைக்கின்றனர்.

அதுவும் ஒவ்வொரு முஸ்லிம் ஊருக்கும் , ஒரு ஜமாத் என்ற அமைப்பு இருக்கும். அந்த ஊரில் இல்லாமல், பெரும்பான்மையானோர் குடி பெயர்ந்து வேறு இடம் மாறினாலும், இந்த அமைப்பிற்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால், சொந்தம் பந்தம் இல்லாமல் 'தனித்து' விடப்படுவர். சென்னை திநகரில் இயங்கி வரும் கமுதி முஸ்லிம் நல சங்கம் இதற்க்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இது போன்ற தவ்லீக் ஜமாத்' என்ற அமைப்பு தான் முஹமத் ரபிக்கின் மனைவி சயீதா பேகத்தின் குலா என்ற விவாகரத்து கோரிய மனுவை விசாரித்து அதை அனுமதித்தது, அவர்களுக்கு 2013 ல் திருமணம். 2015ல் குழந்தை .2016 ல் ரபிக்குடன் வாழ பிடிக்காமல் சயீதா பேகம் வெளியேறுகிறார். 2017ல் குலா என்னும் விவாகரத்து கோரி அந்த ஜமாத்தை அணுகியது.

ஆனால் தன ஒப்புதல் இல்லாமல் அவர்கள் வழங்கிய இந்த சான்றிதழ் செல்லாது என்று கூறியும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரியும் முகமத் ரபிக் உயர்நீதிமன்றத்தை நாடுகிறார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சி சரவணன் அவர்கள்,

" இது போன்ற ஷரியத் அமைப்பு, சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை.. ஒரு 'அரசு அமைப்பு' போன்ற மாயையை ஏற்படுத்தினாலும் அவை 'அரசு' அல்ல.

மேலும் 2014லிலேயே 'விஷ்ணு லோசன் மதன்' என்ற வழக்கில் "ஷரியத் நீதிமன்றங்களுக்கு எந்த சட்ட அந்தஸ்தும் கிடையாது" என்று உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது. அதனால் , இது போன்ற விவாகரத்து சான்று வழங் க அந்த ஷரியத் அமைப்பிற்கு எந்த அதிகாரமும் கிடையாது" என்று தீர்ப்பு எழுதுகிறார் நீதியரசர் சரவணன்.

ஆனால் இதை விமர்சித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய ஒருவர், முஸ்லிம் பெண்கள் ஏற்கெனவே ஒரு பாரபட்சமான சூழலில் இருக்கும் போது அவர்களே விவாகரத்து வேண்டும் என்னும் போது, நீதிமன்றத்தை தான் அணுகவேண்டும் என்பது, அவர்களை இக்கட்டான சூழலில் இட்டு செல்கிறது என்றும் அதற்கு பதிலாக தம்பதியினரிடையே மத்தியஸ்தம் செய்வது போன்ற வழிகளை காட்டலாம் என்று யோசனை தெரிவித்து இருந்தார்.

நீதியரசர் சி.சரவணன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு , முஸ்லிம் பெண்களுக்கு உள்ள உரிமைகளை மீடேடுப்பதர்கான ஒரு அம்சமாகத் தான் நான் பார்க்கிறேன். ஏனெனில், இந்த 'ஜமாத்' அமைப்பினர், 1937 ஷரியத் சட்டத்தின் கீழ் தங்களுக்கு ஒரு அதிகாரம் இருபபது போன்ற ஒரு தோற்றத்தை தந்து, முஸ்லிம் பெண்களின் உரிமைகளில் தலையிட்டு, அதை குறைத்து மதிப்பிட்டு வந்தனர். இதில் குறிப்பாக, எந்த ஒரு ஜமாத் அமைப்பிலும் ஒரு பெண் கூட அங்கள் இல்லை!!

நீதியரசர் சரவணனின் தீர்ப்பு அந்த மாயத் தோற்றத்தை கலைத்தது, அதற்கு முன்னரே எல்லாவற்றிலும் முன்னோடியாக நிற்கும் கேரளா உயர்நீதிமன்றம் இது குறித்து பரபரப்பு கிளப்பிவிட்டது.

.நீதியரசர்கள் முஹமது முஷ்டாக் மற்றும் நீதியரசர் சி.எஸ்.டையாஸ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ."முஸ்லிம் பெண்கள் தங்களின் கணவரின் சம்மதம் பெற்றே 'குலா' என்ற விவாகரத்து கொடுக்க முடியும் என்ற நிபந்தனை சரியானதல்ல. அவர்களுக்கு குலா' வழங்க முழு உரிமை உள்ளது" என்று அதிரடியாக தீர்பளித்தது. 'தலாக் ' வழங்கும் போது கணவனுக்கு உள்ள முழு அதிகாரம், 'குலா' வழங்கும் முஸ்லிம் பெண்ணிற்கும் உள்ளது. அதற்காக அவள் கணவனின் சம்மதம் பெறத் தேவையில்லை " என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

கேரளா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த முஸ்லிம் பர்சனல் போர்டு, கணவனின் சம்மதம் இல்லாமல் ஒரு முஸ்லிம் பெண் குலா கொடுக்க முடியாது என்று சொல்லியுள்ளது.

1939 ல் வந்த Dissolution of Muslim Marriage Act படி குலா வழங்க ஒரு முஸ்லிம் பெண் காட்ட வேண்டிய காரணங்களை தான் பட்டியலிடுகிறது. அப்படியானால் , அவள் தன் விருப்பமாக குலா ' கொடுக்க முடியாதா? " என்ற கேள்வியை முன் வைத்து தற்போது உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.

தற்போது பொது சிவில் சட்டம் நாடெங்கிலும் கொண்டு வரவிருபபதாக மத்திய அரசு சொல்லி வருகிறது. ஒரு விதத்தில் அது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ஒரு விடுவு காலம் கிடைக்கும் என்றே சொல்லலாம்.

இதோ அவர்கள் தனி சட்டத்தில், பெண்களுக்கு காட்டப்பட்டு ஏற்றத்தாழ்வை நீங்களே பாருங்கள்:

  1. ஒரு முஸ்லிம் ஆணின் சாட்சியம் இரண்டு முஸ்லிம் பெண்களின் சாட்சதிர்க்கு சமம்.
  2. ஒரு முஸ்லிம் ஆண் இறந்தால், அவன் சொத்தில் அவன் மனைவிக்கு, குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ,எட்டில் ஒரு பங்கும், குழந்தை இல்லை என்றாலோ கால் பங்கும் கிடைக்கும். இதுவே ஒரு முஸ்லிம் பெண் இறந்தால், அவள் கணவனுக்கு அவள் சொத்தில் குழந்தை இல்லாத போது, பாதி பங்கும் குழந்தை இருந்தால் கால் பங்கும் கிடைக்கும்.
  3. ஒரு முஸ்லிம் ஆண் அவன் மனைவியை தலாக் செய்ய எந்த காரனமும் சொல்லத் தேவையில்லை (இப்போது தான் ட்ரிபிள் தலாக் " ஏற்புடையது அல்ல என்பது சட்ட விதியாகியுள்ளது) ஆனால், அவன் மனைவி விவாகரத்து பெற விரும்பினால், அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும் அத்தோடு நில்லாமல், அவள் கணவன் அவளுக்கு திருமணத்தின் போது கொடுத்த மகர் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும். குழந்தை யை யார் பராமரிப்பது, சொத்து பணம் குறித்த விஷயங்களில் கணவன் சம்மதத்துடன் தீர்வு கண்ட பின்பே அவள் அந்த திருமண பந்ததிலிருந்து மீண்டு வர முடியும்.
  4. விவாகரத்து பெற எண்ணும் ஆண் , நேரில் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு முகவரை நியமித்து அவர் மூலமாகவும் இதை செய்யலாம். ஆனால் இதை ஒரு முஸ்லிம் பெண் செய்ய முடியாது.
  5. அதே போல ஒரு குழந்தையின் இயற்கை பாதுகாவலராக அதன் தந்தையும் அதற்கு பின் அதன் தாய் ' என்று இந்து சட்டம் சொல்ல(இதற்கே இப்போது பஞ்சாயத்து போய்க் கொண்டிருக்கிறது}ஆனால் முஸ்லிம் சட்டத்திலோ அதன் தகப்பன் மட்டுமே இயற்கை பாதுகாவலர். அதன் வாழ்விற்கு உரிய எந்த முடியும் எடுக்க அதன் தந்தைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. தாய்க்கு எந்த வித உரிமையும் கிடையாது.
  6. முஸ்லிம் பெண் அவள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டால் , அவள் பெற்றோர், அல்லது அவள் சகோதரர்…அவர்களாலும் முடியவில்லையில்லை என்றால் வக்ப் போர்டு அவளுக்கு பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்று சட்டம் சொன்னாலும், நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமேயில்லை.

நிலை இப்படி இருந்தாலும் முஸ்லிம் பெண்கள் வாய் திறந்து தங்கள் உரிமை குறித்து பேச வர மாட்டார்கள். அவ்வளவு பயம்.!!!!

இதற்கு ஒரே தீர்வு UNIFORM CIVIL CODE!!

ஞாயிறு, 26 நவம்பர், 2023

தாய் வீட்டில் வசிக்கும் உரிமை திருமணமான பெண்ணுக்கு உள்ளதா?

 சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம, திருமணமான பெண் கணவருடன் வேறு ஊருக்கு குடித்தனம் செய்யப் போவதாலேயே, பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமையை இழந்து விட்டதாக கொள்ள முடியாது" என்றுள்ளது. 

இது நிறைய பேருக்கு ஒரு குழப்பத்தையே ஏற்படுத்திள்ளது.

திருமணமான பெண்ணுக்கு, சீர் வரிசை கொடுத்து வசதியாக, ஆடம்பரமாக திருமணம் செய்துக்  கொடுத்தாலும், சொத்தில் அவளுக்கு கொடுக்க வேண்டிய  பங்கை கொடுக்கத் தான் வேண்டும் என்றிருக்கும்போது,  இப்போது என்ன..புதிதாக ?....

"திருமணமான பின்னும், அவள் அங்கே வசிக்கும் உரிமை உள்ளது என்றால்...அவள் கணவனுடன் வந்து தங்கினால்...அது அங்கு வசிப்பவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாதா?

திருமணம் செய்து, சீர் கொடுத்து, சொத்தில் சம பங்கும் கொடுத்து,  வாழும் வீட்டிலும் தங்க இடமும் கொடுக்க வேண்டும் என்றால் எப்படி? என்று நிறைய பேருக்கு ஆதங்கம் உள்ளது

சமூக கண்ணோட்டத்தை  தவிர்த்து, சட்டம் என்ன சொல்கிறது என்று பார்த்தால், 

இந்து வாரிசுரிமை சட்டப் பிரிவு 23 யை பார்ப்போம்.

திருமணமான பெண் பிறந்த வீட்டில் , சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமை கிடையாது என்கிறது.  அதாவது, அந்த வீட்டில் அவளுடன் பிறந்த சகோதரர்கள் இருக்கும்போது,  அவர்கள் என்று சொத்தை பங்கு பிரிக்க நினைகிரார்களோ, அப்போது தான், அவளுக்கும் அதில் பங்கு கொடுக்கும் நிலை ஏற்படும்"  என்கிறது. 

அப்படியானால், ஆணுக்கு சமமாக பெண் வைக்கப்படவில்லையா?

அவள் சகோதரர்கள் விரும்பும் போது தான் சொத்து பங்கீடு செய்யலாம் என்றால், அவள் சட்டத்தின் பார்வையில் சற்று இறக்கமாகத் தானே வைக்கபடுகிறாள்?" என்ற கேள்விக்கு  உச்ச நீதிமன்றம்  ஒரு வழக்கில் பதிலளித்துள்ளது.

குடும்ப சொத்து துண்டுபட்டு விடக்கூடாது என்பதைத் தான் சட்டம் இயற்றியவர்கள் கருத்தில் வைத்துள்ளனர் என்றது. 

ஆனாலும், இந்த விஷயத்தில் தமிழ் நாடு புண்ணியம் கட்டிகொண்டது.

தமிழ்நாட்டில், பெண்களுக்கான சரி சமமான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதால், அவளும்,  இந்து கூட்டு குடும்பத்தில் , உரிமையாளர் ஆகிறாள் என்பதால், அவளுக்கும் அவள் சகோதரர்களை போலவே சம உரிமை வருகிறது என்பதால், அவர்களை போலவே, அவளுக்கு சொத்தில் பங்கு கேட்கும் முதல் உரிமையும் வந்துவிடுகிறது. 

சரி,  அது தான் அப்படி என்றால், திருமணமான பெண்னுக்கு  பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை , அவள் கணவன் இறந்து விட்டாலோ, பிரிந்து சென்றாலோ அல்லது கைவிட்டுவிட்டாலோ , தான் கிடைக்கும்.

அதாவது...அவள் கணவனுடன் வாழும் போது இந்த உரிமை கிடையாது என்கிறது.

இதிலும் ஒன்று கவனித்தீர்களா....

திருமணம் ஆன பெண்ணுக்கு தான் இந்த நிபந்தனைகள்

 திருமணமாகாத பெண்ணுக்கு  அப்படியில்லை.  பிறந்த வீட்டில் வசிக்கு உரிமை அவளுக்கு  உள்ளது. 

இது பெண்களுக்குள்ளேயே பாகுபாடு பார்ப்பதாகிடவில்லையா?

திருமணமான பெண்ணுக்கு வசிக்கும் உரிமை கிடையாது  ஆனால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு என்றால்?

 இது போன்ற வித்தியாசம் ஆணுக்கு இல்லையே..

அவனுக்கு திருமணம் ஆனாலும் சரி, ஆகவில்லை என்றாலும், அவனுக்கு பிறந்த வீட்டில் வசிக்கும் உரிமை உண்டு.

ஆனாலும் இந்த வேறுபாடு அப்படியே நிலைத்து இருக்கும் போது வந்தது குடும்ப வன்முறை சட்டம்.

அதில் பிரிவு 17 ல் சொல்லப்பட்ட "பகிர்ந்து குடியிருக்கும்  வீட்டில்" அவளுக்கு உரிமை உள்ளதோ இல்லையோ, ஆனால் அந்த வீட்டில் உள்ளவர்களுடன் அவளுக்கு குடும்ப  ரீதியான உறவு, ...அதாவது  தாய், மாமியார், மருமகள், சகோதரி என்று இருந்தால்,  அங்கு வசிக்கும் உரிமை உள்ளது?" என்று சமீபத்தில் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு ஒன்றை உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளது.


அப்படியானால், திருமணமான பெண்ணுக்கு அவள் தாய் வீட்டில் வசிக்கும் உரிமை வந்து விடுகிறது.

இது கொஞ்சம் ஓவர் இல்லையா என்பீர்கள் சிலர். 

ஆனால், இவ்வாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கும் போது சொன்ன காரணத்தை சற்று கவனியுங்கள்...

"இந்தியாவில், ஒரு பெண், தனது திருமணத்தின் போது தனது கணவருடன் வசிப்பது ஒரு சமூக விதிமுறையாகும், தொழில் அல்லது வேலை உறுதிப்பாடுகள் அல்லது பிற உண்மையான காரணங்களுக்காக, கணவனும் மனைவியும் வெவ்வேறு இடங்களில் வசிக்க முடிவு செய்கிறார்கள். ஒரு குடும்ப உறவில் இருக்கும் பெண் நியாயமான காரணத்திற்காக வேறு இடத்தில் வசிக்கும் சந்தர்ப்பத்தில் கூட, பகிரப்பட்ட குடும்பத்தில் வசிக்க அவளுக்கு உரிமை உண்டு."

அப்படியானால்....

கேள்விக்கு பதில் "ஆம்"..



சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...