புதன், 27 ஏப்ரல், 2022

எனது தந்தை சொத்தின் மீது நான் எனக்கு (பணம் கட்டியவர்) உரிமை உள்ளதா? என் தந்தை வாங்கிய அடமான விட்டு கடன் கூட்டு வட்டி மற்றும் அசல் என முழு கடனையும் என் சுய சம்பாத்தியம் முலம் அடைத்து அடமான கடன் பத்திரத்தை மீட்டேன்


 https://www.youtube.com/channel/UCVWEar2R5mwMTP7YBlbRL3Q                   நண்பர்களுக்கு  வணக்கம். 

பெரும்பான்மையான நபர்களின் மனதில் உள்ளது  தான் இந்த கேள்வி.  ஆனால்  இது பற்றி கேட்டால் எங்கே நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ, சொத்திற்கு ஆசைப்படுகிறான் என்ற பேர்  கெட்டு விடுமோ என்று  கேட்காமலும், உள்ளுக்குள்ளே இந்த கேள்வி மனதை அரித்துக் கொண்டும் இருக்கும்.

நம் கூட பிறந்தவர் சிலர் இருப்பார்கள்.  ஆனால் நாம் மட்டுமே அப்பாவின் கடனை அடைத்து, வீட்டை கடனிலிருந்து மீட்டிருப்போம். இதற்கு உரிய முன்னுரிமை,  வீட்டின் சொத்து உரிமை மாறும்போது, கிடைக் குமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் இருக்கும்.  அப்படி கிடைக்காமல் போனால்.... என்ன செய்வது? நீதிமன்றத்திற்கு போகலாமா என்ற தடுமாற்றம் இருக்கும்....

அதுவும்  பரம்பரை சொத்து என்றாலாவது பரவாயில்லை உறுதியாக நம் பங்கு கிடைக்கும், ஆனால் அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்து என்றால்... அதை அவர் விருப்பம் போல யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம். என்று சட்டம் சொல்லும் போது ...!!

இதே போன்று, எனக்கு தெரிந்தவர் வீட்டில் நடந்தை சொல்கிறேன். 

அந்த குடும்பத்தின் வருமானம் ஈட்டக்கூடிய ஒரே நபரான அந்த குடும்பத்  தலைவர்   இறந்து விடுகிறார்.  பிள்ளைகள் எல்லாம் பள்ளிப் பருவத்தில் தான் உள்ளனர். இருக்கும் ஆண் பிள்ளைகளில் மூத்தவன் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். அடுத்து என்ன செய்ய...?  அவன் படிப்பு நிறுத்தப் படுகிறது.... அப்பா பார்த்துக் கொண்டிருந்த  கடையை இவன் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்கிறான். வீடு ஓட்டு வீடு என்றாலும் சொந்த வீடு.  வாடகை பிரச்சினை இல்லை.  ஏதோ வாழ்க்கை வண்டி மெதுவாக அசைந்து நகர ஆரம்பிக்க, , இவனும் கடையை நன்றாக நடத்த ஆரம்பித்து, அதில் வரும் இலாபத்துடன் வீட்டின் பேரில் கடனும் வாங்கி,  இரண்டு மாடி வீடாக கட்டுகிறான். அடுத்து திருமணம் ....ஒவ்வொருவருக்காக நடக்க ஆரம்பிக்க. வீட்டின் உரிமை பிரச்சினை தலை எடுக்கிறது. 

வீட்டின் தற்போதைய நிலைக்கு மூத்தவன் காரணம் என்றாலும், அப்பாவின் கடையால தானே அந்த பணமே வந்தது, அதனால் அதிகபட்ச உரிமை எடுத்துக்  கொள்ள முடியாது, எல்லோருக்கும் சம பங்கு தான் என்கிறார்கள் மற்றவர்கள்...

இவன் நினைத்தால்,  இதை பெரும் பிரச்சினை ஆக்கி, சண்டை யிட்டு, அதிக பங்கு கேட்டு கோர்டுக்கு மற்றவர்களையும் இழுத்து, வருடக்கணக்கில் இழுத்தடித்து இருக்கலாம்.  அதற்கு மாறாக அவன் எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டான். மூத்த  ஆண் பிள்ளையாக, தன்  கடமையைத் தான் செய்தேன் என்றான்.   தனக்கு கொடுத்த பங்கை வாங்கிக் கொண்டு, தனியே வீடு வாங்கி  தன் குடித்தனத்தை தொடர்ந்தான்.  சட்டத்தின் பார்வையில் இது தான் நடக்கும்.  ஆனால் தர்மம் என்று ஒன்றுள்ளதே...அதன் பார்வையில், அவன் பிள்ளைகள் இன்று நன்றாக படித்து, பெரிய உத்தியோகத்தில் உள்ளனர். மற்றவர்களின் குடும்பம் பற்றி ..........ஒன்றும்  சொல்ல வேண்டாம்.

இதை எதற்கு இங்கு சொல்கிறேன் என்றால், சிலவற்றிற்கு கணக்கு பார்க்கக்  கூடாது.."உழவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது"  என்பார்கள் அதைத்  தான் இங்கு நான் சொல்ல வருவது.  பெற்ற தாய், தந்தை, எந்த குழந்தைக்கும் குறைவில்லாமல் பராமரிப்பது அவர்கள் கடமை என்றால், 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்" என்னும்  குறள் நி னைவிற்கு வருகிறதா? 

தந்தையின் கடமை என்று வரும் போதே மகனுக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது தானே...மற்ற பிள்ளைகள் தங்கள் கடமையை செய்தார்களா என்ற கேள்வி வேண்டாம். நாம் சரியாக நம் கடமையை செய்தோமா?  அப்பா வாங்கிய கடனை பிள்ளை அடை ப்பது அவன் கடன் தானே? அப்பா நம்மை வளர்ப் பதற்கு ஆன செலவை நம்மிடம் எதிர்பார்த்தாரா? இல்லையே ..... அது போலத்  தான் இதுவும்....

 "இது எப்படி சரியாகும்," கடனை அடைக்க உதவாத மற்ற பிள்ளைகளும் கடனை அடைத்த நானும் ஒரே பங்கு தான்  பெற வேண்டுமா?   எனக்கு கூட எழுதி வைக்காமல் வேறு ஒரு பிள்ளைக்கு அப்பா எழுதி வைத்தால் என்ன செய்வது| ? செலவு செய்த பணத்திற்கு கூட கொஞ்சம் கொத்தில் பங்கு  கிடைப்பது தானே நியாயம்? எ ன்று கேட்கலாம்.  ஆனால்  நீதி தேவதை கண்ணை மூடிக்  கொண்டிருக்கிறாள் தானே?  . அவளுக்கு நீங்கள் செலவு செய்தது தெரியாது.    பரம்பரை சொத்து என்றால், அனைத்து பிள்ளைகளுக்கும் சம உரிமை என்பதும்  சுய சம்பாத்திய சொத்து என்றால் அப்பா அவருக்கு பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் என்பது மட்டும்  தான் தெரியும்.  வேண்டுமானால் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு , அந்த சொத்திற்காக நாம் செலவு செய்ததை காட்டி , கூட கொஞ்சம் பங்கு கேட்கலாம் தான்,,,அல்லது மொத்த சொத்தும்  நமக்கே சொந்தம் என்று வழக்கு போட்டு வாதாடலாம் தான். ..நீதி தேவதை அதையெல்லாம் குறித்து கொள்வாள்...அதற்கேற்ப தன நிலைப் பாட்டை  மாற்றி தீர்ப்பு  சொல்லலாம் தான் ...

ஆனால் ...நம் நாட்டின் தலை நீதிமன்றமான மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் கொள்கை என்ன தெரியுமா??

யதோ தர்மஸ்ததோ ஜயா


"எங்கு தர்மம் இருக்கறதோ அங்கு ஜெயம் (வெற்றி) உண்டு".

உச்ச நீதிமன்றத்தின் நோக்கமே இது வென்றால் நீதி வழங்குவது இல்லையா என்ற கேள்வி வரலாம்.  நீதி எண்பது சூழ்நிலைக்கேற்ப மாறக்  கூடியது.  கொலை செய்வது குற்றம் என்றால் அதை தன்  தற்காப்புக்காக செய்தால் அது குற்றம் அல்ல என்கிறது சட்டப்  புத்தகம்.  ஆனால் தர்மம் என்பது என்றும் நிலைத்தது. அதனால் தான் ,  நீதியின் வழியில் சென்று தர்மத்தை அடைவதே நீதிமன்றங்களின் தலையாய பணி  எனப்படுகிறது.   அதன் அடிப்படையில்சொத்து உரிமையை அப்பா மாற்றி எழுதும்போது,  நமக்கு வேண்டுமானால்,  நாம் செலவு செய்த பணம் நமக்கு கிடைக்காமல் போகலாம்.  ஆனால் அதை அமைதியுடன் ஏற்றுக் கொண்டால், தர்மம் தலை காக்கும்.  நம் குடும்பத்தின் தலையும் நிமிரும்.. இது அனுபவ பூர்வமாக நான் கண்டுணர்ந்த  உண்மை. 

எல்லாவற்றிற்கும் நீதிமன்றத்தின்  கதவை தட்டி, நம் கைப் பொருளையும் நேரத்தையும் வீணாக்கி,மனம் நொந்து அலைக்கழிக்கப் படுவதை விட,  மாறக்கூடியது எது,  மாறாதது எது ,இரண்டிற்கும்  உள்ள வித்யாசம் என்ன என்பதையும் உணர்ந்து செயல் படுவது தான் விவேகம் உள்ளவரின் வழி. 

நாமும் அந்த வழியை சார்ந்தவர்கள் தானே?


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...