திங்கள், 18 அக்டோபர், 2021

புகழ் மீதான ஆசை எதற்கு உதவுகிறது

 சமீபத்திய செய்தி இது படித்திருப்பீர்கள்..

'For Publicity Purpose': Madras HC Imposes Rs 5K Costs, 2 Year Ban On Filing PILs For 'Misconceived' Challenge To Govt Retirement Age Policy

விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு என்று வழக்கை தள்ளுபடி செய்ததும் அல்லாமல் 5000 ரூபாய் செலவுத்தொகை போட்டு, மேலும் இரண்டு வருடங்களுக்கு பொது நல வழக்கு என்று எதுவும் மனுதாரர் போடக்கூடாது என்றும் அப்படியம் போடவேண்டும் என்றால் நீதிமன்றத்தின் முன்னனுமதி வாங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது..

அப்படி நீதிமண்றத்தை எரிச்சல் மூட்டிய வழக்கின் சாராம்சம் தான் என்ன?

சமீபத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59லிருந்து 60 ஆக அரசு உயர்த்தியது அல்லவா? அப்படி உயர்த்தியதால் நாட்டில் ஏற்கெனவே உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாடத்தை இது அதிகப்படுத்தும் என்று அதை எதிர்த்த "பொது நல" வழக்கு.!!

நீதிமண்றம் எரிச்சல் அடைய இதில் என்ன இருக்கிறது? நல்ல வேலை தானே செய்திருக்கிறார் என்று நினைப்பீர்கள்.

ஆனால் நடந்தது தெரிந்தால் உயர்நீதிமமன்றம் அதன் நேரம் வீனடிக்கப்பட்டதாக ஏன் எரிச்சல் அடைந்தது சரி தான் என்பீர்கள்.

ஆனால் இந்த பரிகாரம் கேட்க என செய்யவேண்டும்? எந்த விதத்தில் வேலையில்லா திண்டாட்டதோடு அது தொடர்புடையது என்று விளக்க வேண்டாமா? குறைந்த பட்சம், டேட்டாவாவது சேகரித்து கொடுக்கவேண்டாமா? ஒன்றுமேயில்லை…

இப்போது ஏதேனும் வகையில் பரபரப்பாகவேணும் செய்தியில் அடிபட்டு தான் பிரபலம் ஆக துடிக்கின்ற மனோபாவம் அதிகரித்து உள்ளது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி என்று.. அதற்கு காரணம் ஆர்ப்பரிக்கும் ஆசை.

"ஈதல் இசைபட வாழ்தல், அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு"

என்று தானே வள்ளுவர் சொன்னார்.. அதை தானே செய்கிறார்கள் என்கிறீர்களா?

ஆனால் எந்த விதமான புகழ் சம்பாதிக்கவேண்டும் என்றும் சொல்கிறாரே…

இந்த நேர்பட வாழ்தல் இல்லாதோருக்கு கிடைக்கும் பேர் எதிர்மறையானது .அப்படிப்பட்ட பேர வாங்குபவர்கள் தான் தன்னை நொந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

புகழ்பட வாழாதார் தந் நோவார்

தமமை

இகழ்வாரை நோவது எவன்.

இதற்கு கலைஞர் உரை எழுதுகிறார் பாருங்கள்..

"உண்மையான புகழுடன் வாழ முடியாதவர்கள் தம்மை நொந்துகொள்ளவேண்டுமே தவிர தமது செயல்களை இகழ்வோரை நொந்து கொள்வது எதற்காக? என்கிறார்.

இன்னொரு வகையினர் இருக்கிறார்கள் "நீங்க நல்லவருங்க. வல்லவருங்க" என்று துதி பாடுவதில் மயங்கி தன்னுடையதை இழப்பவரும் உண்டு.. அவர்களுக்கெல்லாம் லக்கினத்தில் குரு இருப்பார்!!

அப்படி அண்டி வாழ்ந்து புகழ்வோரையும் அவ்வையார் விட்டு வைக்கவில்லை.

"பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்
இச்சைபல சொல்லி இடித்துண்கை – சிச்சீ
வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது
உயிர்விடுகை சால உறும்"

நல்ல குடியில் பிறந்தவர்கள் வயிறு வளர்பதற்காக அடுத்தவரை அண்டி, அவரை புகழ்ந்து பிச்சை வாங்கி வாழ்வது சீச்சீ என்று கூறும் அளவிற்கு இழிவான செயலாகும். இப்படி மானம் விட்டு உயிர் வாழ்வதை விட இறப்பது மேல்.

என்று வசை பாடுகிறார்..

அப்படியானால் எப்படியாவது புகழ் பெறும் ஆசை தவறு இல்லையா?

அப்படியானால் நல்ல ஆசை, கெட்ட ஆசை என்று எப்படி பிரித்து அறிவது?

ஆசை தானே உயிரின் அடிப்படை. அது நாம் வளர வளர வயதுக்கு ஏற்றது போல அதுவும் பரிணாம வளர்ச்சி அடைகிறது. பருவ வயதில், எதிரினத்தின் மீது ஆசை, நல்ல வேலை/ தொழில் செய்ய ஆசை , கோடீஸ்வரனாக ஆசை, அந்த காலத்து ஒனிடா டிவி விளம்பரம் வருமே "சொந்தக்காரரின் பெருமை, அண்டை வீட்டுக்காரரின் பொறாமை"..அது போன்ற அழகான மனைவி..அமைய ஆசை ..இப்படி ஆசைக்கு தான் அளவேது..!!

இது எல்லாம் கிடைத்தாலும் மனது சும்மா விடுகிறதா?

பணத்தின் மீதான ஆசை அது எவ்வளவு நிறைந்தாலும் நின்று விடுகிறதா? பணத்தை குவிப்பதில் ஆசை கொண்ட ஒருவனுக்கு எந்நாளும் அது அடங்கப் போவதில்லை..

அதிகாரம் ..அதுவும் ஒரு போதை தான்.

பணத்தையும் அதிகாரத்தையும் கொண்டவன் நின்று நிதானிக்க நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறான்.

அந்த ஓட்டத்தில் தான் , நம் உள்ளே உள்ள வெற்றிடத்தை உணர்கிறோம்... அந்த காலியிடத்தை நிரப்ப எடுக்கும் முயற்சி..இந்த பணம், புகழ்சேர்க்கும் வேகம். ஆனால் எத்தனைக்கு எத்தனை . முயற்சி செய்தாலும், ..இவர்கள் போட்டுக்கொண்டே இருக்க…உள்ளே போட்டதெல்லாம் மாயமாகி போகிறது

அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர்கள் ஆசை பேராசையாக வெறியாக மாறிவிட்டதை கண்கூடாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம்.

சிறிது சிறிதாக ஆசையும் அவனுடன் வளர்கிறது.. " நான்" என்னும் அகங்காரமகவும் "எனது" என்னும் மமகாரமாகவும்..

பணம் சேர்நதது போலவே, கருமித்தனம், பொறாமையையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட மனது, யாருக்கும் சற்றென்று தன்னிடம் உள்ளதை பகிர்ந்துக் கொள்ள மறுக்கிறது.அப்படியே கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு ஆதாயம் என்ன என்று தேடுகிறது..

"நீ என்னை மெச்சி பேசுவாயா" என்று எதிர்பார்க்கிறது. தான் சம்பாதித்த பணம், அதிகாரம் கொண்டு அதை சம்பாதிக்க பார்க்கிறது.

புகழுக்கு ஆசைப்படாத ஜீவன் இருக்கிறதா என்ன? வீட்டில், வேலை செய்யும் இடத்தில், நண்பர்கள் நடுவில் தான் பாரட்டப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவன் தானே சாமானிய மனிதன்.!!

அத்தனைக்கும் ஆசைப்படுகிறோமோ இல்லையோ.. தான் புகழப்பட வேண்டும் என்ற ஆசை..இருக்கிறதே, அது ஒரு கட்டத்தில், ஆசை என்பதிலிருந்து பேராசையாக மாறி , வெறியாக உருமாற்றம் கொண்டிருக்கும்..

இங்கே தான் அது உருமாற்றம் அடைவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

அதற்காக ஆசையை விட்டு விடவேண்டும் என்ற பொருளல்ல. ஆசை தான் மனிதனின் முன்னேற்றத்திற்கு அடிப்படை..

அதுவும் புகழ் எனும் போதையின் மாய வலையை பற்றி ஓஷோ இப்படி சொல்கிறார்

"உங்களை நல்லவனாகவோ கெட்டவனாகவோ பிறர் மாற்ற முடியாது..அவர் அபிப்ராயத்திற்கும் அவன் சக்தி மிக்கவனாக ஆகிறான். அவர் புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களை தன் பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும் நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள் "

அதை சரியாக புரிந்துக் கொள்வது மட்டுமே இப்போதைய தேவை. ஆனால் அதை தேடி, ஓடிக் கொண்டே போகும்போது, பேராசையாக உருமாற்றம் அடைந்துக் கொண்டிருப்பதை உணர்ந்துக் கொண்டால் தான் , அதிலிருந்து விடுபட முடியும்..

சக மனிதனிடம் அன்பு பாராட்டுவது இருக்கட்டும். இந்த புகழ் போதை கொண்டவர் எல்லாம் தன் மீதே அன்பு செலுத்துபவராகவா இருப்பார்கள்?

ஏன் உடலை கச்சிதமாக தானே வைத்திருக்கிறார்கள் என்கிறீர்களா? இல்லை..அது வெளிக்காட்சிக்கு தான்..

இந்த பேராசை, பொறாமை போன்றவை சூழ, இருக்கும் நம் மனதை திறந்துக் கொண்டு உள்ளே ஆழமாக போனால் தான் நம் மனதின் ஆசையை தெரிந்துக் கொள்ள முடியும்..

இறந்த உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர் போல, நம்மில் உள்ள குறைகளை ஈவு இரக்கம் இல்லாமல், உண்மையாக கண்டறிந்து அதை சரி செய்தோ, முடியாததை ஒதுக்கி கொண்டோ போனால .அதன் தேவையை நியாயமான ஆசையை காது கொடுத்துக் கேட்க ஆரம்பிக்கலாம்..அதை தான் தியானம் என்கிறார்கள்.

அதற்கு முன் செய்ய வேண்டியது ஒன்றும் உள்ளது.., ஓடும் ஓட்டத்தில், என்றாவது நம் உடலின் தேவையை உணர்ந்திருக்கிறோமா..??

இப்படி நம் உடலின்,மனதின் நியாயமான ஆசையை நிறைவேற்ற முயற்சிகும்போது, .நம் உடலும் மனதும் நட்பாகி விடும்.

அப்போது தான் ஆசை என்னும் ஒரு மாய சூழலிருந்து விடுபடுவது.கடினமாக இருக்காது.., நம்மை நாமே முழுதாக நம்ப ஆரம்பிக்கலாம்.

ஆனால் உள்ளே உள்ள காலியிடத்தை தன் தியானம் மூலம் உணர்ந்தவன் தான் ஜெயிக்கிறான். என்கிறார் ஓஷோ.

இப்படி தியானம் செய்துக்கொண்டிருந்தால் எல்லாம் கிடைத்துவிடுமா? என்கிறீர்களா??

ஏன் சிலர் அதையெல்லாம் கடவுள் தூக்கி கொடுத்துவிடுவார் என்று கோயில், மசோதா, சர்ச்சுகளில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?.

கடவுள் எங்கே தான் இருக்கிறார்? அவர் வேண்டியதை கொடுத்து விடுவாரா? அதற்கும் ஒரு சூட்சமம் உள்ளது என்கிறார் அவ்வையார்.

நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க் கென்றும்
தரும் சிவந்த தாமரையாள் தான்

பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு நல்ல நீர்வளம், நிழல் தரும் மரங்கள், நெல் வளம், பேரும், புகழும், சிறப்பான வாழ்க்கையும், நல்ல வீடும், தேவையான செல்வமும், நீண்ட ஆயுளும் செந்தாமரையில் அமரும் மஹாலக்ஷ்மி அருளுவாள்.

அதாவது பிறருக்கு துன்பம் செய்யாதவருக்கு, அடுத்தவர் அழிய வேண்டும் என்ற வஞ்சனை இல்லாதவருக்கு தான் கடவுள் அருளுவார் என்பது தானே மறை பொருள்..

ஆரவாரம் இல்லாமல் அமைதியாக எந்த சிறு செயலையும் அதன் பொருள் உணர்ந்து எந்த குறிக்கோளும் இல்லாமல் இந்த உலகத்திலோ வேறு உலகத்திலோ எதையும் பெறும் ஆசை இல்லாமல் செய்துக் கொண்டு இருந்தால், அதுவே தேன் உள்ள மலரை தேடி வரும் வண்டை போல புகழ் உன்னை தேடிவரும் என்கிறார்கள்.

.எந்த குறிக்கோளும் இல்லாமல் செய்வதா? அது எப்படி என்கிறீர்களா?

அதை தானே நாம் அனைவரும் செய்கிறோம்!! .நமக்கு பிடித்த நாம் அன்பு பாராட்டும் மனைவி/கணவனுக்கு, பிள்ளைக்கு என்று தான், தனக்கு என்று வைத்துக்கொள்வதை நம் அன்பு கொண்ட உள்ளங்களுக்கு பகிர்கிறோம் தானே...

எதையும் எதிர்பார்க்காமல் பகிர்வது தான் உண்மையான அன்பு..

உண்மையில் அப்படி கொடுப்பவன் தான் நன்றியோடு இருக்கவேண்டும் என்கிறார் ஓஷோ

அதுவே விரிவடைந்து உறவு, உற்றம், சுற்றம் என பெருகி, நாளடைவில் தெரியாதவர் மீதும் அன்பு வளரும் போது அது "அருள்" ஆகிறது.

நாம் அவர்களிடம் காட்டும் அன்பு, இரண்டு மடங்காக நமக்கே திரும்பிவரும் தன்மை கொண்டது.

சில உள்ளங்களில் இது போல பிரதிபலிக்காத தன்மை இருக்கும்..!!

சூரியனின் ஒளியை வாங்கி திருப்பி கொடுக்கும் கிராகங்களின் துணையை தான் உயிர்கள் நாடுகிண்றன…

எத்தனையோ மைல் தொலைவில் உள்ள குரு கிரகம், அப்படி தான் பெற்ற ஒளியை, இரட்டிப்பாக தன் சுப கதிர் வீச்சையும் சேர்த்துக்கொடுப்பதால் தானே அது கொண்டாடப்படுகிறது!!

ஆனால் அதுபோல பிரதிபலிக்கும் தன்மை இல்லாத இருள் கிரகம் ஆன சனியை யார் தான் விரும்புவார்?

அன்பு பாராட்டும் போது புகழ் வளர்கிறது..

அது போன்ற புகழ் தான் நிலையானது.

ஆனால் இது எல்லோருக்கும் அமைந்து விடுமா? என்றால் இல்லை.

ஒருவர் பேர் பெற்றவர் ஆவாரா கீர்த்தி பெற்ற பேறு பெருவாரா என்பதை அவர் ஜாதகத்தின் மூன்றாம் பாவமே சொல்லும்.அதோடு அதற்கு தேவையான தன் செயல்களில் முயற்சி எடுப்பாரா என்பதையும் அதுவே காட்டும்.

"சமூகம் ஒரு தனிமனிதனுக்குக் கொடுக்கும் மரியாதை, கௌரவம் எல்லாம்,"மிகவும் மென்மையான முகமூடி." அந்த நாள் முதல், இந்த நாள் வரை... இந்த சமூகம் ஒவ்வொருவரையும் ஏமாற்றியே வந்திருக்கிறது. அது கொடுக்கும் மரியாதை மற்றும் கௌரவத்திலேயே, உங்கள் கவனம் எப்பொழுதும் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. அதுதான் உங்கள் தனித்தன்மை என அது உங்களை நம்ப வைக்கிறது.

சமூகம் கொடுக்கும் மரியாதை, அந்தஸ்து, கௌரவம் மிகவும் மேலோட்டமானது, மாறக்கூடியது

"உங்களுடைய தனித்தன்மை என்பது... உங்கள் கூடவே பிறந்தது, இயல்பாக வளருவது, அதை யாரும் கொடுக்க முடியாது. அதை யாரும் எடுக்கவும் முடியாது." என்கிறார் ஓஷோ.

கடைசியாக ரூமி சொன்ன கதை ஒன்று.

ஒரு முதியவரை சந்திக்கிறான் ஒரு இளைஞன்.

"என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

"இல்லை"

"நான் உங்கள் மாணவன்

"அப்படியா.இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"

"ஆசிரியராக இருக்கிறேன்."

"நல்லது…என்னை போலவே"

"ஆமாம் நீங்கள் தான் நான் உங்களை போன்ற ஆசிரியராக நினைத்ததற்கு காரணம்"

"அப்படியா எப்போது அப்படி நினைத்தாய்?"

இளைஞன் பள்ளிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்ல ஆரம்பிக்கிறான்.

"ஒருநாள் என் தோழன் ஒருவன் ஒரு புது வாட்ச் பள்ளிக்கு கொண்டு வந்தான். அது பாரககவே அழகாக இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்து போய் விட்டது.அவனுக்கு தெரியாமல் நான் எடுத்து என் டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் வாட்ச் காணாமல் போனதை அறிந்து, அவன் வகுப்பு ஆசிரியரானஉங்களிடம் வந்து புகார் செய்தான்.

.நீங்களும் வகுப்பில் எல்லோரிடமும் சொன்னீர்கள்…"வகுப்பில் இருக்கும்போது காணாமல் போயுள்ளது.யார் எடுத்தார்களோ திருப்பிக் கொடுத்து விடுங்கள்" என்று.

ஆனால் அந்த வாட்ச் எனக்கு ரொம்ப பிடித்ததால், திருப்பிக் கொடுக்க மனம் இல்லை.

நீங்கள் வகுப்பின் கதவை மூடினீர்கள்.

எல்லோரையும் வட்டமாக நிற்க சொன்னீர்கள். எங்கள் எல்லோரையும் கண்களை மூட சொன்னீர்கள்.அப்போது தான் ஒவ்வொருவராக சோதனை போடுவேன் என்றீர்கள்..

நீங்கள் சொன்னபடியே செய்தோம். நீங்களும் ஒவ்வொருவர பாக்கெட்டில் சோதனை செய்ய செய்ய, .நான் பயந்தது போலவே என் முறை வந்தது. நீங்கள் என் பாக்கெட்டில் கைவிட்டு வாட்சை எடுத்தீர்கள். அடுத்து மற்றவர்களையும் சோதனை செய்வதை தொடர்ந்தீர்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லோரையும் சோதித்து முடித்துவிட்டு, நீங்கள் சொன்னீர்கள்

"எல்லோரும் கண்ணை திறன்கள்.வாட்ச் கிடைத்து விட்டது"

பயத்துடன் நான்பார்த்துக் கொண்டு நின்றேன்.

நீங்கள் அதற்கு மேல் அது பற்றி எதுவும் பேசாமல் பாடம் நடத்த ஆரம்பித்தீர்கள்.நான் திருடியதை நீஙகள் சொல்லவேயில்லை. என்னை தனியாக கூப்பிடூவீர்கள் என்று நினைத்தேன் அதுவும் நடக்கவில்லை.என் மரியாதையை காப்பாற்றினீஈகள். நான் அவமானகரமாக உணர்ந்த நாள் அது.

நீங்கள் திட்டவில்லை.ஏன் எதுவும் சொல்லவில்லை.ஆனாலும் நீங்கள் சொன்னதை நான் புரிந்துக் கொண்டேன்.

ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்து, புரிந்து கொண்டேன்.உங்களுக்கு அது நினைவிருக்கிறதா?"

"ஆமாம்.எனக்கு அது நினைவுக்கு வருகிறது..காணாமல் போன வாட்சை தேடி கண்டுபிடித்தது நினைவிருக்கிறது..ஆனால் அதை நீ தான் எடுத்தாய் என்று அப்போது எனக்கும் தெரியாது.நானும் கண்ணை மூடிக்கொண்டிருந்தேன்!!"

இவரை புகழ் ஆசை வருகிறது தானே??!

நம்மை உணர்வோம்!!


கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...