கணேஷ் ஒரு மோட்டார் பைக்கில் பின்புறம் உட்கார்ந்து செல்லும் போது , விபத்து ஏற்படுகிறது. விபத்தை ஏற்படுத்தியதென்னவோ மோசமாக ஓட்டி வரப்பட்ட ஒரு ஆட்டோவினால் தான். சிகிச்சை எடுத்தும் பலனில்லை. இறந்து விடுகிறார்.
அப்போது அவர் மனைவி பாக்கியஸ்ரீக்கு 19 வயது தான். விபத்துக்கான நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுக்கிறார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது மறுமணம் செய்துக் கொள்கிறார். இதை தான் காரணமாக கொண்டு நஷ்டஈடு தர மறுக்கிறது இன்சூரன்ஸ் நிறுவனம். இத்தனைக்கும் இந்த வாதத்தை எடுத்து வைத்த அந்த இப்கோ டோக்கியோ நிறுவனத்தின் அதிகப்படி பங்குகளை வைத்திருப்பது டோக்கியோவில் உள்ள பெரிய காப்பீடு நிறுவனம் .
ஒரு வேளை ஜப்பான் பெண்கள் அவர்கள் கணவர் இறந்த பின் மறுமணம் செய்ய மாட்டார்களா என்ன?
அதே சமயம், வேறு ஒரு காரணத்தையும் சொன்னது மறுப்பதற்கு.
அந்த ஆட்டோ அனுமதிக்கப்பட்ட எல்லையை தாண்டி பயணம் செய்ததாம்...
அதற்கான சாட்சியம் கொடுக்காததால், அந்த வாதம் ஏற்கப்படவில்லை .
மிஞ்சி நிற்கும் ஒரே காரணம், அவள் மறுமணம் செய்துக் கொண்டாள் என்பது தான்.
இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம்
இறந்து போன கணவனுக்குண்டான நஷ்டஈடு கிடைக்கும் காலம் வரைக்கும் ஒரு பெண் மறுமணம் செய்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது. விபத்து நடந்த போது, இறந்தவரின் மனைவியாக அவர் இருந்தார் என்பதே போதுமானது. மறுமணம் செய்ததாலேயே நஷ்டஈடு பெறுவதில் இருந்து அவரை விலக்க முடியாது " என்று நேற்று தீர்ப்பு அளித்துள்ளது.
இதை படிக்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணம் ...
"மனைவி இறந்த பின் மறுமணம் செய்துக் கொண்ட கணவனுக்கு நஷ்டஈடு கிடையாது " என்று யாரும் வாதிட்டதாக தெரியவில்லையே ?
இதே போல தானே அரசாங்க ஊழியரான கணவன் இறந்த பின் கருணை அடிப்படையில் வேலை கோருவதற்கு மறுமணம் செய்துக் கொண்ட மனைவிக்கு உரிமை இல்லை என்ற வாதத்தை உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் நிராகரித்து வருகின்றன. இருந்தும் இந்த அவல நிலை ஆங்காங்கே வரும் போது நீதிமன்றங்கள் தலையிட்டு அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி அளிக்கின்றன.
சமீபத்தில் அலஹாபாத் உயர் நீதிமன்றம் கூட இது போன்ற ஒரு தீர்ப்பை கொடுத்துள்ளது. அது துணை நின்றது பெண்ணிற்கல்ல... ஒரு ஆணிற்கு ..
இந்த வழக்கு சற்று சுவாரசியமானது .. இறந்த மனைவியினால் கருணை அடிப்படையில் வேளை பெறுகிறார் முஹம்மத் ஹைதர். பின் இறந்த மனைவியின் தங்கையை திருமணம் செய்ய வரும்பி அனுமதி கோருகிறார். அது மறுக்கப்படுகிறது. நிவாரணம் கோரி நீதிமன்ற படியில் கால் வைக்கும் அவருக்கு அனுசரணையாக சொல்கிறது உயர் நீதிமன்றம்...
மறுமணம் செய்ய அனுமதி வாங்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை. கருணை அடிப்படையில் வேலை கொடுக்கபடுவதே, இறந்த ஊழியரின் குடும்பத்தை அவர் சரியாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கே . மற்றபடி திருமணமோ, மறுமணமோ அது அவரின் அடிப்படை உரிமை அதில் எந்த விதியும் குறுக்கிட முடியாது . அதனால் மறுமணம் செய்ய அனுமதி கோர வேண்டிய தேவையே இல்லாத போது, மனுதாரர் அதை கேட்டு நீதிமன்றம் வந்ததும் தேவையில்லாதது " என்றது.
உண்மையில் விதவை மறுமண சட்டம் தான் கொண்டுவரப்பட்டது... மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்ய எந்த தடையும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.
அதனால் பெண்ணிற்கு மட்டுமே சிறப்பு சலுகையை சட்டமும் நீதிமன்றங்களும் காட்டுகின்றன என்று பொதுவாக நினைக்காமல், தேவைப்படும் நேரத்தில் தேவைப்படும் இடத்தில், இன வித்யாசம் இல்லாமல் தான் நீதிமன்றங்கள் உத்தரவுகள் போடுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .
நாம் தான் ஆணிற்கு திருமணம் ஆனாலும் தந்தையில் சொத்தில் பங்கு உண்டு: ஆனால் அதுவே திருமணமான பெண்ணிற்கு அது கிடையாது என்று பிரித்து வைத்தோம். அந்த வித்தியாசத்தை களைய உச்ச நீதிமன்றம் வர வேண்டியிருந்தது.
திருமணமான ஆண், திருமண உறவிற்கு வெளியில் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை சமூகம் அங்கீகரித்தது . அதற்கு "சின்ன வீடு", "தொடுப்பு" , "சக்களத்தி " ,என்றுமம் சற்று கவுரமாக 'துணைவி' பெயர் சூட்டி அழகு பார்த்தது. அது அவன் ஆண்மைக்கு அடையாளமாம். இதில் அந்த முதல் மனைவி புகார் கொடுத்தால் தான் அந்த கணவன் மீதே புகார் பதியும்
ஆனால் பெண்ணின் நிலை. ..
1881 -1886 ல் சென்னை மாகாண கவர்னராக இருந்த ராபர்ட் பவுர்க்கின் மனைவி லேடி கன்னிமரா, தன கணவனின் வெளி தொடர்பை நேரில் கண்டு கோபமுற்று, தன் இல்லத்தை விட்டு நீங்கி தனியாக கிளமிபி வந்து இந்த மாளிகையில் தங்கினார்(அந்த காலத்தில் அது அபூர்வம்) என்பதால் தானே அதற்கு 'கன்னிமாரா ஹோட்டல் " என்ற பெயரே வந்தது என்று சென்னை வரலாறு தெரிந்தவர்கள் சொல்வார்கள்.!!
இந்த வேறுபாட்டை களையத்தான் , பெண்ணை 'ஒரு பண்டமாக ' ஆண் கொண்டிருந்த நிலையை
ஒருவனுடைய பொருளை இன்னொருவன் திருடினால் தானே அது 'திருட்டு' அதுவும் ஒரு பெண்ணின் கணவனை இன்னொரு பெண் கவர்வது குற்றமாக இல்லாத நிலையில்,
சமன் செய்யவே ' கள்ள உறவு ' கொள்வது குற்றம் என்று இருந்த பிரிவை உச்ச நீதிமன்றம் நீக்கியது ஆனால் அதற்கு எழுந்த விமர்சனங்கள் இருக்கிறதே...அப்பப்பா .ஏதோ நீதிமன்றம் தான் இவர்கள் உறவில் ஏற்பட்ட விரிசலை அதிகப்படுத்தியது போல...
முன்னர் பெண்ணிற்கு இருந்த நிலை என்ன?
கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு விட்டால், பிடித்தால் தொடர்ந்து அவனுடன் குடும்பம் நடத்தலாம். இல்லையெனில் விலகி விடலாம். அதே போன்ற நிலையை இன்று ஆணிற்கும் அளித்துள்ளது. திருமண உறவிற்கு வெளியே தொடர்பு கொள்ளும் பெண்ணிற்கு எதிராக இதை காரணம் காட்டி அவன் விவாகரத்து பெறலாம்.
இது தானே சம நீதி ....இதை சரியான மனப் பக்குவத்தொடு அணுகினால் தான் விவரம் புரியும்.
உண்மையை சொல்ல வேண்டுமானால், ஆணிற்கு எளிதாக கிடைக்கும் எதையும் ஒரு பெண் போராடி தான் பெற முடிகிறது என்பது தான் நிதர்சனம்.
எத்தனை சிறப்பு சட்டங்கள் போட்டும் என்ன.
இன்றைய தேதியில் ஒரு பெண் நீதிபதி கூட எந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை தானே !!??
.

