திங்கள், 18 அக்டோபர், 2021

மரண தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பில் கையெழுத்து இட்ட பிறகு ஒரு நீதிபதி தனது பேனாவின் நிப்பை உடைப்பது ஏன்?

         சமீபத்தில் டி.ஜி.பி.அலுவலகம் போக நேரிட்டது..அந்தக் காலத்து கட்டிடம்…பிரிட்டிஷ் காலத்திலிருந்தே போலீஸ் தலைமையகமாக இருப்பது..

        அங்குள்ள நீண்ட வராந்தாவில் நடக்கும்போது வரிசையாக மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வந்தேன். பிரிட்டிஷ் இந்தியாவில் ஐ.சி.எஸ்.பட்டம் பெற்ற காவல் தலைமை அதிகாரிகள்..சிலரின் பெயர்களுடன் சி.ஐ.ஈ.என்ற பட்டமும் இருந்தது.."சி.ஐ.டி".தெரியும்..அது என்ன சி.ஐ.ஈ? அந்த வழியாக போய்க் கொண்டிருந்த போலீஸ் அதிகாரியை (டி.எஸ்.பி) தடுத்து நிறுத்தி கேட்டேன்.

எவ்வளவு காலம் தான் நாம் விடையை மட்டுமே கொடுப்பது?.😀

        அவர் திடீரென எதிர்பட்ட இந்த "க்விஸ்"சை எதிப்பார்க்கவில்லை போலும்..

பாவம்..வினா மட்டுமே கேட்டுப்பழகியவருக்கு..😀

        ஒரு நிமிடம் அமைதியாகி, "பிரிட்டிஸ்காரர்கள் கொடுத்த பட்டமாக இருக்கும்" என்றார்..

        அதற்கு மேல்?? கூகிள் தான் கடைசியில் விடை சொன்னது.

Companion of Indian Empire…

        இதே போன்ற ஒரு பட்டம் கிடைக்கும் என்ற ஆசையில் தானே திவான் பகதூர் ஜட்ஜ் அஷ்டோத்ரம் அய்யங்கார், அவர் வர்ணிப்புப்படியே "ஒரு பால் வடியும் முகம் கொண்ட " வாலிபன் திருமலைக்கு தூக்கு தண்டனை கொடுத்தார் என்று கல்கி "தூக்கு தண்டனை" என்ற புதினத்தில் எழுதுகிறார்?!!

        அது மட்டுமா?

        உபந்யாஸம். செய்யும் ஒழுக்கசீலரான சடகோபாலாச்சாரியார் சொன்ன சாட்சியம் உண்மையாகப் பட்டாலும், எதற்கு "பெரிய" இடத்தை பகைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்து, போலீஸ் தரப்பு சாட்சியத்தை ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனை கொடுத்திருந்தார்.

        இதனால் அவன் குடும்பம் சீர்குலைந்தது என்று கேள்விப்பட்டு, தான் தவறு செய்துவிட்டதாக மன நிம்மதியில்லாமல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாளின் முந்தைய அமாவாசை இரவில் தூக்கம் வராமலிருக்கும் நள்ளிரவில், திருமலையை தன் அறையில் பார்ப்பார்..அவன் சிறையில் இருந்து தப்பித்து வந்தது நல்லதாகிப் போயிற்று என்று நிம்மதி அடையும் அவர் தன் தீர்ப்பில் பிசகு உள்ளது என்று ஒத்துக்கொள்வதை கேட்ட அவன் அதை தெரிந்துக் கொள்ளவே வந்ததாக சொல்லி செல்வான்.

        அவன் அவருடன் பேசிக்கொண்டிருந்த சில மணித்துளிக்கு முன்னர் தான் சிறையில் இறந்தான் என்ற செய்தியை படித்தவுடன் அவருக்கு இதயம் துடிப்பதை நிறுத்திக் கொள்ளும்!!" என்று கதை முடியும்..

        நீதி வழுபவர் நிலையை கல்கி படம் பிடித்துக் காட்டிய இந்த புதினம் , வெகு நாள் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்த சி.ஐ.ஈ பற்றி படிக்கும் போதும் அது நினைவுக்கு வருகிறது.

        பிரிட்டிஷார் காலத்தில் நீதித்துறையில் இருந்தவர்கள் இந்த பட்டத்தை மட்டும் பெறவில்லை..ஒரு வித்தியாச நடைமுறையையும் கையாண்டனர். நீதி மன்றங்களில் மரண தண்டனை விதித்து குற்றவாளிக்கு தீர்ப்புக் கூறி அதனை படித்தபின் ,அந்த தீர்ப்பில் தன் கையொப்பம் இட்ட பின்பு, நீதிபதி  அந்த பேனாவின் நிப்பை மேசையில் ஓங்கி குத்தி,அதன் முனையை உடைத்து ,பேனாவை தூக்கி வீசுவர். இன்றும் அவ்வாறு உடைக்கிறார்கள் .

        நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உத்தரவில் கையெழுத்திட்ட உடனேயே, நீதிபதி அந்த பாரம்பரியத்தை வைத்து பேனாவின் முனையை உடைத்தார் அல்லவா?

        தீர்ப்பு அளிக்க உதவிய பேனாவின் முனையை உடைப்பது, ஒரு சட்டமும் அல்ல, குற்றவியல் நடைமுறை என்றும் சொல்லப்படவில்ல.

        ஆனால்…அது ஒரு குறியீடு என்று சொல்லலாம்.அப்படி செய்வதற்கு பின்னால் பல் கோட்பாடுகள் உள்ளன:

  • ஒரு முறை எழுதி உத்தரவை படித்து கையெழுத்திட்டால், அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய அல்லது ரத்து செய்யம் அதிகாரம். அந்த நீதிபதிக்கே இல்லை..

ஒரு தடவ முடிவு பண்ணிட்டேனா… என் பேச்ச நானே கேட்கமாட்டேன்

        அதை அதற்கு மேல் உள்ள நீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியும்.  அதனால் அந்த தீர்ப்பு குறித்து நீதிபதியால் மேற்கொண்டு சிந்திக்க முடியாதபடி முனை உடைக்கப்படுகிறது

  • அந்த பேனா ஒருவரின் உயிரைப் குடித்ததல்லவா? அதனால் மீண்டும் அதை பயன்படுத்த வேண்டாம். என்பதற்காகவும்..
  • ஒருவரின் உயிரைப் பறிக்கும் சக்தி கடவுளுக்கு மட்டுமே உள்ளது ஆனால் ஒரு நீதிபதி தனது அதிகாரப்பூர்வ கடமையை மட்டுமே செய்கிறார். அதனால் மரண தண்டனை தீர்ப்பிலிருந்து தன்னை தூரத்தில் நிறுத்திக் கொள்ளவும்..
  • பேனாவின் முனையை உடைப்பதன் மூலம், அவர் தனது கடமையை மட்டுமே நிறைவேற்றுவதாக சொல்லாமல் சொல்கிறார்!!              ஒரு பழைய பழமொழி சொல்வது போல்:                                                                                      "மரண தண்டனை ஒரு சோகமான, ஆனால் சில நேரங்களில் அவசியமான விஷயம் கூட அதை செயல்படுத்த பயன்படுத்தப்படும் பேனாவை உடைப்பது, அந்த வருத்தத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்".

        இப்போதெல்லாம் பால் பாயிண்ட் பேனா தானே உபயோகிக்கிறோம்.  அப்போதும் ரீபில் முனையை ஒடித்து விடுவர்!!

        மரண தண்டனையை கொடுக்கும் சில நாடுகளில் இந்தியா இன்னமும் உள்ளது..அது குறித்த கருத்து வித்தியாசங்கள் அவ்வப்போது எழுவதுண்டு!!

        ஒரு தனி மனிதன், சமூகத்தின் கட்டுப்பாடுகளை தகர்க்கும் போது, அவனுக்கு தண்டனை அளித்து, அதன் மூலம் மீண்டும் அது போல அவன் செய்யா  வண்ணம் தடுத்து அதேவேளையில் மற்றவருக்கும் அது குறித்த அச்சத்தை ஏற்படுத்தி, அவனை மீண்டும் சமூகத்துடன் ஒன்றிணைப்பது தானே சட்டம், நீதியின் கடமை, ஆனால் மரண தண்டனை அந்த நோக்கத்தையே சிதைப்பது அல்லவா.என்பதே, .மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் வினா..

        அவன் உயிர் வாழ்வது சமூகத்துக்கே தீங்கு என்று தானே மரண தண்டனை வழங்கப்படுகிறது? அதனால் தான் அது "அரிதிலும் அரிதான" வழக்கில் மட்டுமே வழங்கப்படுகிறது..

        ஆனாலும், உயிர்களின் மீதான அன்பு தானே மனித குலத்தின் அடிப்படை. அதுவே தொலைகிறதே இந்த மரண தண்டனையினால் என்கிறார்கள் அவர்கள்.

        நீதிமண்றத்தின் தண்டனையே, அறத்தின் அடிப்படையில் என்னும்போது "அன்பு பெரிதா அறம் பெரிதா ?" என்ற வினா எழும்..

        சமீபத்தில் இங்கு கூட ஒரு வினாவை பார்த்தேன்.

        அன்புக்குரியவரை காப்பாற்ற நீங்கள் சட்டத்தை மீறுவீர்களா?

    சட்டம் பொது ஒழுங்கை கட்டுப்படுத்தி, அறத்தை வளர்க்கும்.. ஆனால் அன்பு வேண்டியவருக்காக தவறு செய்யத் தூண்டும் சட்டத்தை மீற வைக்கும்..

        அப்படியானால் எது முக்கியம்?

        நமக்கு எப்பவும் ரெடி ரெக்கனர் திருவள்ளுவர் அல்லவா?

        "அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" என்கிறார் அவர்..

        இல்வாழ்க்கையின் அடிப்படையே அன்பினால் கட்டப்படுவது என்பவர் அவ்வாறு வாழ்வது அறம் செய்யவே என்கிறார்.  அப்படியானால் ..அறமே பெரிது..

        நம் அன்பிற்குரியவரை காப்பாற்ற சட்டத்தை நாம் மீறினால், ..அவரோடு சேர்ந்து நாமும் மாட்டிக் கொள்ளவேண்டியது தான்..

ஆனாலும் விதி என்று இருந்தால் விதிவிலக்கு இருக்கும் தானே..

அதனால், அது சூழ்நிலைக்கேற்ப மாறலாம்!!

        மஹாபாரதத்தில் கூட கிருஷ்ணனுக்கு பாண்டவர் மீது பிரியம் அதிகம். திரௌபதியோ அவனுடைய "பிரிய சகி"..அவர்களுக்கு போரினால் ஏற்படும் தீமைகள் பற்றி நன்கு அறிவார்..

        அந்தப் போரின் காரணம் வரும் பெரும் அழிவைத் தடுக்கவே பீஷ்மரும் விதுரரும் முயல்கிறார்கள். மாறாக "நான் அவ்வழிவை நிகழ்த்த எண்ணுகிறேன்” என்கிறார் கிருஷ்ணர்.!

        உண்மை ....அவர் திட்டமும் அது தான்... சகுனியின் பகடை காய்கள் வழியாக அந்த பேரழிவிற்கான சூதாட்டக்களத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி விடுகிறார்!!

        பல லட்சம் வீரர்கள் யுத்தம் புரிந்து உயிர்விடும் குருஷேத்ர போருக்கான சுழி பன்னிரு படைக்களம்’ வழியாக !!

        முடிவில், பலரது துர் மரணங்களுக்கு காரணமாகும் மகா பாரத போரை நிகழ்த்தபோகும் பகடைக்காய்களை அனலில் இட்டு பொசுங்க செய்கிறார் சகுனி.

        ஏன்?

        அந்த பகடை காய்கள் செதுக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டதே!!

        லட்சம் வீரர்களின் மரணத்திற்கு காரணமான பகடைக்காய்கள் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது போலத்தான்,

        நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுத்தவுடன் தீர்ப்பு உத்தரவில் கையெழுத்திட பயன்படுத்திய பேனாவின் முனையை உடைத்து, ஒரு மனிதனின் மரணத்திற்கு காரணமான அந்த பேனாவின் ஆயுள் அந்த தீர்ப்புடன் முடித்து வைக்கப்படுகிறது..

        ஆமாம்…ஜட்ஜ் அஷ்டோத்ரம் அய்யங்கார் தீர்ப்பு வழங்கிய பின், பேனாவின் ஆயுளை முடித்ததாக படிக்கவில்லையே..

        அதனால் தான்.. தீர்ப்பு வழங்கிய அவர் ஆயுளே முடிந்து போனதா?!!🤔

செவ்வாய், 12 அக்டோபர், 2021

எதைப் பற்றி மக்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

 இதை பற்றி பல தடவை சொல்லியுள்ளேன். கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படை சட்டத்தை பற்றி..

ஏதேனும் பிரச்சினை வரும்போதே நாம் காவல் நிலையத்தையும், நீதிமன்றத்தையும் தேடிப் போகிறோம்.அப்படி போகும்போது, தன் தரப்பு நியாயத்தை மட்டுமே பார்க்கும் நாம் அது , பொது நியாயத்தில் வருமா என கவனிக்க தவறுகிறோம்.இதனால் தான் பல சுற்று வழக்காடலுக்கு பிறகும் நம் கட்சி தோற்றுப்போகிறது..அது ஏற்றுக்கொள்ளப்படாத வாதம் என்று முன்னரே நமக்கு தெரிந்திருந்தால் அத்தனை கால விரயம், பொருள் விரயம் செய்திருப்போமா?

ஆனால் ஏற்றுக்கொள்ளத்தக்கது எது? எது அப்படி இல்லாதது?

உறவினரின் பக்கத்து வீட்டு பெண்மணியின் பிள்ளை திடீரென ஒருநாள் "பேசி"னார். அவர் அப்பா சாலை விபத்தில் அடிபட்டு இவர்கள் தகவல் தெரிந்து போகும்முன்பே இறந்து விட்டுள்ளார்..நஷ்டஈடு கிடைக்கும் என்று யாரோ சொல்ல, சாலை விபத்தில் இடித்துவிட்டு போன வண்டி விவரம் தெரியாது என்பதால், என்ன செய்யலாம் என்று கேட்டார்..பேசும்போது தெரிந்தது, அவர் ஏற்கெணவே போலீசில் புகார் கொடுத்துள்ளார், அதில், அவர் தந்தையின் தவறால் விபத்து ஏற்பட்டது என்று..என்ன இப்படி எழுதி கொடுத்துளளீர்களே என்று கேட்டால், ஏட்டு எழுத, நான் கையெழுத்து மட்டும் போட்டேன், இப்போது அதை மாற்ற முடியமா? என்றார்..இதை காவல் நிலையம் போகும் முன்பேயல்லவா கேட்டிருக்கவேண்டும் எண்றேன்..விவரம் தெரியாமல் அரசு கொடுக்கும் நஷ்டஈடு கூட பெற வழியில்லாமல் போயிற்று.

அடுத்து அவர் கேட்டார் பாருங்கள் ..பணம் கொடுத்தால் புகாரை மாற்ற முடியுமா?"☺️

நிறைய பேர், "சட்டம் எங்களுக்கு எதற்கு? . நாங்கள் சரியாக நடப்பவர்கள்" என்கிறார்கள்.

உண்மை…பிளாட்டோவும் அதைத் தான் சொல்கிறார்..

"நல்ல மக்களுக்கு, பொறுப்பாக நடந்த கொள்வது எப்படி என்று சொல்ல சட்டம் தேவையில்லை.ஆனால் மோசமான மக்களுக்கு அதை வளைக்கும் வழி தெரியும்" என்கிறார்.

ஒரு வழிப்பாதையின் எதிர்திசையில் வேகமாக வண்டியோட்டி வருபவர்களை பார்த்திருக்கிறோம் தானே…?

அதைக் கூட விடுங்கள்..நடந்து போய்க்கொண்டிருக்கும் மக்களின் மீது வண்டியை ஏற்றி கொன்றுவிட்டு, வாளா இருப்போரையும் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்…?!

இத்தனைக்கும் தன் மகன் தேரில் அடிபட்டு ஒரு கன்று இறந்தது என்று தன் மகனையே பலியிட்ட மனுநீதி சோழன் ஆண்டதும் இங்கு தான்.

அதிகாரத்தை கொண்டு ஒருவன் என்ன செய்கிறான் என்பதைக் கொண்டே அவனில் உள்ள மனிதத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

வலியை உணர்ந்தால் உயிருடன் உள்ளோம் என்று அறியலாம் .மற்றவரின் வலியை உணர்ந்தாலோ மனிதனாக இருக்கிறோம் என்று…லியோ டால்ஸ்டாய் சொல்கிறார்.

"சொல்றவன் சொல்லிக்கிட்டு இருக்கட்டும், என்று பணமும் அதிகாரமும் இருந்தால் சட்டத்தை வளைத்து விடலாம் தான்..ஆனால்..

வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை" 
என்று எச்சரிக்கிறாள் அவவை.

வழக்காடு மன்றத்தில் (கோர்ட்) பொய் சாட்சி சொல்பவர் வீடு ஒருவருக்கும் பயன் படாமல் போகும், அந்த வீட்டில் வேதாளம் குடிபுகும், வெள்ளை எருக்கம் பூ பூக்கும் , பாதாள மூலி என்னும் கொடிய விஷம் உள்ள கொடி வளரும், மூதேவி போய் வாழ்வாள், பாம்பு குடியேறும். ஆதலால் நியாய அநியாயங்களை அலசி ஒருவரின் பிரச்சனையை தீர்க்க உதவும் வழக்காடு மன்றத்தில் நாம் பொய் சாட்சி சொல்லக்கூடாது.

இங்குள்ள பிரச்சினையே புத்திசாலிகள் எல்லாம் ஏகப்பட்ட சந்தேகங்களுடன் இருக்க, அறிவிலிகள் மட்டும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருப்பது தான்..!!

ஏதோ ஒரு வகையில்..

அது சட்டத்துக்கு புறம்பனது ஆனாலும்

வாழ்க்கையில் ஜெயிப்பவனிடன் பேசத தான் ஆசைப்படுகிறார்கள்.தோற்று போனவனிடம் பேச யாருக்கும் நேரமில்லை

அவன் நேர்மையான வழியில் போய் தோற்றாலும் கூட!

வரலாறு முழுதும் பார்த்திருக்கிறீர்களா ?

யார் செயல் புரிந்திருக்க வேண்டுமோ அவர்கள் செய்யாமல் விட்டதும், நன்றாக தெரிந்து அறிந்திருக்க வேண்டியவர்களே அதை விட்டொழித்ததும், எப்போது அதிக தேவையோ, அப்போது நீதி ஊமையாகிப்போனதும், இவையெல்லாம் தான் அரக்கர்கள் வெற்றி கொள்ள உதவியது.

பீஷ்மர் எவ்வளவோ அறிந்திருந்தும் , நடக்கும் அநீதி தெரிந்தும் வாளாயிருந்ததால் தானே பழிக்கு ஆளானார்!!

ஆனாலும்…எந்த தவறும் செய்யாதிருப்பினும் சிலருக்கு காராக்கிரகம். போகும் சூழல் வரும்..

’நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை; என்று கம்பர் பாடவில்லை?

எல்லாம் ஜென்ம ஜாதகத்தில் 12ம் பாவம் கெட்டிருக்கும்!

இப்படித் தான் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவர் விசாரணை படக்காமலேயே 12 வருடம் சிறையில் இருக்கிறார்.இவருடைய பெயில் மனு விசாரனைக்கு வரும்போது, கேரள உயர்நீதிமன்றம் " ஒருவரின் சட்டப்பூர்வ அல்லது அரசியலமைப்பு உரிமைகளை பற்றி ஆராய்வதை, அவர்கள் "இறந்த பிறகு" பிரேத பரிசோதனை செய்வதாக நீதிமன்றங்கள் இருக்கக்கூடாது அதற்கு பதிலாக, அத்தகைய உரிமைகளைக் அவை அணைக்கப்படுவதற்கு முன்பு" காப்பாற்றும் டாக்டராக இருக்க வேண்டும் ... ," என்றுருக்கிறது!!

நீதிமன்றங்கள் தன் கதவை தட்டுபவருக்கு நீதி வழங்க தயாராகத் தான் இருக்கிறது!

நமக்கு தான் தெரிய வேண்டும்..நம் உரிமைகளை பற்றி மட்டுமல்ல.. கடமைகளையும்!!

"எனக்கு அதெல்லாம் தெரியாது, தெரிய வேண்டிய தேவையும் இல்லை" என்று கர்மாவின் சட்டத்திற்கு முன் சொல்ல முடியாதே!!.

வாரிசு சான்றிதழ் ஏன், எதற்காக தேவை?

 ஒருவர் இறந்த பின் அவருடைய வாரிசுகள் இன்னின்னார் என்று சுட்டிக்காட்டும் சான்று தான் இந்த வாரிசு சான்றிதழ்.

இது எதற்காக தேவை?

ஒருவரின் சொத்து மற்றும் கடன், அவருக்கு பிறகு யாருக்கு போய் சேரும் என்பதை இந்த வாரிசு சான்று தான் நிர்ணயிக்கும

அவர் உயிருடன் இருக்கும்போது, இந்த வாரிசு சான்று கொடுக்கப்படுமா? என்றால், எப்போது அவரின் வாரிசு யார் என்பதை அறியும் தேவை ஏற்படுகிறது?

நாம் வாழும் காலத்தில், நமக்கு உரிமைப்பட்டவற்றை நாம் தான் அனுபவிக்கிறோம். மற்றவருக்கு கொடுக்கிறோம்..நாம் இருக்கும்போது, மற்றவருக்கு, நம்மை மீறிய உரிமைகள் வந்துவிடுவதில்லை.

ஆனால் நம் காலத்திற்கு பிறகு, அந்த உரிமை யாருக்கு போய் சேரவேண்டும் என்று முடிவு செய்யவேண்டிய தேவை வருகிறது..

அதனால் தான் இறந்தவரின் வாரிசு இன்னார் என்று அடையாளம் காட்டக்கூடியவகையில், பேரன் தான் நெய்ப்பந்தம் பிடிக்கவேண்டும் என்று சாஸ்த்திர சம்பிரதாயம் வகுத்திருந்தனர்.

பொதுவாக இறந்தவருக்கு கொள்ளி வைப்பவர் தான் அன்னாரின் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவார். அதாவது இறந்தவரின் வாரிசு தான் கொள்ளி வைப்பார்.

அப்படியிருக்க, நம் பிள்ளைகள் தானே நம் வாரிசு என்று ஊரறிய தெரியும்போது, அதற்கு என்று தனியாக சான்றிதழ் தேவையா? என சிலர் யோசிக்கலாம்.

"வாரிசு" என்று பார்த்தால், சட்டப்படி, பிள்ளைகள் மட்டுமல்ல, கணவன்/மனைவி, சார்ந்திருக்கும் பெற்றோர், முன்னரே இறந்துவிட்ட பிள்ளையின் வாரிசுகள், இவர்கள் யாரும் உயிருடன் இல்லையெனில், உடன் பிறந்த சகோதர, சகோதரிகள், அவர்கள் வாரிசுகள் என்று நீண்ட பட்டியல் உள்ளது.

இவர்களில் யாருக்கு முன்னுரிமை என்று பார்க்க வேண்டுமே?

அந்த வேளையில், இன்னாருடைய வாரிசு என்பதற்கு அரசு அளிக்கும் அத்தாட்சி தான் தாசில்தாரால் தரப்படும் வாரிசு சான்று . அதுவே இறுதியானது..

ஆனால், இந்த வாரிசு சான்றை ஏற்காமல் மறுக்கும் இடமும் உண்டு.!!

வங்கியில் லாக்கரை வைத்திருப்பவரின் மரணத்திற்கு பிறகு, வங்கியில் , இறந்தவரின் பெயரில் உள்ள பெட்டகததை திறக்க, நீதிமன்றம் அளிக்கும் வாரிசு சான்று பெற்று வர, சட்டப்பூர்வ வாரிசுகள், வங்கிகளால் நிர்பந்திக்கப்படுகிந்தணர்.. .

இந்த இரண்டு சான்றிதழுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

தான் பெற்ற கடன்களுக்கு கடன்தாரர் வழங்கும் இழப்பெதிர்காப்பு எனப்படும் இன்டெம்னிட்டி பத்திரம் தெரியுமல்லவா? அது போன்றது தான் இந்த நீதிமன்றம் வழங்கும் வாரிசு சான்றிதழ் என சொல்லலாம்.[1]

ஏற்கெனவே தாசில்தார் கொடுத்த வாரிசு சான்றிதழ் இருந்தாலும், இந்த குறிப்பிட்ட வாரிசு சான்றிதழ் பெறுவதில் அதிகப் பணத்தை செலவழிக்க வேண்டிய கடினமான சூழ்நிலையில் சட்டப்பூர்வ வாரிசுகளை, வங்கி வைக்கிறது .இது ஒருவிதத்தில் பார்த்தால் நியாயமாகப்படவில்லை.

ஏன் என்றால், கடனுக்கு கடன்பட்டவர் கொடுக்கும் இந்த இன்டெமனிட்டி பத்திரம் போன்றது இந்த நீதிமன்றம் வழங்கும் வாரிசு சான்று என்னும்போது, அதை பெற்று வர வங்கிகள் ஏன் கட்டாயப்படுத்துகின்றன?

இறந்தவர் பெயரில் உள்ள லாக்கரும் அதில் உள்ளவையும் கடனாக கருதமுடியுமா?

"முடியாது" தானே?!

அதனால் வங்கிகள் கேட்கும் வாரிசு சான்றிதழ் வழங்க முடியாது என்று நம் மாண்புமிகு உயர் நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளில் சொல்லியுள்ளன.

1925 வாரிசுரிமை சட்டப் பிரிவு 370 முதல் 381 வரை பயன்படுத்தப்பட்ட " வாரிசு சான்றிதழ்"வார்த்தைக்கு உண்டான அர்த்தத்தை பொருத்தினால், லாக்கரில் உள்ளவை கடன்கள் அல்ல, என்பதால், வாரிசு சான்றிதழைப் பெறுவதற்கு எந்த தேவையும் இல்லை. என்றுள்ளன

அப்படியும் ஏன் கேட்கிறார்கள்?

உண்மையை சொல்லப்போனால், வங்கிகள் தங்களின் பொறுப்பை பாதுகாத்துக் கொள்ளவே, இந்த சான்றை கேட்கிண்றனர்

வேறு யாரேனும், லாக்கரில் உள்ளவைக்கு தாங்கள் தான் வாரிசு என்று உரிமை கொண்டாடினால், அதனால் வரும் பிரச்சினையிலிருந்து விடுபடவே இவ்வாறு செய்கின்றனர்.

அவர்கள் பாதுகாப்புக்கு " எதற்கும் இருக்கட்டும்"என்று வாங்கி வைத்துக் கொள்கின்றனர்!

நம்மில் எத்தனை பேர், வங்கியில் கடன் வாங்கப்போகும்போது, அவர்கள் கொடுக்கும் பாரம்களில் உள்ள வெற்றிடத்தை நிரப்பாமலேயே கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு வருகிறோம்?!

படித்தவர், படிக்காதவர் வித்தியாசமின்றி, நீட்டிய பேப்பரில் என்ன எழுதியுள்ளது, கோடிட்ட இடங்களில் நிரப்பாமலேயே, கொடுக்கிறார்களே, என்று எந்த கேள்வியும் கேட்காமல் தானே கையெழுத்து போட்டுவிட்டு பணத்தை வாங்கி வருகிறோம்!!

சமீபத்தில் வந்த ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பும் கூட…[2] இதே போன்று அளித்ததோடு இல்லாமல், இந்த சிக்கலை தவிர்க்க சில பரிந்துரைகளையும் செய்துள்ளது.

  • எந்தவொரு நபராலும் லாக்கரைத் திறக்கும் நேரத்தில், வங்கி ஒரு பரிந்துரையை அதாவது நாமினியை நியமிக்க சொல்லி பெறுவதற்கான நடைமுறையை பின்பற்றுவது எப்போதும் விரும்பத்தக்கது.
  • லாக்கரை வைத்திருக்கும் நபர் இறந்தால், வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலை வழங்கி, லாக்கரை இயக்க நாமினியை வங்கி அனுமதிக்கலாம்
  • அவ்வாறு செய்யும்போது, நடந்தவற்றை பதிவு செய்து அது குறித்து, வேறு எந்த நபராலும் உரிமை கோரபட்டால்,. மேற்கண்ட நாமினியிடம் உத்தரவாதம் பெறலாம்.
  • இந்த எளிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால்,சம்பந்தப்பட்ட வாரிசுகள் தேவையில்லாமல் பெரும் செலவு செய்வதை தடுக்கலாம்.

சட்டத்தில் வாரிசுகளை இப்படி நிர்ணயிகக்கலாம்.

சொத்துபத்துக்கள் உள்ள ஓரு கோடீஸ்வர குடும்பத்தில் வாரிசாகப் பிறந்து, கடைசி வரை கோடீஸ்வரராக வாழும் "யோகம்" வெகு சிலருக்கே அமையும். அதுவும் ஒருவர் ஜென்ம ஜாதகத்தில் நான்காம் அதிபதி, செவ்வாய், ஒன்பது, பத்தாம் அதிபதிகள் பலம் பெற்ற ஜாதகர் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருப்பார். முன்னோர்கள் செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்களாக இருப்பர்.

ஆனால் ஒரு இராஜங்கத்தை ஆளும் வாரிசாக யார் ஆக வேண்டும் என்பதை "விபரீத ராஜ யோகம்" ஏற்கெணவே முடிவாகியிருக்கும்…!!

"கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற வகையில் விபரீத ராஜயோகத்தால் அடிமட்ட நிலையில் இருக்கும் ஒருவன் கோபுரத்தில் போய் அமர்வான்..

பேரரசன் இராஜராஜன் மட்டுமா இதற்கு உதாரணம்?,

மக்களை சந்தித்து வோட்டு கேட்டு, பெரும்பான்மை ஓட்டில் ஜெயித்து, மந்திரிசபை அமைத்து, "லட்டு" போல தட்டில் வைத்துக் கொடுக்கவில்லையா அந்த யோகம்?

"யோகம்" என்றவுடன் ஆன்மீகத்தில் கடவுளை அடைவதில் உள்ள நான்கு படிகளில் ஒன்றாக அதை. சொல்வது நினைவுக்கு வருகிறது.

.சரியை, கிரியை யோகம் , ஞானம். என்ற அவற்றில், கடவுளை வெளியே காண்பது சரியை.தனக்கு உள்ளேயும் வெளியேயும் காண்பது கிரியை.. தன் உள்ளேயே கடவுள் இருக்கிறான் என்று உணர்வது தான் யோகம்.

"யோகா " என்பதன் உள் அர்த்தம் இப்போது விளங்குகிறதா?

அந்த கடைசி படியான ஞானத்திற்கு முந்தின படியான யோகத்தை அடைபவனே "யோகி"

அதற்காக ஜாதகப்படி யோகத்தை அடைந்தவன் எல்லாம் யோகி அல்ல☺️

கடவுளை எங்கும் காணும் ஞானத்தில் சிறந்த குருமார்கள் கூட, தங்கள் "வாரிசை" தேர்வு செய்வது கடின பரிட்சை வைத்தே.!!.

மரணப்படுக்கையில் இருந்த ஒரு குரு தனக்குப் பிறகு அந்த ஆசிரமத்தி1ற்கு யாரைத் தலைவராக்குவதென யோசித்தார். தன் சீடர்களைப் பற்றி எண்ணிப் பார்க்கையில் அவர்களில் இருவர் சிறந்தவர்களாகத் தெரிந்தனர். இருவரும் சமமாக தகுதி படைத்து இருந்ததால் எவரைத் தேர்ந்தெடுப்பது என்பதற்காக ஒரு யுக்தி செய்தார்.. இருவரிடமும் ஆளுக்கொரு பழம் தந்து 'யாரும் பார்க்காத இடத்தில் போய் சாப்பிட்டு வாருங்கள் என்றார்.

ஒரு சீடன் ஓர் அறைக்குள் நுழைந்து எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு பழத்தைச் சாப்பிட்டான். வெகு நேரத்திற்குப் பிறகு கையில் பழத்துடன் இரண்டாவது சீடன் திரும்பி வந்தான். குரு அவனிடம் ஏன் பழத்தைச் சாப்பிடவில்லை எனக் கேட்டார். அதற்கு அவன் 'குருவே, என்னை மன்னித்து விடுங்கள். எங்கு போனாலும் கடவுளின் பார்வை அங்கு படிந்திருப்பதால் யாரும் பார்க்காத இடம் என்ற ஒன்றை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை, பழத்தையும் சாப்பிட முடியவில்லை' என பதிலளித்தான்.

அவனுடைய குருபக்தியையும் கடவுள் நம்பிக்கையும் கண்டு அவனையே தன் வாரிசாகத் தேர்ந்தெடுத்தார் அந்த குரு..

ஆனால் ஜெகத்குருவுக்கே தன் வாரிசை தேர்வு செய்வதில் பிழை ஏற்படவில்லையா?

எல்லாம் கர்மா தான்!!

அது சரி… எப்போதும் வாரிசுகள் தான் சொத்து அடையக்கூடுமா?

அவர் தந்தைக்கு இந்த வாரிசால் அடையக்கூடிய சொத்து ஏதும் உண்டா?

அதைத் தான் திருவள்ளுவரே சொல்லுகிறாரே!

இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் !

இதோ சமீபத்தில் நாம் கண்ட ஒரு செய்தி

இவர் தந்தை இவரைப் பெறுதற்கு என்ன தவஞ் செய்தாரோ என்ற சான்றிதழ் போதாதா இவர் பேருலகம் செல்ல!

இப்படி வாரிசுகளால் பெருமை அடைபவரும் உண்டு.."சிறுமை" அடைவோரும் உண்டு!

எல்லோருக்கும் ஒரு நாளில் இறப்பு வரும்..

ஆனால் நிறைய பேருக்கு, தம் "வாரிசுகளால்" மனதளவில் இறந்தது எண்றைக்கோ இருக்கும்.!

நான் சமீபத்தில் வாசித்ததில் பிடித்தது:

அவர் இறந்து விட்டார்

அடக்கம் செய்யணும்

சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!!

மெல்ல எட்டிப் பார்த்தேன்

மூச்சு இல்லை - ஆனால்

இப்போதுதான் இறந்திருந்தார்

என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!

இருபது வருடங்கள்

முன்னாடி - அவர் மனைவி

இறந்த பிறகு - சாப்பிட்டாயா..!!

என்று யாரும் கேட்காத

நேரத்தில் - அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை....!!

பொண்டாட்டி போனதுமே

போய்த் தொலைய வேண்டியதுதானே - என்று

காதுபட மருமகள் பேசியபோது

அவர் இறந்திருந்தார் அப்போதும்

யாருமே கவனிக்க வில்லை...!!

தாய்க்குப் பின் தாரம்

தாரத்துக்குப் பின் ..

வீட்டின் ஓரம் ...!!!

என்று வாழ்ந்த போது - அவர்

இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை ...!!

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!

காசு இங்கே

மரத்திலேயா காய்க்குது - என்று

மகன் அமிலவார்த்தையை

வீசிய போது..!!

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை...!!

என்னங்க...!!

ரொம்ப தூரத்திலே இருக்குற

முதியோர் இல்லத்திலே விட்டு

தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!

என்று காதிலே விழுந்த போதும்

அவர் இறந்திருந்தார்

யாருமே கவனிக்க வில்லை....!!

உனக்கென்னப்பா...!!

பொண்டாட்டி தொல்லை இல்லை

என்று வாழ்த்துவது போல

கிண்டலடிக்கப் பட்ட போது

அவர் இறந்திருந்தார்..!!

அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

இப்போதுதான்

இறந்தாராம் என்கிறார்கள்..!!

எப்படி நான் நம்புவது...???

நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது

இறந்து கொண்டிருப்பார்கள்...

ஒரு வினாடியாவது நின்று

பேசி விட்டுச் செல்லுங்கள்..!!

இல்லையேல்....!

அடிக்குறிப்புகள்

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...