திங்கள், 22 டிசம்பர், 2025

அடிப்படை சட்டம் அறிவோம்…

 அடிப்படை சட்டம் அறிவோம்…

savukku சங்கர் குறித்து ஒவ்வுருவருக்கும் ஒரு அபிப்பிராயம் இருக்கலாம் இருக்கலாம் .ஆனால் அவர் போல இன்றைய ஊடகம் ஆளும் தரப்பு குறித்து ஆணித்தரமாக ஆதாரத்துடன் பேசுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்போதும் கைது செய்யபட்டிருக்கிறார். தீயணைப்பு வீரர்களின் உதவியோடு வீட்டின் கதவை உடைத்து கைது செய்தது சரி..ஆனால் ..வீட்டை…அவர் தாயாரை சோதனையிட்டது ..எந்தவித நீதிமன்ற உத்தரவும் இல்லாமல்…??

அத்தோடு அன்றும் சரி…போலிஸ் காவலில் போதும், திரும்ப திரும்ப அவர் கை பேசியை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அவர் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

குற்றம் சாட்டப்பட்ட ஒருவரிடம் இருந்து அவரை கட்டாயப்படுத்தி ஒரு பொருளை கைப்பற்ற முடியுமா, அவருக்கு எதிரான வாக்குமூலத்தை பெற முடியுமா? அது சட்டப்படி சரியாகுமா? என்ற கேள்வி தானே நமக்கு எழும்..?

இது குறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வழக்கிலேயே உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லியுள்ளது... அந்த வழக்கில் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது...'அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்" என்பதே...

உச்ச நீதிமன்றம் அதை மறுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சியம் பெற அவரை கட்டாயப்படுத்த முடியாது.. அவர் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கும் உரிமை சட்டரீதியாக உண்டு" என்றுள்ளது.

நான் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, இது போல நடந்ததுண்டு ..குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் 'வில்லங்கத்தை ' விலைக்கு வாங்கிவிடுவார்! 'இதற்கு அந்த பருத்தி மூட்டை குடவுணிலேயே இருந்திருக்கலாமே " என்று தோன்றும் …ஆனால் வெளியே சொல்ல முடியாது !! இப்படி ஒரு வழக்கறிஞரை அமர்த்தியதற்கு அவருக்கு தண்டனை வேண்டாமா ? !

சரி , விஷயத்துக்கு வருவோம். ..

அப்படியானால் , சவுக்கு ஷங்கரிடம் போன் வழக்கோடு தொடர்புடையது என்று அதை கேட்டு கட்டாயப்படுத்துவது சட்டப்படி சரியாகுமா? என்ற கேள்வி வரும் தானே?

இதோ போன வாரம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாருங்கள். ஏற்கெனவே அவர்கள் பலமுறை சொன்னதைத்தான் திரும்ப வலியிருத்தியிருக்கிறார்கள். {Manoj @ Munna v. State of Chhattisgarh (Neutral Citation: 2025 INSC 1466)

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தை அனுகியவருக்கு எதிராக கொலை குற்றம் நிரூபிக்கப்படதாக விசாரணை நீதிமன்றம் ( கீழ் கோர்ட்டு என்று சொல்லக்கூடாது!!) தீர்ப்பு சொல்லியுள்ளது.

அதற்கு நீதிமன்றம் சொன்ன காரணம். கொலையானவரை கடைசியாக குற்றவாளியுடன் சேர்ந்து பார்த்திருகிறார்கள். அவரை விட்டு இவர் பிரிந்து வந்தாரா என்பதை குற்றவாளி சாட்சியத்துடன் நிரூபிக்கவில்லை என்பதால் அவருக்கு எதிராக adverse inference கொண்டு குற்றவாளி என்று தீர்மானித்திருக்கிறார்கள். இதை அந்த உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

இதை தான் உச்ச நீதிமன்றம் மறுத்து , இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 1 0 6 யை சுட்டிக்காட்டுகிறது.

"ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை அவர் மட்டுமே நிரூபிக்க இயலும்" என்ற விதி தான் அது. சரி தானே?

ஆனால் கூடவே அதில் உள்ள எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டுகிறது.

“ இதன் காரணமாக, குற்றம் சும்மத்தப்பட்டவர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் கடமையிலிருந்து போலிசுக்கு விதிவிலக்கு இல்லை “ என்பது தான் அது.

இதன் மூலம் சொல்வ வருவது என்ன?

இந்த வழக்கையே பாருங்களேன். ..உச்ச நீதிமன்றம் சொல்கிறது ..”கடைசியாக சேர்ந்து பார்த்தது “ என்ற தியரி மிகவும் வலுவில்லாதது . அதை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒருவரை குற்றவாளி என்று தீர்மானிக்க முடியாது .அந்த சூழ்நிலை சாட்சியத்தோடு ஒத்துப்போகும் வேறு வகை சாட்சியங்கள் ..உதாரனமாக ...அவரிடம் கைப்பற்றப்பட்ட பொருள் , அவர் குற்ற எண்ணம் அவை குற்றத்தோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே இவற்றை ஒட்டுமொத்தமாகக் கொண்டு அவரை குற்றவாளி ‘ என்று முடிவு செய்யலாம்” என்று கூறி அந்த தீர்ப்பை ரத்து செய்தது.

சவுக்கு சங்கருக்கு எதிராக போடப்பட்ட இந்த வழக்கையும் பாருங்கள்.. அவர் சானலில் போட்ட வீடியோவை நீக்க பணம் கேட்டு மிரட்டி அதில் ஒரு பங்கை அவர் பணியாளர் மூலமாக பெற்றதாக வழக்கு. இதில் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கை கொண்டு செல்ல அவர் கை பேசி தேவை . இதை பறிமுதல் செய்யவே வீட்டில், அலுவலகத்தில் சோதனை ..எங்கும் கிடைக்காதபோது அவரிடமே விசாரணை.

இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்த வழக்குக்கு எவ்வளவு பொருந்துகிறது பார்த்த்ஹீர்களா?

ஆங். சொல்ல மறந்து விட்டேனே..

இந்திய சாட்சிய சட்டம் இன்று திருத்தப்பட்டு ‘பாரதிய சாட்சிய அதினியம்” என்றாகிவிட்டது. பிரிவு 106 இப்போது ‘109’ ஆகிவிட்டது.

நமக்கான உரிமையை அறிவோம். அதை செயல்படுத்துவோம் ! !

செவ்வாய், 14 ஜனவரி, 2025

தவறாக கைது செய்யப்பட்டால் அதற்கு நஷ்டஈடு கோர முடியுமா ?

 இதற்கான பதிலை சமீபத்தில் நமது உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தந்துள்ளார், 

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் 23.11.2021 உத்தரவுப்படி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்படுகிறார்  ஈஸ்வரன். அதை எதிர்த்து அவர் கொடுத்த மனுவை விசாரித்த அட்வைசரி போர்டு, அவரை அந்த சட்டத்தின் கீழ் அடைக்க போதிய முகாந்திரம் இல்லையென்று 30.12.202 அன்று உத்தரவு  பிறப்பிக்கிறது.  ஆனாலும் அவரை உடனே விடுதலை செய்யாமல் மூன்று மாதம் தாழ்த்தி விடுவிக்கிறார்கள். அதற்கு காரணம் அதற்கான அரசு உத்தரவு போடுவதற்கு ஏற்பட்ட காலதாமதம்.

இதை எதிர்த்து , தன்னை சட்டவிரோத காவலில் வைத்ததற்கு  நஷ்டஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்கிறார் ஈஸ்வரன்.

அதை மறுத்து அரசு தாக்கல் செய்த பதிலில் அவர் ஏன்  அட்வைசரி போர்டு உத்தரவிட்டபின்பும் மூன்று மாதம் கழித்து விடுதலை செய்யபட்டார் என்பதற்கான விளக்கம் சொல்லப்படவில்லை. இது அரசியலைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமையான ஆர்டிகிள் 21க்கு எதிராக இருப்பதால் , நஷ்டஈடு பெற அவருக்கு உரிமையுள்ளது என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தெரிவிக்க , அரசு தரப்பில் திரும்ப கேட்டு சொல்வதாக வாய்தா வாங்குகிறார்கள். 


பிறகு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் பதிலில் , அட்வைசரி போர்டு எஈஸ்வரனை குண்டர் சட்டத்தில் அடைத்தது தவறு என்று சொன்னாலும், அவரை விடுவிக்க சில சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதால் காலதாமதம் ஆனதாகவும், அவருக்கு இருந்த மூன்று வழக்குகளில் பிணை பெறுவதும் சூரிட்டி  ஆஜர் செய்வதற்கும் அவருக்கே கால தாமதம் ஆனது என்றும், மேலும் அவரே ஒரு ஹிஸ்டரி ஷீட்டர்' அதாவது தொடர் குற்ற செயல்கள் புரிபவர் , அவர் மீது 23 வழக்குகள் உள்ளன என்றும் சொல்லியிருந்தார்கள்.

இதை ஏற்றுக் கொள்ளாத நீதியரசர், அடிப்படை உரிமையான 21, எந்த ஒரு குடிமகநின்  வாழ்வும் தனி மனித சுதந்திரமும் ,  சட்டப்பூர்வமான நடைமுறையின்றி  பறிக்கப்படக்கூடாது" என்று சொல்லியுள்ளதே தவிர  அவன் நல்லவனா '  கெட்டவனா"  என்றோ சொல்லவில்லை என்றும் சட்ட விரோத காவலில் இருந்த ஒருவர் நஷ்டஈடு பெற தகுதி பெற வேண்டும் என்றால் நல்ல குணாம்சம் கொண்டவராக  மட்டுமே இருக்க வேண்டும் என்று சொல்லமுடியாது என்றார்.   


அதேபோல  அரசின் கூற்றுப்படியே, சட்ட நடைமுறைகள் 04.01.2022. அன்றே முடிக்கபட்டுவிட்டபோது அவருடைய கோப்பு தாளதமதாக  14.03.2022. அன்று தான் மது விலக்கு அமைச்சரின் அலுவலகத்திலிருந்து  பெறப்பட்டது  என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது  என்றும் அதனால் 05.01.2022 முதல் அவர் விடுதலை செய்யப்பட்ட  17.03.2022 வரையான  காலம் சட்டவிரோத காவல் என்பதால் அதற்கு நஷ்டஈடு பெற , தகுதியுள்ளவர் என்று, லத்தின் சொற்றொடர் Ubi jus ibi remedium  (WHERE THERE IS A RIGHT, THERE IS A WAY)  சுட்டிக்காட்டி ,  ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய D.K.Basu v. State of West Bengal,(1997) 1 SCC 416. தீர்ப்பை மேற்கோள் காட்டி,  தனது தீர்ப்பில்  குறிபிட்டுள்ளார். 

பிறகென்ன,?   மனுதாரர் கேட்டபடி நஷ்டஈடு கொடுக்குமாறு உத்தரவிடபட்டுளது .  என்ன ..அவர் கேட்டது ....பத்து லட்சம்  ரூபாய் ..ஆனால் கொடுத்தது ரூபாய் ஐம்பதினாயிரம்..

அதே போல , அந்த நஷ்டஈட்டை , தவறு செய்த அரசு அதிகாரி அல்லது அதிகாரிகளின் சம்பளத்தில் பிடித்தம செய்யுமாறு உத்தரவிட்டிருந்தால் , இன்னும் நன்றாக இருக்கும்!!

இருந்தாலும், இது, அதிகார வர்க்கத்தின் துஷ்ப்ரயோகதிற்கு எதிரான சிறப்பான தீர்ப்பு.!!

நீதிமன்றம் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை  மீண்டும் மீண்டும் உறுதி செய்து கொண்டு வருகிறார் நமது நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் !!

குடிமக்கலின் அடிப்படை உரிமைகளை தங்கள் இஷ்டம் போல முறிக்கும் அரசு இயந்திரங்கள் இனியாவது சற்று   விழிதுக்கொள்ளுமா  என்று பார்ப்போம். ...

இந்த வழக்கு விவரங்களை கீழ்கண்ட லிங்கில் பெறலாம்.!!

W.P.(MD)No.4804 of 2023 R.Eswaran ... Petitioner Vs. 1.The Government of Tamil Nadu, Rep. by its Secretary to Government, Home Prohibition and Excise (XIII) Department, Chennai

சிறப்புடைய இடுகை

பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...