வெள்ளி, 24 ஜூன், 2022

வாரிசு சான்றிதழ் இனி தேவையில்லாததா?

 வாரிசு சான்றிதழைக் கொண்டு தனக்கு வர வேண்டிய சொத்துக்களை, தன் பேருக்கு மாற்றும் நடைமுறை தான்,  இங்கு நடந்து வருகிறது.  அப்படியிருக்க நேற்று, மாண்புமிகு சென்னை   உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி,  "வாரிசு சான்றிதழ்" என்று  அதன் பெயர் இருந்தாலும், அது இறந்தவருக்கும், சான்றில் உள்ளவர்களுக்கும் உள்ள உறவுமுறையை குறிக்கும் சான்று மட்டும் தான் என்றும் அதைக்  கொண்டு இன்னார் தான் இறந்தவரின்  வாரிசு என்று நிர்ணயிக்க முடியாது என்று சொல்லியுள்ளது. 

நீதியரசர்கள் பி.என் பிரகாஷ், ஹேமலதா மற்றும் நக்கீரன் அடங்கிய முழு பெஞ்ச், பி,வெங்கடாசலம் எதிர் தாசில்தார்.   2022 livelaw (Mad) 265 வழக்கில்  நேற்று அளித்த தீர்ப்பில், வாரிசுரிமை  என்பது வெல்வேறு சட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட வேண்டிய ஒன்று என்றும்  அவரவர் தனி சட்டங்களின் மூலம் பெற்ற சட்டப் பூர்வமான உரிமையை தாசில்தாரில் வாரிசு சான்று மாற்றி விட முடியாது என்றும்  கருத்து தெரிவித்துள்ளது.

இதன் மூலம், இனி  இந்த சான்றைக்  கொண்டு சொத்து பரிமாற்றங்களை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 


திடீரென  இது போன்ற ஒரு தீர்ப்பு வர வேண்டிய தேவை என்ன என்று பார்த்தால் , தமிழ்நாட்டில் வருவாய் துறையை சேர்ந்த தாசில்தார்,  வாரிசு சான்றை கொடுப்பது என்பது  27.04.1979 தேதியிட்ட  வருவாய் போர்டு செயல்முறைகளின்படி   தாசில்தார்களின் பணிகளின் ஒன்றாக சொல்லப்பட்டு, அதன்படியே செயல்பட்டு வருகின்றனர். பாண்டிச்சேரியில் தாசில்தாருக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வாரிசு சான்றை நீதிமன்றத்தில் மனு செய்து தான் பெற வேண்டும்.  

1991 ல் வருவாய் துறையின் சிறப்பு கமிஷனர், அந்த சான்றை கொடுக்கும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை வழங்குகிறார்.  அடுத்து  2017ல் வருவாய் துறை கமஷனருக்கான முதன்மை செயலாளர்,  சில கூடுதலான வழிகாட்டிகளுடன் ஒரு சுற்றறிக்கை அனுப்புகிறார். அதே சமயம், சில வகையில் வருபவைக்கு மட்டும் இந்த வாரிசு சான்றை அளிக்க தடை செய்கிறார்.  அதன் பின்னே  2019ல் வழங்கப்பட்ட திருத்தப்பட்ட சுற்றறிக்கை,  இறந்தவரின் வாரிசுகளை கிளாஸ் ஒன்று ,  கிளாஸ் இரண்டு என்று இருவிதமாக வகைப்படுத்தி  இரண்டாம் பிரிவு வாரிசுகளுக்கு சான்று தர தடை விதிக்கிறது.  இங்கு தான் முரண்பாடு ஆரம்பிககிறது.

 இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகின்றன.  திருமூர்த்தி எதிர் சென்னை கலெக்டர் 1998 Wrut L.R. 347 என்ற வழக்கில்  இதே நீதி மன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், தாசில்தாருக்கு வாரிசு சான்று கொடுக்க அதிகாரம் இல்லை என்ற போது, பாபு எதிர் தாசில்தார்  W.P.no. 5940/2017  வழக்கில் 27.7.2020 அன்று இன்னொரு டிவிஷன் பெஞ்ச்,   இரண்டா ம் வகுப்பு வாரிசு சான்றை கொடுக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது.  இது ஒரு விதத்தில், ஏற்கெனவே அவர்கள் துறையில் போட்ட சுற்றறிக்கைக்கு எதிரானது. இந்த இரு வேறு முரண்பட்ட தீர்ப்பின் காணமாக, ஃ புல் பெஞ்சுக்கு இந்த சட்டப் பிரச்சினை அனுப்பட்டு அதற்கான தீர்ப்பு தான் நம் முன் இப்போது....

சாதாரணமாக ஒரு வாரிசு சான்று கேட்டு மனு செய்யும்போது பின்பற்றப்படும் நடைமுறை என்ன?  வருவாய் ஆய்வாளர் இறந்தவருக்கு  சம்பந்தப்பட்ட நபர்களை விசாரித்து  ஒரு  அறிக்கை தருவார். அதன் அடிப்படையிலேயே தாசில்தாரால்  இந்த சான்று வழங்கப்படும். ஆனால் வருவாய் ஆய்வாளரும் தாசில்தாரும்,  இந்து வாரிசுரிமை சட்டத்தினையும், முஸ்லிம்களுக்கு பொருந்தும் முல்லாவின் முகமதியர் சட்டத்தில் வரக்கூடிய பங்குதாரர்களையும், இந்திய வாரிசுரிமை சட்டத்தின்   இரண்டு மற்றும் மூன்று பகுதிகளில்  சொல்லப்பட்டுள்ள பங்கு பிரிக்கும் முறையைக்  குறித்தும் பரிசீலித்து தீர்வு தருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது இல்லையா?  அதே சமயம், . ஒரு நிர்வாக ரீதியான இந்த பணியை ஒரு தாசில்தார் ஒரு குவாசி  ஜுடிசியல் தன்மை கொண்ட ஒன்றாக நீடிக்க முடியாது . அப்படி செய்தால் அது தேவையற்ற குழப்பத்தையும் அதிகப்படியான சட்டப் பிரச்சினைகளுக்கும் உள்ளாகும் என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது.

இதில், நீதிமன்றம், சில கேள்விகளை தனக்குத் தானே எழுப்பிக் கொண்டு அதற்கான தீர்வு காண  முனைந்துள்ளது.

1.   தனி நபர் சட்டத்தின் மூலமாக ஒருவர் பெற்ற  வாரிசு அந்தஸ்தை இந்த சான்று நிர்ணயிக்கிறதா? 

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, சான்றில் இடம் பெற்ற ஒருவரின் பெயர், இறந்தவருக்கும் அவருக்கும் உள்ள உறவுமுறையை மட்டுமே குறிக்கிறது என்றும், அதற்கு மேல் அந்த சான்றுக்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது என்றுள்ளது. ஏற்கெனவே தனி நபர் சட்டத்தின் மூலம் ஒருவர் பெற்ற வாரிசு அந்தஸ்தை இந்த சான்று மாற்றி விட முடியாது.

அப்படியானால் 'வாரிசு சான்று'  என்ற பெயருடன் கொடுக்கப்படும் அந்த சான்று? 

அது தவறான பெயர் என்றும் உண்மையில் அது இறந்தவருக்கும் மற்றவருக்கும்  இடையே உள்ள உறவுமுறையை குறிக்கும் சான்று தான் என்றும் சொல்லியுள்ளது..   வாரிசு சான்றில் ஒருவரின் பெயர் இடம்பெற்றதாலேயே சம்பந்தப்பட்டவர்களின் தனி சட்டத்தின் மூலம் சட்டரீதியான வாரிசு உரிமை பெற்ற ஒருவரின் நிலையை,  ஒரு சுற்றறிக்கை என்ற பெயரில் உள்ள நிர்வாக ரீதியான  குறிப்புகளை கொண்டு மாற்றி விட முடியாது என்றும் சொல்லியுள்ளது.  அதே போல  இறந்தவரின் வாரிசு என்று எந்தவித சட்ட அங்கீகாரத்தையும் அந்த சான்றில் உள்ளவருக்கு கொடுத்து விட முடியாது என்கிறது.     

இன்னும் ஒரு விஷயத்தை நீதிமன்றம் கூர்ந்து கவனித்துள்ளது. 

2019 சுற்றறிக்கையிலேயே சில முரண்பாடுகள் உள்ளன. இறந்த நபரின் தந்தை வாரிசு சான்று கேட்டு மனு செய்யலாம்.  ஆனால் அதே சமயம் தந்தையை உள்ளடக்கிய கிளாஸ் இரண்டு பிரிவினருக்கு வாரிசு சான்று கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொன்றையும் கவனித்தது நீதிமன்றம், கிளாஸ் இரண்டு  பிரிவினரை வகைப்படுத்துவதில் சிரமம் இருப்பதால் தான் அவர்களுக்கு சான்று வழங்க  தடை கொடுக்கப்பட்டது என்னும் வருவாய் துறை, ஒரு எளிதாக அறியக்கூடிய உறவுமுறையான இறந்தவரின் தந்தையை இரண்டாம் பிரிவில் வருகிறார் என்பதால் நிராகரிக்கும் போது,  அவரின் இறந்து போன மகளின் வயிற்று பேத்தி(அவரின் தாய் இறந்து விட்டிருக்கும் போது )  முதல் பிரிவு வாரிசு என்று சான்று வழங்குவது எப்படி என்று தன ஆச்சரியத்தை பதிவு செய்கிறது. 

ஒரு மனுதாரர், இறந்தவரின் தந்தை என்பது குறித்து ஆய்வு செய்வது , இறந்து போன மகளின் இறந்து போன மகனின் மகன் என்று தீர்மானிப்பதை விட சுலபம் என்று எல்லோருமே  ஒத்துக்கொள்ளும்போது தந்தை உள்ளிட்ட உறவுமுறையை நீக்கியது நியாயமற்றது என்கிறது. 

இதில் இன்னொன்றையும் நீதிமன்றம் கவனிக்காமல் இருக்கவில்லை. 

மேற்படி சொன்ன வாரிசுரிமை எல்லாம் இந்து  வாரிசுரிமை சட்டத்தின் கீழ் வருபவை. அந்த  சில பிரிவுகளை அப்படியே இந்த சுற்றறிக்கையில் எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பதை  கண்டுணர்ந்த பின், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே சட்டம் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கானது, பொதுவாக எப்படி   செயல்படுத்தமுடியும் என்ற கேள்வியையும் எழுப்பியது.   எனவே சுற்றறிக்கையின் சில பகுதிகள்  தவறாக கருதப்பட்டவை என்றும் ஆனாலும் அவை வெறும் நிர்வாக ரீதியாக கொடுக்கப்பட்ட வழிகாட்டிகளே தவிர சட்ட ரீதயாக உரிமைபெற்றவருக்கு எதிராக செயல்பட முடியாது என்றது.

இதில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. 

2.  அந்த சுற்றறிக்கையை கொண்டு ஒரு நிர்வாக ரீதியாக உத்தரவு பிறப்பிக்கும் போது, அந்த சுற்றறிக்கையை அல்லது அரசு ஆணையை  எதிர்க்காமல், அந்த சுற்றறிக்கையை மீறி உத்தரவு இடுமாறு நீதிமன்றம் தன் எல்லையை தாண்டி உத்தரவு  இட முடியுமா? 

 முடியாது என்றாலும், ஏற்கெனவே  தனி சட்டத்தின் வழியாக  சட்ட உரிமையை  பெற்ற ஒருவரிடமிடமிரும் பறிக்கும் வண்ணம் ஒரு சுற்றறிக்கை இருக்குமேயானால், அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்ற அடிப்படையில்  இவை எல்லாவற்றிற்கும்  காரணமான  2019  சுற்றறிக்கையில்  உள்ள  குறைபாடுகளை களைந்து புதிதான சுற்றறிக்கையை வெளியிடுமாறு நீதிமன்றம் அறிவுரூத்தி]யுள்ளது.

3.  வாரிசு சான்றிதழா அல்லது நீதிமன்றத்தில் பெறப்படும் சக்க்ஷஷன் சான்றிதழா  எதற்கு சட்ட ரீதியான அதிகாரம் கொண்டது>"

 இரண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னவென்றால், கடன் அல்லது செக்க்யுரிக்காக வழங்கப்படுவது பின்னது. அதை பற்றி பற்றி இந்திய வாரிசுரிமை சட்டத்தில் சொல்லப்பட்டுளது.  ஆனால் தாசில்தாரால்  கொடுக்கபடும் இந்த வாரிசு சான்றுக்கோ எந்த வித சட்ட அங்கீகாரமும் இல்லை..

 இப்போது சொல்லுங்கள் வாரிசு சான்றை பெறுவது இனி தேவை தானா? 



செவ்வாய், 7 ஜூன், 2022

"சங்கடம் தவிர்க்கும் சட்டம்" இன்று முதல் ஒரு பதிவு பெற்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு (NGO) ஆக மாறியுள்ளது..

 ஒரு மகிழ்ச்சியான செய்தி!!!!

"சங்கடம் தவிர்க்கும் சட்டம்" இன்று முதல் ஒரு பதிவு பெற்ற அரசு சாரா தன்னார்வ அமைப்பு (NGO) ஆக மாறியுள்ளது..

உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடர்ந்து மக்கள் பணியில்…

செவ்வாய், 17 மே, 2022

எனது அண்ணன் மகன் இறந்து விட்டார் அவரது பெயரில் உள்ள வீடு அவரது சட்ட படியான வாரிசுகள் பெயரில் பத்திர பதிவு செய்யப்பட வேண்டுமா அல்லது தந்தையாகிய எனது அண்ணன் உயில் எழுதி வைக்கலாமா?

நம் நாட்டில் சிவில் சட்டங்கள் அவரவர் சார்ந்த மதத்தை பொறுத்ததே. ஆனால் நீங்கள் எந்த மதம் என்று சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இருந்தாலும், மூர்த்தி பெரியசாமி, நீங்கள் பின்பற்றுவது இந்து மதம் என்ற எண்ணத்தில் கீழே பதில்:

        உங்கள் அண்ணன் மகன் இறந்து விட்டார். அவர் சொத்துக்களுக்கு  உங்கள் அண்ணன் உயில் ஏதும் எழுதி வைப்பதா? முதலில் அவருக்கே அந்த சொத்தில் உரிமை இல்லை.... அது தெரியுமா அவருக்கு?!

        இந்து வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 8 ன் படி, உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு இந்து ஆணின்  சொத்துகளை அவரின் சட்டப்பூரமான வாரிசுகள் என்று,  முதல் பட்டியலில்  இருக்கும், அவர் மனைவி, பிள்ளைகள், அவர் தாயார் என்று சமமாக  பங்கு பிரித்து கொடுக்கப்படும். 

    இந்த வாரிசுகள் யாரும் இல்லையென்றால் மட்டுமே அவரின் தந்தைக்கு அந்த சொத்தில் உரிமை உள்ளது. (இப்படியிருக்க உயிலாவது, எழுதுவதாவது!!.....

    உடனே...என்ன.".என் அண்ணன் சொத்தில் அவன் பிள்ளைக்கு பங்கு இருக்கும் போது, பிள்ளை சொத்தில் அவன் அப்பாவுக்கு பங்கில்லையா?"  என்று பொங்கக் கூடாது!! இதுவே ஒரு இந்து பெண் உயில் எழுதி வைக்காமல் இறந்து போனால், அவளின் பெயரில் உள்ள சொத்து எப்படி பங்கிடப்படும் தெரியுமா?

    அவள் பிள்ளைகள் மற்றும் கணவனுக்கு சமமாக..

அவர்கள் யாரும் இல்லையென்றால், அடுத்து அவள் கணவனின் வாரிசுகளுக்கு: அவர்களும் இல்லையென்றால் தான் அவள் அப்பாவின் வாரிசுகளுக்கு இல்லை அம்மாவின் வாரிசுகளுக்கு...இந்த வரிசையில் தான் சொத்து போய் சேரும்.

        ஆனால் இதுவே அந்த சொத்து அவள் பெற்றோர் மூலமாக பெற்றது என்றால், அவள் பிள்ளைகளுக்கும், அவர்கள் இல்லையென்றால், அவள் அப்பாவின் வாரிசுகளுக்கும் போகும்.

        அதுவே அந்த சொத்து அவள் மாமனார், மாமியாரிடமிருந்து பெற்றிருந்தால், அவள் பிள்ளைகளுக்கு முதலிலும், அவர்கள் இல்லையென்றால்,  அவள் கணவனின் வாரிசுகளுக்கு போய் சேரும்.

        இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனப் பிரிவுக்கு எதிரானது, பாலின பாகுபாடு காட்டுகிறது என்றெல்லாம் சொல்லி, வழக்கு போட்டார்கள்.. "அதெல்லாம் சரியாகத்  தான் இருக்கிறது.  எங்கிருந்து வந்ததோ அங்கேயே தான் போய் சேர வேண்டும்" என்று சொல்லி விட்டது நீதிமன்றம்...வேறு என்னத்தை சொல்ல!!

        இந்த பதிலை முடிக்கும முன் என் சிறு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.   இன்றைய உலகில் மலிவாக..இல்லையில்லை இலவசமாக  கிடைப்பது இன்னொருவருக்கு கொடுக்கும் அறிவுரை தான். ஆனால்  அதையே பனம்  கொடுத்து  நாம் பெற்று கொள்வது டாக்டரிடமும் வழக்கறிஞரிடமும் தான். ஏனெனில் இரண்டுமே அவர்களின் உயிரையே குடிக்கக் கூடியது. அதே சமயம், ஆலோசனை/அறிவுரை சொல்லும் மருத்துவரும்  வழக்கறிஞரும் தங்களை,  கண நேரமும் மாறிக்கொண்டே இருக்கும் தத்தம்  துறையில் பயின்றுக்  கொண்டே இருக்க வேண்டும் என்பதால் தான் , அவர்கள் செய்யும் தொழிலுக்கு PRACTISE எனப்பட்டது. 

        அப்படிப்பட்ட கடினமான ஒரு துறையில் ஒருவர் சந்தேகம் கேட்கும் போது, அது பற்றிய விஷய  ஞானம் இல்லாமல்  சிலர் பதில் கூறுவது சரியானதல்ல.  அதை  விவரமில்லாத பலர் நம்பி ஏமாறக்  கூடும்..வழி மாறி போகக் கூடும்!!

( இஸ்லாந்து  எங்கேயிருக்கிறதுன்னு கண்டுபிடிககிறதுகுள்ள...!!)

  

வெள்ளி, 13 மே, 2022

18 வயதின் சிறப்பு என்ன??

         1வயது பூர்த்தியடைவது  என்பது பொறுப்பும் உரிமை தகுதியும் பெற்று விட்ட வயதாக தான்1875 ம  ஆண்டு இயற்றப்பட்ட இந்திய பருவ வயது குறித்த சட்டத்தின்படி சொல்லப்படுகிறது. அதன்படி அவர்களுக்கு என்ன தகுதிகள் ஏற்படுகின்றன  தெரியுமா?


  • ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் விதமாக வோட்டு போடும் உரிமை
  • அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கு உயில்  எழுதுவது
  • அவற்றை விற்பதற்கு உள்ள உரிமை 
  • அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கு 
  • பெண் என்றால் திருமணம் செய்வதற்கு தகுதி.  அதே வேளையில் ஆணுக்கு 21 வயது பூர்த்தியாகவேண்டும். 
        பெண்ணுக்கு அந்த வயது தகுதியானது என்னும்போது ஆணுக்கு ஏன் அப்படியில்லை? அதுவும் ஒரு அரசையே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு அவனுக்கு பொறுப்பு மற்றும் முதிர்ச்சி வந்ததாக சொல்லும் போது.... என்ற கேள்வி எழலாம்.  பெண் மனதளவில்  வேகமாக முதிர்ச்சியடையக் கூடியவள் என்பதால் தான் பெண்ணை விட  ஆணுக்கு சிறிது அதிக  வயது வித்யாசம் இருக்கும் வகையில் 1929 அம ஆண்டு ஏற்படுத்திய திருமண சட்ட அமைப்பின் படி, , 18  வயதிற்குட்பட்ட பெண்ணும் 21 வயதிற்குட்பட்ட  ஆணுமே திருமணம் செய்ய தகுதியற்றவர்கள்.  அதற்கு மேற்பட்டே திருமணம் செய்யலாம். 

        திருமணம் என்றாலே பொறுப்புகள் நிறைந்தது இல்லையா? பொறுப்பு என்பது என்ன?  ஒருவரின் செயலுடன் தொடர்புடையது. அவரின் செயல்  அவருடைய எண்ணத்துடன் தொடர்புடையது.  எனவே ஒருவர் குற்ற எண்ணத்துடன்  ஒரு காரியத்தை செய்து சட்டத்திற்கு முரணாக அது அமையும்போது அது குற்றமாகிறது.  குற்ற எண்ணத்துடன் ஒருவர் அந்த செயலை  செய்தாரா என்பதை ஆராய அவர் வயது தான் அதை நிர்ணயிக்கும் கருவியாக சட்டத்தில் உள்ளது. எந்தெந்த சமயங்களில் வயதை கணிப்பது முக்கியமானது தெரியுமா? 

  • குற்றவாளியின் அறியாமைத  தன்மையை கணிக்க/ பொறுப்பை உறுதிப்படுத்துவதற்கு ...
  •         உதாரணமாக ஏழு வயதிற்குட்பட்ட ஒரு சிறுவனோ சிறுமியோ புரியும் எந்த செயலும், அது சட்டத்திற்கு முரணாக இருந்தாலும், குற்றமாகாது.  ஏனெனில் ஏனெனில் அந்த வயதில், தான் என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று பகுத்தறியும் அறிவு வளர்ச்சி பெறுவதில்லை.  அதனால் அவர்கள் செய்யும் செயல்கள் தவறாக இருந்தாலும், அவற்றிற்கு சட்டத்தில் விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதற்கு காரணம் குற்றம் செய்வதற்கான குற்ற எண்ணம் அவர்களுக்கு இல்லாதது தான். அப்படியே இருந்தாலும் அந்த தவறான காரியத்தை உடனே அந்த குழந்தை செய்து விடுவதில்லை.  அதை செய்யுமாறு ஒருவர் தூண்டினால் ஒழிய.  இந்த விதிவிலக்கு இந்திய தண்டனை சட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்..இந்த விதிவிலக்குக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு... இந்திய இரயில் வே சட்டத்தின் கீழ் இது பொருந்தாது. இது போன்ற குற்றம் நடப்பின், அதற்குரிய தண்டனை வழங்கப்படும். வயது  கருத்தில் கொள்ளப்படமாட்டாது.  

            அதற்கு அடுத்து வரும் ஏழு வயது முதல் பன்னிரண்டு  வயதுக்குட்பட்ட குழந்தைகள் சற்று வளர்ச்சியடைந்து இருப்பதால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது குறித்து ஓரளவு பகுத்தறியும் ஆற்றல் இருக்கும்.  அவர்கள் சட்டத்தால் தடுக்கப்பட்ட குற்றங்களை செய்யும்போது அவர்கள் கண்டிக்கப்படுவார்கள்.நன்றாக கவனியுங்கள்....... தண்டிக்கப்படமாடார்கள்.

    • நீதிமன்ற தண்டனை வழங்கும் போது.

            பதினெட்டு வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் தவறு செயும்போது அவர்களை சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணை செய்வர்.  குற்றம் உறுதிப்படுத்தப்டும் பட்சத்தில், அவர்கள் அந்த நீதிமன்றம் இயங்கும் அதே வளாகத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவர். அங்கு அவர்களுக்கு தேவையான நல்லொழுக்கமும் நன்னடத்தையும் கற்பிக்கப்படும்.  அத்தோடு தச்சு வேலை, தையல், நெசவு, கொல்லுவேலை போன்ற தொழில்களும் பயிற்றுவிக்கப்படும்.  

    • அதே போல  ஒருவரை அடையாளம்   கண்டு கொள்வதற்கு வயது முக்கியமானது. பெயர் நாம் வைத்துக்கொள்வது. அதை மாற்றலாம். அனால் உடலின் வயது அவர இன்னார் என்று அடையாளப்படுத்திவிடுவதில் ஒரு முக்கிய காரணி. 

    • வேலை வாய்ப்பின் போது 
             1948  தொழிசாலைகள் சட்டத்தின்படி, 14  வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாகும். அதே சமயம்  16 வயது பூர்த்தியான குழந்தைகளை சில குறிப்பிட்ட வகை தொழிசாலைகளில் பணியாற்ற சட்டம் அனுமதிக்கிறது.  ஆனால் அரசு பணிகளுக்கு குறைந்தபட்ச தகுதியான வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    • கடத்தல் 
            வயது தான் பருவம் அடைந்த நிலையை கணிக்க பெரும்பாலும்  உதவுகிறது என்றேனில்லையா?  அதன்படி  "கடத்துதல்"  என்ற குற்றத்தை ஒருவர் செய்தாரா என்பதற்கும் கடத்தப்பட்ட ஆனனோ பெண்ணோ, அவர்களின்  வயதை கொண்டு குற்றத்தின் தன்மை தீர்மானிக்கபடுகிறது. 
           
             16 வயதிற்குட்பட்ட ஆணையோ அல்லது    18   வயதிற்குட்பட்ட பெண்ணையோ கடத்துவது குற்றம் என்று சட்டம் சொல்கிறது.  ஆண் பிள்ளைகளும் பெண்பிள்ளைகளை போல பாலியல துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை வெகு தாமதமாக உணர்ந்த சட்டவியலாளர்கள் 2012 லிருந்து இரு பாலின குழந்தைகளுக்கும் பொதுவான பாதுகாப்பு சட்டங்கள் இயற்ற தொடங்கினர்.அதன்படி பாலியல் தொடர்பு கொள்ள சம்மதம் தெரிவிக்கும் அளவிற்கு முதிர்ச்சி அடைந்த வயதாக 18  வயது நிர்மாணிக்கப்பட்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இன்னமும் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட ஆண் குழந்தையின் வயது மாற்றம் செய்யப்படவில்லை.

    • கற்பழிப்பு:                                                                               பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதாக 18  வயது என்று போக்சோ சட்டத்தில் சொல்லப்பட்டாலும், இந்திய தண்டனை சட்டத்தில்,  15  வயதிற்குட்பட்ட தன மனைவியுடனோ அல்லது   16 வயதிற்குட்பட்ட ஒரு பெண்ணுடனோ, அவள் சம்மதம் தெரிவித்தாலும் கூட, பாலியல் ரீதியாக தொடர்பு கொள்வது 'கற்பழித்தல்' என்ற குற்றமாகும். 
            1860 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, பெண்களுக்கான இந்த சம்மதத்தின் வயது முதலில் 10 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டது. இது 1891 இல் 12 ஆகவும், 1925 இல் 14 ஆகவும், 1940 இல் 16 ஆகவும், 2013 இல் 18 ஆகவும் உயர்த்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதுக்குக் குறைவான ஒரு பெண்ணுடன் அவள் சம்மதத்தைப் பெற்றும் பாலியல் செயல்பாடு கொள்வது , கற்பழிப்புக்கு சமம். இதில் கவனிக்கவேண்டிய முக்கிய அம்சம் என்னவென்றால், சிறுவர்களுக்கு அவ்வாறு வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

            21 ஆம் நூற்றாண்டில் தான், மைனர் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நமது சட்டமியற்றுபவர்கள் விழித்துக் கொண்டதாலும், 2012 ல் நாட்டையே உலுக்கிய டெல்லி கூட்டு வன்புணர்வு நிகழ்வால், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான பாலின-நடுநிலைச் சட்டத்தைப் பெற்றோம். POCSO ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்கான சம்மதத்தின் வயதை 18 ஆக அந்த சட்டம் நிர்ணயித்துள்ளது.  அதை தொடர்ந்து 2013ல் குற்றவியல் சட்ட திருத்தம் வந்த போது,  இந்த வயது 18 ஆக மாற்றப்பட்டது.    ஆனாலும் பாலியல் ரீதியான தொடரபுக்கு சம்மதிக்கும் வயது குறித்த சர்ச்சை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. 

    • திருமணத்தின் போது
             பதினெட்டு வயதிற்கு குறையான சிறுமிகளை திருமணம் செய்து கொள்வது குற்றமாக்கப்பட்டுள்ளது.   

           " சாரதா சட்டம்" என்று பிரபலமாக அறியப்படும குழந்தை திருமண தடைச் சட்டம், 1929, திருமண வயதை பெண்களுக்கு 14 ஆகவும், ஆண்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது. இது பின்னர் 1978 இல் முறையே 18 மற்றும் 21 என்று பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உயர்த்தப்பட்டது. இது இப்போது ரத்து செய்யப்பட்டு, குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006 வரப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஒழிப்பு மாநாட்டின் (CEDAW) பிரிவு 16 திருமணம் மற்றும் குடும்பம் பற்றி கூறும்போது, குழந்தைத் திருமணங்கள் சட்டப்பூர்வ விளைவை ஏற்படுத்தக் கூடாது என்கிறது. இந்தியா 1980 இல் CEDAW இல் கையெழுத்திட்டது. இன்னும், குழந்தை திருமணங்கள் செல்லத்தக்கதாக மட்டுமே கருதப்படுகின்றன. எனவே, ஒரு சிறுமி தனது திருமணத்தை ரத்து செய்ய விண்ணப்பிக்கும் வரை, அந்தத் திருமணம் சரியானதாகக் கருதப்படும். அதையும் அவள், பருவ முதிர்ச்சி வயது அடைந்த இரண்டாண்டுகளுக்குள் செய்ய வேண்டும்.

            இந்திய தண்டனைச் சட்டம், Marital Rape என்னும் திருமண பலாத்காரத்தை அங்கீகரிக்க வில்லை என்பதால் தற்போதைய சட்ட நிலவரப்படி, மைனரான தன மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள சட்டப்படி கணவன் அதிகாரம் பெறுகிறான். 2017 ஆம் ஆண்டில், சுப்ரீம் கோர்ட் சுதந்திர சிந்தனை எதிர இந்திய யூனியன் வழக்கின் தீர்ப்பை வழங்கிய பிறகு, 15-18 வயதுக்குட்பட்ட மணப்பெண்களுடன் அவர்கள் கணவர் பாலுறவு கொள்ள செய்து கொள்ள அனுமதிக்கும் பிரிவு 375 க்கு விதிவிலக்கு சேரக்கப்பட்டது. இன்னும், இந்திய மனைவிகளுக்கு பாலுறவு கொள்வதற்கான ஒப்புதல் விருப்பத்தைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரம் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. 18 வயதுக்குக் கீழே, அவள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்து கொண்டாலும், அவள் உடலுறவு கொள்ள அனுமதிக்கவில்லை, 18 வயதுக்கு மேல் திருமண உறவில் சம்மதத்தின் அனுமானம் உள்ளது என்பதால் அவளால் இல்லை என்று சொல்ல முடியாது.

                நேற்று முன்தினம் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த இது குறித்த தீர்ப்பு நமக்கு தெரிந்திருக்கும். மைனரல்லாத மனைவி என்றாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டு இருந்தாலும், அவள் விருப்பம் இல்லாமல் உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு ஆகாது என்ற இந்த பிரிவை எதிர்த்து தோற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதியரசர் ராஜீவ் ஷக்தேவ் , திருமண உறவில் நுழையும் இருவருமே வாழ்க்கை துணைவர்கள் என்பதால் பரஸ்பரம் அன்பு, மரியாதை இருக்கவேண்டும் என்பதால் சமதமில்லாத தாம்பத்ய உறவு என்பது கற்பழிப்புக்கு ஒப்பானது என்றார். இதை இன்னொரு நீதியரசர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே கர்நாடகா உயர்நீதிமன்றம், மனைவியை செக்ஸ் அடிமை போல நடத்துவதை கண்டித்து திருமணம் என்பதற்கு அதற்கான லைசென்ஸ் அல்ல என்று கடுமையாக சொல்லியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு நீதியரசர்களும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் இனி இது குறித்து உச்ச நீதிமன்றம முடிவு எடுக்க வேண்டும்.

           தற்போது பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துன் யோசனையில் அரசு உள்ளது. இது, பெரும்பான்மையான பெண்களின் உடல், பதினெட்டு வயது ஆனாலும், மருத்துவ ரீதியாக , பேறு காலத்திற்கு தயாராகவில்லை என சொல்லபபட்டாலும், திருமண உறவிற்கு அப்பால் பாலியல் ரீதியான உறவை நம் இந்திய சமூகம் இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்,  திருமணத்திற்கு முந்தைய பாலியல் செயல்பாடு அதுகுறித்த வெளிப்படையான விவாதம் இல்லாத  மௌனம் மற்றும் மறுப்பு ஆகியவற்றால் மறைக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தரவுகள், இளம் பருவத்தினர் 18 வயதிற்கு முன்பே பாலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. NFHS-4 (2015–16) பதிவுகளில் 11% பெண்கள் 15 வயதிற்கு முன்பும், 39% பெண்கள் 18 வயதிற்கு முன்பும் முதல் உடலுறவைக் கொண்டிருந்தனர் என்றும்  அதே கணக்கெடுப்பில், 6.3% பெண்கள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணம் செய்து கொண்டவர் என்றாலும் 15 வயதுக்கு முன் தங்கள் முதல் உடலுறவைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றன. 

                இந்தியாவில் உள்ள இளைஞர்கள்: சூழ்நிலை மற்றும் தேவைகள் 2006–07 ஆய்வு ............இது இந்தியாவின் முதல் விரிவான இளைஞர் ஆய்வு, இந்த ஆய்வும்,  பாலியல் செயல்பாடுகளை அனுபவிப்பதற்கான நிகழ்தகவு,  இளம் பருவ வயதினரிடமிருந்து    இளம் பெண்கள் முதல் வயது முதிர்ந்த இளம் பருவத்தினர் வரை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

            எனினும் இன்றைய சமூக நிலை, பாலியல் கல்வி குறித்த வெளிப்படைத்தன்மை இல்லாத மவுனம் ஆகியவை , பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும்  இளைஞர்களிடையே காணப்படும் பெண் மீதான  வெறுப்பு, பாலின பாகுபாடு மற்றும் ஆணாதிக்க மனப்பான்மையை அதிகப்படுத்தி,  உடலுறவு, அதில் கிட்டும்  இன்பம்,  உடலைச் சுற்றியுள்ள உரிமைகள்,   மற்றும் பாதுகாப்பு பற்றிய அறியாமை,   சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய   மோசமான அறிவுக்கு தான்  வழிவகுக்கும்.

    •   பதினெட்டு வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மருத்துவமனையில் செய்யப்படும் கருச்சிதைவு விகிதம் குறைந்துள்ளதாக  தரவுகள் காட்டப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ளது கவனிக்கத்தக்க ஒரு அம்சம். 
                குழந்தை திருமண தடை சட்டம் இருந்தாலும், இருதரப்பு பெற்றோரின் ஒத்துழைப்புடன் இந்த திருமனங்கள் பெருமளவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை பெரும்பாலும் வெளியே  தெரிய வருவது அந்த பெண் தாய்மை பேறு  பெற்று மருத்துவ சிகிச்சைக்கு வரும்போது தான்.  அப்படி வரும்போது, அது குறித்த தகவலைகளை மருததுவமனைகள் தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் இருபபதாலும், பதினெட்டு வயதிற்கு முன்னர் பாலியல் ரீதியாக உறவில் இருக்கும் பெண்கள் மருத்துவ  பரிசோதனை, சிகிசசை எடுக்க மருத்துவமனை செல்ல தயங்குகின்றனன்ர்.  வெளியே யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு , பிரசவம் செய்ய துணியும்போது, உயிர்சேதமே அதிகம் நேருகிறது.  இது ஒரு விதத்தில் அவர்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது.  
             
                இன்னொரு புறம், தங்களுக்கு விருப்பம் இருக்கும் போது பதினெட்டு வயதிற்கு குறைவான தங்கள் பெண்ணிற்கு மணமுடிக்கும் பெற்றோர், அதுவே தங்கள் பிள்ளைகள் காதலித்து வீட்டிற்கு தெரியாமல் ஓடி சென்று திருமணம் செய்யும்போது, போக்சோ சட்டத்தின்  கீழ் கற்பழிப்பு புகாரை அந்த பையனின் மீது கொடுக்கின்றனர்.   ஆனால் பெரும்பாலும் இது போன்ற வழக்குகளில் அந்த பெண் தன்  காதலனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க  மறுககின்றனர் அல்லது அப்படியே கொடுத்தாலும் தானும்  சம்மதம் தெரிவித்தே அவனுடன் பாலியல் தொடர்பு கொண்டதாக  கூறுகின்றனர்.  அல்லது அந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது அவர்களுக்குள் திருமணம் ஆகாமல் இருந்தால், அது நடந்து விடுகிறது. அல்லது அவன் குழந்தைக்கு அவள் தாயாகி விடுகிறாள். எனவே குற்றவாளிக்கு எதிர் சாட்சியம் இல்லாத நிலையில்,  பெரும்பான்மையான குற்றவாளிகள் வழக்கிலிருந்து  விடுதலையடைகின்றனர்.  இதனால் உண்மையான கற்பழிப்பு வழக்குகளில் கவனம் செலுத்த இயலாமல் நீதிமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகின்றது என்று நமது மாண்புமிகு உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.

            "எங்கள் பதிவுகளிலிருந்து, பெரும்பாலான வழக்குகள் POCSO ... -ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தப்பியோடிய வழக்குகள் என்பதை பகுப்பாய்வு காட்டுகிறது. இதன் காரணமாக, மைனர் கற்பழிப்பு பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. … ஆணும் பெண்ணும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், முழு கிராம மக்களும் குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கிறார்கள், அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை, ஆனால் வெவ்வேறு சமூகத்தின் விஷயத்தில் பையன் மீது வழக்குத் தொடரப்படுகிறது, 18 வயதுக்குட்பட்ட பையனும் பெண்ணும் ஓடிப்போனால், அவன் மட்டுமே தண்டிக்கப்படுகிறான், இது பையனுக்கான இயற்கை நீதிக்கு தீங்கு விளைவிக்கும்" என்றது .

            இதே போன்ற இன்னொரு வழக்கில் சம்பவத்தின்போது 17 வயதான அந்த இளைஞனை விடுவித்த மாண்புமிகு உயர் நீதிமன்றம், 16 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பாலியல் செயல்பாடுகளுக்கு சம்மதிக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்துள்ளனர் என்று கருத்து தெரிவித்து, POCSO சட்டத்தின் 2(d) இன் கீழ் "குழந்தை" என்ற கருத்தை 18 ஆண்டுகளுக்குப் பதிலாக 16 ஆண்டுகள் என மறுவரையறை செய்ய பரிந்துரைத்தது.

             2012 ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பலாத்காரத்திற்குப் பிறகு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும் இளம் பருவத்தினரின் பாலினத்தை 16 வயதிற்குள் அல்லது POCSO சட்டததின் கீழ் குற்றமாக்குவதைக் கட்டுப்படுத்தவும் IPC பிரிவு 375 இல் ஒப்புதல் வயதை பராமரிக்க வேண்டும் என்னும் அதே பரிந்துரையை வழங்கியது

    இருப்பினும், நாடாளுமன்றம் சற்று முன்னேறி, CLA சட்டம், 2013 இன் கீழ் ஒப்புதல் வயதை 18 ஆக உயர்த்தியது.

                 இந்தியாவில், வெவ்வேறு விஷயங்களுக்காக வெவ்வேறு வயது வரம்பு உள்ளது. ஒருவர் 18 வயதில் வாக்களிப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடைந்தவர்; 16 (கியர் இல்லாத வாகனங்கள்) அல்லது 18 (மோட்டார் வாகனங்கள்) ஓட்டவும்; 18, 21, 23, 25 வயதில் குடிக்கவும் (வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு வயதை நிர்ணயிக்கின்றன); 21 இல் தத்தெடுக்கவும்; 14 இல் தொழிற்சாலையில் வேலை; மற்றும் 18 (பெண்களுக்கு) மற்றும் 21 (ஆண்களுக்கு) திருமணம். மெஜாரிட்டி சட்டம், 1875 பெரும்பான்மை வயதை 18 வயதாக நிர்ணயித்தது (1999 இல் திருத்தப்பட்டது).


            இப்போது சொல்லுங்கள்.....

    ஒருவரின் முதிர்ந்த வயதை இதில் யார் தீர்மானிக்கிறார்கள்?
    - சட்டம், சமூகம், அரசு அல்லது உயிரியல் காரணிகளா? 1

    சிறப்புடைய இடுகை

    பேராசிரியர் செய்யக்கூடிய காரியமா இது ??

    மனதை பாதித்த ஒரு நிகழ்வு . சமீபத்தில் நமது சென்னையில் உள்ள ஒரு பல்கலை கழக பேராசிரியர் தனது சக பெண் பேராசிரியருக்கு எதிராக அவதூறு பரப்பும் வி...